12.29.2008

பாடல்கள் திறக்கும் பலகணிகள்


இசையை குறிப்பாக பாடல்களை எப்போதிருந்து நேசிக்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், பாடல்களைக் கேட்கும்போது அவற்றை முதன்முதலாகவும் அதிகமாகவும் கேட்ட காலங்களில் வாழ்ந்த சூழல் மற்றும் நிலவெளிகளுள் போய் விழுவது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. பாடலின் இழையைப் பற்றிக்கொண்டு காலங்களைக் கடந்து பயணிப்பதென்பது சாத்தியப்படக்கூடியதே.

அக்காவின் நீட்டிய கால்களில் படுத்திருந்து அவள் பிசைந்து ஊட்டிய மீன்பொரியல், சொதி, சோற்றைச் சாப்பிட்ட நாட்களில் மெல்லிய குரலில் அக்கா பாடியது என்ன பாடல் என்பதை உணரும் வயதில்லை. ஆனால் அவள் குரலும் இழுவையும் நினைவிலிருக்கிறது. மரணத்தை ஒரு குப்பி வழியாக அவள் ஊற்றிக் குடித்து இல்லாமல் போனபிறகும் ‘ங்….ங்…’என்ற கமகம் மனம் நொய்மையடைந்த பொழுதுகளில் ஒலித்து அழவைத்திருக்கிறது. அது மீன்பொரியல் வாசனையோடு கூடிய இசையாக இருந்ததென்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

பெரும்பாலும் பாடல்களும் புகைப்படங்களும் நாட்குறிப்புகளும்தான் இறந்தகாலத்தை மீள அழைத்துவந்தன; வருகின்றன. ஒரு புத்தகக் கடையில் அன்றேல் கண்காட்சியில் எவ்வாறு காலத்தைப் பற்றிய கவனம் அறுந்துபோகிறதோ அங்ஙனமே புகைப்பட ‘அல்பம்'களையும் நாட்குறிப்புகளையும் புரட்டும்போதும் கடிகாரம் நின்றுவிடுகிறது. அன்றேல் அவற்றின் மீது காலுந்தி ஒரே எட்டில் பின்னோக்கிப் போய் விழுந்துவிடுகிறோம்.

குறிப்பாக பாடல்கள் நம்மை நிலத்திலிருந்து வானத்தை நோக்கி எய்துவிடுகின்றன. தேங்கிய ஏக்கங்கள் வழிந்தோட மடைவெட்டிவிடுவன பாடல்கள்தாம். ஒலிக்கும் வரிகளில் தம்மைப் பொருத்திப் பார்க்காத உள்ளங்கள் ஏது? ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் மரங்கள் சூழ்ந்த பள்ளிக்கூட மைதானத்தில் காரணந் தெரியாத சோகத்துடன் அமர்ந்திருந்த நாட்கள் நினைவில் வருகின்றன. விஜயமாலினி என்றொரு தோழியின் நினைவு வருகிறது. நட்பு என்றால் என்னவென்ற விளக்கங்களும் விசாரணைகளும் இல்லாத வயதில் அவளுடைய சைக்கிளின் பின்னே அமர்ந்து வயல்வெளிக் காற்று தலை குழப்பப் போனது ஞாபகம் வருகிறது. மேலும் தொலைந்த ஒரு அடிமட்டத்திற்காக அழுததும். கறுப்பில் பளிச்சென்று அழகாயிருந்த விஜயமாலினியின் அக்காவும் அவளது செவிகளில் விழவேண்டுமென்பதற்காகவே நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்தபடியிருந்த பெடியங்களும் நினைவில் வருகிறார்கள்.

