1.31.2010

இங்கே ‘ஈழம்’ விற்கப்படும்

குமுதத்தில் வெளியாகிய பத்தி

33வது புத்தகக் கண்காட்சி ஆரவாரமாக நடந்தேறிக்கொண்டிருக்கிறது. புத்தகக் காதலர்களின் கிறங்கிய கண்களின் முன் புதுவாசனையுடன் கூடிய பக்கங்கள் புரண்டுகொண்டிருக்கின்றன. எப்போதுமில்லாதபடி அரசியல், போராட்டங்கள், புரட்சியாளர்கள், அறிவியல் தொடர்பான புத்தகங்கள் (குறிப்பாக மொழிபெயர்ப்புகள்) அதிகமும் வெளியாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அந்தப் புத்தகக் காட்டினுள் திசைதொலைத்தவள்போல அலைந்த நாட்களிலெல்லாம் மனதில் பெருவலி எழுப்பிய ஒரு விடயத்தைக் குறித்துப் பேசாமலிருக்க முடியவில்லை. பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களை முன்னிலைப்படுத்தியிருந்தன. அது இனம்புரியாத கசப்புணர்வைத் தந்தது.

“ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையைப் பற்றி உங்களில் அநேகர் எழுதவில்லையே… இந்தச் சமூகத்தின் அறிவுஜீவிகளாகிய நீங்கள் கொடூரமான இனவழிப்பின்போது மௌனமாக இருந்தது ஏன்?”என்ற கேள்வியை, ஒரு இலக்கியக் கூட்டத்தில் வைத்து, ‘புதுவிசை’ சஞ்சிகையின் ஆசிரியரான ஆதவன் தீட்சண்யாவிடம் எழுப்பப்போய், இணையத்தளத்தில் பெரும்சர்ச்சைக்கும் மனவுளைச்சலுக்கும் ஆளானவள் நான். அப்படிப் பார்த்தால் ஈழப்பிரச்சனையைப் பற்றி வெளிவந்திருக்கும் புத்தகங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், என்ன மாதிரியான ஒரு காலத்தில் இந்தப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன? பேசவேண்டிய காலத்தில் மௌனித்திருந்துவிட்டு, ஈழப்போராட்டம் மௌனமாக்கப்பட்டபிற்பாடு பேசுவதன் பின்னுள்ள ‘அரசியல்’யாது? ஈழச்சிக்கலில் என்ன மாதிரியான ஒரு நிலைப்பாட்டை எடுத்த-எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், மேற்குறித்த புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன? இதை வெளியிட்டவர்களின் சமூக அக்கறை எந்த ரீதியிலானது? போன்ற கேள்விகள் எழுகின்றன.

சொல்லித் தேய்ந்த வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் அந்தக் கொடிய நாட்களை ஞாபகங்கொள்ள விரும்பவில்ல. எனினும், எங்கள் வாழ்நிலங்களின்மீது இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டன; எங்கள் வீடுகள் சரிந்தன; போரின் காரணங்களை அறியாத எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் கைகால்கள் சிதறி சதைக்கூழ்களாகி மடிந்துபோனார்கள்; கல்விக்கூடங்கள் கல்லறைகளாயின; எங்கள் வயல்கள் கருகிக் கட்டாந்தரைகளாயின; தலையறுந்த முண்டங்களாயின எங்கள் முற்றத்து மரங்கள்; பதுங்குகுழிகளே புதைகுழிகளாக கூண்டோடு செத்துமடிந்தார்கள் எங்கள் மக்கள்; கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வன்புணர்வுக்காளாக்கப்பட்டு வதையுண்டு புதையுண்டுபோனார்கள் எங்களது சகோதரிகள்; ஈற்றில் ஒரு இனத்தின் மிச்சசொச்சங்களாக எஞ்சியிருந்தவர்களை ஆடுமாடுகள்போல ஓட்டிச்சென்று அடிப்படை வசதிகளேதுமற்ற கொட்டடிகளில் அடைத்து இழிவுசெய்து மகிழ்ந்தது இனவாதம்.

இந்நிலையில், அரசியல் விவாதங்களை முன்னெடுத்துச்செல்லத்தக்க, ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதற்கான வழிகளை முன்வைக்கக்கூடிய, மீள்புனரமைப்புக் குறித்துப் பேசும் படைப்புகள் உண்மையாகவே வரவேற்கப்படவேண்டியவ. மறுவளமாக, காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத்தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன.

ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ ஏதுமற்றவர்களாக மாற்றப்பட்டு, சுயமதிப்பழிந்து இனவாதத்திடம் கையேந்தி வாழ்ந்திருக்கக்கூடியதொரு நிலையிலும் அவர்களது கண்ணீரை விற்பனைப்பொருளாக்குவது வேதனை தருகிறது. ‘பிரபாகரன்: வாழ்வும் மரணமும்’என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. உறுதிப்படுத்தப்படாத மரணங்களைக் கூவிக் கூவி விற்பதன் பின்னால் இயங்கும் மனம் எப்படிப்பட்டதாக இருக்கக்கூடும்? ‘மௌனமாக இருந்ததன் மூலம் ஒரு இனத்தைக் கருவறுக்க உடந்தையாக இருந்தோமே…’ என்ற குற்றவுணர்வின்றி ‘கதையெழுத’எப்படி முடிகிறது?

