12.29.2008

பாடல்கள் திறக்கும் பலகணிகள்


இசையை குறிப்பாக பாடல்களை எப்போதிருந்து நேசிக்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், பாடல்களைக் கேட்கும்போது அவற்றை முதன்முதலாகவும் அதிகமாகவும் கேட்ட காலங்களில் வாழ்ந்த சூழல் மற்றும் நிலவெளிகளுள் போய் விழுவது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. பாடலின் இழையைப் பற்றிக்கொண்டு காலங்களைக் கடந்து பயணிப்பதென்பது சாத்தியப்படக்கூடியதே.

அக்காவின் நீட்டிய கால்களில் படுத்திருந்து அவள் பிசைந்து ஊட்டிய மீன்பொரியல், சொதி, சோற்றைச் சாப்பிட்ட நாட்களில் மெல்லிய குரலில் அக்கா பாடியது என்ன பாடல் என்பதை உணரும் வயதில்லை. ஆனால் அவள் குரலும் இழுவையும் நினைவிலிருக்கிறது. மரணத்தை ஒரு குப்பி வழியாக அவள் ஊற்றிக் குடித்து இல்லாமல் போனபிறகும் ‘ங்….ங்…’என்ற கமகம் மனம் நொய்மையடைந்த பொழுதுகளில் ஒலித்து அழவைத்திருக்கிறது. அது மீன்பொரியல் வாசனையோடு கூடிய இசையாக இருந்ததென்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

பெரும்பாலும் பாடல்களும் புகைப்படங்களும் நாட்குறிப்புகளும்தான் இறந்தகாலத்தை மீள அழைத்துவந்தன; வருகின்றன. ஒரு புத்தகக் கடையில் அன்றேல் கண்காட்சியில் எவ்வாறு காலத்தைப் பற்றிய கவனம் அறுந்துபோகிறதோ அங்ஙனமே புகைப்பட ‘அல்பம்'களையும் நாட்குறிப்புகளையும் புரட்டும்போதும் கடிகாரம் நின்றுவிடுகிறது. அன்றேல் அவற்றின் மீது காலுந்தி ஒரே எட்டில் பின்னோக்கிப் போய் விழுந்துவிடுகிறோம்.

குறிப்பாக பாடல்கள் நம்மை நிலத்திலிருந்து வானத்தை நோக்கி எய்துவிடுகின்றன. தேங்கிய ஏக்கங்கள் வழிந்தோட மடைவெட்டிவிடுவன பாடல்கள்தாம். ஒலிக்கும் வரிகளில் தம்மைப் பொருத்திப் பார்க்காத உள்ளங்கள் ஏது? ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் மரங்கள் சூழ்ந்த பள்ளிக்கூட மைதானத்தில் காரணந் தெரியாத சோகத்துடன் அமர்ந்திருந்த நாட்கள் நினைவில் வருகின்றன. விஜயமாலினி என்றொரு தோழியின் நினைவு வருகிறது. நட்பு என்றால் என்னவென்ற விளக்கங்களும் விசாரணைகளும் இல்லாத வயதில் அவளுடைய சைக்கிளின் பின்னே அமர்ந்து வயல்வெளிக் காற்று தலை குழப்பப் போனது ஞாபகம் வருகிறது. மேலும் தொலைந்த ஒரு அடிமட்டத்திற்காக அழுததும். கறுப்பில் பளிச்சென்று அழகாயிருந்த விஜயமாலினியின் அக்காவும் அவளது செவிகளில் விழவேண்டுமென்பதற்காகவே நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்தபடியிருந்த பெடியங்களும் நினைவில் வருகிறார்கள்.

