2.27.2009

ஒரு கண்ணீர்க் கடிதம்


எனது அன்பிற்குரிய வலையுலக நண்பர்களில் ஒருவர் ‘நீங்கள் ஒவ்வொரு நாட்களும் பதிவு போடவேண்டும்’என்று கேட்டுக்கொண்டார். அந்தக் ‘கொடுமையை’நீங்கள் ஒவ்வொரு நாட்களும் அனுபவிக்க வேண்டுமா என்ன என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அவரோடு நிறைய நாட்கள் பழக்கமில்லை ஆதலால் ‘போடுகிறேனே’என்று பவ்யமாக ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டேன். ஒவ்வொரு நாட்களும் பதிவிடுவது சாத்தியமில்லை என்றாலும், ஆங்காங்கே வெளிவரும் எனது படைப்புகளை வலைப்பூவில் இட்டுவைத்தால் ஒரு சேகரிப்பாகவேனும் இருக்குமல்லவா என்ற எண்ணத்தில் இதில் பதிந்துவைக்கிறேன். தூண்டிய நண்பருக்கு நன்றி.


பொங்கல் சமயத்தில் குமுதத்தில் வெளியாகியது

அன்புள்ள உங்களுக்கு,

சாவு நிழலாகக் காலடியில் வளரும் மண்ணைச் சேர்ந்தவள் எழுதும் மடல்.
போரின் விளைவுகள் குறித்த எல்லா வார்த்தைகளும் எழுதி எழுதி தேய்ந்துவிட்டனவோ என்று அஞ்சுகிற அளவுக்கு அதைப் பற்றி நிறையப் பேசியாகிவிட்டது. பதினெட்டு ஆண்டுகளாக விதையுறைத் தூக்கமாக இருந்த உங்கள் உணர்வுகள் விழித்தெழ பூக்களாய் பொழிந்தீர்கள் உங்கள் நேசத்தை. மகிழ்ந்தோம்... நாங்கள் தனியாக இல்லை என்று நெகிழ்ந்தோம். உண்ணாநிலைப் போராட்டங்கள், மனிதச் சங்கிலி கைகோர்ப்புகள், எழுச்சிப் பேரணிகள், உள்ளம் உருக்கும் உரைகள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் விழியோரம் நீர்கசிந்தோம். எங்களுக்காகப் பரிந்து பேசும் வார்த்தைகளின் ஈரத்தில் நனைந்தோம். ஈற்றில் வழி பிறக்கப்போகிறது என்று எத்தனை நம்பிக்கையோடிருந்தோம்.

நம்பிக்கைத் திரியில் சுடர் மங்கிக்கொண்டே போகிறது. இன்றோ நாளையோ இச்சுடர் அணைந்துவிடுமோ, நாங்கள் இருட்டுக்குள் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மறுபடியும் மேலிடவாரம்பித்திருக்கிறது. களத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களின் உளத்தில் உண்மை நிலையறியாத காரணத்தால் இடையறாத போர் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதை நீங்களும் உணர்வீர்கள்.

மண்ணிலிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இல்லை. இராஜதந்திரப் பின்னகர்வாகவே வைத்துக்கொண்டாலும், கிளிநொச்சியில் ஆக்கிரமிப்பாளரது காலடிகள் பதிந்தன என்ற செய்தி உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனசில் விழுந்த பேரிடி. அன்றைக்கு எங்கள் நெஞ்சில் விழுந்த அனலின் சூடு இன்னமும் ஆறவில்லை. பேரினவாத இராணுவம் அடித்து விரட்டும்போது போய் ஆறுவதற்கென்று இருந்த ஒரு நிலப்பரப்பையும் சிறுகச் சிறுக இழக்கவேண்டி நேரிட்டால் இனி எமது மக்கள் எங்கேதான் செல்வது என்ற கலவரம், நம்பிக்கைகளையும் தாண்டி இதயத்தில் பரவுகிறது.

ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டுபோய்ச் செருகியிருக்கிறது சிறிலங்கா இராணுவம். பாதைகள் அடைபட்டிருக்கும் நிலையில் அத்தனை பேருக்குமான உணவை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? மருந்துக்கும் மருந்தில்லாத மண்ணாகி விட்டிருக்கிறது வன்னி. உயிர்காக்கும் ஆக்சிசன் உருளைகளைக்கூட அனுப்புவதை நிறுத்தி உயிர்க்காற்றையே மறுத்திருக்கிறார்கள் இதயமற்றவர்கள். காடுகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்களுக்கு தலைக்கு மேல் கூரைக்குப் பதிலாக பாம்புகள் தொங்குகின்றன. விஷம் கடித்து குழந்தை துடிக்கும்போது கொடுக்க மருந்தில்லாமல் சிறுகச் சிறுக அதன் உயிர்பிரிவதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் தாய்தந்தையரின் நெஞ்சம் வெடித்துச் சிதறாதா? ‘பசி… பசி…’என்ற சொல்லையே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் புத்தி பேதலித்துப் போகாதா? உழைத்துச் செழித்து வாழ்ந்த மக்களிடமிருந்து போர் மாற்றுடையையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. விக்கித்து வெறித்த பார்வையுடன் மர நிழல்களின் கீழும் வயல்வெளிகளுள்ளும் காடுகரம்பைகளிலும் செய்வதறியாது ஏங்கிக் காத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.

எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளலாம். அகதிகளாக மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பகுதிகள் மீதும் குண்டுபோட்டுக் கொல்வதென்பது எந்தப் போரியல் விதிமுறைகளுள் அடங்கும்? இம்மாதம் எட்டாம் திகதியன்று இடம்பெயர்ந்து வீதியில் சென்றுகொண்டிருந்த மக்கள்மீது வன்னியின் வட்டக்கச்சி என்ற இடத்தில்வைத்து எறிகணை வீசி ஆறுபேரைக் கொன்றொழித்து இருபத்தொன்பது பேரைக் காயப்படுத்தியிருக்கிறது இராணுவம்.

எங்கள் குழந்தைகளின் பெயரால் கேட்டோம் ‘சகோதரர்களே காப்பாற்றுங்கள்’என்று. ‘தொப்பூள் கொடி உறவுகளே’என்று விளிக்கும் உங்கள் வாஞ்சையின்மீது நம்பிக்கை வைத்துக் கேட்டோம்… ‘எங்கள் பெண்களைச் சிதைத்துக் கொல்கிறார்கள். கைவிட்டுவிடாதீர்கள்’என்று. வயது வந்து பாடை ஏறாமல் பசியாலும் இடப்பெயர்வின் அலைக்கழிவாலும் மனச்சிதைவாலும் பாதியிலேயே முடிந்துபோகும் எங்கள் தாய்தந்தையருக்காக உங்கள் முன் இறைஞ்சினோம்.

ஈற்றில் என்ன? வழக்கம்போலவே நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோமோ என்று ஐயுறுகிறோம். இத்தனை கோடி சகோதரர்கள் குரல்கொடுத்தால் ஓடிவரும் தூரத்தில் இருந்தும், நாங்கள் நிராதரவாக, யாருமற்றவர்களாக தனித்துத் துயரப்பட விதிக்கப்பட்டோம். எத்தனையோ நாடுகளின் பக்கபலத்தோடு பேரினவாதம் தமிழர்களுக்கெதிரான போரை நடத்திக்கொண்டிருக்கிறது. கொடூரமான முறையில் திட்டமிட்டு இனவழிப்புச் செய்கிறது இலங்கை அரசாங்கம். கண்ணெதிரே சகோதரனின் நெஞ்சில் கத்தியால் குத்தும்போது கண்களை மூடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்குவதைப் போலிருக்கிறது இந்தியாவின் நிலைப்பாடு. இல்லை… அதனைக் காட்டிலும் மோசமாக, கத்தி முனை முறிந்தால் உபயோகப்படுத்தக் கொடுப்பதற்காய் கையில் உபகரணங்களோடு அருகிலேயே காத்துக் கிடக்கிறது.