அவ்வகையான புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம், அவற்றிலிருந்து அழுகுரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. அந்த இடங்களைப் பதைப்போடு கடந்துசெல்லும்போது, குருதியின் வாசனையை என்னால் நுகரமுடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் நினைவில் வருகிறது. ‘இவர்கள் இரத்தச் சோறு தின்கிறார்கள்’என்பார் அவர். அவருக்கு நான் சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்:

சோறு கிடைத்தால் போதுமல்லவா நண்பரே! அடுத்தவர்களின் இரத்தமாவது! சதையாவது!


நன்றி: குமுதம்

1.30.2010

பணம் பற்றிய சில குறிப்புகள்

பாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே! இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண், ‘குழந்தை இரண்டு நாட்களாகச் சாப்பிடாமலிருப்பதாக’ பழகிய பொய்யைச் சொல்லிக் கைநீட்டினாள். அன்று அது அவள் சொன்ன இருபத்தோராவது பொய்யாக இருந்திருக்கக்கூடும். இருந்தபோதிலும், பத்து ரூபாவை எடுத்துக் கொடுத்துவிட்டு மறுபடி காதணிகளில் தொங்கவாரம்பித்தேன்.

“பிச்சை போடுவதிலும் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது”என்றான் எட்வின். கையில் விசிறிவைத்து எந்நேரமும் ஆட்டியபடியிருக்கும் - பாண் (பிரெட்-கருமம்) இல்லையென்றால் கேக்கைச் சாப்பிடச் சொன்ன சீமாட்டியாக என்னையும், வஞ்சிக்கப்பட்ட பாட்டாளி மக்களின் (ராமதாசினுடையது அல்ல) ஏகத்துவ பிரதிநிதியாகத் தன்னையும் அவன் நினைத்துக்கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் எனக்குண்டு। “அந்தப் பிச்சைக்காரியை எனக்குத் தெரியாது. தவிரவும், பத்து ரூபாயில் எனது குடி மூழ்கிப்போகாது”என்றேன். காதணிகளிலிருந்து எனது கவனம் சறுகிவிட்டது. நான் கூறிய வார்த்தைகளுக்கு வலுச்சேர்த்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு ‘ஈகோ’நிர்ப்பந்தித்தது. “மதியம் இரண்டு மணியானால் எனது வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நிற்கும் ஐந்து தெருநாய்களும்கூட என்னை உயர்வாக நினைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் அவற்றுக்குச் சோறு வைக்கிறேன்”என்றேன் எட்வினிடம். எனக்குச் சுலபமாகக் கோபமூட்டிவிட்டதை நினைத்து, அவனது அகன்ற வட்டக் கண்களில் ஒரு சிரிப்பு மினுக்கிட்டு மறைந்ததைக் கவனித்தேன்.

ஆனலும், இந்த அன்பு, பாசம், காதல், கருணை, வாஞ்சை, பரிவு, ஒட்டுதல், பிரியம், நட்பு, நேசம், மனிதம், சகோதரத்துவம் எல்லாவற்றையும் அசைத்துப்பார்த்தால் ரூபா அல்லது டாலர் நோட்டுகளின் சரசரப்புச் சத்தம் கேட்குமோ என்று அண்மைக்காலங்களில் தோன்றவாரம்பித்திருக்கிறது। உங்களில் நல்லவர்கள், அன்பானவர்களாயிருக்கும் ஏமாளிகள் சொல்வது எனக்குக் கேட்கிறது… ஆம்…அப்படி நினைக்கக்கூடாதென்றே நானும் நினைக்கிறேன். அன்னை தெரேசா இப்பாழுலகில்தான் பிறந்து வாழ்ந்தார் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனாலும்…

சில்லறைகளைப் பதுக்கி நிமிர்பவளின்-னின் கைகளில் எப்போதாவது விழும் ரூபாய் நோட்டைப் பார்த்து அவள்-ன் கண்கள் சடக்கென்று மலர்ந்துவிடுகின்றனவே! நம்மைவிட வயதான பிச்சைக்காரிகளும்-பிச்சைக்காரர்களும் அவ்வேளைகளில் நன்றிசொல்லிக் கைகுவிக்கும்போது வலிக்கிறது। புன்னகையின் மில்லிமீட்டரை பணந்தான் நீட்டுகிறது. சுருக்குகிறது.

