8.25.2009

‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்


சில சமயங்களில் நினைத்துப் பார்க்கும்போது வரலாறு திரும்பத் திரும்ப ஒரே அச்சில் சுழல்வதாகவே தோன்றுகிறது. ஆண்டுகள்தான் கழிந்துபோயினவேயன்றி, மனிதனுக்குள்ளிருக்கும் அதிகார வேட்கையானது மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே இருக்கிறது. அதற்கு சமகால இரத்த சாட்சியமாக ஈழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் இனவழிப்பைச் சொல்லலாம். எழுதவோ வாசிக்கவோ மனங்கொள்ளாத ஓரிரவில் ரோமன் போலன்ஸ்கியின் ‘த பியானிஸ்ட்’என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. நாம் எதனைச் சிந்திக்கிறோமோ அதனை நோக்கியே இழுத்துச்செல்லப்படுகிறோம் என்பதற்கு, இதனைக்காட்டிலும் வேறொரு உடனிகழ்வு வேறென்ன இருக்கக் கூடும்?

போலந்தை ஹிட்லரின் நாஜிப்படைகள் கைப்பற்றிய காலத்தில் வாழ்ந்த, யூத இனத்தைச் சேர்ந்த, பியானோ வாத்தியக் கலைஞன் ஒருவன் உயிர்தரித்திருப்பதற்குப் படும் அவஸ்தையும் அலைச்சலும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு இனவெறியனின் பேராசைக்குப் பலியான யூதர்களின் அவலங்களை, ஒரு கலைஞனின் கண்கள் வழியாகக் காட்டியிருக்கிறார் போலன்ஸ்கி. நாமறியாத ஒன்றுடன் நமக்குத் தெரிந்த ஒன்றைப் பொருத்திப் பார்க்கும் மனமானது படம் பார்க்கும்போது இயங்கிக்கொண்டேயிருந்தது. கோபமும் ஆற்றாமையும் கண்ணீரும் பொங்கிவழிந்ததன் காரணம் வெளிப்படை.

வ்லாடெக் ஷ்பில்மான் என்ற பியானிஸ்ட்டாக அட்ரியன் புரொடி வாழ்ந்திருந்த அந்தப் படம் பியானோ இசையுடன் தொடங்குகிறது. போலந்தின் வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஷ்பில்மானை குண்டுச்சத்தங்கள் நெருங்குகின்றன. இசைப்பதை நிறுத்தும்படி அவன் கேட்டுக்கொள்ளப்படுகிறான். ஆனால், இசையின் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாத அவனது விரல்கள் தொடர்ந்து நர்த்தனமிடுகின்றன. வானொலி நிலையமே தகர்ந்துபோகும் வேளையில்தான் அவன் இசைப்பதை நிறுத்துகிறான். அனர்த்தத்திற்கிடையிலும் ஒரு அற்புதம் நிகழ்கிறது. வெளியே வரும் அவனை ‘அருமையான கலைஞன்’ எனப் பாராட்டுகிறாள் ஒருத்தி. செலோ என்ற வாத்தியத்தை இசைப்பவள் அவள் எனத் தெரிந்துகொள்கிறான் ஷ்பில்மான். இருவர் கண்களிலும் சின்னதாக ஒரு காதல் பூ மொட்டவிழ்கிறது. ஒன்றாகக் கோப்பி குடிக்கலாம் என்று செல்லும் உணவகத்தின் வெளியில் ‘யூதர்களுக்கு அனுமதியில்லை’என்று எழுதப்பட்டிருக்கிறது. ‘இது எத்தனை பெரிய இழிவு’என்று கொதித்துப் போன இதயமுள்ள அந்த ஜேர்மானியப் பெண்ணைச் சமாதானப்படுத்துகிறான் ஷ்பில்மான். ‘பூங்காவுக்குச் செல்லலாம்’என்ற அவளது யோசனைக்கு, ‘பூங்காக்கள் மற்றும் பொது இருக்கைகள் கூட யூதர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன’என்று கசந்துவழியும் புன்னகையோடு கூறுகிறான். பிறகு தன்வழியில் பிரிந்து செல்கிறான்.

இதனிடையில் பிரிட்டனும் பிரான்சும் ஜேர்மனிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர் தொடுக்கவிருப்பதாக வரும் செய்தி யூதர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஈழத்தமிழர்கள் எவ்விதம் மேலைத்தேயங்களை நம்பினார்களோ, அவ்விதமே ‘ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்’என்று போலந்தில் வாழ்ந்த யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். (காலங்கடந்தேனும் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது உண்மையே. ஈழம் அதிசயங்களுக்காகக் காத்திருக்கிறது)

யூதர்கள் என்று இனம்பிரித்துக் காட்டுவதற்கு நட்சத்திரக் குறியிட்ட கைப்பட்டை ஒன்றை அணியவேண்டும் என்று ஜேர்மானிய ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அதற்குப் பணியாதவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. அடையாள அட்டை இல்லாத தமிழர்கள் வீதிகளில் இறங்கவே அச்சப்படுவதை அது நினைவூட்டியது. அது எங்களில் ஒரு அங்கம்போல, ஆடைபோல கூடவே இருந்தது. மறுவளமாக, தமிழர்கள் என்று இனம்பிரித்துக் காட்டவும் கைதுசெய்யவும் அது பேரினவாதப் படைகளுக்கு உதவியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அஞ்சிய யூதர்கள் நட்சத்திரக் குறியிட்ட பட்டைகளை கைகளில் அணிந்துகொள்கிறார்கள். யூதர்கள் எனப் பிரித்துக் காட்டப்பட்டவர்களுக்கு, நடைபாதைகளில் நடக்கவும், ஜேர்மானியர்கள் பிரயாணிக்கும் பேருந்துகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

1940ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் யூதர்கள் அனைவரும் பெயர்ந்துசென்றுவிடவேண்டும் என்று மேலும் ஒரு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. (உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?)

“வார்சாவில் நாங்கள் நான்கு இலட்சம் யூதர்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்குள் எங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் இங்கேயே தங்கிவிடலாம்.”என்கிறான் ஷ்பில்மான். அவனுக்குத் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த மண்ணை விட்டு வேறெங்கும் பெயர்ந்து செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. இந்த நான்கு இலட்சம் என்ற எண்ணிக்கையை நாம் எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆம். வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களாலும் எண்ணிக்கைகளாலுமே வனையப்பட்டிருக்கிறது.

இதனிடையில் ஷ்பில்மானின் பிரியத்திற்குரிய பியானோவையும் விற்றுச் சாப்பிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சொற்ப உடமைகளுடனும் சோர்ந்த முகத்துடனும் அவர்கள் சாரிசாரியாகப் பெயர்ந்துசெல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பொம்மைகளை கையிலே எடுத்துக்கொண்டு போகிறார்கள். முதியவர்களை சக்கரநாற்காலிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். 1995இல் ‘ரிவிரச’இராணுவ நடவடிக்கையின்போது பெயர்ந்துசென்ற மக்களையும், 2009இல் பதறிய முகங்களோடு உயிரொன்றே மிச்சமாக வவுனியாவுக்குப் பெயர்க்கப்பட்டவர்களையும் நினைவூட்டியது அக்காட்சி. தங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அவர்களது விசும்பல் அவ்விடத்தை நிறைக்கிறது. ஷ்பில்மானும் அவனது குடும்பமும் அந்தக் கூட்டத்தில் நடந்துபோகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அந்த செலோ வாத்தியக்காரியை ஷ்பில்மான் காண்கிறான். “இது நீதியில்லை”என்கிறாள் அவள்.

அனைத்து யூதர்களையும் ஓரிடத்தில் குவித்தான பிறகு அந்த இடத்தை மறித்து சுவர் எழுப்புகிறது நாஜிப்படை. இப்போது போலந்து இரண்டுபட்டுவிட்டது. யூதர்கள் - யூதர்கள் அல்லாதவர். இப்போது ஜேர்மானியர்களோடு சேர்ந்து வறுமையும் அவர்களை வதைக்கிறது. பிழைப்பதற்கு வழியில்லை. வயதான பெண்ணொருத்தி தன் கணவனின் பெயரைச் சொல்லி அவனைக் கண்டீர்களா என்று வீதிகளில் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் கேட்டபடியிருக்கிறாள். அவள் மனம் பிறழ்ந்துபோயிருக்கிறாள். பசியில் விழுந்து இறந்தவர்களின் பிணங்கள் தெருக்களெங்ஙணும் கிடக்கின்றன. குழந்தைகள் பசியில் கதறுகின்றன. வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த அந்த ஜனங்கள் இப்போது பிச்சைக்காரர்களாகி தெருக்களில் கையேந்தி நிற்கிறார்கள். இங்கே ‘யூதர்கள்’என்று வருமிடங்களில் ‘தமிழர்கள்’என்று பிரதியீடு செய்தும் வாசிக்கலாம். நொந்து நோய்மைப்பட்ட அந்த ஜனங்களை நடனமாடும்படி பணிக்கிறார்கள் ஜேர்மானியச் சிப்பாய்கள். கண்களில் அடக்கப்பட்ட கோபம் ஒளிந்திருக்க அவர்கள் ஆடுகிறார்கள்.