‘பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும்’ (கீழே சுட்டியுள்ளது) என்ற இந்தப் பாட்டு உண்மையில் நாயகன் நாயகியை வர்ணித்துப் பாடுவதாக அமைந்தது. ஆனால், அந்தக் குரலில் இழையோடியிருக்கும் சோகத்தினால் அதை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
http://www.musicindiaonline.com/p/x/OrfgQ4NJ6wGfHDfOBitZ/?done_detect

ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம், கரித்துண்டுகளால் பெயர்கள் எழுதப்பட்ட அதன் சுவர்கள், காதல், நண்பர்கள், மாட்டுப் பட்டி, சங்கக் கடை, சாண வாசனை... பாம்பு கொட்டாவி விடும்போது எழும் உழுந்து வாசனை... இவற்றையெல்லாம் எடுத்து வருவன ‘ஒரு தலை ராகம்’பாடல்கள். ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர வாசம்’என்ற பாடலுக்கு நீங்கள் அழுதால் அந்தக் காலத்தில் நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தீர்கள் என்று பொருள்:) டி.ராஜேந்தர் அடுக்குமொழியில் அதிகம் பேசுவதில் எனக்கு உவப்பில்லை. என்றாலும், அவரது பாடல்களின் கவித்துவத்திற்கு நானுமோர் விசிறி.

நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ….

என்ற பாட்டு ராஜகுமாரனுக்கு (கணவர்) மிகப் பிடித்த பாட்டு. அதனாலோ என்னவோ எனக்கும் பிடிக்கும். அந்தப் பாடல் கடைசியாக ஒரு விசும்பலுடன் முடியும்.

‘பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசமெனும் நீரிறைச்சு
ஆசையில நா (ன்) வளத்தேன்

இந்திய இராணுவத்தின் முற்றுகையுள் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் இந்தப் பாட்டை அடிக்கடி நாங்கள் கேட்கநேர்ந்தது. வாசற்படியோரம் இருந்த மல்லிகை அவிழ்ந்து மயக்கும் வாசனையை வீசிக்கொண்டிருக்க, இருள் கவிந்த மாலை நேரங்களில் கதவு நிலையின் இந்தப்புறம் நானும் அந்தப்புறம் ராஜகுமாரனும் (அப்போது காதலர்கள்) அமர்ந்திருக்கும்போது நான் அவரைப் பாடும்படி கேட்பேன். மறுக்காமல் ‘பட்டுவண்ண ரோசாவாம்’பாடுவார். ரோந்து வரும் இராணுவத்தின் கடலை எண்ணெய் மணமும் மல்லிகைப்பூ வாசமும் இந்தப் பாடலும் பயமும் கலந்ததான ஒரு வாசனை அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எழுகிறது. நாம் விரும்பிக் கேட்கிற எல்லாப் பாடல்களுக்கும் ஏதோவொரு வாசனை இருக்கத்தான் செய்கிறது.

‘நட்பு’என்ற சொல்லுக்கு எதிரில் ஒரு பெயரைப் பொருளாக எழுதமுடியுமானால் நான் ‘சுகி’என்றே எழுதுவேன். ஆண்டுகள் கடந்தாலும் மாறாத அன்பு அவளுடையது. திருமணமாகி, புலம்பெயர்ந்து பிரிந்து, குழந்தைகள் பிறந்தபிறகும் நீடித்திருக்கிறது எங்களது நேசம். அவளைப் பற்றி எழுதுவதென்றால் தனிப்பதிவுதான் போடவேண்டியதாயிருக்கும். ஒருகாலத்தில் நாங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாயிருந்தோம். அப்போது இருவருக்கும் திருமணமாகியிருக்கவில்லை.

பூவே செம்பூவே உன் வாசம் வரும் (சொல்லத் துடிக்குது மனசு)
என்ற பாடல் எங்கே ஒலிக்கக் கேட்டாலும் நினைவில் வருவது சுகியின் உணர்ச்சி ததும்பும் பெரிய கண்கள்தான்.

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா (வருசமெல்லாம் வசந்தம்)
என்ற பாடல் இலண்டன் நகரத்து வேகநெடுஞ்சாலைகளில் சுகியின் குடும்பத்தோடு பயணித்த ஞாபகங்களுள் ஏந்தியெடுத்துச் செல்கிறது.

செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே
உள்ளம் அள்ளிப் போனால் நினைவில்லையா…?
(சொன்னால்தான் காதலா)

என்ற பாட்டை என்ன காரணத்தினால் விரும்பினேன் என்று தெரியாது. எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் :) இப்போதுதான் வந்திருக்கிறது. திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத பாடல்களுள் அது ஒன்றாயிருக்கிறது.