இந்த ஆட்டோக்காரர்கள்…. அவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்? தகிடுதத்தர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், காக்கிச் சட்டை போட்ட கயவாளிகள் என்றெல்லாம் உங்களிடம் நான் சொன்னால், ‘எல்லோரும் அப்படியல்ல; அபவாதம் சொல்லாதீர்கள்’என்று உதாரணங்களோடு பாய்ந்தடித்து வரக்கூடும்। என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தானே ‘கழிக்க’ முடியும்? ஒரே இடத்திற்குச் செல்ல நூற்றைம்பது ரூபாயிலிருந்து முந்நூறு ரூபாய்வரை கேட்க அவர்களால் மட்டுமே முடியும். நீங்கள் இறங்குமிடத்தை நெருங்கும்போது எப்படியான சுருதியில் அவர்கள் பேசவாரம்பிப்பார்கள் என்பதையும் சொல்லவேண்டியதில்லை. திடீரென்று விலைவாசி உயர்வு எங்களோடு ஆட்டோவில் பயணிக்கவாரம்பித்துவிடும். திடீரென்று நாங்கள் சென்று இறங்கவேண்டிய இடமானது பெயர்ந்து அதிக தொலைவிற்குச் சென்றுவிடும். ஆட்டோவில் ஏறும்போது ‘அம்பியாக’ இருந்த ஆட்டோரக்காரர், நாம் இறங்குகிற இடம் நெருங்குகிறபோது ‘றெமோ’வாக (அந்நியன்) மாறிவிடுவார். மேலதிக இருபது அல்லது முப்பது ரூபாவிற்காக இவ்வளவு கூவவேண்டியதில்லை என்று எரிச்சல்படத் தோன்றும். பணத்திற்காக அரசியல்வாதிகள் மேடை மேடையாகக் கூவுகிற கூவுக்கு, போடுகிற குட்டிக்கரணங்களுக்கு இவர்களொன்றும் பரவாயில்லை என்றும் சில சமயங்களில் தோன்றியிருக்கிறது.

பேரம் பேசாமல் அல்லது பேசத் தெரியாமல் சொல்கிற விலையைக் கொடுத்துப் பொருளை வாங்கிச் செல்கிற என்னைப் போன்ற சமூகப் பிறழ்நிலையாளர்களுக்கென்று சில கடைக்காரர்களிடம் பிரத்தியேகமான புன்னகை உண்டு। ஆம் அந்தப் புன்னகை நிச்சயமாக விலையுள்ளது. பேரங்காடிகளில் நாம் வாங்கும் பொருட்களைத் தூக்கிவந்து வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் கடைப்பையனின் புன்னகையின் நீளத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம். முதல் திகதியே வாடகையைக் கொடுத்துவிடும் நம்மைப் போன்ற தீங்கற்ற பிராணிகளிடம் உதிர்ப்பதற்கென்று வீட்டுச் சொந்தக்காரரிடம் கருணை வடியும் சில சொற்கள் இருக்கின்றன. நம்மைப் பாதுகாப்பாக வீட்டில் இறக்கிச் செல்லும் வாடகை வண்டிச் சாரதிகளுக்கு கட்டணத்தை விட அதிகமாக அறுபது ரூபாய்களைக் கொடுக்கும்போது மகிழ்ந்துபோய் நன்றிசொல்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் கொடுத்தாலும் சிரிக்காதவர்களாக வங்கியில் பணியாற்றுகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

அவனுக்கு இன்னுஞ் சில புத்தகங்களை நான் வாங்கிக்கொடுத்திருந்தால் இன்னமும் அதிகமாக என்னை நேசித்திருப்பானா? அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த காப்பைப் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்த கண்களில் மேலதிக பாசத்தைக் கண்டேனா? அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தபிறகு எந்தக் குற்றவுணர்வுமின்றி வேலைகளைச் சொல்ல முடிகிறதல்லவா? தகரத்தில் அடைக்கப்பட்ட பன்றி இறைச்சியை நான்தான் வாங்கிக்கொடுக்கிறேன் என்று, மிக்கி எப்படியோ தெரிந்துவைத்திருக்கிறது। என்னைக் கண்டதும் எனது மூக்குவரை தாவுகிறது. கொஞ்சி முடித்தபிறகும் சிறிதுநேரத்திற்கு எனது கால்களைத் தனது சொரசொரத்த நாக்கினால் நக்கிக்கொண்டேயிருக்கிறது. சிறுபிள்ளைகள் தூக்கப்போனால், வாலை உயர்த்தி உடலைச் சிலிர்த்துப் பயங்காட்டும் ‘புதினம்’ சாவதானமாக எனது கைகளில் தலைவைத்து உறங்குகிறது. அதனிடம் எனக்கென்று பிரத்தியேகமான மூன்றுகால் நடையுண்டு.

அம்மா! உங்களுக்குப் பிடித்த அடர்பச்சையில் விலையுயர்ந்த சேலையை இம்முறை நான் வாங்கிவந்தால், உங்கள் கண்களில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகப்படியான கண்ணீரைப் பார்ப்பேனோ என்னவோ…? உங்கள் மூக்குத்தி என் கன்னங்களில் குத்தும்படியாக இறுக்கி முத்தமிடுவீர்கள் என்று நினைக்கிறேன். பள்ளிக்கூடம் போவதை எப்போதோ நிறுத்திவிட்ட அப்பாவுக்கு இப்போதும் ‘ரீச்சர்’பிடிக்கும். அந்த மஞ்சள்நிறத் திரவத்தினுள் அமிழ்ந்தபிற்பாடு, எனது ‘பெருமைகளை’ச் சொல்லி அவர் அழவாரம்பிக்கலாம்.
அன்பே! இம்முறை தயவுசெய்து வழக்கத்தைவிட அதிகமாகப் பணம் அனுப்பு। நான் போகுமிடங்களுக்கு எல்லாம் உன் காதலை எடுத்துச்செல்வேன்.

உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.

1.26.2010

வீடு


சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறவர்களின் வீடுகளும் பாடசாலைகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பன. தோழர்களும்கூட.