தட்டிக் கேட்கும் தகுதி தமிழகத்திடம் இருந்தும் இன்னமும் தயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பூவுலகில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காட்டிலும் உயர்ந்தனவா நாற்காலிகள்? ஒரு இனத்தை அழித்தவர்களைப் பற்றி மட்டும் வரலாறு பதிவுசெய்யப் போவதில்லை. அழியவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மீதான பழியையுந்தான் அது எழுதிவைக்கவிருக்கிறது.

வாழும் கனவுகளை விழிகளில் சுமக்காமல் வலிகளைச் சுமக்கும் எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். பள்ளிக்கூடங்களுக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பதுங்குகுழிகளுள் பாய்ந்தோடி ஒளியும் அவலத்திலிருந்து அவர்களை விடுவியுங்கள்.

பொங்கல் வருகிறது. அங்கே பட்டாசு வெடிக்காது. பால்சோறு பொங்காது. மாவிலை ஆடாது. மாக்கோலம் வாசல் காணாது. பட்டுப்பாவாடை அலையாடும் சிறுமிகளும் இரார். இடிந்த கோயில்களில் ஒற்றை விளக்குக்கூட ஒளிராது. எங்களளவில் அன்றைக்கும் கிழக்கு இருண்டுதான் கிடக்கும். ஏற்றக்கூடாதா சகோதரர்களே எங்களை நினைத்தும் ஒரு சுடரை? எஞ்சியிருக்கும் காலத்தையாவது நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோமே…!


நன்றி: குமுதம்

4 comments:

chandru / RVC said...

படிக்கையில் விழிகள் பனிக்கின்றன சகோதரி. கையாலாகாத நிலையில் இருக்கிறோம், இங்கு எல்லாமே அரசியல்தான், இவர்கள் இறந்தாலும் நாற்காலியில் உட்காரவைத்தே புதைக்கச்சொல்லி மரணசாசனம் எழுதுவார்கள். முத்துகுமரன் எந்தவொரு கட்சியும் சாராது தீக்குளித்தார், அப்போதே நான் ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன், இதை இளைஞர்கள் யாரும் தொடரக்கூடாது என, ஆனால் இன்று பாருங்கள்... எல்லா கட்சிகளிலும் ஒவ்வொருவர் தீக்குளிப்பு, இது உணர்த்தும் செய்தியென்ன? பாராளுமன்றத் தேர்தலில் தீக்குளிப்பு தியாகத்தைச் சொல்லி குளிர் காய..... அவ்வளவே.
துயரப்படும் சகதமிழனை நினைத்து நாங்களும் துயருறுகிறோம் சகோதரி. வாய்ப்பு கிடைக்கையில் எனது நியாயமான உரிமையை பதிவுசெய்வேன் என உறுதியளிக்கிறேன்.

மாதவராஜ் said...

படிக்கவே முடியவில்லை. தொண்டை கனத்துப் போயிருக்கிறேன்.

சுவாதி சுவாமி. said...

என் இனமே ! என் சனமே! உனக்கென்று இந்த இழி நிலையை விதியாக எழுதி வைத்தவன் இந்தக் கணத்தில் என் பரம எதிரியாகிறான். என் உணர்வுகள் உடலை தகிக்கும் ஒவ்வொரு வினாடியும் அந்த எதிரியை கொல்லும் கொலையாளியாக என்னை உணர்கிறேன்.. இயலாமையும் வேதனையும் அரிக்கும் மனதுடன் என் மண்ணின் சோகத்தை படித்துக் கொண்டிருக்கும் வெறும் வாசகியாக இன்னும் எத்தனை நாள் சகிக்க வேண்டும் இந்த விதியை? என்றாவது நல்ல செய்தி கிடைக்காதா என்ற தவிப்புடன் இருக்கிறேன் தோழி! :(

அன்புடன்
சுவாதி

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்போதும் போலவே இப்போதும் நெஞ்சம் கனத்தது, இந்த ஒரு காரணத்துக்காகவே ந.குமாரனுக்கு நாவலை படிக்காமலேயே வைத்துள்ளேன் தோழி.

”அகதி” யை மட்டுமே படித்தேன்.