தொண்ணூறுகளில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நாங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள எங்களது சொந்த ஊரில் இருந்தோம். எங்காவது போராளிகள் வீரச்சாவடைந்தால் சந்தியில் ஒலிபெருக்கி வழியாக சோக இசை அன்று முழுவதும் வழிந்துகொண்டே இருக்கும். அதைக் கேட்கக் கேட்க சாப்பிடவும் மனம்வராது. ஒரு வேலையும் ஓடாது. அந்தக் காலகட்டத்தில் விடுதலை தொடர்பான பாடல்களே எங்களை அதிகமாக ஈர்த்திருந்தன. பாடல்கள் ஒருவகையில் உணர்ச்சிவழி செலுத்துபவை. விடுதலைப் பாடல்களைக் கேட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்களுள் எனது நண்பர்களில் சிலரும் அடங்குவர்.

காகங்களே… காகங்களே…காட்டிற்குப் போவீங்களா?- காட்டினிலே எங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு கதைப்பீங்களா?’

என்று ஆரம்பிக்கும், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் வெளிவந்த பாடல் அன்று குழந்தைகளின் உதடுகளில் உலவித்திரிந்த பாடலாகும்.

வீசும் காற்றே தூது சொல்லு-தமிழ்நாட்டில்
எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள்-அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு
.....................................
இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல்வெளி ஆடை இழந்தது
தங்கைகளின் பெரும் மங்களம் போனது
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது’

என்ற வரிகளுடன் வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்த பாடல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகியும் நாங்கள் சேதி சொல்லிக்கொண்டுதானிருக்கிறோம். தமிழகத்தின் செவிகளில் அரிதாகத்தான் விழுந்துகொண்டிருக்கிறது.

‘தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்-அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்’

என்ற பாடலையும் வாணி ஜெயராம்தான் பாடியிருந்தார். அவரது கணீரென்ற குரலில் மனசுள் இறங்கிய பாடல் அது. மேற்கண்ட மூன்று பாடல்களும் ஒரே இசைப்பேழையில் இடம்பெற்றிருந்தன. அதன் பெயர் நினைவின் தடங்களிலிருந்து அழிந்துபோயிற்று. அறியத் தந்தால் மகிழ்வேன்.

‘அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி-நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம்-உங்கள்
அன்புக்குப் புலிகளின் நன்றி’

போன்ற பாடலைக் கேட்டு நெகிழ்ந்துபோய் போராளிகளை அரவணைத்த வீடுகள் அநேகம். ‘எங்கள் பிள்ளைகள், எங்கள் சகோதரர்கள்’ என்ற பிணைப்பைத் தந்ததில் பாடல்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘பிள்ளைகள் வருவார்கள்’என்று சோறு குழைத்து வைத்துவிட்டு இருளை வெறித்தபடி இரவிரவாகக் காத்திருக்கும் இரத்த உறவில்லாத அன்னையர்களையும் சகோதரிகளையும் கொண்ட மண் அது.

வன்னியிலிருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரை-பாடகர் சாந்தன், கவிஞர் காசி ஆனந்தன் - பாடகர் தேனிசை செல்லப்பா என்ற இரண்டு பேர் இசையிணைவில் அற்புதமான பாடல்கள் பிறந்தன. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களால் முருகன்மேல் எழுதப்பட்ட நிந்தாஸ்துதிப் பாடல்களை உள்ளடக்கிய ‘நல்லை முருகன் பாடல்கள்’என்ற இசைத்தட்டு மிகுந்த வரவேற்பை புலம்பெயர்ந்த ஈழத்தவர் மத்தியில் பெற்றிருந்தது.

புலம்பெயர்ந்து குளிரில் கொடுகி சொற்பகால வெயிலில் உலர்ந்து வாழ்ந்திருந்த காலங்களில் விடுதலைப் பாடல்கள் சோறும் தண்ணியுமாயிருந்தன. இசை எங்கள் தாயகத்தை வரிகளாய் காவி வந்தது.

‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத்தடையில்லை
நாங்க மட்டும் உலகத்திலே நாடு திரும்ப வழியில்லை’
……………………………...
'ஊர்க்கடிதம் படிக்கையிலே விம்மி நெஞ்சு வெடிக்குது போர்ப்புலிகள் பக்கத்திலே போக மனம் துடிக்குது’

ஊருக்குத் திரும்பிச் செல்லமுடியாத ஆற்றாமையுடன் மேலைத்தேசங்களிலும் அயல்நாடுகளிலும் வாழ்ந்திருந்த இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்தான் பாடலாக வழிந்தது. அந்தப் பாடலை கவிஞர் காசி ஆனந்தன் எழுதியிருந்தார். எங்கள் பிரியத்திற்குரிய தேனிசை செல்லப்பா பாடியிருந்தார்.

நூற்றாண்டுகளாய் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாய் வழிமறித்துக் கிடந்த ஆனையிறவு முகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து ‘ஆனையிறவு’என்றொரு இசைப்பேழை வெளியிடப்பட்டது.

'வந்தார்கள் வென்றார்கள் என்றார்கள் அந்நேரம்
தேகமெல்லாம் மின்னல் ஓடியது’

என்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளில் மெய்சிலிர்த்தோமென்றால், அது சற்றும் மிகையன்று. ‘புல்லரிச்சு… மெய்சிலிர்த்து…’என்றெல்லாம் தேய்ந்த சொற்களை மேலும் தேய்க்க மனதில்லாதபோதிலும் கட்டாயத்தேவை நிமித்தம் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

வெளியே பனிகொட்டிக் கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் நாங்கள் ஒரு பாடலைக் கேட்டோம். பத்திரிகையை விடியற்காலையில் பதிப்பகத்திற்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தில் எழுத்துக்களோடு மல்லுக் கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பாடல் சூடான கோப்பியைப் போல உள்ளே இறங்கியது. அதைக் கேட்டதும் நாங்கள் ஒரு வரலாற்றுக் கடமையைச் செய்துகொண்டிருப்பதான ‘மிதப்பு’ எங்களுக்கு வந்துவிட்டது. நித்திரையும் களைப்பும் பறந்துபோயிற்று. பிறகு கொஞ்சநாட்களுக்கு அந்தப் பாடல் எங்களோடு பத்திரிகை அலுவலகத்தில் வாழ்ந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. கவிஞர் அறிவுமதி அந்தப் பாடலை எழுதியிருந்ததாக ஞாபகம். (தவறெனில் திருத்தவும்)

நண்பா நண்பா நலந்தானா…
நாடும் வீடும் சுகந்தானா
………………………………
‘எங்கள் வியர்வையும் உங்கள் குருதியும்
இணைந்தால் ஈழம் மலரும்’

என்னை ஈர்த்த பாடல்கள் பற்றி பொதுவாக ஒரு பதிவெழுத வெளிக்கிட்டு ஈழப்பாடல்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நிற்பதை உணரமுடிகிறது. நீரோட்டத்தின் திசையில் பூ ஓடுவதைப்போல… நினைவின் திசையில் எழுத்தும் பயணிக்கிறது போலும்.

நாடிழந்து அன்றேல் நாட்டைப் பிரிந்து அலையும் துயரினாலோ என்னவோ அவ்வாறான பாடல்களில் ஒட்டிக்கொண்டுவிடுகிறேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், அதில் இடம்பெற்ற ‘விடைகொடு எங்கள் நாடே… கடல் வாசல் தெளிக்கும் வீடே’என்று ஆரம்பிக்கும்போதே (கவிஞர் வைரமுத்து எழுதியது) இமையோரம் கண்ணீர் துளிர்த்துவிடுகிறது. கைத்தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டால் அந்தப் பாடலே முதலில் பதிலளிக்கும். அதேபோன்று துயரைக் கிளர்த்தும் பாடலொன்று ‘அரண்’ படத்தில் (கவிஞர் பா.விஜய் எழுதியது) இடம்பெற்றிருக்கிறது. அதையும் பாடியவர் மாணிக்க விநாயகம் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் கிராமிய மணம் வீசும் கரகரத்த அந்தக் குரல் மனசைக் கரைக்குந் தன்மையது.

அல்லாவே எங்களின் தாய்தேசம்
பூவாசம் பொங்கிய தால் ஏரி
பூவனம் போர்க்களம் ஆனதேனோ…
பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ…

கவிஞர் பா.விஜயின் தடித்தடியான புத்தகங்களைப் பார்த்து (ஒரே சமயத்தில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டன) ‘பயந்து’போயிருந்த நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்தப் பாடலைக் கேட்டபிறகு அவர் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கலாம் என்றொரு நம்பிக்கை வந்திருக்கிறது.