அதற்கிணங்க, அப்பா வேலை இடமாற்றம் பெற்றுப் போகும் இடங்களுக்கு எங்களது பாடசாலையும் வீடும் பெயர்ந்துகொண்டே இருந்தன. அந்தப் புதிய இடத்துக்கு அப்பாதான் முதலில் போவார். திரும்பிவந்து அவ்வூருக்குப் போவதன் அனுகூல-பிரதிகூலங்களைப் பற்றி இரவுகளில் அம்மாவோடு கதைப்பதைக் கேட்டபடி மெல்ல மெல்ல உறக்கத்திலாழ்வது நினைவிலிருக்கிறது. அதன்பிறகு வீட்டுத் தளபாடங்கள், ட்ரங்குப்பெட்டிகள், அப்பாவின் புத்தகங்கள் அடங்கிய மலத்தியோன் பெட்டிகள், பாய்கள், வாளிகள், தும்புத்தடி இன்னபிற சாமான்கள் பயணப்படும். கடைசியாக அம்மாவும் நாங்களும் அப்போது வளர்த்துக்கொண்டிருக்கும் பூனை அல்லது நாயும் போய்ச்சேர்வோம். புதிய வீடு பற்றிய எனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏறி விளையாடுவதற்கும் ஒளிந்துகொள்வதற்கும் மரங்கள் இருக்க வேண்டுமென்பதற்கப்பால் சென்றதில்லை. வளர்ந்த பிறகு, மரங்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பு மாறியிருந்தது. மழை பொழியும் மாலைகளில் யன்னல் வழியாகத் தெரியும் மரங்கள் இனம்புரியாத கிளர்ச்சியைத் தூண்டுவனவாக, சிருஷ்டித்துக்கொண்ட கற்பனாவுலகில் சஞ்சாரம் செய்ய உதவுவனவாக இருந்தன.

வாழ்ந்த வீடுகளில் எப்போதும் மறக்கமுடியாத பசுமையோடிருப்பது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள திருவையாறு என்ற கிராமத்தில் வயல்நடுவில் அமைந்திருந்த ஒரு குடிசை. நினைக்கும்போதெல்லாம் அந்த வயல்கள் மனதுள் சிலிர்த்து அடங்குகின்றன. பிலாக்கொட்டைக் குருவிகளும் புளினிகளும் செம்போத்தும் இன்னுமின்னும் பெயர்தெரியாத பறவைகளும் பறக்கின்றன. பன்றிகள் கிழங்கு தேடிக் கிளறிய வேர்களின் வாசனை காற்றில் மிதந்துவருகிறது. நீலமும் பச்சையும் அளவெடுத்துக் கலந்த நிறத்தில் அள்ளித்தெளித்த புள்ளிகளையுடைய தோகைமயிலொன்று வந்து காலெடுத்து ஆடிச்சுழன்றுவிட்டு, எறியும் தானியங்களை ஒயிலாகத் தலைதாழ்த்திக் கொத்தித்தின்கிறது. அன்றைக்கு வெளியிலும் குடிசையினுள்ளும் பெய்த மழை இன்னமும் நின்றபாடில்லை. அந்த இளம் வயதில், பொத்தல்கள் விழுந்த கூரையினூடே மினுங்கிக்கொண்டிருந்த நிலவு கிளர்த்திய துயரத்தின் பாடல் இடையறாது இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சொந்தவீடு வேண்டுமென்ற ஏக்கத்தை வெறியாக மாற்றியவர் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவர் அன்று கொட்டிய வார்த்தைகளோவெனில் சாகாவரம் பெற்றவை. நினைக்கும்போதெல்லாம் சுயவிரக்கத்தைத் தூண்டுபவை. பணக்காரர்-ஏழைகள் என்ற இரண்டு வர்க்கங்கள் உலகில் இருப்பதை, அறியாச்சிறுமியொருத்தி அறிந்துகொண்ட நாளது. அப்போது இந்திய அமைதி காக்கும் படையினர் (?) ஈழத்தில் நிலைகொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கும் அமைதி காக்கும் படையினருக்கும் இடையில் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. யாழ்ப்பாண நகரப் பகுதியை விட்டுப் பெயர்ந்து சொந்தக் கிராமத்திலுள்ள உறவினர் வீடொன்றின் வாசற்படியில் கால்வைத்தபோது, “ஹவுஸ் புல்”என்றொரு கொடிய வார்த்தை எங்களை ஓடஓட விரட்டியது. திரையரங்குகளில் பாவிக்கப்படும் ‘ஹவுஸ் புல்’என்ற வார்த்தையை வீடொன்றில் கேட்டது அன்றுதான் முதற்தடவை. அன்று நானும் எனது பெற்றோரும் கண்ணீர் வழியப் படியிறங்கி வேறிடம் தேடிப் போனோம்.

“அம்மா! எங்களுடைய ஊரில் எங்களுக்கு மட்டுமேன் சொந்தவீடில்லை?”என்ற என் கேள்விக்கு அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தா. அவவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சிதறிவிழுந்தன.

ஏழைகள் அகதிகளும் ஆவதைப் போன்ற கொடுமைக்கு இணையான துயரம் வேறில்லை. அந்நாட்களில் பணக்காரர்கள் கையில் காசோடும் நகைகளோடும் தற்காலிக தங்குமிடங்களை நாடிப்போகக்கூடிய அளவுக்காவது போரின் முன்னிமித்தங்களை ஊகிக்க முடிந்தது. இப்போதோவெனில் போர் சமரசம் உலாவும் இடமொன்றை உற்பத்தி செய்திருக்கிறது.