கைக்கூலிகளும் காட்டிக்கொடுப்பவர்களும் யூதர்களிலும் இல்லாமல் இல்லை. ஆட்சியாளர்களுடன் கூடிக் குலவும் ஒருவன் ஷ்பில்மானின் குடும்பத்திற்குப் பழக்கமானவனாக இருக்கிறான். “நீங்களும் என்னைப்போல ஜேர்மானியர்களிடம் பணியில் அமருங்கள்”என்கிறான். “நீ பொலிஸ் ஆகலாம். நீ அவர்களுடைய கேளிக்கை விடுதியில் பியானோ வாசிக்கலாம்”என்று சகோதரர்களுக்கு ஆசை காட்டுகிறான். ஷ்பில்மானும் சகோதரன் ஹென்ரிக்கும் மறுத்துவிடுகிறார்கள். அவன் வன்மத்தோடு வெளியேறிச் செல்கிறான். வன்மத்தோடு வெளியேறிச் செல்பவனில் நீங்கள் யார் யாரைக் காண்கிறீர்கள் நண்பர்களே?

இதனிடையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக புரட்சியில் ஈடுபட சில இளைஞர்கள் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தன்னையும் அவர்களோடு இணைத்துக்கொள்ளும்படி ஷ்பில்மான் கேட்கிறான். “நீ அறியப்பட்ட இசைக்கலைஞன். உலகத்திற்கே உன்னைத் தெரியும். உனக்குப் புரட்சி ஒத்துவராது”என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்.

படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ‘வரலாறு ஓ இந்த வரலாறு!’ என்று நினைத்துக்கொள்ளும்படியாக அத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன ஒடுக்குமுறைகளுள், இனவழிப்பில்.

“நாங்கள் இங்கே அடிமைகளாகச் செத்துமடிந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவிலிருக்கும் யூதர்கள் எங்களுக்காக என்ன செய்தார்கள்? ஜேர்மனி மீது படையெடுக்கும்படி அங்குள்ள யூதர்கள் அமெரிக்காவைத் தூண்டவேண்டும்”என்று ஷ்பில்மானின் தந்தை ஓரிடத்தில் ஆதங்கம் பொங்கச் சொல்வார்.

‘நீங்கள் எழுதிய வார்த்தைகளை யாரோ உங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார்கள்’என்ற கவிதை நினைவுக்கு வருகிறதா? ஒரே சாயலுடைய வார்த்தைகளை வரலாறு செவிமடுத்தபடியே இருக்கிறது. எனக்கு தமிழகத்தின் நினைவு வந்தது. ஆறரைக் கோடித் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தும், இந்திய மத்திய அரசை இலங்கை அரசுக்கெதிராக சுண்டுவிரலசைக்க வைக்கக்கூட முடியவில்லை. அதற்கு ஆறரைக் கோடித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக அரசின் அசமந்தப் போக்கும், அவலங்கள் மீதான பாராமுகமும், அதிகாரத்தோடான சமரசங்களும்தானேயன்றி வேறு காரணங்கள் இருக்கமுடியாது. 1940ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட அறுபத்தொன்பது ஆண்டுகளில் மனிதநாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறதென்று யாராவது சொல்வரெனில் அது மனதறிந்த பொய்யாகவே இருக்கமுடியும். காலந்தோறும் அறம் செத்துச் செத்துச் சீவித்துக்கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தில், நிறத்தில் மட்டுமே வேறுபட்டிருக்கிறார்கள். அவர்களது குரூரமும், பிறவதையில் களிக்கும் மனமும் ஒன்றேதான். பெயர்க்கப்பட்டு வேறொரு இடத்தில் தனித்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களை நோக்கி நீள்கிறது ஆக்கிரமிப்பாளர்களின் கூரிய நகங்கள். இதை வாசிக்கும் பலருக்கு அந்த இருளிலும் இருளான கொடிய இரவுகள் நினைவில் வந்து எலும்புக்குருத்துக்களைச் சில்லிட வைக்கலாம். நாய்களும் அச்சத்தில் மௌனித்திருக்கும் வீதிகளில் இராணுவ வண்டிகள் கிரீச்சிட்டபடி வந்து நிற்கும். விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் சுவாசிக்கும் ஒலி எங்களுக்கே பேரதிர்வாய் கேட்க உயிர் உறைந்து மரணத்தின் காலடி நெருங்குவதைக் கேட்டிருப்போம். தடதடவென கதவுகள் நடுங்க அறைந்து பிறழ்ந்த தமிழிலோ சிங்களத்திலோ கூப்பிடுவார்கள். சிலரைத் தேர்ந்தெடுத்து பிடரியில் அறைந்து வண்டிகளில் ஏற்றிச்செல்வார்கள். அல்லது வண்டிகளை ஏற்றிக்கொல்வார்கள்.

‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதியவரை சக்கர நாற்காலியோடு தூக்கி மாடியிலிருந்து எறிந்துகொல்கிறார்கள். பிடித்துக்கொண்டு போனவர்களை கட்டிடத்தின் கீழேயே வைத்துச் சுட்டுக்கொல்கிறார்கள். பிடிவிலக்கித் தப்பியோடியவனின் தலையில் பாய்கிறது சன்னம். இராணுவ வாகனங்கள் நகரும்வரை, வெடித்தெழும் கண்ணீரையும் கதறலையும் நெஞ்சடக்கிக் காத்திருக்கிறார்கள் பெண்கள்.

ஷ்பில்மானின் சகோதரன் ஹென்ரிக்கை பொலிஸ் கைதுசெய்துகொண்டு போகிறது. தனது சகோதரனை விட்டுவிடும்படி ஏற்கெனவே பரிச்சயமான அந்த யூதப் பொலிஸ்காரனை மன்றாடுகிறான் ஷ்பில்மான். வழக்கமான பதிலை அவன் சொல்கிறான். “ஹென்ரிக்கை நான் காணவில்லை” இதே பதிலை ஈழத்தில் இராணுவ முகாம்களின் வாசல்களிலும் பொலிஸ் நிலையங்கள் முன்பும் காலையிலிருந்து இரவு வரை தவம்கிடக்கும் தாய்மார் அடிக்கடி கேட்க விதிக்கப்பட்டவர்கள். ஜேர்மானியர்களை நத்திப் பிழைக்கும் அந்த யூதப் பொலிஸ்காரன் ஷ்பில்மானின் கெஞ்சுதலுக்கு இறங்கிவந்து ஹென்ரிக்கை விடுதலை செய்கிறான். அந்தப் பொலிஸ்காரனுக்கு ஷ்பில்மான் மீது அவனது இசைத்திறமையினாலோ எதனாலோ வெளிக்காட்டப்படாத அபிமானம் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் நெஞ்சை உருக்கும் சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. சிங்கள இராணுவத்தினர் எறியும் உணவுப் பொட்டலங்களுக்காக கூட்டத்தில் இடிபட்டபடி கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக தமிழர்கள் மாற்றப்பட்டிருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு அந்தப் புகைப்படங்கள் நினைவுக்கு வந்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது. பிறகு… பிறகென்ன… நீங்கள் நினைப்பதுதான். ‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதிய பெண் தட்டில் கொஞ்ச உணவை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் செல்வாள். அதைத் தெருவாசியொருவன் தட்டிப்பறிக்கப் பார்ப்பான். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்குமான இழுபறியில் உணவு நிலத்தில் சிந்திவிடும். நிலத்தில் சிந்திய உணவை அந்த மனிதன் மிருகத்தைப்போல படுத்து நாக்கினால் வழித்துச் சாப்பிடுவான். அந்தப் பெண் திகைப்பும் ஆற்றாமையும் பொங்க அவனை அடித்து அடித்து அழுவாள். அவனோ அடியைப் பொருட்படுத்தாமல் ஒரு துளியும் விடாமல் உண்பதிலேயே கவனமாக இருப்பான். பசி மனிதர்களை மிருகங்களிலும் கீழாகச் சபித்துவிடுகிறது.

1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி.

யூதர்களில் பெரும்பாலானோரை புகைவண்டிகளில் ஏற்றி கண்காணாதோர் இடத்திற்கு அனுப்ப ஆயத்தப்படுத்துகின்றனர் ஜேர்மானியப்படையினர்.

“எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?”என்றொரு பெண் கேட்கிறாள். அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து ஒரேயொரு சூடு. அதுதான் அவளுக்கான பதில்.

புகைவண்டி நிலையத்தில் யூதர்கள் மிகச் சொற்ப உடமைகளுடன் கூடியிருக்கிறார்கள். கையில் வெறுமையான பறவைக் கூண்டோடு ஒரு சிறுமி கூட்டத்தினரிடையில் தன் பெற்றோரைத் தேடுகிறாள்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”ஒரு பெண் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

“எனது குழந்தை செத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சொட்டுத் தண்ணீர் தாருங்கள்”தாயொருத்தி கையில் துவண்டு தொங்கும் குழந்தையைக் கொண்டு அலைந்து திரிகிறாள்.

வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.

இத்தனை ஆரவாரங்களுக்கும் இடையில் ஒரு சிறுவன் இனிப்பு விற்றுக்கொண்டிருக்கிறான்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண்ணின் விசும்பல் நீள்கிறது.