‘எங்கள் காஷ்மீரின் ரோஜாப்பூ விதவைகள் பார்த்து அழத்தானா?’
என்ற வரி சில நண்பர்களால் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டது.
‘காஷ்மீரிய முஸ்லிம் பெண்கள் தலைக்குப் பூ வைத்துக்கொள்வார்களா?’என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.

இப்போது கவிஞர் தாமரையின் வரிகளில் கரையும் காலமாயிருக்கிறது. கேட்கும்போதே ஒரு பாடல் பிடித்துப்போனதென்று அதன் நதிமூலம் அறியப் புகுந்தால் அதை எழுதியவர் கவிஞர் தாமரையாக இருக்கக் காண்கிறேன். இது என்னளவில் இனிய வியப்பாகத்தான் இருக்கிறது. அதை இரண்டாகப் பெருக்குகிற இன்னொரு விடயம் யாதெனில், அதை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பதுதான். எனக்கு குரல்களைப் பிரித்தறியத் தெரியாது என்ற வகையில், அதெப்படி தாமரையின் வரிகளும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும் இணையும் பாடல்கள் பிடித்துப்போகின்றன என்பது இன்றுவரை தீரா வியப்புத்தான்.

பார்த்த முதல் நாளே (வேட்டையாடு விளையாடு)

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே… (காக்க காக்க)

கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்)

வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே)

இவ்வாறாக பட்டியல் நீள்கிறது.
இவை தவிர, எப்போதும் சாத்தியமற்ற ஆதர்ச உலகை விரும்பி சில பாடல்களைக் கேட்பதுமுண்டு. அவற்றுள் ‘மாயாவி’படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’என்ற பாடல் மிக மிக நேசத்திற்குரியதாக இருக்கிறது.

பாடல்கள் மாற்றி மாற்றி எறியும் நிலவெளிகளுள் விழுந்து அந்தப் போதையில் கண்கிறங்கிப் பின் எழுந்து தெளியும்போது விரியும் உலகம் பயந்தருவதாகவும் குரூரமானதாகவும் பாதுகாப்பாற்றதாகவும் வஞ்சனை நிறைந்ததாகவும் இருக்கிறது. இசை ஒரு தற்காலிக தப்பித்தல்தான். புத்தகங்கள் மற்றும் எழுத்தும்கூட. பாடல்கள் மீது பிரியம்தானென்றாலும் மலையிலிருந்து வழியும் தண்ணீரின் ஓசைக்கு இணையான ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதேயில்லை.

14 comments:

soorya said...

மெல்லென என்னையும் கடந்த காலத்திற்கிழுத்தன,தங்கள் எழுத்துகள் இப்பதிவில். பல பலகணிகள்.
ஒத்தடம் போல் தங்கள் பதிவு இதமாய் இருந்தது. எனினும் இறுதியில் பெருமூச்சு ஒன்று என்னையுமறியாமல் வெளியேறியதைத் தடுக்க முடியவில்லை.
எனக்குப்பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமோ..! என்ற பாடல் உங்களுக்கும் பிடிக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது.

தமிழ்நதி said...

சூரியா,

பாடல்கள் எத்தனையோ பலகணிகளைத் திறந்துவிடுகிற அனுபவம் உங்களுக்கும் நேர்ந்ததையிட்டு மகிழ்ச்சி. பொய்யென்று தெரிந்தும் அந்தக் காலங்களுக்குள் நம்மைக் கொண்டுபோய் நிறுத்தி, பொய்மைத்தோற்றத்தில் மகிழ வைக்கும் இசையை வணங்குதல் செய்வோம்.