இன்று வன்னியிலிருந்து பலவந்தமாகப் பெயர்க்கப்பட்டிருக்கும் மக்களின் நினைவில் இனி ‘வீடு’என்ற பதத்தின் பொருள் எதுவாக இருக்கும்? வீடு என்று அவர்கள் எதை அழைத்தல் கூடும்? எஞ்சியிருக்கும் சுவரையா? முற்றமென அடையாளம் கண்டுகொண்ட இடத்தில் மிஞ்சியிருக்கும் ஒற்றை மரத்தையா? சுவரும் மரமும்கூட இல்லாத வெளியையா? காணிகளைப் பிரிக்கும் எல்லைக் கல்லையா? அவசரத்திற்குப் பிணங்களைப் புதைத்து வந்த இடத்தில் பின்னாளில் அடையாளம் கண்டுபிடிக்கவென நாட்டி வைத்துவிட்டு வந்த கல்லையா? வெங்காயப் பாத்திகளென உப்பி சிதைந்த உடல்களை உள்ளடக்கியிருக்கும் மண்மேடுகளையா? அகதிமுகாம்களில் விளையாடும் குழந்தைகளின் மனதில் வீடு என்னவாக இருந்துகொண்டிருக்கிறது?

உலகமெல்லாம் அகதிகளாக அலைந்து திரிபவர்களின் வீடு உண்மையில் எங்கே இருக்கிறது? புகலிட தேசங்களில் வங்கிக் கடனில் வாங்கி தவணைமுறையில் செலுத்தும் கட்டுப்பணத்தில் சிறுகச்சிறுக நமதாகிக்கொண்டிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் வீடுகள் உண்மையில் நமதேதானா?

ஐந்தாண்டுகளுக்கு முன் நான் அற்புதமான கனவொன்றைக் கண்டேன். பேருந்தில் தொலைநகரங்களுக்குப் பயணப்படும் வழிகளில் எதிர்ப்பட்ட வீடுகளையெல்லாம் கண்களுக்குள் தேக்கிவைத்துக்கொண்டேன். கொஞ்சநாட்களுக்கு கூரைகளும் முகப்புகளும் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட அறைகளும் மட்டுமே எனது கனவில் வந்தன. ‘சொந்த ஊர்’என நாம் நினைத்திருந்த ஊர்கள் பேரினவாதத்தினால் சீட்டுக் கட்டுக்களைப் போல கலைத்துப்போடப்பட்ட பிற்பாடு, சொந்த ஊர் என வரித்துக்கொண்ட ஓரிடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பித்தது. அந்நாட்களில் சரியாக உறங்குவதில்லை. நள்ளிரவில் எழுந்திருந்து போய் “இந்த இடத்தில் கழிப்பறைப் பீங்கான் வரும். இந்த இடத்தில் தண்ணீர்க்குழாய் வரும். இந்த இடத்தில் படிகள் வரும். இந்த இடத்தில் சாமி மாடம் வரும்”என்று கற்பனித்தபடி அமர்ந்திருப்பேன். காற்றும் காலுரசும் பூனைக்குட்டியும் மட்டுமே அந்த இரவுகளில் எனக்குத் துணையிருந்தன. ஈற்றில் அந்தந்த இடத்தில் எல்லாம் அமைந்தன. மல்லிகையும் லசந்தராவும் தேமாவும் மாவும் பலாவும் செவ்விளநீரும் நெல்லியும் அம்பறலங்காய் மரமும் துளிர்த்தும் பூத்தும் காய்த்தும் சிரித்தன. ‘படியேறாதே’என்று ஒருகாலத்தில் விரட்டப்பட்ட ஏழை இளவரசி கண்ட கனவு கண்ணெதிரில் கல்லடுக்காய் நிமிர்ந்தது.
பிறகு மீண்டும் போர் வந்தது. துப்பாக்கிகள் துரத்தும் கனவுகள் வந்தன. கனரக டாங்கிகள் வந்தன. பேரிரைச்சலோடு நிலம்நோக்கித் தலைகுப்புறத் தாவி உயிர்கொத்தும் விமானங்கள் வானத்தில் திடும்மென்று முளைத்தன. நாங்கள் மீண்டும் தூரதேசங்களுக்குப் போனோம்.

எங்கோ வெகுதொலைவில் இப்போதும் இருக்கின்றன எங்களது வீடுகள். நாடேயற்றவர்களுக்கு வீடுகள் இருப்பது ஒருவகையில் முரண்நகையாகவே தோன்றுகிறது. அந்தரத்தில் தொங்கும் வீடுகள் அவை. பிரிந்துபோனவர்களின் நினைவிலூறிய கண்களைக் கொண்ட வீடுகள் வாசலை வெறித்துக்கொண்டிருப்பதாக, ஊருக்குப் போய் உயிரோடு திரும்பி வரமுடிகிறவர்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். ஐதீகக் கதைகளைப் போல ஆகிக்கொண்டிருக்கின்றன மீள்திரும்ப முடியாத வீடுகளைப் பற்றிய கதைகள்.