‘பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும்’ (கீழே சுட்டியுள்ளது) என்ற இந்தப் பாட்டு உண்மையில் நாயகன் நாயகியை வர்ணித்துப் பாடுவதாக அமைந்தது. ஆனால், அந்தக் குரலில் இழையோடியிருக்கும் சோகத்தினால் அதை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
http://www.musicindiaonline.com/p/x/OrfgQ4NJ6wGfHDfOBitZ/?done_detect

ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம், கரித்துண்டுகளால் பெயர்கள் எழுதப்பட்ட அதன் சுவர்கள், காதல், நண்பர்கள், மாட்டுப் பட்டி, சங்கக் கடை, சாண வாசனை... பாம்பு கொட்டாவி விடும்போது எழும் உழுந்து வாசனை... இவற்றையெல்லாம் எடுத்து வருவன ‘ஒரு தலை ராகம்’பாடல்கள். ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர வாசம்’என்ற பாடலுக்கு நீங்கள் அழுதால் அந்தக் காலத்தில் நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தீர்கள் என்று பொருள்:) டி.ராஜேந்தர் அடுக்குமொழியில் அதிகம் பேசுவதில் எனக்கு உவப்பில்லை. என்றாலும், அவரது பாடல்களின் கவித்துவத்திற்கு நானுமோர் விசிறி.

நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ….

என்ற பாட்டு ராஜகுமாரனுக்கு (கணவர்) மிகப் பிடித்த பாட்டு. அதனாலோ என்னவோ எனக்கும் பிடிக்கும். அந்தப் பாடல் கடைசியாக ஒரு விசும்பலுடன் முடியும்.

‘பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசமெனும் நீரிறைச்சு
ஆசையில நா (ன்) வளத்தேன்

இந்திய இராணுவத்தின் முற்றுகையுள் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் இந்தப் பாட்டை அடிக்கடி நாங்கள் கேட்கநேர்ந்தது. வாசற்படியோரம் இருந்த மல்லிகை அவிழ்ந்து மயக்கும் வாசனையை வீசிக்கொண்டிருக்க, இருள் கவிந்த மாலை நேரங்களில் கதவு நிலையின் இந்தப்புறம் நானும் அந்தப்புறம் ராஜகுமாரனும் (அப்போது காதலர்கள்) அமர்ந்திருக்கும்போது நான் அவரைப் பாடும்படி கேட்பேன். மறுக்காமல் ‘பட்டுவண்ண ரோசாவாம்’பாடுவார். ரோந்து வரும் இராணுவத்தின் கடலை எண்ணெய் மணமும் மல்லிகைப்பூ வாசமும் இந்தப் பாடலும் பயமும் கலந்ததான ஒரு வாசனை அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எழுகிறது. நாம் விரும்பிக் கேட்கிற எல்லாப் பாடல்களுக்கும் ஏதோவொரு வாசனை இருக்கத்தான் செய்கிறது.

‘நட்பு’என்ற சொல்லுக்கு எதிரில் ஒரு பெயரைப் பொருளாக எழுதமுடியுமானால் நான் ‘சுகி’என்றே எழுதுவேன். ஆண்டுகள் கடந்தாலும் மாறாத அன்பு அவளுடையது. திருமணமாகி, புலம்பெயர்ந்து பிரிந்து, குழந்தைகள் பிறந்தபிறகும் நீடித்திருக்கிறது எங்களது நேசம். அவளைப் பற்றி எழுதுவதென்றால் தனிப்பதிவுதான் போடவேண்டியதாயிருக்கும். ஒருகாலத்தில் நாங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாயிருந்தோம். அப்போது இருவருக்கும் திருமணமாகியிருக்கவில்லை.

பூவே செம்பூவே உன் வாசம் வரும் (சொல்லத் துடிக்குது மனசு)
என்ற பாடல் எங்கே ஒலிக்கக் கேட்டாலும் நினைவில் வருவது சுகியின் உணர்ச்சி ததும்பும் பெரிய கண்கள்தான்.

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா (வருசமெல்லாம் வசந்தம்)
என்ற பாடல் இலண்டன் நகரத்து வேகநெடுஞ்சாலைகளில் சுகியின் குடும்பத்தோடு பயணித்த ஞாபகங்களுள் ஏந்தியெடுத்துச் செல்கிறது.

செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே
உள்ளம் அள்ளிப் போனால் நினைவில்லையா…?
(சொன்னால்தான் காதலா)

என்ற பாட்டை என்ன காரணத்தினால் விரும்பினேன் என்று தெரியாது. எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் :) இப்போதுதான் வந்திருக்கிறது. திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத பாடல்களுள் அது ஒன்றாயிருக்கிறது.