நீங்கள் குறிப்பிடும் பாடல் (எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே...)எனக்கும் மிகப் பிடிக்கும். சிலநாள் முன்புவரை எனது ring tone ஆக அப்பாடல் இருந்தது. பிறகு மாற்றிவிட்டேன். ஜுலி கணபதி படத்தில் ஜெயராம் வளம் மிக்க பகுதியொன்றில் காரோட்டிக்கொண்டே இதைக் கேட்டபடி போவதாக காட்சி வரும். பசிய நினைவுகள்தான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்று காலை கனாக் காணும் கண்கள் மெல்ல என்ற பாடலை கேட்க நேர்ந்தது, மிக அற்புதமான பாடல் என்று எனக்குள் நானே சிலாகித்துக் கொண்டு, பின்னர் ஒரு நண்பரிடம் அதைப்ப்ற்றி உரைத்துக்கொண்டிருந்தேன்.

முடிந்தது, சில கணங்கள் கழித்து, உங்களின் இந்தப் பதிவு - என்னை மலைக்க செய்து விட்டது
என்ன ஒரு நிகழ்வொற்றுமை (இப்படி சொல்லலாமா?)


ஒரு புத்தகக் கடையில் அன்றேல் கண்காட்சியில் எவ்வாறு காலத்தைப் பற்றிய கவனம் அறுந்துபோகிறதோ
சரியான உதாரணம்
2 மணிக்கு உள் நுழைந்து எதேச்சையாக கடிகாரம் பார்க்க நேரிட்டால் அது 8 என்று காட்டும்...


நாம் விரும்பிக் கேட்கிற எல்லாப் பாடல்களுக்கும் ஏதோவொரு வாசனை இருக்கத்தான் செய்கிறது
ம், ரொம்பவே உண்மை...

ஈழ நினைவுகளும் பாடல் நினைவுகளையும் ஒரு சேர திறந்த பலகணி - அருமை மொத்தத்தில்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்குப்பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமோ..! என்ற பாடல் உங்களுக்கும் பிடிக்குமா //

அது எனக்கும் பிடித்தமான பாடல் சூர்யா...

தமிழ்நதி said...

அமிர்தவர்ஷினி அம்மா,

உங்களுக்கேயான பெயர் என்னவென்று சொல்லலாமா? வழக்கமாக ஓரளவு பின்னூட்டங்கள் சேர்ந்தபின்தான் பதிலளிப்பது... (நாமே ஆக்கிரமித்துக்கொள்ளக்கூடாதென்பதற்காக) நீங்கள் குறிப்பிட்ட பாடலைக் கேட்டதும்... 'கனாக் காணும் கண்கள் மெல்ல...' எனக்கு மிக மிக மிகப் பிடித்த பாடல். எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. அக்னிசாட்சி படத்தில் சரிதாவின் பாத்திரமும் நடிப்பும்... என்ன சொல்வது? எப்போதாவது இணையத்தில் தேடிப் பிடித்துக் கேட்கும் பாடல்களில் அதுவுமொன்று.

'நிகழ்வொற்றுமை' ஒரு சொல்லைக் கற்றுக்கொண்டேன் தோழி. நன்றி.

Anonymous said...

//'Vidaikodu Engal Naade' by Vairamuththu// Are you Sure??

I dont think so, It was written by an Ealam Poet?? I guess

சிக்கிமுக்கி said...

"களத்தில் கேட்ட கானங்கள்"

காகங்களே… காகங்களே…காட்டிற்குப் போவீங்களா?- காட்டினிலே எங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு கதைப்பீர்களா?’

‘வீசும் காற்றே தூது சொல்லு-தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லுஈழத்தில் நாம் படும் வேதனைகள்-அதைஎங்களின் சோதரர் காதில் சொல்லு.......
இங்குக் குயிலினம் பாட மறந்ததுஎங்கள்
வயல்வெளி ஆடை இழந்தது
தங்கைகளின் பெரும் மங்களம் போனதுசாவு எமக்கொரு வாழ்வென ஆனது’

‘தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் தேசமெங்கும் குண்டு வந்து வீழும்கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்-அவள்கையில் கூட ஆயுதங்கள் ஏறும்’

‘அடைக்கலம் தந்த வீடுகளேபோய் வருகின்றோம் நன்றி-நெஞ்சைஅடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம்-உங்கள்அன்புக்குப் புலிகளின் நன்றி’

இப்பாடல்களைப் பலமுறை கேட்டுக் கலங்கியிருக்கிறோம்!

இவற்றுடன், பி.சுசிலா பாடிய பாடலொன்று இந்திய அமைதிப்படை குறித்தும் கூறும் தாலாட்டுப்பாடல்!

இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்கும்!

***மரணத்தை ஒரு குப்பி வழியாக அவள் ஊற்றிக் குடித்து இல்லாமல் போனபிறகும் ‘ங்….ங்…’என்ற கமகம் மனம் நொய்மையடைந்த பொழுதுகளில் ஒலித்து அழவைத்திருக்கிறது. ***

தாயே!
ஈழத்தமிழரின் அவலத்தை இன்னமும் கூடத் தமிழகம் சரியாகப் புரிந்து செயற்படவில்லை எனபதே உண்மை!
காரணங்கள் பல இருக்கலாம்!
இனி்யும் அவ் அவலம் தீரும் வழி தெரியவில்லையே எனபதை எண்ணுகையில் ஏற்படும் நெஞ்சக் கலக்கம் சொல்லும் தகைத்தன்று.

எதிர்காலத்தில் எழுதப்பெறும் தமிழர் வரலாற்றில் தமிழகத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் பக்கங்கள் இடம் பெற்றுவிடுமோ என அஞ்சுகிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

என்ன இளவேனில் அக்கா நானும் சமீபத்தில் சொல்லியிருந்தேன் பாடல்கள் தருகிற சிலாகிப்பை பற்றி பேசவெண்டும் என்று..ஏன் இன்றைக்கும் கூட அது எனக்குள் நிறைய நாளாகவே இருக்கிற ஒன்று இந்தப்பதிவுக்கு நான் பின்னூட்டம் எழுதப்போனால் அதுவும் ஒரு பதிவாகி விடக்கூடும் என்ற நினைக்கிறேன்...

எல்லாவற்றுக்கும் முதலில் தென்னங்கீற்றில் தென்றல் வந்த மோதும் பாடலை மறக்க முடியாது நீங்கள் சொன்னத போல அவை ஒரே இசைப்பேழையில் வந்திருந்த சமகாலப்பாடல்கள்தான் அந்தப்பாடல் ஒலிக்கிற காலங்களில் எனக்கு மிகச்சிறிய வயதென்று நினைக்கிறேன் ஆனால் எப்பொழுது கெட்டாலும் ஒர தனி உணர்வோடு இரக்கிற பாடல்கள் அவை....

அதே போல சாந்தன் பாடியதென்று நினைக்கிறேன்
'சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூர பூமழை தூவியது...'
ஈழத்துப்பாடல்களில் நான் அடிக்கடி சுட்டுகிற அனேகம் பாடல்களை நீங்களும் சுட்டி இருக்கிறீர்கள்!
'வீசும் காற்றே தூது சொல்லு' எல்லாம் மறக்க கூடிய பாடலா...

கவிஞர் தாமரை...
ம்ம்ம் பெண்மை காதலை சொல்கிற அல்லது உணர்த்துகிற விதமே தனிதான் என்பது என் எண்ணம் இப்படியிருக்க ஒரு பெண்மை கவிஞராய் இருக்கையில் அவருக்கு காதல் சொல்ல கற்றுக்கொடுக்க வேண்டுமா என்னன...

பாடல்கள்தான் காலத்தை மறந்து போக வைக்கின்றன என்று எனக்கு நெருக்கமான உறவொன்றிடம் சொல்லி அந்த உறவோடு கேட்க நிகழந்த அல்லது அனுபவித்த பாடல்களைப் பற்றி சிலாகித்திருக்கிறேன்...

அதுதான் உண்மையும் சில பாடல்கள் என்பதை விட எல்லா பாடல்களுமே அப்படித்தான் நாட்குறிப்பின் பக்கங்களில் எழுதப்படாமலே நினைவிலிருக்கிற நாட்களாய் அவை உயிரை
கடந்தகாலங்களின் தெருக்களில் உலாவ விட்டுவிடுகிறது...



நீங்கள் சொன்ன எல்லா சினிமாப்பாடல்களும் எனக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை என்றாலும் ப்டடியல் நீளத்தான் செய்கிறது...

அவருக்கு பெயரே ராஜகுமாரன்தானா அல்லது ரமணி சந்திரனின் நாயகர்கள் பெயரைப்போல இருந்தாலும் நீங்கள் தான் அவரை அப்படி சொல்கிறீர்களோ தெரியாதே...:)

சந்தனமுல்லை said...