--
குறிப்பு: இந்தக் கட்டுரையை http://ponguthamil.com/ என்ற இணையத்தளத்திற்கே எழுதிக்கொடுத்தேன்.இக்கட்டுரை ஏற்கெனவே பொங்குதமிழில் பிரசுரமாகியிருந்தது.எனது வலைப்பூவில் மீள்பிரசுரம் செய்வதற்காகத் தேடியபோது சரியான முகவரி கிடைக்கவில்லை. கூகுலில் தேடியபோது http://eelam.net/ என்ற இணையத்தளத்தில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கக் கண்டேன்.நான் அதை எப்படிப் புரிந்துகொண்டேனென்றால், 'பொங்குதமிழ்'என்ற பெயரில் ஏதோ சிக்கல் இருந்த காரணத்தால் இணையத்தளத்தின் பெயரை மாற்றிவிட்டார்கள் என்று. பொங்குதமிழ் இணையகாரர்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் மடல் அனுப்பியபிறகுதான் எனது தவறு புரிந்தது.தவறான இணையத்தளத்திற்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டமைக்காக பொங்குதமிழிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

வருத்தங்களுடன்
தமிழ்நதி

1.08.2010

நாடோடிகளும் நகரவாழ்வும்

எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஒழுங்கினை நேசிப்பவர். சாலை விதிமுறைகளை மீறத் துணியாதவர். இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டபின் அவற்றின் காகித உறைகளைத் தனது காற்சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்து, குப்பைத்தொட்டிகளைக் காணநேரும்போது அதனுள் இடக்கூடிய அளவுக்குச் சுத்தத்தினைப் பேணுபவர். ஒழுங்கினைப் பேணாத எந்தவொரு வரிசையையும் நிராகரிப்பது அவரது வழக்கம். எல்லாவற்றிலும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஆதர்ச பூமியில் வாழவேண்டுமென்பது அவருடைய கனவாக இருந்துவருகிறது. அவர் கனவுகாணும் வாழ்க்கை புத்தகங்களில் மட்டுமே சாத்தியம் எனும் யதார்த்தம் உணர்ந்து கசந்துபோயிருக்கிறவர். ஒரு தடவை அவரும் நானும் வீதியால் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, ஏறத்தாழ பாதையில் - போதையில் விழுந்துகிடந்த ஒருவரைப் பார்த்தோம். அந்த மனிதர் தனது வாந்தியின்மீது புரண்டுகொண்டிருந்தார். அவருக்குச் சற்று தள்ளி நாயொன்று குப்பைத்தொட்டியினைக் கிளறி தனது பெயரெழுதப்பட்ட பருக்கைகளைத் தேடிக்கொண்டிருந்தது. துர்நாற்றம் சகிக்கமுடியாதவாறு கிளர்ந்து கிளர்ந்து அடங்கிக்கொண்டிருந்தது. அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

“வேறு நாடுகளில் வாழக்கூடிய வசதி இருந்தும், இந்த நகர நரகத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? நீங்கள் எனது கண்களில் விசித்திரமாகத் தோன்றுகிறீர்கள்!”

அப்படிக் கேட்ட எனது நண்பர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அன்று எனது பதில் ஓரிரு வார்த்தைகளில் முடிந்துவிட்டது. நினைக்கிற எல்லாவற்றையும் ஒரு பதிலாகக் கோர்த்துச் சொல்லிவிட முடிவதில்லை. ஆனால், எழுதமுடியும். ஆம். உயரே இருந்து பார்க்கிற எவருக்கும் சென்னை தாறுமாறாக, பைத்தியத்தின் சாயலுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றக்கூடிய நகரமே. அநேகமாக எல்லா மாநகரங்களுக்கும் ஏறத்தாழ ஒரே முகந்தான். ஊழி துரத்திவருவதனையொத்த தோற்றத்துடன் மக்கள் பதட்டத்துடன் நாளாந்தம் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கனரக வாகனங்களும் பேருந்துகளும் ஆட்டோக்களும் அநாவசியமாக ஒலிப்பான்களை அலறவிட்டு பாதசாரிகளை அச்சுறுத்தியபடி விரைந்துசெல்கின்றன. தொலைபேசிகளைச் செவிகளில் பொருத்தி, குளிரூட்டப்பட்ட கார்களின் பின்னிருக்கைகளில் சாய்ந்தமர்ந்தபடிக்கு வசதி படைத்தவர்கள் மிதந்துகொண்டிருக்கிறார்கள். அதே வீதிகளின் தெருவோரங்களிலும் வீதிகளின் நடுவேயுள்ள மேடைகளிலும் நாய்களும் மனிதர்களும் பேதங்களின்றி உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் (நாய் அஃறிணையா?) சுத்தத்திற்குச் சவால் விடுத்தபடி வெள்ளைநிற பொலித்தீன் பைகள் எங்கெங்கும் படபடத்து அலைகின்றன. கடைகளின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளை காகிதங்களும் அழுகிய காய்கறிகளும் அலங்கரித்துக்கொண்டிருக்க, பிரித்தறியமுடியாத வாடையொன்று காற்றை நிறைத்திருக்கிறது. இறைஞ்சியழும் (கண்ணீர் வாராத) விழிகளோடு பிச்சைக்காரர்கள் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்கு இணையாகத் தூசியும் பதறிப் பறந்தடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், நகரங்களுள் கிராமங்கள் இருக்கவே இருக்கின்றன. வானம் பொய்த்து வயல்கள் கட்டாந்தரைகளாகிவிட, வாழ்வாதாரம் வேண்டி நகரங்களை நோக்கிப் பெயர்ந்துவந்துவிட்ட மனிதர்களுள் அவர்கள் பிரிந்துவந்த கிராமம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இனிதென்று அந்நாளில் நாமுணராத பால்யமே நம்மை உள்நின்று இயக்குகிறது. விளையாடித் திரிந்த மாந்தோப்புகளின் இலைச் சலசலப்பு அந்திமத்திலும் கேட்கத்தான் கேட்கும். அமிழ்ந்து குளித்த ஆறுகளின் சாயலை எதிர்ப்படும் நீர்நிலைகளில் காணவே செய்கிறது மனம். மனதின் வெளிகளில் பறவைகளின் சிறகடிப்பை நாளாந்தம் மானசீகமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.