இதற்குள் சிதறிப்போயிருந்த ஷ்பில்மானின் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டு ஆரத்தழுவுகிறார்கள். குறைந்தபட்சம் தாங்கள் ஒன்றாக இருக்கமுடிவதில் ஆறுதல்கொள்கிறார்கள்.

“எங்களை எங்கே கொண்டு போகிறார்கள்?”முதியவர்கள் தங்களுக்குள் விசனத்தோடு கிசுகிசுக்கிறார்கள்.

“கடூழியத்திற்காக நாம் கொண்டுசெல்லப்படுகிறோம்”

“அங்கவீனர்கள், குழந்தைகள், பெண்கள்… இவர்களால் எப்படி வேலை செய்யமுடியும்?”

மௌனம் மரணத்தைக் கட்டியம் கூறுகிறது.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண் கத்தியழுகிறாள்.

“அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்?”ஷ்பில்மானின் தங்கை பொறுமையிழந்து கேட்கிறாள்.

“வெளியேறும்படி ஜேர்மானியர்கள் உத்தரவிட்டபோது எங்காவது ஒளிந்திருந்து இங்கேயே தங்கிவிடலாமென்று அவள் நினைத்தாள். ஒளிந்திருக்கும்போது குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் வாயைக் கைகளால் மூடி அதை அடக்கமுயன்றாள். ஆனால், அவர்கள் பிடிபட்டார்கள். குழந்தையும் மூச்சடங்கிச் செத்துப்போயிற்று.”

“நான் ஏன் அப்படிச் செய்தேன்…
நான் ஏன் அப்படிச் செய்தேன்…?”

புகையிரதம் மரணவண்டியென வந்து நிற்கிறது. அவர்கள் அதனுள் ஆடுமாடுகளைப் போல இழுத்தெறியப்படுகிறார்கள். தனது குடும்பத்தோடு புகையிரதத்தினுள் ஏறப்போன ஷ்பில்மானை ஒரு கை கூட்டத்திலிருந்து பிரித்து வெளியில் எறிகிறது. அந்த யூதப் பொலிஸ்காரனுடைய கைதான் அது. ஷ்பில்மான் தன் பெற்றோரை, சகோதரர்களை விளித்துக் கூவியழுகிறான். அவர்களை நோக்கி ஓட முயல்கிறான். பொலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்திச்சொல்கிறான்.

“முட்டாளே! நான் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன். ஓடு”

விடை கிடைத்துவிட்டது.

புகைவண்டி வேகமெடுத்து மரணத்தை நோக்கி ஓடத்தொடங்குகிறது. பிணங்களும் பயணப்பெட்டிகளும் இறைந்துகிடக்கும் சூனியத்தெருக்களில், பாழடைந்த வீடுகளினூடே தன்னந்தனியனாக அழுதபடி நடந்துசெல்கிறான் ஷ்பில்மான். அவனது வீடு சூறையாடப்பட்டிருக்கிறது.

அதன்பிறகான அவனது நாட்கள் உயிர்தரித்திருப்பதற்கான எத்தனத்தில் கழிகின்றன. கடூழிய காலத்தில் சில புரட்சியாளர்களின் தொடர்பு அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஆயுதங்களை ஒளித்துவைக்க அவன் உதவிசெய்கிறான். கடூழியத்திலிருந்து தப்பித்து பாடகி ஒருத்தியின் உதவியால்- பூட்டப்பட்ட வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருக்கிறான்.

ஒருநாள் ஜேர்மானியர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சண்டை நடக்கிறது. ஈற்றில் கிளர்ச்சியாளர்களை ஜேர்மானியர்கள் அடக்குகிறார்கள். எஞ்சியவர்களைச் சுட்டுக்கொல்கிறார்கள். அடைபட்டிருக்கும் வீட்டிலிருந்து அத்தனைக்கும் மௌனசாட்சியாகிறான் அந்த இசைக்கலைஞன். அவன் ஒளிந்திருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது யாரோ பியானோ வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவனை அது நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உணவினால் அவன் உயிரை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பீங்கான்கள் விழுந்து நொருங்கும் ஓசை அவனது ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பக்கத்து வீட்டுப் பெண் அசூசையும் ஆத்திரமும் பொங்க ‘யூதன்… யூதன் இங்கே ஒளிந்திருக்கிறான்… பிடியுங்கள்’என்று கத்துகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபத்தான காலங்களில் தொடர்புகொள்ளும்படியாக அவனிடம் கொடுக்கப்பட்ட முகவரி அந்தப் பெண்ணினுடையதாக – செலோ வாத்தியக்காரியினுடையதாக இருக்கக் காண்கிறான். காதல் மலர் கண்ணெதிரில் உதிர்கிறது. அவள் இப்போது வேறொருவனின் மனைவி.

அவளும் அவளது கணவனும் ஷ்பில்மானை வேறொரு வீட்டில் ஒளித்துவைக்கிறார்கள். எப்போதாவது உணவும் கிடைக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் பியானோ அவனது விரல்களை ஏங்க வைக்கிறது. ஆனால், அதை வாசிக்கும் கணத்தில் அவனது உயிர் பிரிந்துவிடும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். வெறுங்காற்றில் அவனது விரல்கள் இசைக்கின்றன. பசியும் தனிமையும் நீண்டநாள் தலைமறைவு வாழ்வும் அவனைத் தளர்ந்துபோகச் செய்கின்றன. அவன் மஞ்சள்காமாலையில் விழுகிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவளும் கையசைத்து வேறிடம் போகிறாள். இதனிடையில் அவனுக்கு எப்போதாவது உணவு கொண்டுவரும் மனிதனும் சுடப்பட்டு இறந்துபோகிறான். அவன் மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கிறான் நோயோடும், பசியோடும், நம்பிக்கையோடும்.

புரட்சியாளர்களுக்கும் ஜேர்மானியப் படைகளுக்குமிடையிலான சண்டையில் பீரங்கிகளால் அவன் இருந்த கட்டிடம் தாக்கப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில், புகைமண்டலத்திற்கிடையில், பிணங்களின் மீது விழுந்தெழும்பி ஓடுகிறான். பார்த்துக்கொண்டிருப்பவர்களை மரணபயம் தொற்றிக்கொள்ளும்படியான காட்சி அமைப்பு அது. இசைக்கலைஞன் என்று கொண்டாடப்பட்டவன் இப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாறிவிட்டிருக்கிறான். தோற்றமும் நடத்தையும் மாறிவிட்டிருக்கின்றன.

மறுபடியும் புரட்சியாளர்கள் தோற்கிறார்கள். எல்லாப் பிணங்களையும் ஒன்றாகத் தெருவில் போட்டுக்கொழுத்துகிறார்கள் ஜேர்மானியர்கள். உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது? பதுங்குகுழியினுள் ஒன்றாகப் போட்டுப் புதைக்கப்பட்டவர்களா? ஒன்றாகக் குவித்து எரிக்கப்பட்டவர்களா?

அவ்வளவு பெரிய நகரத்தில் சிதைந்த கட்டிடங்கள் நடுவே ஒரு பைத்தியக்காரனின் தோற்றத்தில் காலை இழுத்தபடி நடந்துபோகிறான் அந்த இசைக்கலைஞன். அந்தக் காட்சி மனதில் எப்போதும் அழிக்கமுடியாத சித்திரமாகப் பதிந்திருக்கும். வைத்தியசாலை போல தோற்றமளிக்கும் ஒரு கட்டிடத்தினுள் ஒளிந்துகொள்ள வாகாக இடம்தேடுகிறான். பசியும் தாகமும் அவனைச் சிதைக்கின்றன. அந்நேரம் பியானோவின் ஒலி அந்தக் கட்டிடத்தினுள் மிதந்து வருகிறது. அது சித்தம்பிறழ்ந்த தன்னுடைய மனப்பிரமை என்றே அவன் எண்ணுகிறான். கைக்கு அகப்பட்ட ஒரேயொரு திரவ உணவு டின்னை உடைக்கமுயல்கையில் அது கையிலிருந்து வழுகிச் சென்று உருண்டோடிச்சென்று எவருடையவோ காலடியில் முட்டிநிற்கிறது.

ஜேர்மானிய அதிகாரி ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான். முடிந்தது! இத்தனை காலமும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக்கொண்டிருந்த உயிர் இதோ பறந்துவிடப்போகிறது என்றெண்ணுகிறான். இனி ஓடச் சக்தியில்லாத கால்களோடும் பஞ்சடைந்த கண்களோடும் அதிகாரியை வெற்றுப்பார்வை பார்க்கிறான்.

“நீ யார்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”\

"…………."

“யூதனா? இங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாயா?”