தொண்ணூறுகளில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நாங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள எங்களது சொந்த ஊரில் இருந்தோம். எங்காவது போராளிகள் வீரச்சாவடைந்தால் சந்தியில் ஒலிபெருக்கி வழியாக சோக இசை அன்று முழுவதும் வழிந்துகொண்டே இருக்கும். அதைக் கேட்கக் கேட்க சாப்பிடவும் மனம்வராது. ஒரு வேலையும் ஓடாது. அந்தக் காலகட்டத்தில் விடுதலை தொடர்பான பாடல்களே எங்களை அதிகமாக ஈர்த்திருந்தன. பாடல்கள் ஒருவகையில் உணர்ச்சிவழி செலுத்துபவை. விடுதலைப் பாடல்களைக் கேட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்களுள் எனது நண்பர்களில் சிலரும் அடங்குவர்.

காகங்களே… காகங்களே…காட்டிற்குப் போவீங்களா?- காட்டினிலே எங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு கதைப்பீங்களா?’

என்று ஆரம்பிக்கும், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் வெளிவந்த பாடல் அன்று குழந்தைகளின் உதடுகளில் உலவித்திரிந்த பாடலாகும்.

வீசும் காற்றே தூது சொல்லு-தமிழ்நாட்டில்
எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள்-அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு
.....................................
இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல்வெளி ஆடை இழந்தது
தங்கைகளின் பெரும் மங்களம் போனது
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது’

என்ற வரிகளுடன் வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்த பாடல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகியும் நாங்கள் சேதி சொல்லிக்கொண்டுதானிருக்கிறோம். தமிழகத்தின் செவிகளில் அரிதாகத்தான் விழுந்துகொண்டிருக்கிறது.

‘தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்-அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்’

என்ற பாடலையும் வாணி ஜெயராம்தான் பாடியிருந்தார். அவரது கணீரென்ற குரலில் மனசுள் இறங்கிய பாடல் அது. மேற்கண்ட மூன்று பாடல்களும் ஒரே இசைப்பேழையில் இடம்பெற்றிருந்தன. அதன் பெயர் நினைவின் தடங்களிலிருந்து அழிந்துபோயிற்று. அறியத் தந்தால் மகிழ்வேன்.

‘அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி-நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம்-உங்கள்
அன்புக்குப் புலிகளின் நன்றி’

போன்ற பாடலைக் கேட்டு நெகிழ்ந்துபோய் போராளிகளை அரவணைத்த வீடுகள் அநேகம். ‘எங்கள் பிள்ளைகள், எங்கள் சகோதரர்கள்’ என்ற பிணைப்பைத் தந்ததில் பாடல்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘பிள்ளைகள் வருவார்கள்’என்று சோறு குழைத்து வைத்துவிட்டு இருளை வெறித்தபடி இரவிரவாகக் காத்திருக்கும் இரத்த உறவில்லாத அன்னையர்களையும் சகோதரிகளையும் கொண்ட மண் அது.

வன்னியிலிருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரை-பாடகர் சாந்தன், கவிஞர் காசி ஆனந்தன் - பாடகர் தேனிசை செல்லப்பா என்ற இரண்டு பேர் இசையிணைவில் அற்புதமான பாடல்கள் பிறந்தன. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களால் முருகன்மேல் எழுதப்பட்ட நிந்தாஸ்துதிப் பாடல்களை உள்ளடக்கிய ‘நல்லை முருகன் பாடல்கள்’என்ற இசைத்தட்டு மிகுந்த வரவேற்பை புலம்பெயர்ந்த ஈழத்தவர் மத்தியில் பெற்றிருந்தது.

புலம்பெயர்ந்து குளிரில் கொடுகி சொற்பகால வெயிலில் உலர்ந்து வாழ்ந்திருந்த காலங்களில் விடுதலைப் பாடல்கள் சோறும் தண்ணியுமாயிருந்தன. இசை எங்கள் தாயகத்தை வரிகளாய் காவி வந்தது.

‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத்தடையில்லை
நாங்க மட்டும் உலகத்திலே நாடு திரும்ப வழியில்லை’
……………………………...
'ஊர்க்கடிதம் படிக்கையிலே விம்மி நெஞ்சு வெடிக்குது போர்ப்புலிகள் பக்கத்திலே போக மனம் துடிக்குது’

ஊருக்குத் திரும்பிச் செல்லமுடியாத ஆற்றாமையுடன் மேலைத்தேசங்களிலும் அயல்நாடுகளிலும் வாழ்ந்திருந்த இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்தான் பாடலாக வழிந்தது. அந்தப் பாடலை கவிஞர் காசி ஆனந்தன் எழுதியிருந்தார். எங்கள் பிரியத்திற்குரிய தேனிசை செல்லப்பா பாடியிருந்தார்.

நூற்றாண்டுகளாய் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாய் வழிமறித்துக் கிடந்த ஆனையிறவு முகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து ‘ஆனையிறவு’என்றொரு இசைப்பேழை வெளியிடப்பட்டது.

'வந்தார்கள் வென்றார்கள் என்றார்கள் அந்நேரம்
தேகமெல்லாம் மின்னல் ஓடியது’

என்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளில் மெய்சிலிர்த்தோமென்றால், அது சற்றும் மிகையன்று. ‘புல்லரிச்சு… மெய்சிலிர்த்து…’என்றெல்லாம் தேய்ந்த சொற்களை மேலும் தேய்க்க மனதில்லாதபோதிலும் கட்டாயத்தேவை நிமித்தம் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

வெளியே பனிகொட்டிக் கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் நாங்கள் ஒரு பாடலைக் கேட்டோம். பத்திரிகையை விடியற்காலையில் பதிப்பகத்திற்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தில் எழுத்துக்களோடு மல்லுக் கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பாடல் சூடான கோப்பியைப் போல உள்ளே இறங்கியது. அதைக் கேட்டதும் நாங்கள் ஒரு வரலாற்றுக் கடமையைச் செய்துகொண்டிருப்பதான ‘மிதப்பு’ எங்களுக்கு வந்துவிட்டது. நித்திரையும் களைப்பும் பறந்துபோயிற்று. பிறகு கொஞ்சநாட்களுக்கு அந்தப் பாடல் எங்களோடு பத்திரிகை அலுவலகத்தில் வாழ்ந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. கவிஞர் அறிவுமதி அந்தப் பாடலை எழுதியிருந்ததாக ஞாபகம். (தவறெனில் திருத்தவும்)

நண்பா நண்பா நலந்தானா…
நாடும் வீடும் சுகந்தானா
………………………………
‘எங்கள் வியர்வையும் உங்கள் குருதியும்
இணைந்தால் ஈழம் மலரும்’

என்னை ஈர்த்த பாடல்கள் பற்றி பொதுவாக ஒரு பதிவெழுத வெளிக்கிட்டு ஈழப்பாடல்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நிற்பதை உணரமுடிகிறது. நீரோட்டத்தின் திசையில் பூ ஓடுவதைப்போல… நினைவின் திசையில் எழுத்தும் பயணிக்கிறது போலும்.

நாடிழந்து அன்றேல் நாட்டைப் பிரிந்து அலையும் துயரினாலோ என்னவோ அவ்வாறான பாடல்களில் ஒட்டிக்கொண்டுவிடுகிறேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், அதில் இடம்பெற்ற ‘விடைகொடு எங்கள் நாடே… கடல் வாசல் தெளிக்கும் வீடே’என்று ஆரம்பிக்கும்போதே (கவிஞர் வைரமுத்து எழுதியது) இமையோரம் கண்ணீர் துளிர்த்துவிடுகிறது. கைத்தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டால் அந்தப் பாடலே முதலில் பதிலளிக்கும். அதேபோன்று துயரைக் கிளர்த்தும் பாடலொன்று ‘அரண்’ படத்தில் (கவிஞர் பா.விஜய் எழுதியது) இடம்பெற்றிருக்கிறது. அதையும் பாடியவர் மாணிக்க விநாயகம் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் கிராமிய மணம் வீசும் கரகரத்த அந்தக் குரல் மனசைக் கரைக்குந் தன்மையது.

அல்லாவே எங்களின் தாய்தேசம்
பூவாசம் பொங்கிய தால் ஏரி
பூவனம் போர்க்களம் ஆனதேனோ…
பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ…

கவிஞர் பா.விஜயின் தடித்தடியான புத்தகங்களைப் பார்த்து (ஒரே சமயத்தில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டன) ‘பயந்து’போயிருந்த நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்தப் பாடலைக் கேட்டபிறகு அவர் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கலாம் என்றொரு நம்பிக்கை வந்திருக்கிறது.