மேலும், நகரங்கள் அழகில்லையென்பதும்கூட பொதுப்புத்தி சார்ந்ததே. வயல்வெளிகளும் பூக்களும் பறவைகளும் எத்தனைக்கெத்தனை அழகோ அத்தனைக்கத்தனை அழகானது நகரம். வரிசையாக தொடர்சீரில் செல்லும் வாகனங்களின் நேர்த்திக்குக் குறைவில்லை. இரவின் குளிர் தோல்தொட விரையும்போது, பாலத்தின்கீழ் சுழித்தோடும் கூவத்தின் அழகே அழகு. கார்த்திகை, மார்கழி மாத இரவுகளில் அழகொளி படர்த்திக் கிடக்கும் வீதிகளில் நடந்துசென்றால் தொட்டுணரமுடியும் நகரத்தின் மெல்லிதயத்தை. தெருவோரக் கடையொன்றில் தேநீர் அருந்த வாய்க்குமெனில் இன்னும் சிறப்பு. ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இரவு பத்து மணிக்குமேல் நகரத்துத் தெருக்களும்கூட அவர்களைத் (பெண்களை) தம்மியல்பான மிகச்சிறிய ஆசைகளிலிருந்து நிராகரித்து வீட்டை நோக்கித் துரத்திவிடுவது துயரமே.
டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’இவ்விதமாக ஆரம்பிக்கிறது.

சிறு பரப்பில் நூறாயிரக் கணக்கானோர் நெரிசலாய் அடைந்துகொண்டு எவ்வளவுதான் நிலத்தை உருக்குலைக்க முயன்றாலும், எதுவுமே முளைக்காதவாறு எவ்வளவுதான் கற்களைப் பரப்பி நிலத்தை மூடினாலும், பசும்புல் தளிர்க்க முடியாமல் எவ்வளவுதான் மழித்தெடுத்தாலும், நிலக்கரியையும் எண்ணெயையும் எவ்வளவுதான் எரித்துப் புகைத்தாலும், எவ்வளவுதான் மரங்களை எல்லாம் வெட்டியகற்றியும் விலங்குகளையும் பறவைகளையும் விரட்டியடித்தும் வந்தாலும் - வசந்தம் வசந்தமாகவே இருந்தது, நகரத்திலுங்கூட.”

டால்ஸ்டாய் மேற்கண்ட வரிகளை எழுதி (1889-1899 படைப்புக்காலம் பத்தாண்டுகள்) ஒரு நூற்றாண்டுக்குமேல் கழிந்துபோயிற்று. இன்னுமதிகமதிகமான மக்கள், கொங்கிறீற் கற்கள், கச்சாப்பொருட்கள், இரசாயனக் கழிவுகள், தூசி… வாகனங்கள் கக்கிச்செல்லும் புகை இன்னபிற அனர்த்தங்களின்பிறகும் வசந்தம் வசந்தமாகவே இருக்கிறது. சென்னையிலுங்கூட.

போரினாலும் பொருளாதாரம் மற்றும் கல்வி வேண்டியும் மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துசென்ற எங்களைப் போன்ற ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் கீழைத்தேயங்களின் நகரங்கள்கூட கிராமங்களின் தன்மையையே கொண்டிருக்கின்றன.‘எங்களுக்கு முன்னதாகப் பிறந்த கோழிகளை’ குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து விறைக்கும் கைகளால் எடுத்து சமைப்பது கொடுமை. இங்கே ‘பிரெட்’என்று பெரும்பான்மையாக அழைக்கப்படும் ஒரு இறாத்தல் பாணை வாங்குவதற்கு பத்து இறாத்தல் உடைகளை அணிந்துசெல்லவேண்டிய அளவுக்கு எலும்புறைய வைக்கும் குளிர் அந்த நாடுகளில். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வாழும் கனடா, இலண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றாலன்றிச் செலவுகளைச் சமாளிக்க முடியாது. வாடகை, வெளிநாடு வர வாங்கிய கடனுக்கு வட்டி, மின்சார-தண்ணீர்க் கட்டணம், கடனட்டைக் கட்டணம், ஊரில் உறவுகளுக்கு அனுப்பவேண்டிய தொகை இன்னபிறவற்றைச் சமாளிக்க இரவும் பகலுமாக இரண்டு வேலைகளைச் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எந்நேரம் தூங்குவார்கள் என்பது அவர்களது கண்களுக்கே வெளிச்சம். வீடு இருக்கும்@ ஆனால் அங்கு வாழ்வதில்லை. கட்டில் இருக்கும்@ ஆனால் அதில் உறங்குவதில்லை. மனைவிகளும் கணவர்களும் இருப்பர்@ இயந்திர வாழ்வில் எப்படியோ குழந்தைகளும் பிறந்துவிடுகிறார்கள்.