“ஆம். நான் ஒரு பியானோ வாத்தியக்காரன்”

அந்த ஜேர்மானிய அதிகாரி அழைத்துச்சென்ற இடத்தில் ஒரு பியானோ இருக்கிறது. அதை வாசித்துக் காட்டும்படி பணிக்கிறான். உண்மையிலும் உண்மையாகவே ஒரு பியானோ! பசித்திருந்த, தாகித்திருந்த விரல்களுக்கும் ஆன்மாவுக்கும் உணவு. அடைக்கப்பட்டிருந்த சங்கீதம் மெதுமெதுவாகக் கசியவாரம்பிக்கிறது. பிறகு பேராழியின் ஆழம், புயலின் சீற்றம், ஆகாயத்தின் நீலம், நெருப்பின் பெருநடனம். பேருன்னதமான உலகொன்றினுள் அவன் விரல்கள் வழியாகப் பிரவேசிக்கிறான். ஜேர்மானியன் பிரமித்துப்போய் அமர்ந்திருக்கிறான்.

“அங்கே என்ன சத்தம்?”வாசித்து முடிந்ததும் ஷ்பில்மான் கேட்கிறான்.

“ரஷ்யர்கள் ஆற்றை நெருங்கிவந்துவிட்டார்கள். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும்”

அந்த மனிதநேயமுள்ள அதிகாரி ஷ்பில்மானுக்கு உணவுகொண்டு வந்துகொடுக்கிறான். கிளம்புகையில் ஏதோ நினைத்துக்கொண்டவனாக தனது கோட்டைக் கழற்றிக்கொடுக்கிறான். ‘போர்முடிந்ததும் நீ என்ன செய்வாய்?’என்று கேட்கிறான். ‘நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன்’என்கிறான் ஷ்பில்மான் கண்கள் மினுங்க. ‘உனது பெயர் என்ன? நான் உனக்காக அந்த வானொலியைக் கேட்பேன்’என்றுகூறி விடைபெறுகிறான் அந்த அதிகாரி.

“நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை?”கலங்குகிறான் ஷ்பில்மான்.

“கடவுளுக்கு நன்றி சொல். நாம் பிழைத்திருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான்”

கடைசியில் நமக்கு வாராத, வாய்க்காத அந்த நாள் அவனை வந்தடைகிறது. ரஷ்யர்களால் மீட்கப்பட்ட தெருக்களில் அவன் பேருவகையோடு நடந்துபோகிறான். பியானோ இசை பின்னணியில் ஒலிக்கிறது.

காட்சி மாறுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்கள் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலையான போலந்தியர்கள் அவர்களைப் பார்த்துக் கத்துகிறார்கள்.

“கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்”

அதிலொருவன் கோபத்தோடு விம்முகிறான்.

“நான் ஒரு இசைக்கலைஞன். எங்களுடைய எல்லாவற்றையும் அபகரித்தீர்கள். என் வயலினைப் பறித்துக்கொண்டீர்கள். என் ஆன்மாவை…”

சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்களிலிருந்து ஒருவன்-அந்தக் கருணையுள்ள அதிகாரி எழுந்து வருகிறான். ‘நீ ஒரு இசைக்கலைஞனா? உனக்கு ஷ்பில்மானைத் தெரியுமா? பியானோ வாத்தியக்காரன். அவன் ஒளிந்திருந்தபோது அவனுக்கு உணவுகொடுத்தேன். உதவி செய்தேன். நான் இங்கிருப்பதை அவனுக்குச் சொல்வாயா’ அந்த வயலினிஸ்ட் தலையசைக்கிறான். ஜேர்மானியனை இழுத்து அமர்த்துகிறார்கள் ரஷ்யர்கள்.

மறுபடியும் அதே வானொலி நிலையத்தில் பியானோ முன்னமர்ந்திருக்கிறான் ஷ்பில்மான். அவன் விரல்கள் வழியாக அழுதுகொண்டிருக்கிறான். தாயை, தந்தையை, சகோதரர்களை, மலர்ந்து உதிர்ந்த காதலை, இருப்பிற்காக நெருப்பில் நடந்த நாட்களை, கொல்லப்பட்ட தனது மக்களை நினைத்து உருகுகிறான். அந்நேரம் அவன் முகம்தான் எத்தனை வேதனையில் வெடித்துக்கொண்டிருந்தது!

“இதோ இடத்தில்தான் அவர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இதோ இங்கேதான் அந்த ஜேர்மானியன் அமர்ந்திருந்தான். உன்னைக் கேட்டான்”புல்தரையைக் காட்டுகிறான் நண்பன் பிறகொருநாள்.

பெருமூச்செறிகிறான் ஷ்பில்மான். பியானோ அமைதியின் ஆழத்திலிருந்து எழுந்து பொழிகிறது. மேலும் பொழிகிறது. பொழிகிறது.

‘தனது 88ஆவது வயதில் இறக்கும்வரை ஷ்பில்மான் வார்சோவில் வாழ்ந்திருந்தார்’என்ற வரிகள் திரையில் மேலுயர்ந்துசெல்கின்றன.

‘ரஷ்யப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட அந்த ஜேர்மன் அதிகாரி 1953ஆம் ஆண்டு சிறைக்குள்ளேயே மடிந்துபோனான்’ என்ற தகவலும்.

இப்போது பியானோ அதன் பாரத்தோடு நம்மேல் இறங்கியிருக்கிறது. அந்த இசையின் துயர் நமக்குள் கடத்தப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் குரூரம் நம்மை ஏங்கியழ வைக்கிறது. அவலப்பட்டவர்களின் கண்ணீர் நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்குகிறது.

நினைத்துப் பார்த்தேன். இவ்வளவும் நடந்தது ஏறத்தாழ 64 ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு மனித ஆயுளிலும் குறைவான காலப்பகுதிக்கு முன்னர்தான். மானுடகுலத்தின் விரோதியெனப்பட்ட ஹிட்லர் பிறந்த ஜேர்மனி அமைதியாகிவிட்டது. மீட்பனாகத் திகழ்ந்த ரஷ்யா துண்டுதுண்டாகச் சிதறிவிட்டது. அறுபது இலட்சம் பேரை இனவெறிக்குத் தின்னக்கொடுத்த யூதர்கள் அதன்பிறகும் உயிர்த்திருந்தார்கள். அதட்டல்களையும் மிரட்டல்களையும் மீறி அவர்களுக்கென்றொரு நாட்டைப் பிறப்பித்தார்கள். ஈழத்தில் முப்பத்தைந்தாண்டு காலப் போராட்டம் பேரினவாதத்தாலும் அதன் பின்பல நாடுகளாலும் பிடுங்கியெறியப்பட்டுவிட்டது. மிருகங்களை அடைத்துவைப்பதைப் போல, வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் தடுப்புமுகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப்படைகளை நினைவூட்டும் இராணுவத்தினர் முகாம்களைச் சுற்றி முட்கம்பி வேலியிட்டு கண்துஞ்சாது காவல்புரிகின்றனர். நோய், பட்டினி, மனவழுத்தம், காணாமல் போதல் இன்னபிற காரணங்களால் அகதிமுகாம்களிலிருந்து
வாரத்திற்கு 1,400 பேர் இறந்தும் மறைந்தும் போவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மூன்று இலட்சம் மக்களுக்குள் வைத்தியர்கள், சட்டம் படித்தவர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், மாணவர்கள், கவிஞர்கள், பொறியியலாளர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள் உள்ளடங்குவர். மெதுவாக மிக மெதுவாக திட்டமிட்டு மூன்று இலட்சம் பேரையும் பேரினவாதிகள் காலிசெய்வதற்கு முன் நாம் கண்விழிக்காதிருந்தால், மரணக்குழிக்குள் புதைப்பதற்குமுன் நாம் அதற்கெதிராகக் குரலெழுப்பாதிருந்தால், நமது கதையைச் சொல்ல, எழுத, ‘த பியானிஸ்ட்’போல படமெடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.

நினைவிருக்கட்டும். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னிருந்த உலகம் இன்றில்லை. அது மேலிருந்து கீழாகிவிட்டது. நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்.

-------


வவுனியாவிலுள்ள தடுப்புமுகாம்களைப் பற்றி இவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல்: இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதைமுகாம்களைப் போன்ற மரணமுகாம்களாக இருக்கின்றன. இன்று நாம் இலங்கையில் பார்ப்பதும் இன அழிப்பே. இதை அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன: வவுனியாவில் தமிழ்மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை.

புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் மனமேந்திர: இடி அமீன் மற்றும் பொல்போட் போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்கள் காலத்தில் கூட இவ்வாறான இடம்பெயர் முகாம்கள் காணப்பட்டதா என்பது சந்தேகத்திற்குரியது.

மனித உரிமைக் கண்காணிப்பகம்: அப்பாவிப் பொதுமக்களை அகதிமுகாம்களில் தொடர்ச்சியாக அடைத்துவைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார: மனிதர்களை மிருகங்களாக நடத்தாது, மனிதர்களாக மதித்து வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க: நம்பிவந்த தமிழ்மக்களை அரசாங்கம் பழிவாங்குகிறது. நம்பிவந்த மக்களை அரசாங்கம் மிருகங்களைப் போல நடத்துகிறது.

மனித உரிமைகள் பணியாளரான நிமால்கா பெர்னாண்டோ: போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தமிழர்கள் நடத்தப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகள் போலவே நடத்தப்படுகின்றார்கள்.