‘எங்கள் காஷ்மீரின் ரோஜாப்பூ விதவைகள் பார்த்து அழத்தானா?’
என்ற வரி சில நண்பர்களால் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டது.
‘காஷ்மீரிய முஸ்லிம் பெண்கள் தலைக்குப் பூ வைத்துக்கொள்வார்களா?’என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.

இப்போது கவிஞர் தாமரையின் வரிகளில் கரையும் காலமாயிருக்கிறது. கேட்கும்போதே ஒரு பாடல் பிடித்துப்போனதென்று அதன் நதிமூலம் அறியப் புகுந்தால் அதை எழுதியவர் கவிஞர் தாமரையாக இருக்கக் காண்கிறேன். இது என்னளவில் இனிய வியப்பாகத்தான் இருக்கிறது. அதை இரண்டாகப் பெருக்குகிற இன்னொரு விடயம் யாதெனில், அதை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பதுதான். எனக்கு குரல்களைப் பிரித்தறியத் தெரியாது என்ற வகையில், அதெப்படி தாமரையின் வரிகளும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும் இணையும் பாடல்கள் பிடித்துப்போகின்றன என்பது இன்றுவரை தீரா வியப்புத்தான்.

பார்த்த முதல் நாளே (வேட்டையாடு விளையாடு)

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே… (காக்க காக்க)

கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்)

வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே)

இவ்வாறாக பட்டியல் நீள்கிறது.
இவை தவிர, எப்போதும் சாத்தியமற்ற ஆதர்ச உலகை விரும்பி சில பாடல்களைக் கேட்பதுமுண்டு. அவற்றுள் ‘மாயாவி’படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’என்ற பாடல் மிக மிக நேசத்திற்குரியதாக இருக்கிறது.

பாடல்கள் மாற்றி மாற்றி எறியும் நிலவெளிகளுள் விழுந்து அந்தப் போதையில் கண்கிறங்கிப் பின் எழுந்து தெளியும்போது விரியும் உலகம் பயந்தருவதாகவும் குரூரமானதாகவும் பாதுகாப்பாற்றதாகவும் வஞ்சனை நிறைந்ததாகவும் இருக்கிறது. இசை ஒரு தற்காலிக தப்பித்தல்தான். புத்தகங்கள் மற்றும் எழுத்தும்கூட. பாடல்கள் மீது பிரியம்தானென்றாலும் மலையிலிருந்து வழியும் தண்ணீரின் ஓசைக்கு இணையான ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதேயில்லை.

12.24.2008

தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பினர் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம்


இப்போதுதான் ஒரு ‘சூடான’கூட்டத்திற்குப் போய்விட்டு வந்தேன். அதை ‘சூடாக’எழுதாவிட்டால் ஞாபகங்கள் ஆறிப்போய் கிடப்பில் போடவேண்டியதாகிவிடும். ‘சூடான இடுகைகள்’ பற்றிய தமிழ்மணப் பதிவையும் பின்னூட்டங்களையும் வீட்டிற்குள் நுழைந்ததும் படித்ததன் விளைவு ----------- என்ற சொல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’என்று பதிவு போட்டாலும் சூடு சுரணையில்லை. சும்மா இருப்பதென்றால் குற்றவுணர்வாகத்தான் இருக்கிறது. கூட்டங்களுக்குப் போய் ஒன்றும் வெட்டிப் பிடுங்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் ஆவலாதி விடுவதில்லை. தவிர, எனக்குத் தெரியாத பல விசயங்களைப் பேசக் கேட்பதில் பெருவிருப்பு. ஈழம், தேசபக்தி, எங்கடை சனம் இன்னபிறவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஈழத்தமிழரைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தை பாவலர் கரிகாலன்,லலித்குமார், பா.ஜோதி நரசிம்மன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

