1.10.2009

தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை'



வெளியீடு: காலச்சுவடு

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு போராட்டத்தின் வழியாக தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதன் முன் எண்ணுக்கணக்கற்ற இழப்புகளையும் மனச்சிதைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டியலிடாமலே அந்த மானுட அவலங்களை நாம் அறிவோம். சகமனிதர்களின் குறிப்பாக தான் வாழும் சமூகத்தின் இழப்புகளும் வலிகளும் ஒருத்தியை அன்றேல் ஒருவனைப் பாதிக்கவில்லையெனில், அவர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவர்.

சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக தீபச்செல்வனை அடையாளம் காணமுடிகிறது. அதேசமயம் போர் அவர் மீதே செலுத்தும் ஆதிக்கம், அழுத்தங்கள், நேரடியானதும் மறைமுகமானதுமான அச்சுறுத்தல்கள் இவைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். புனைவுகளும் இறந்தகாலத்தின் நினைவுகளும் பெரும்பாலும் கவிதைகளாகக் கருக்கொள்ளும் நிலையிலிருந்து மாறுபட்டு சமகாலத்தை இவரது எழுத்துக்கள் ஏந்திவருகின்றன. தான் வாழும் நிலத்தின் வதைபடலை கையறு நிலையோடு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் குற்றவுணர்வை இவரது பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. போருள் வாழ்வதென்பது ஏறக்குறைய மரணத்திற்குச் சமானம். அந்த மரணவாதையை, அதன் குரூரத்தை அதனுள் வாழ்பவர்களால் மட்டுமே முழுமைபடப் பேசமுடியும்.

ஒரு தோழியின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்ட தீபச்செல்வனின் வலைப்பூவானது இணையத்தில் கிடைக்கப்பெறும் செய்திகளைக் காட்டிலும் வருத்தந் தருவதாயிருக்கிறது. அதுவே இலக்கியத்தின் சக்தியும் அல்லவா? அதிகாரங்களுக்கெதிராக எழுப்பப்படும் எந்தவொரு குரலையும் எழுத்தையும் நசுக்குவதும்கூட ஆக்கிரமிப்பாளர்களின் போர் தர்மங்களில் ஒன்றாக இருக்கும் நாட்டில், அழிவின் மையப்புள்ளியாக்கப்பட்டுவிட்ட கிளிநொச்சியில் வாழ்ந்துகொண்டு இவ்வாறு எழுதத் துணிவதென்பது ஒரு கவி மனசுக்கே சாத்தியம். இத்தனை இளம் வயதில் அவர் தனக்கேயான கவிதை வடிவத்தைக் கண்டடைந்திருப்பதும் மற்றுமோர் சிறப்பு. முதல் தொகுப்பு என்பது பெரும்பாலும் கவிதை எழுதிப் பழகும் ஒரு முயற்சியின் வெளிப்பாடே என்ற எனது கருத்தை இவரது கவிதைகளை வாசித்தபிறகு மாற்றிக்கொண்டேன்.

உதிரிகளாக வாசிக்கும்போது ஏற்படாத தாக்கத்தை ஒரு தொகுப்பாக வாசிக்கும்போது கவிதைகள் தந்துவிடுகின்றன. அந்த வகையில் அவருடைய 30 கவிதைகளைத் தொகுத்து 'பகுங்குகுழியில் பிறந்த குழந்தை'என்ற தலைப்புடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகத் திருவிழாவில், கவிஞர் சுகுமாரன் அவர்களது தலைமையில் 12ஆம் திகதியன்று தீபச்செல்வனின் தொகுப்பு வெளியிடப்படவிருப்பதாக அறிகிறேன். இத்தொகுப்பின் வழியாக தமிழ்க் கவிதைப் பரப்பிற்கு மேலுமொரு கனதியான படைப்பாளி வந்துசேர்கிறார்.

தீபச்செல்வனால் அவரது வலைத்தளத்தில் அண்மையில் இடப்பட்டிருக்கும் 'கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்' என்ற கவிதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல

"ஜனாதிபதியின் உணவுக் கோப்பையில்

மண் நிறைகிறது"

உண்மைதான். மற்றவர்களது மண் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் பசி தீராதது. ஆனாலும் மண்ணும் பசி கனலும் வயிறோடிருக்கிறது என்ற உண்மையை வரலாறு உணர்த்தத்தான் போகிறது. தமிழர்களின் மண் விதைகுழி மட்டுமன்று; ஆக்கிரமிப்பாளர்களது புதைகுழியும்கூட.


தீபச்செல்வனின் வலைப்பூ முகவரி: http://deebam.blogspot.com

6 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

அறிமுகத்திற்கு நன்றி தோழி... பற்றி எரிகிறது மனமும் கண்களும் கவிதைகளை வாசிக்கும் போது. இதுவரை கண்டதில்லை இப்பக்கங்களை. நன்றி மீண்டும்

தமிழ்நதி said...

கிருத்திகா,

தீபச்செல்வனின் கவிதைகள் நிகழை அப்படியே எழுத்தில் எடுத்துவருபவை. அன்றன்றைய நிலைமைகள். வாசிக்கும்போது அங்கே நின்றுகொண்டிருப்பதுபோலவே இருக்கும். காலச்சுவடு பதிப்பகத்தில் நேற்று 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' வாங்கினேன். நிதானமாக அமர்ந்து படிக்கவேண்டும். முடிந்தால் வாங்கி வாசியுங்கள் தோழி.

soorya said...

தீபச்செல்வன் தரமான படைப்பாளியே.
அறிமுகத்திற்கு நன்றி. அவரது படைப்புகள் எரிமலை,மற்றும் திண்ணை போன்றவற்றில் நிறைய படித்திருக்கிறேன். கிளியில் ஒரு கவிதைப் பட்டறை நடத்தினோம், அதற்கு அவர் வந்திருந்ததாக ஒரு நினைவு. பெயர்கள்தானே இப்போ உருமறைப்புகள் செய்யப்படுகின்றன.

தமிழன்-கறுப்பி... said...

நிச்சயமாய் மிகக்காத்திரமான வரிகளோடும், உணர்வுகளை முழுதும் நிரப்பித்தருகிற சொல்வளத்தையும் கொண்டிருக்கிறார்...

மிக கனதியான படைப்பாளி...

தமிழன்-கறுப்பி... said...

அவருடைய கவிதைகளை பார்த்து வியந்திருக்கிறேன்...!
தளம் முழுவதும் உணர்வுகளால் செதுக்கி இருப்பார்,படங்கள் கவிதைகள் என எல்லாமே நிகழின் வலிகளை சுட்டுவதாக இருப்பது அவருடைய துணிச்லையும் உணர்வுகளையும் சொல்கிற விடயங்கள்...

அற்புதன் said...

அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்

தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை
ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.

நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.
நன்றி.



SLA shelling targets densely populated Vanni regions
Uploaded by spyglass8
மேலதிக தகவல்களுக்கு
முரசுமோட்டை மக்கள் குடியிருப்பில் சிறிலங்கா வான் படை தாக்குதல் 31.12.2008 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=91
முரசுமோட்டை-வெளிக்கண்டல் சிறிலங்கா வான் படை தாக்குதல் 01.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=92
முரசுமோட்டை ஏறிகனைத்தாக்குதல் 02.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=93
வட்டக்கச்சி,தருமபுரம் பகுதிகளில் எறிகணைத்தாக்குதல் 08.01.2009 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=102
முல்லைத்தீவு தேரா மேற்குப்பகுதி ஏறிகனைத்தாக்குதல் 11.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=103
http://www.pulikalinkural.com/