மேலே கருத்துச் சொல்லியிருப்பவர்கள் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களும், மேற்குலகைச்சேர்ந்தவர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: உயிரோசை இணைய இதழ்

8.23.2009

செங்கல்பட்டு சிறப்புமுகாம்வாசிகள் விடுக்கும் அறிவித்தல்

விடுநர்
முகாம்வாசிகள்
சிறப்பு முகாம்
செங்கல்பட்டு.


செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கள் பெற்றோர்உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளோம், எங்கள் மீது போலீஸாரால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறை முயல்வதில்லை. நாங்கள்இங்கு அடைக்கப்பட்டு இருப்பதால் எங்கள் மீதான வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸ். காவல்துறைக்கு உடனடி தேவையும்இல்லை, எனவே நாங்கள் மூன்று மாத தண்டனை கிடைக்க கூடிய வழக்கிற்கு மூன்றுவருடமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், எங்களது உறவுகளாகிய மனைவி. பிள்ளைகள்.உற்றார். உறவினர் வெளியே அகதி முகாம்களிலும் வெளிக்காவல் பதிவுகளிலும் பதிந்துகொண்டு துணை. ஆதரவு இல்லாமல் பரிதவித்து வருகின்றார்கள், இலங்கையில் இனக் கலவரம் முடிந்து விட்டது, ஆனால் இங்கோ நாங்கள் இந்தத் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு வதைபடுகின்றோம்.

நாங்கள் எங்கள் உற்றார் உறவினர்களுடன் வெளிமுகாம்களில் இருந்து, எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்றும் எங்கள்அனைவரையும் வெளி முகாம்களுக்கு மாற்றக் கோரியும் பல விண்ணப்பங்களும்.உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தியும் உள்ளோம். ஆனால் விடுதலை தொடர்பாக எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை. எங்களில் பலரின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் பலியாகிவிட்டனர், பலர் காணாமல்போய்விட்டனர், பலரின் மனைவி மற்றும் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை, இச்சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். இந்த வதை முகாமில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போல வாழ்ந்து வருகின்றோம், இப்படியே தொடர்ந்து இங்கு அடைக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக பைத்தியகாரர்களாக ஆகிவிடுவோம், எங்களை விடுதலைசெய்யக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருந்தோம். அப்பொழுது அரசுசார்பில் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமெனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டி கேட்டு கொண்டதற்கு இணங்கி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்,ஆனால் உண்ணாவிரதம் கைவிட்டு பதினைந்து நாட்கள் ஆகியும் தற்போது இங்குவரும் அதிகாரிகளின் பேச்சுகளிலும் இருந்தும் எங்களின் விடுதலைதொடர்பாகவும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது,எனவே எங்கள் அனைவரையும் இந்த தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதிகாரிகள் எங்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கத் தயங்கும் பட்சத்தில் நாங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் மீண்டும் எமதுஉண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என தீர்மானித்துள்ளோம் என்பதைத் தங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகிறோம், மேலும் எங்கள் மீது அனுதாபமும் ஆதரவும் காட்டும் சக்திகள் எங்களுக்குத் துணையாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவுதிரட்டி எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி எங்கள் விடுதலைக்கு உதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம், எங்களை வெளியில் விடும்வரை காலவரையற்ற உண்ணாவிரத்தை நாம் தொடர்வோம்,இவ்வாறு செய்வதைத் தவிர வாக்குறுதியை நம்பி இடைநிறுத்தியோ அவகாசம் கொடுத்தோ எம்மால் தீர்வு காணமுடியாது, இதைத் தவிர நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வகையோ வழியோ இல்லை, அதற்கேற்றது போலவே முன்கூட்டியே எல்லோருக்கும் எமது நிலைப்பாட்டையும் அறிவுறுத்தலையும் தந்துள்ளோம், எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை. எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்குஅனுமதியை கேட்கிறோம். தங்களால் முடியக்கூடிய கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம், உறுதியான தெளிவான முடிவுகளுடனேயே இவ்வழியை கையாள்கிறோம். இதிலிருந்து பின்வாங்குவதற்கு நாம் தயாராக இல்லை, எமது உறவுகள் துன்பப்படும்போது நீங்கள் 'எல்லா வசதிகளும் செய்து தருவோம்' என்று வாக்குறுதி வழங்கி, தொலைக்காட்சி பெட்டியையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு வந்து தருவது, எமது உணர்வைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எந்த மிருகத்தைக் கூட கூண்டில் அடைத்து விட்டு அதற்கு என்ன உணவை கொடுத்தாலும் அதற்கு கூட அது சிறைவாழ்க்கையாகவே இருக்கும். காயப்படும் விலங்குகள், பறவைகள் எல்லாவற்றுக்கும் மருத்துவம் செய்து சுதந்திரமாக உலாவருவதற்கும் எற்பாடு செய்வதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்கிறோம். திசைமாறி வரும் கொடிய மிருகம் என்றாலும் கூட அதைக் காப்பாற்றி அனுப்புவதைக் காண்கிறோம், இவ்விலங்குகள் அளவுக்குக்கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும்வேதனையான விஷயம். நாம் இங்கு இருக்கும் உறவுகளுடன் சேர்ந்து வாழவே கேட்கிறோம், இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்திற்கு முன்னரே தங்களிடம் இம்மனுவை அனுப்பி வைக்கிறோம்.

இப்படிக்கு
முகாம் வாசிகள்
நாள் – 22,8,09
இடம்: சிறப்பு முகாம். செங்கல்பட்டு


இவ்வறிவித்தல் இன்று காலை மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது.

8.15.2009

நந்திதா! நீ ஏன் இப்படி இருக்கிறாய்?


நேற்றுவரை அவளை எனக்குப் பிடித்திருந்தது. அவள் நிதானமாக நகரும் ஒரு நதியைப் போலிருந்தாள். இல்லை… இந்த உதாரணம் எனக்குப் பிடிக்கவில்லை. இதைப் பல தடவை நானே எழுதியிருக்கிறேன். செடியின் தலையில் நளினமாக அசையும் பூவினை ஒத்திருந்தாள். இதுவும் வேண்டாம். இறுக்கமாக மூடப்பட்ட சாளரங்கள் வழியே தெரியும் வேகநெடுஞ்சாலையின் மௌன விரைதலுக்கு அவளை ஒப்பிடலாம். பூவும் நதியும் சலிக்கிறது. அமைதியில் ஒளிர்ந்த அந்த முகத்தை நான் நேசித்தேன். அவள் அப்படியே நீடித்திருக்க நான் பிரார்த்தித்தேன்.


“நந்திதா! நீ ஏன் எப்போதும் இப்படியே இருக்கக்கூடாது?”

அவள் சிரித்தாள். அவள் சிரிக்கும்போது நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். எப்போதாவது அருமையாக கண்களில் மின்னல் தெறிக்கச் சிரிப்பாள். பிடிக்காதவர்கள் முன் செத்த புன்னகைதான். நடந்தது இதுதான். நேற்று அவள் வெகு நாட்களுக்குப் பிறகு குடித்தாள். போதையின் கிறக்கத்தில் அந்தக் கண்கள் தனக்குள் ஆழ்ந்துபோவதை நான் பார்த்தேன். நினைவுகளின் இருட்டில் எதை அகழ்ந்து எடுத்தாளோ… இறந்தகாலத்தின் துயரக்கதவு படீரெனத் திறந்துகொண்டது. அதனுள்ளிருந்து வெளிவந்த தனிமை மிகவும் கோரமான முகத்தோடிருந்தது. பரண்களிலிருந்து துக்கங்களைச் சேகரித்த அவள் தன்னிரக்கத்தில் அழுதபோது நான் அவளைத் தடுக்கவிரும்பவில்லை. மது இறந்துபோனவர்களைத் தேடிப்பிடிக்கிறது; பிரிந்துபோனவர்களையும் கூட. மது கண்ணீரின் மடையைத் திறந்துவிடுகிறது. முல்லைப் பெரியாறு விடயத்தில் இது-மது உதவாது.