‘இங்கேதான் உண்ணாவிரதம் நடக்கும்’என்று ஆட்டோ சாரதி காட்டிய இடத்தில் ஒருவரும் இல்லை. எதிரில் பார்த்தால் பத்துப் பதினைந்து பேர் மட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ‘சாமியானா’எனப்படும் பந்தல் போடும் துணி சுருட்டிவைக்கப்பட்டிருந்தது. தெரிந்த ஒரே முகமான எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தை அணுகிக் கேட்டபோது ஏதோ கட்சி ஊர்வலம் போகவிருப்பதாகவும் அது முடிந்ததும் கூட்டம் ஆரம்பமாகுமென்றும் தெரிவித்தார். மெரீனா கடற்கரைச் சாலை முழுவதும் இரட்டை இலையும் வெள்ளை வேட்டிகளும் சொகுசு வாகனங்களும் ‘அம்மா’படமுமாக அமளிதுமளிப்பட்டது நினைவில் வந்தது. இன்றைக்கு எம்.ஜி.ஆர். நினைவுநாளாம். தோழியர் பஞ்சத்தில் தனிக்குரங்காக அமர்ந்திருந்தபோது கவிஞர் நந்தமிழ் நங்கை எங்கிருந்தோ தோன்றித் தோள்தந்தார்.

கொஞ்சநேரத்தில் கவிஞர் செந்தமிழ்மாரியும் மழையும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். (மழை அஃறிணையா?) விஸ்தாரமான நடைபாதையோரத்தில் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அந்த இரைச்சலில் ஈழத்தமிழருக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தபோது நேரம் பதினொன்றரை மணியாகிவிட்டது. போக்குவரத்து இரைச்சல் என்பது செவிகளைப் பேச்சுக்கு ஒப்புக்கொடுக்கும்வரைதான் நீடித்தது. பிறகு நாங்களெல்லோரும் பேச்சுக்குள் நுழைந்துவிட்டோம். ஐந்தே முக்கால் மணிக்கு உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வரும்வரை உள்ளேதான் இருந்தோம்.

எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையேற்று நடத்துவாரென அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் வரவில்லை. பதிலாக பா.செயப்பிரகாசம் அவர்கள் தலைமையேற்றுப் பேசுகையில், மௌனம் காக்கிற அரசுகளை அசைப்பதாக நமது போராட்டங்கள் அமையவேண்டும் என்று குறிப்பிட்டார். சென்னை-கொழும்பு-டெல்லி என்ற மும்முனைகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டுமென்றார்.

இந்த ‘என்றார்’ ‘குறிப்பிட்டார்’ ‘சூளுரைத்தார்’ என்று நிறைய இணைப்பு வாக்கியங்கள் எழுதவேண்டியிருப்பதனால் யார் யார் என்ன பேசினார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். இடையில் தேவையானால் கட்டியக்காரியாக வந்துபோகிறேன்.

ம.தி.மு.க. மாநில செயலாளர் நடராஜன்: இலங்கைத் தமிழர்களை இனவழிப்புச் செய்கிற பேரினவாத அரசாங்கத்துக்கு, 2050கோடி ரூபாவை இந்திய அரசாங்கம் வட்டியில்லாக் கடனாகக் கொடுத்திருக்கிறது. ஆக, எங்களுடைய வரிப்பணத்தைக் கொண்டு எம்மினத்தை அழிப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தி கொலையுண்டபோது தி.மு.க.வினர் தாக்கப்பட்டார்கள். அதே தி.மு.க.வினர் இன்றைக்கு காங்கிரஸ்காரர்களோடு கைகோர்த்துக்கொண்டு அவர்களது பேச்சுக்குத் தலையாட்டுவது விசித்திரமாக இருக்கிறது. யார் தடுத்தாலும் தமிழீழம் மலர்ந்தே தீரும்.

பாவலர் தமிழச்சி தங்கபாண்டியன்: பல நாடுகளாலும் தடைசெய்யப்பட்டிருக்கிற கொத்துக்குண்டுகளைப் போட்டு அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள். ஈழப் பிரச்சனையை தனிப்பட்ட ஒரு இனத்தின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், இதனையொரு உலகளாவிய மனிதநேயப் பிரச்சனையாகப் பார்க்கவேண்டும். சகோதரி ஒளவை தன் கவிதையில் கூறியதுபோல இடப்பெயர்வு என்பது மிகப்பெரிய வலி.
“கால்களை உதறினேன்செம்மண்ணும் போயிற்றுஎம் மண்ணும் போயிற்று”
ஈழப்பிரச்சனையில் கலைஞரின் கண்ணீரின் உக்கிரத்தைக் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவர் படும் துயரத்தையும் தூக்கமற்ற இரவுகளையும் யாரோ அறிவர்?