நல்ல நினைவு/நாஸ்டால்ஜிக் பதிவு! ஒவ்வொரு பாடல்களுக்குபின்னும் நிகழ்வுகளும் அதை சார்ந்த நினைவுகளும், மனிதர்களும் பின்னப்பட்டிருப்பது உண்மைதான்!

//பிள்ளைகள் வருவார்கள்’என்று சோறு குழைத்து வைத்துவிட்டு இருளை வெறித்தபடி இரவிரவாகக் காத்திருக்கும் இரத்த உறவில்லாத அன்னையர்களையும் சகோதரிகளையும் கொண்ட மண் அது.///

நெகிழ்ச்சியாயிருந்தது இவ்வரிகளை கடந்து வந்தபோது..தங்களின் பதிவுகளை சுடச்சுட படித்தபோதும் தாமதமாக இடுகிறேன் இப்பின்னூட்டத்தை!

தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..உங்கள் பூனைக்குட்டிக்கும் சேர்த்து!

தமிழன்-கறுப்பி... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
தமிழ்நதி அக்கா...

வெண்காட்டான் said...

I just read ur blog. Really superb. neengal sonnathu pola padalkal palaya ninaivai konduvaruvathu pola vera ethuvum kondu varuvathillai. simply songs are wonderful in this effect. Sometimes smell also bring
memories. telephone cable poda vetti vaitha kidanguku arukil ponapoothu yalpana bunker smell vanththu. appadiye palaya gapakamum vanthathu.
தேகமல்லாம் மின்னல் ஒடியது என்றபோது மெய்சிலிர்க்கும். முற்றிலும் உண்மை. மிக சோகமான உணர்வுடன் இந்தபிண்ணுட்டம். கிளியும் எதரியிடம். இந்த பாடல் உயிரோடட்டமாக வர இருந்த இடமும் போகுமோ தரியாது. பொறுத்திருந்து பார்ப்போம். மீண்டும் உர் நினைவுகளை தந்த உங்களின் பதிவிற்கு நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

பல சமயம் பாடல்கள் தரும் போதை மீள முடியாததாயிருக்கும். வசீகரா, கண்களிருந்தால்... இவ்விரண்டு பாடல்களையும் சொற்களற்று இசைக்கோர்வையாய் கீபோர்ட் இசையில் என் பெரிய பையன் இசைக்க இன்று முழுதும் கேட்டுக்கொண்டிருக்கலாம் (ஆனாலும் அவனும் தான் எத்தனை தடவை எனக்காக வாசிக்க முடியும்!!!!) எங்கெங்கோ சுற்றி கடைசியில் ஈழத்துப்பாடல்களை சொல்லியிருக்கிறீர்களே நாங்கள் கேட்டறியதா அந்தப்பாடல்களை கேட்கத்துடிக்க வைக்கிறது தங்கள் பதிவு முடிந்தால் ஒரு தனித்தொகுப்பாய் பதிவிட முடியுமா...

kalyani said...

எனக்கு பிடித்த பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடலாகவே இருக்கிறது.வாணி என்கிற பெயருக்கு ஏற்ற மாதிரியே,உங்கள் அறிவானது சார்ந்து நிற்கின்ற துறைகளை பார்த்து வியந்து நிற்கிறேன்.எம்மை சுற்றி 100 பேர் இருந்தாலும் எம் மனதோடு பேசுகின்ற சக்தி ஒரு பாடலுக்கு மட்டுமே இருக்கும்.1000 பேர் சொல்லியும் ஆறாத துன்பமாய்ப் போன என் அம்மாவின் இழப்பு ஒரு பாடலிலேயே அடங்கியதும் ஒரு விசித்திரம். நல்ல புத்தகங்களை வாசிப்பது போலவே இசையை இரசிப்பதும் ஒரு கலை.இந்த பொய்யான உலகத்தை ,வாழ்க்கையை கடப்பதற்கு இசை ஒரு துடுப்பு.உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே அண்மையில் இரசித்த காதல் கவிதை.

தமிழ்நதி said...

welcome to my world Kalyani.

Sorry I could not type in tamil. I am away from chennai. will return on 27th. catch you later da.