அத்தோடு அவள் நிறுத்திக்கொண்டிருக்கலாம். உங்கள்முன் அவள் தன்னை முழுவதுமாகத் திறந்துகொட்ட ஆரம்பித்தாள். உங்களுக்கோவெனில் கதை கேட்கும் உருசி. அல்லது குற்றவாளியின் முன் நீதிபதியாக அமர்ந்திருக்கும் ஆசை. நீண்டநேரம் உண்மை என்ற சாட்டையால் தன்னைத்தானே விளாசிக்கொண்டிருந்தாள். தவறி உங்கள்மீதும் ஓரிரு அடிகள் விழுந்துவிட்டன. மரபார்ந்த செவிகளுக்கு அவள் ஒரு பெரிய அதிர்ச்சிதான். என்ன செய்வது? வாழ்க்கை அவளைக் குரூரமாகச் சபித்துவிட்டது. (நியாயம் கற்பிக்கிறாளாம்) அவளது செடிகளில் மலர்கள் உதிர்ந்துபோக முட்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. தாமரைக்கிழங்குகள் மட்டும் எஞ்சிய குளமென்றும் சொல்லலாம். பறவைகள் கைவிட்டுப் பறந்த மரத்தைப் போலிருந்தாள் என்று எழுத விரும்புகிறேன். ஆனால், இந்த உதாரணத்தை நாம் பலதடவை பிரயோகித்திருக்கிறோமல்லவா? சரியாகச் சொன்னால், ‘உண்மை பேசுகிறேன் பேர்வழி’என்று அவளே எல்லோரையும் விரட்டிவிட்டாள். பூவின் ஆயுள்கூட இல்லை பொய்க்கு என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

தனிமை… அது நாம் உண்ணும் பதார்த்தங்களிலும் அதிருசியானது. அதை அவள் கடைசித்துணிக்கை வரைக்கும் சாப்பிட்டே ஆவேன் என்று அடம்பிடித்தாள். நீங்கள் தனிமையைச் சாப்பிட்டிருக்கிறீர்களா? தனியாக அருந்தும் தேநீருக்கொரு சுவை உண்டு. படுக்கையின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம்வரை நாமே புரளமுடிகிற சுதந்திரத்திற்கொரு சுகம் உண்டு. இறுக்கும் உள்ளாடைகள் அணியவேண்டியிராத வீடு அற்புதம் அல்லவா? மரங்கள் அடர்ந்த சாலைகள் வழியே இசையைக் குடித்தபடி தனியே நடந்துபோகும்போது, சுத்தமான காற்று நம் சுவாசப்பைகளுக்குள் வந்து இறங்கும்போது எனக்குச் செத்துவிடத் தோன்றியிருக்கிறது. ஆனால், தனிமை திகட்டும் தேன். அதை மாந்தி மாந்தி மயங்கிவிழும் ஈக்களைப் போல அவளும் விழுந்தாள். இந்தச் சமூகத்திலிருந்து தொலைந்தாள்.

தயவுசெய்து சேர்ந்து குடிக்காதீர்கள். அது உங்களை மற்றவர்கள்முன் காலிசெய்கிறது. கோப்பை காலியாக காலியாக நீங்களும் அதுவிதமாகவே ஆகிவிடுகிறீர்கள். பிறகு வெறுங்கூடுதான். நந்திதா! நீ உண்மை பேசவேண்டுமென்று யார் அடித்துக்கொண்டார்கள்? உன் காதலை, உன் காமத்தை யார் கேட்டார்கள்? நீ பொய் சொல்லவேண்டுமென்று நான் விரும்புகிறேன் நந்திதா. என் அன்பே! தோலுக்கு மேல் இன்னொரு தோலைப் போர்த்திக்கொள். நாவுக்கு மேல் இன்னொரு நாவைத் தைத்துக்கொள். உதடுகளிலிருந்து சொற்கள் புறப்படும்முன் ஒன்றுக்கு நான்கு தடவை ஒத்திகைத்துக்கொள். இப்போது பேசு! ஆஹா! நீ இப்போது பெண்ணிலும் பெண்ணாகப் பேசுகிறாயடி!

நேற்று நீ பேசிக்கொண்டிருந்தபோது நான் யோசித்தேன் ‘நீ எவ்வளவு அழகாக சொதப்புகிறாயடி’என்று. நீ பேசிமுடித்ததும் உனக்கு முன் அமர்ந்திருந்தவர்களின் கண்களில் அதிர்வைப் பார்த்தேன். பிறகு நீ மௌனமாக எழுந்துபோனாய். உனக்குப் பிடித்த பாடலை கணனியில் கிளிக்கினாய். ‘நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’என்ற பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கரைந்து அழுதாய். (‘பாரதி’படத்தில் அதை இளையராஜாவும்தான் பாடியிருந்தார்.) தண்ணீர்த் துல்லியமில்லை ஜெயஸ்ரீயின் குரல். ‘ஙீ…’என்ற இனிமை இல்லை. கொஞ்சம் கனத்து பிசிறடித்தாற்போலிருக்கும். ஆனால் அது மனசுக்குள் புகுந்து அலைகிற குரல். துயரங்களைத் துருவிப் பிடிக்கிற குரல். பிரியமுள்ள இரண்டுபேர் மழை நாளொன்றில் உதட்டில் உதடு அழுத்தி இடும் முத்தத்திற்கு இணையான இதம் அந்தக் குரல். அந்தப் பாட்டை இந்த உலகத்தின் பொய்மைகள் கைவிடும்போது, தனித்திருந்து தயவுசெய்து கேட்டுப்பாருங்கள். பாரதி! யார் என்ன சொன்னாலும் எனக்கு உன்னைப் பிடிக்கத்தான் பிடிக்கிறது.

அவள் உறங்கப்போனாள்; ஒரு மனதைக் கலைத்துவிட்டு. தண்டனைகள் நியாயமற்ற காலங்களில் வந்தடைவதற்கு யார் என்ன செய்ய இயலும்?

நந்திதா! நீ ஏன் இவ்வளவு தத்தியாக இருக்கிறாய்? நீ ஏன் எல்லாப் பெண்களையும் போல இருந்திருக்கக்கூடாது?

கண்ணாடியை எடுத்து உன் கண்களைப் பார்த்துச் சொல்கிறேன்:

“நந்திதா! யாரும் இல்லாமல் போனாலும் நீ எழுதிக்கொண்டிரு… அது போதாதா உனக்கு?”


இலங்கையில் நிலவுவது ஜனநாயகமா? புழுநாயகமா?

வன்னியில் விடுதலைப் புலிகளின் பாசிச, ஹிட்லரிச, நாசிச, மோசிச ஆட்சியின் கீழ் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த மக்களை கருணையுள்ளத்தோடு ‘மீட்ட’இலங்கை அரசாங்கம், அவர்களை எத்தகைய வசதிகளோடு வாழ்வாங்கு வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இலங்கையிலிருந்து ஒரு நண்பரால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டிருக்கின்றன. என்னைப்போலவே வேறு சில நண்பர்களுக்கும் அவை அனுப்பப்பட்டிருப்பதால், அவர்களும் தங்களது இணையத்தளங்களில் அப்புகைப்படங்களை வெளியிட்டிருப்பார்கள். சற்றுமுன்னர்தான் tamilcircle.net இல் அவற்றைப் பார்த்தேன். அந்தக் குறிப்பிட்ட நண்பரால் தனது இணையத்தளத்தில் இப்படங்களைப் பிரசுரிக்கமுடியாது. அவரைத் தேடிப்பிடித்து சங்காரம் செய்துவிடுவார்கள். வவுனியாவிலுள்ள முகாம்களில் மக்கள் புழங்கும் இடங்களில் நெளியும் புழுக்களுக்கு இணையானதே இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயகமும் என்பது உலகறிந்தது. மழைநாட்களில் வசதிகள் ஏதுமற்ற அந்த முகாம்களில் மக்கள் படும் துயரங்களை இந்தப் படங்கள் விளக்குகின்றன. இதுதானையா இலங்கையின் புழுநரகம்!






















8.09.2009

இந்த நாள் இப்படிக் கழிந்தது


அவிழ்க்க முடியாத புதிர்களுள் முக்கியமானது மனித மனம். இந்தப் புதிர்த்தன்மையில் சினிமாப் பாடல்களில் வருவதுபோல ஆண் மனம், பெண் மனம் என்ற பேதங்கள் குறைவு. பைத்தியம் என எம்மால் கோடு பிரித்து ஒதுக்கப்படுபவர்களுக்கும் நமக்கும் இடையில் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. காற்றில் ஆடும் மெல்லிய இழையினையொத்தது பைத்தியத்திற்கும் தெளிவுக்குமான இடைவெளி.

தொலைந்த ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருக்கும்போதே அது கிடைத்துவிடக்கூடாது என்று பிரார்த்திக்கும் ஒரு சிறிய பகுதி இயங்குவதை நான் அவதானித்திருக்கிறேன். வேண்டுமென்றே தடயங்களை விட்டுச்செல்லும் குற்றவாளிகளைப் பற்றி வாசித்திருக்கிறேன். மிக மிகப் பிடித்தமான ஒருவரைச் சந்திப்பதற்கு முன்னைய கணத்தில் அவரை நிராகரித்துச் சலிக்கும் மனதையும் உணரமுடிந்திருக்கிறது. அடைந்தே தீர்வதென்ற வெறி கையகப்படும் தருணத்தில் கண்ணெதிரில் கரைந்து ஒழுகுவதை நாம் யாவருமே கவனித்திருப்போம். நுட்பமான இழைகளாலான மனதில் உள்ளார்ந்து இயங்கும் வேட்கைகளில் ஒன்றாக தொலைந்துபோவதன்பாற்பட்ட ஈர்ப்பைச் சொல்லலாம்.

படிக்கும்போது கணக்குப் பாடத்தில் பல புதிர்களை நாம் விடுவித்திருப்போம். அதன் சூத்திரம் எளிதாகப் பிடிபடும்போது ஏற்படும் தெளிவினைக்காட்டிலும், தவறிழைத்துக் கணக்குக் காட்டினில் வழிதொலைத்துக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் தெளிவும் நிறைவும் மிகப்பெரிது. மேல்வகுப்புகளில் கணக்கியல் படித்தவர்களுக்கு இந்த உற்சாகப்புள்ளி புரியும். இருபக்கமும் சமனான தொகையை வந்தடையும்போது உற்சாகக்கூச்சலொன்று உள்ளுக்குள் கேட்கும்.