வேலைக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த வாழ்வின் மீதான கசப்பு 2002ஆம் ஆண்டு ஈழத்தில் யுத்தநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒருவிதமாக வெளிப்பட்டது. அதாவது, வெளிநாடுகளிலிருந்த ஈழத்தமிழர்கள் பலர் தமது சொந்த ஊர்களில் நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். வீடுகளைக் கட்டினார்கள். அதை வெறுமனே சொத்துக்குவிப்பு என்பதாகப் பார்க்கவியலாது. அந்திமத்திலாவது ஓய்வு என்ற தொலைதூரக் கனவாகவோ, விரட்டப்பட்ட நிலங்களில் மீள வேரூன்றும் எத்தனம் என்றோதான் அதனைக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால், மறுவளமாக, உள்நாடுகளில் போருள் வாழ்ந்த அன்றேல் செத்துப் பிழைத்துக்கொண்டிருந்த ஏழைகள் ஏழைகளாகவே இருந்தார்கள். போர்வெறிக்குத் தீனியானவர்கள் அவர்களே. மரணமும் சொத்திழப்பும் அலைந்துலைவும் அவர்களுக்கே. வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்தவர்கள் மீள்திரும்புகையின்போது நிலச்சுவான்தாரர்களாக மாறினார்கள். டொலர்களும் பவுண்ஸ்களும் பிராங்க்குகளும் ரூபாயாக மாறிச் செய்த சித்துவேலைகள் அநேகம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரே இடங்களில் வாழ்ந்தாலும் சகோதரர்கள்கூட ஒருவரையொருவர் மாதத்திற்கொரு தடவைகூடச் சந்திக்க முடிவதில்லை. ஆண்டுக்கணக்கில் முகம் பார்த்துப் பேசாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தொலைபேசிதான் அங்கே தொப்பூள் கொடியாகத் தொழிற்படுகிறது. மேலைத்தேயங்களின் வீதிகள் விழுந்து புரளுமளவிற்குச் சுத்தமானவைதாம். பூங்காக்களோவென வியக்கும்படியான சாலையோரங்களும் அங்குள்ளனதாம். வைத்தியசாலைககள் கூட நட்சத்திர விடுதிகளின் வசதிகளைக் கொண்டமைந்தனவாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நடுத்தர வர்க்கத்தினர் இங்கே கனவுகாணும் வாழ்க்கையான கார், கட்டில், இன்னபிற வசதிகளோடுடையதே அந்த வாழ்க்கை. ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது உண்மையான அர்த்தத்தில் ‘வாழ்க்கை’ என்ற சொல்லின் பொருள் திரிந்துவிடுகிறது. எனது தோழியொருத்தி இங்கு வந்தபோது என்னைப் பார்த்துச் சொன்ன வாசகம் இது:

“உங்கள் நாட்களை நீங்களே வாழ்கிறீர்கள்”

உண்மை. அதிலும் இந்த மழைநாட்கள்! அதிகாலையில் குயில்கள் கூவுகின்றன. காற்றில் சிணுங்கும் வேம்பு அதீதப் பச்சையோடு தலையசைக்கிறது. மல்லிகைப் பூவைத் தலைநிறையச் சூடிக்கொள்வது எனக்குப் பிடிக்கும். கனடாவில் அது சாத்தியமில்லை. ஆனால், மே 19க்குப் பிறகு தலையில் பூ வைத்துக்கொள்ளும்போதெல்லாம் குற்றவுணர்வாக இருக்கிறது. தோற்றத்தில் துக்கத்தை வெளிப்படுத்துவதென்பதிலிருக்கிற சின்னப் பொய்மையையும் மிஞ்சி உறுத்துகிறது துக்கம். ‘கோலமாவு’என்று மாறாத ஒத்திசையோடு கத்திக்கொண்டு செல்பவனின் குரலை நான் நேசிக்கிறேன். ‘மீனம்மா மீனு’என்று, தன் குரல்வளையை யாரோ நெருக்கிப் பிடிப்பதுபோல ஊசிக்குரலில் கத்துகிற பெண்குரலை என்னால் ரொறன்ரோவில் கேட்கமுடியாது. வீதி வழியாகப் பொருட்களை விற்றுச்செல்கிறவர்கள் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை அழகுசெய்கிறார்கள் என்பது ஒருவகையில் குரூரமான அழகியலே.

இறந்துபோன குழந்தையின் ஞாபகத்தில் பொம்மையைச் சீராட்டும் சித்தம் பேதலித்த தாயைப்போல, தாய்நாட்டில் வாழக் கிடைக்காத என்னைப் போன்றவர்கள் அதனையொத்த ஊர்களில், எமது மொழி பேசும், எமது இனம் சார்ந்த, எங்களது தோற்றத்தைக் கொண்ட மனிதர்களிடையே வாழவே விழைகிறோம். அதுவொரு கற்பிதம் அன்றேல் விழித்தபடி காண்கிற கனவுதான். சிலசமயங்களில் நினைத்துப் பார்க்கிறபோது, வாழ்வு மொத்தமும் ஒரு நெடுங்கனவாகவே தோன்றுகிறது.

நன்றி: அம்ருதா