வாழ்க்கைக்கும் வழிகளுக்கும் மேற்சொன்ன ‘தவறின் வழி கற்றல்’பொருந்தும். தொலைந்து போவது குறித்து பாஸ்கர் சக்தி எழுதிய கட்டுரை ஒன்றை நேற்று முன்தினம் வாசிக்க நேர்ந்தது. நேற்று அடிக்கடி தொலைந்துகொண்டிருந்தபோது எனக்கு அந்தக் கட்டுரையின் ஞாபகம் வந்தது. சுமார் ஒன்பதாண்டுகளின் முன் சுற்றிய அதே இலண்டன் நகரம்தான். அதே நிலக்கீழ், மேல் புகையிரதப் பாதைகள்தாம். என்றாலும் எல்லாம் புதிதாகத் தெரிந்தன. ‘மாப்’வாங்கி வழிபார்க்காமல் சுற்றவேண்டுமென்ற பைத்தியக்காரத்தனம் இயங்கிய-இயக்கிய நாள் அது.

சரக் சரக்கென வந்து நிற்கும் புகையிரதங்களில் மாறி மாறி ஏறி (நிச்சயமாக அதற்கு இலகுவழி இருந்திருக்கும்) ‘வெஸ்ட் மினிஸ்டர் அபே’யை வந்தடைந்தேன். சுருக்கமாகச் சொன்னால் ‘இங்கிலாந்தை ஆண்ட அரசர்களின்-அரசிகளின்-பிரபுக்களின்-கவிஞர்களின் கவித்துவமான கல்லறை’என்று அதைச் சொல்லலாம். அவற்றிலொரு பணக்காரச் செருக்கும் படாடோபமும் இருந்ததாக உணர்ந்தேன். (அது நம் துன்பங்களுக்கு நதிமூலமாக இருந்தவர்கள் என்ற கசப்பினால் ஏற்பட்டதாக இருக்கலாம்) ஆனால், பழமைக்கேயுரிய- தொடவியலாத காலத்தை ஏதோவொரு வகையில் தொடும் பிரமிப்பு அந்த நினைவகத்தினுள் உலவிய எல்லோருடைய முகத்திலும் இருந்ததைப் படிக்கமுடிந்தது. நமக்கு எட்டாததை ஆராதிக்கும் ‘திவ்ய தரிசன’ பாவத்துடன் உலவிய பலரைப் பார்த்தேன். தரையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை மிதிக்கும்போது நூற்றாண்டுகளையே மிதிப்பதுபோல கூசியது. நீளநீளமாகப் படுத்தவாக்கில் கிடந்த சிலை மன்னர்களைத் தொடும்போது அமானுஷ்யமான ஒரு அதிர்வும் பயமும் உடலில் பரவியது. ஒவ்வொருவர் கையிலும் இருந்த இயந்திர வழிகாட்டியின் குரல்விளக்கம் (வார்த்தைகளை முடிக்காமல் இடையில் விழுங்கும் பிரிட்டனின் ஆங்கிலத்தில் எனினும்) உபயோகமாக இருந்தது. ‘கவிஞர்களின் மூலை’என்ற பகுதியில் சேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சிலையாக நின்றிருந்தார்கள். நாடக ஆசிரியர்களும் நாவலாசிரியர்களும்கூட ஞாபகம் கொள்ளப்பட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் பாரதி, வள்ளலார் தவிர யாராவது கவிஞர்களுக்குச் சிலை இருக்கிறதா என்று நினைத்துப் பார்த்தேன். ஞாபகத்தில் வரவில்லை. திரும்பும் திசையெல்லாம் அரசியல்வாதிகளின் கூப்பிய கைகளும் ‘கட் அவுட்’களில் கனிந்த புன்னகையும் ‘குடும்பத் தலைவனே’,(யாருக்கு யார் குடும்பத்தலைவன்?) ‘குத்துவிளக்கே’,(அது சரி) ‘பிடல் காஸ்ட்ரோவே’(இந்தத் திருவாசகத்தை எழுதியவரைப் பாராட்டியே ஆகவேண்டும்) என்று நெகிழ்ந்து வழிந்த வாசகங்களும்தான் நினைவிலிருக்கின்றன.

கால்கள் களைப்பிலும் பசியிலும் கெஞ்சியபோதிலும், கழிந்த காலம் இழுத்துக்கொண்டேயிருந்தது. ஒருவழியாக அதன் குரலைப் புறக்கணித்து வெளியில் வரும்போது நின்று கவனித்தேன். வெளியேறும் வாயில் நோக்கி வந்துகொண்டிருந்த ஒருவர் முகத்திலும் சிரிப்பில்லை. ஏதோவொரு நினைவு… ஏதோவொரு ஆழம்… சின்னதாய் ஒரு துயரம் தெரிந்தது. வெஸ்ட் மினிஸ்டர் அபேயின் உயர்ந்தோங்கிய கூம்புக் கோபுரங்களும் விதானங்களில் விரிந்திருந்த ஓவியங்களும் வர்ணக் கண்ணாடிகளும் ‘பிரமாண்டம் பிரமாண்டம்’என்றன. சில இடங்களில் கல்லறைகள்கூட கவித்துவத்தோடிருக்கின்றன. சில இடங்களிலோவெனில் கவிதைச்சாலைகள்கூட கல்லறைகளின் சூனியத்தோடிருக்கின்றன.

‘மடாம் துஸாட்’எனப்படும் மெழுகுச் சிலைகளாலான அருங்காட்சியகத்தை பல ஆண்டுகளுக்கு முன்னமே பார்த்திருக்கிறேன். உயிருள்ள மற்றும் இறந்த பிரபலங்களை உயிரோட்டத்துடன் சிலையாகச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதன்றி பெரிதாக அங்கொரு சிறப்புமில்லை. ஆனால், அந்தச் சிலைகள் சத்தியத்திலும் சத்தியமான உயிர்ப்போடு இருந்தன. கண்ணில் ஒளிரும் புன்னகையும், கைகளில் ஓடும் நரம்பும், கன்னங்களில் அசையும் பூனை மயிரும் என மெழுகின் வார்ப்புக் கலை அதியற்புதமாயிருந்தது. பலரை ‘சிலையா?’என்று நிமிர்ந்து பார்த்தால் கை அசைந்தது. ‘உயிருள்ளவரா?’என்று குழம்பிக் கூர்ந்தால் சிரிப்பு உறைந்திருந்தது. வழியில் நின்ற ஒருவரிடம் ‘எக்ஸ்கியூஸ் மீ’என்றேன். அவர் அசையவேயில்லை. சிலைதான். நல்லவேளை அந்தச் சந்தடியில் யாரும் கவனிக்கவில்லை. சந்திக்க முடியாத, பழகமுடியாத, தொட்டுக்கொள்ள முடியாதவர்களோடு நிறையப் பேர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். இளைஞர்களும் குழந்தைகளும் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இளம்பெண்களோவெனில் சினிமாக் கதாநாயகர்களோடு. அரசியல் தலைவர்களை அணைத்தபடி நின்றவர்கள் நடுவயதைக் கடந்தவர்களாக இருந்தார்கள். இந்திரா காந்தியும் மகாத்மா காந்தியும் பக்கத்தில் பக்கத்தில் நின்றிருந்தார்கள். நிறைய இந்தியர்கள் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னை ஈர்த்தவர் ஃபிடல் காஸ்ட்ரோதான்.

அதுவொரு கிழமை நாளாக இருந்தபோதிலும் கூட்டம் நெருக்கித்தள்ளியது. நிறைய வல்லெழுத்து கலந்து பேசிய கூட்டமொன்றின் பின்னால் நடக்கையில் காது கிழிந்தது. உண்மையில் நான் வெளியில் வந்து விழுந்துவிட விரும்பினேன். ஆனால், இடையில் பிய்த்துக்கொண்டு வெளிவரும் வழிதான் தெரியவில்லை. கூட்டம் என்னை இருண்ட பயங்கரமான பாதாள உலகத்திற்குள் இழுத்துக்கொண்டு இறங்கியது. இருளென்றால் இருள்… அப்படியொரு கட்டி இருள். பன்னிரண்டு வயதிற்குக் குறைந்த பிள்ளைகள், கர்ப்பிணிகள், இதயநோய்-இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதற்குள் செல்லவேண்டாம் என எதிர்ப்பட்ட அறிவிப்பில் கேட்கப்பட்டிருந்தது. இருளான பகுதிக்குள் மிக இருளான இடத்திலிருந்து கோரமான ஒரு உருவம் எங்கள் முன் பாய்ந்து கத்தியது. அதை எனக்கு முன்னால் சென்ற வல்லெழுத்து மொழிக்காரர்கள் பயத்தில் பன்மடங்காக்கி எதிரொலித்தார்கள். திடீரெனக் காலடியில் ஒரு சிதைந்த முகக்காரனோ காரியோ தவழ்ந்து வந்து பயமுறுத்தினார்கள். இவர்கள் அலறியடித்துக்கொண்டு அரண்டோடினார்கள். ஆடைகளில் இரத்தம் பூசிய இன்னொருவன் நடந்துகொண்டிருந்தவர்கள் மீது எங்கிருந்தோ வந்து உலாஞ்சிப் போனான். ‘ஹ_ய் ஹ_ய்’ என்று ஒரே பயஇரைச்சல். பி.டி.சாமி கதையை எல்லாம் விஞ்சக்கூடிய பயங்கரமாயிருந்தது. கொஞ்சம் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். இருந்தபோதிலும், வெளியில் இதைவிட ஆனானப்பட்ட பேய்களை எல்லாம் பார்த்திருப்பதால் நான் பயந்துபோய்க் கத்தவில்லை. எங்கிருந்து எது வந்து மேலே விழுமோ என்ற பயத்தில் உறைந்தவாறு நடந்தோம். என்னென்ன விதங்களில் மனிதர்களைக் கொல்லலாம் என்பதைச் சிலைகளைக் கழுவிலேற்றியும், கத்தியால் தலைகளைத் துண்டாக்கியும் செய்முறையில் விளக்கியிருந்தார்கள். பிணக்குவியலினுள் யாரையோ தேடிக்கொண்டிருந்தாள் விளக்கேந்திய தாயொருத்தி. எல்லாவற்றையும் எதனோடோ பொருத்திப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

வெளியேறும் வழியில் மெழுகு நாய் ஒன்று, வரும் ஒவ்வொருவரையும் வியந்து பார்த்து தன்பாட்டில் தலையாட்டிக்கொண்டிருந்தது. அறிவாளி ஒருவர் (கையில் எழுதுகோல் இருந்ததால் அப்படியொரு ஊகம். ஊகங்கள் பிழைக்கும் காலமிது) எழுதுவதும் பிறகு தலையாட்டிச் சிந்தனையைத் தொடர்வதுமாயிருந்தார். தொடராய் வந்துகொண்டிருந்த ‘டாக்ஸி’களில் ஏறி பிறகொரு புராதன அதிசய உலகினுள் பயணித்தோம். பிய்த்தோடும் வழியற்ற நானும் அதிலொன்றில் ஏறிக்கொண்டேன். பண்டைய அரசர்கள், பிரபுக்கள், மகாராணிகள், பிச்சைக்காரர்கள், சாரட் வண்டிகள், வாள்கள், செங்கோல்கள், கோமாளிகள், அறிஞர்கள், வித்தைகள் எல்லாம் மெழுகுச்சிலைக் காட்சிகளாய் விரிந்தன அந்தப் பயணத்தில். “பயணத்தின் முடிவிலுள்ள புகைப்படக் கருவிக்குச் சிரியுங்கள்” என்ற ஆரம்ப வாசகத்தை ஞாபகத்தில் வைத்து பலர் சிரித்தார்கள். ‘உங்கள் புகைப்பட இலக்கத்தைக் குறித்துக்கொள்ளுங்கள்’என்ற அறிவிப்பை எனது டாக்ஸி தாண்டும்போது கவனித்தேன். 58இல் தொடங்கிய புகைப்படத்தில் என்னைப் பார்த்தேன். அப்புறாணியாகத் தோன்றினேன். நாம்தான் புகைப்படங்களில் எவ்வளவு பாவமாக இருக்கிறோம்!

தோழியின் குழந்தைகளுக்காக ‘பூமராங்’ஒன்றை வாங்கிக்கொண்டு புகையிரத நிலையத்தை நோக்கி நடந்தேன். உடல் இற்றுவிழுமளவு களைத்திருந்தது. இம்முறை திரும்பிச் செல்லும் வழி மிக எளிதாக இருந்தது. எங்கேயும் தொலையவில்லை. நின்று நிதானித்து வரைபடங்களை உற்றுநோக்கிக்கொண்டிருக்கவில்லை. சென்றடையும் வழிகள்தான் சிரமம். பயணங்களில் மட்டுமென்றில்லை… காதலில், காமத்தில், நட்பில், எழுத்தில் எல்லாவற்றிலும் திரும்பும் வழிகள் மிக எளிதானவை.

8.04.2009

அந்தரத்தில் இருக்கிறது வீடு


‘எல்லாப் பாதைகளும் உன் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கும்’என்ற வரிகளை அதில் தொனிக்கும் காதலுக்காக அன்றி வேறேதோ காரணத்திற்காகப் பிடிக்கும். பெரும்பாலும் வீடு பற்றிய கவிதைகள் ஈர்ப்பனவாக இருக்கின்றன. சுற்றியலைவதை வேண்டுமென்றே தேர்பவர்களுக்குள்ளும் வீடு உயிர்ப்போடு துடித்துக்கொண்டுதானிருக்கிறது. அதன் வழிகளில் மானசீகமாக நடந்து நடந்து வீடு நோக்கிப் போய்க்கொண்டுதானிருக்கிறோம் எல்லோரும். பிறகொருநாள் உண்மையாகவே போகும்போது ஒன்றும் புதிதாய் தோன்றாமலிருப்பதற்கு அந்த மானசீகத் திரும்புதல்கள்தான் காரணம்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைச் சிக்கென்று பொருத்திக்கொண்டவர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் இல்லை. அத்தகையோர் இலகுவாக தத்தம் ‘வீடு’களுக்குத் திரும்பிவிடுகிறார்கள். ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்ற அகதி அந்தரிப்பில் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது தரையிறங்கும் சாத்தியங்களும் அறுந்துபோய்விட்டன. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ அன்றேல் இராணுவ முகாம்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, நாற்புறம் சுவர்கள், வாசல், முற்றத்து நிலவு, பூச்செடி, கிணறு, நாய்க்குட்டி இன்னபிற இனிக் கனவுகளில் வந்தால்தான் உண்டு.

வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்குப் புறப்படும்போது இருக்கும் குறுகுறுப்பு ஒரு வாரத்திலேயே தீர்ந்துபோய்விடுகிறது. வந்து சேர்ந்த இடம் சொர்க்கமாகவே இருந்தாலும், சொந்தங்கள் அன்பைச் சொட்டினாலும் தனக்குள் ஒடுங்க ஆரம்பித்துவிடுகிறது உள்ளம். பழகிய படுக்கை கூப்பிட ஆரம்பித்துவிடுகிறது. புத்தகங்கள் மாயக் கரங்களைக் காற்றில் அசைக்கின்றன. வேம்பின் பச்சையை உள்ளிழுத்தபடி பருகும் தேநீர் ஏடு படர்த்தி நமக்காகக் காத்திருப்பதுபோல தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதுவரை இரைச்சலிட்டுக் கொண்டிருந்த மனமும் உதடுகளும் மௌனத்தில் விழுந்துவிடுகின்றன.

மேலைத்தேயம் எத்தனை அழகோடிருக்கிறது! எவ்வளவு மரங்கள்! எத்தகைய நேர்த்தியான சாலைகள்! குறைசொல்லவியலாத போக்குவரத்து வசதிகள்! பிரமாண்டமான பேரங்காடிகள்! நடக்கத் தோதான பூங்காக்கள், இடிபடாத-இடிக்காத நாசூக்கான மனிதர்கள், சுத்தம் வாழும் இடங்கள் இவை. ஆனால், திப்புசுல்தானைப் போல எத்தனை தடவை படையெடுத்தாலும் வெளிநாடுகள் மனதில் விழுத்தும் அந்நியத்தன்மையை அகற்றமுடிவதில்லை. யாரும் யாரோடும் ஒட்டாததுபோன்ற விலகல். மேலும்,தாழ்வுணர்ச்சிக்குத் தள்ளும் மிகைமனிதர்கள் நடுவில் நம்மியல்போடு இருக்கமுடிவதில்லை.

யாரோவுடைய நிலத்தில் யாரோபோல இருப்பதில் என்ன இருக்கிறது?

உணர்ந்திருக்கிறீர்களா நீண்ட இன்மையின்பின் உங்கள் வீட்டுக்குத் திரும்பும் சாலை வளைவில் நெஞ்சுக்குள் நிறைந்து வழியும் உவகையை? ‘இல்லை’எனக் கருதிய எல்லாம் இருப்பதை? முகர்ந்ததுண்டா நீண்ட நாட்களுக்குப் பின் திரும்பும் உங்களை அணைத்துக்கொள்ளும் பிள்ளைகளின் மென்வாசனையை?
திரும்பவியலாத வீட்டைக் கொண்டவளை, அவள் வீடென வரித்துக்கொண்ட ஒன்று கூப்பிடுகிறது தன் ஈரக்கண்களால். தெருக்களெங்கும் நெருநெருக்கும் மனிதர்களை, தூசியை, ‘ங்கோத்தா’என்றாலும் இனிக்கும் மொழியை, பிள்ளைகளை, அரிய சில நண்பர்களை அவள் ‘மிஸ்’பண்ணுகிறாள். (மிஸ் பண்ணுவதை எந்தத் தமிழ்ச்சொல்லால் இட்டு நிரப்பலாம்?)
அந்தரத்தில் இருக்கிறது வீடு. அது தரையிறங்கும்வரை அந்தரத்தில் அலைகின்றன கால்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று சொன்ன கணியன் பூங்குன்றா! நாடிழந்து அலையும் துயரின்முன் யாதோ ஊர்? எவரோ கேளிர்?