பாவலர் த.பழமலய்: பிரச்சனைகள் வந்தபோதெல்லாம் கரையோர மக்கள்தான் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டும் காணாததுபோல இந்திய அரசு மௌனம் காப்பது ஏன்? இப்போது இலங்கை அரசு செய்வது சண்டையல்ல; சாவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் சிறுவர்களைச் சண்டையில் ஈடுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டியது இலங்கை அரசு. ஆனால், இன்றைக்கு கள நிலவரத்தைப் படித்துப் பார்த்தால் சிங்களச் சிப்பாய்களாக இருந்த சிறுவர்கள் பலியாகியிருக்கிறார்கள். அப்படியானால், யார் சிறுவர்களைச் சண்டையில் ஈடுபடுத்துவது சிங்கள அரசா? விடுதலைப் புலிகளா?
ஈழப்பிரச்சனையில் தமிழகம் என்ற ஒரு மாநிலம் மட்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் போதாது. இதையொரு பொதுப்பிரச்சனையாக எடுத்துக்கொண்டு இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்கவேண்டும்.

பேராசிரியர் முத்துமணி: ‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்க மட்டும் உலகத்திலே நாடு திரும்ப வழியில்லை’
என்ற கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைக் குறிப்பிட்டு நாடு திரும்ப முடியாதிருக்கும் தமிழர்களின் துயரத்தைப் பற்றிப் பேசினார். ஈழம் தொடர்பான உண்மைகளைத் தமது எழுத்தில் இனங்காட்ட வேண்டிய கடப்பாடு படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்றார்.

மங்கையர்ச்செல்வன்: (அமைப்பாளர் மீனவர் விடுதலை வேங்கைகள்)
இந்தப் போரை நடத்திக்கொண்டிருப்பது யாரென்று நினைக்கிறீர்கள்? இலங்கை அரசா… இல்லவே இல்லை! ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் ஆயுதங்களை வழங்கி இந்தப் போரை உண்மையில் நடத்திக்கொண்டிருப்பது இந்திய அரசுதான். நியாயப்படி பார்த்தால், “இந்திய அரசே! போரை நிறுத்து”என்றுதான் நாம் குரலுயர்த்தவேண்டும்.

பாவலர் யூமா வாசுகி: கவிதை வாசித்தார்.
தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்பதாக அந்தக் கவிதை முடிந்திருந்தது.

பாவலர் ரவி சுப்பிரமணியன்: ஈழத்தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு உதவுபவர்களை அறியவேண்டும்.

கண்மணி (குணசேகரன்?) கல்தோன்றி மண்தோன்றா காலத்தே… என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதி இசையோடு பாடினார்.

ஐயம்: கல் தோன்றும் முன்… மண் தோன்றும் முன்… தமிழன் தோன்றியிருந்தானா?

எழுத்தாளர், திரைத்துறை ஆய்வாளர் அஜயன் பாலா: தமிழகத்திலே இருக்கிற அகதி முகாம்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. மிக மோசமான நிலையில் அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இனிவருங் காலங்களில் அக்குறைகள் களையப்படவேண்டும்.

பா.செயப்பிரகாசம்: திரைத்துறையிலும் இருக்கிற அஜயன் பாலா காட்சி ஊடகம் வழியாக அச்சீர்கேடுகளை வெளிக்கொணரவேண்டும்.

ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி: இங்கே சொல்லும்படியான பேரெழுச்சிகள் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தத் தமிழகமும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் கொந்தளித்துக்கொண்டிருப்பதான ஒரு தோற்றப்பாடு ஈழத்தமிழர்களிடையே இருக்கிறது. அதற்குக் காரணம் போர்ச்சூழலில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுதான். சிறிய நிகழ்வுகள் கூட பெரிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு அளிப்பதாக எனது நண்பர்கள் வாயிலாக அறிகிறேன். களத்திலிருந்து வருகின்ற செய்திகளின்படி தொடர்ந்து ஐந்து நாட்களாக சிங்கள இராணுவம் தோல்வியைத் தழுவி வருகிறது.
படைப்பாளிகளே! உங்கள் படைப்புகள் வழியாகவும் விடிவைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

துணுக்கு:ஈழத்தமிழர்கள் தொடர்பான எந்தவொரு கூட்டத்திற்குப் போனாலும் டி.எஸ்.எஸ்.மணி அங்கே சமூகமளித்திருப்பதைக் காணமுடிகிறது. யாருக்கும் தெரியாத சில அரசியல் செய்திகள் அவருக்கு மட்டும் தெரிந்திருக்கும். அதை கிசுகிசு மாதிரியான ஒரு தொனியில் அவர் பேசக் கேட்பது ஒரு இனிய அனுபவம். தொழில்நுட்பவியலாளர்கள் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை நிகழ்வில், மதுரை பேச்சுவழக்கில் (என் புரிதலின்படி) அவர் ஹிண்டு ராம், சுப்பிரமணியசுவாமி வகையறாக்களை வாங்கு வாங்கென்று வாங்கியது பிடித்திருந்தது. அந்த உற்சாகத்தை இந்த மேடையில்- மன்னிக்கவும் நடைபாதையில் காணவில்லை.

பாவலர்: பட்டி சு.செங்குட்டுவன்
யார் தடுத்தாலும் எனது ஆதரவு ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கு என்றும் உண்டு.

முனைவர் புகழேந்தி:
காங்கிரஸாரின் தமிழின விரோதச் செயற்பாடுகள் சகிக்க முடியாதிருக்கின்றன.
“ராஜீவ் காந்தி கொலையை எத்தனை நாளைக்குச் சொல்லுவாய்?”என்பதை மையமாக வைத்து கவிதையொன்றை வாசித்தார்.

பாவலர் ரவி சுப்பிரமணியன் பாரதியாரின் ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி’என்ற பாடலை மிக உருக்கமான குரலில் பாடினார். யாரோ ஒரு பழைய பாடகரின் சாயல் குரலில் இருந்தது. ஜெயராமனாக இருக்கலாம்.

முனைவர் இரத்தின. புகழேந்தி
‘நாங்களும் நீங்களும் ஒன்றுதான்’என்ற ஒப்பீடுகளோடு கூடிய கவிதையை வாசித்தார்.

பாவலர் இளந்திரையன்:

இந்திரா காந்தியைக் கொன்றது சீக்கியர்கள். அவர்களை மன்னித்து விட்டீர்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் விடயத்தில் இறையாண்மை பேசும் காங்கிரஸாரே!அன்றைக்கு உங்கள் இறையாண்மை எங்கே போயிற்று? சீக்கியர்களுக்கு ஒரு நீதி; ஈழத்தமிழர்களுக்கு ஒரு நீதியா?

வியப்பு: சின்னப் பெடியன்.. நல்ல பேச்சாற்றல்... அரசியல்வாதியாக ஆகக்கூடும்.

பாவலர் ஆறு. இளங்கோவன் (நீங்க அவரில்லைத்தானே:) )
காங்கிரஸ்காரர்களுக்கு வாக்களிக்கக்கூடாது (பேர் மட்டுந்தான் ஒன்றுபோல)


எழுத்தாளர் சீதையின் மைந்தன்

காங்கிரஸ்காரர்கள் ஏதோ இன்றைக்குத்தான் காட்டிக்கொடுத்ததுபோல சத்தமிடுகிறீர்களே… அவர்கள் அந்த நாளிலிருந்தே இந்த வேலையைத்தான் செய்துவருகிறார்கள். (பலத்த கைதட்டல்) பகத்சிங்கைத் தூக்கிலிட யார் காரணம்? நேதாஜியை மாநாட்டை நடத்தவிடாமல், தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் செய்தது யார்? கடைசியில் அவர் அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டு காணாமலும் போய்விடவில்லையா? காங்கிரஸ்காரர்களின் துரோகம் புதிதல்ல.

பா.ஜோதி நரசிம்மன்: இந்திய மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும்.

லலித்குமார்: பூங்காற்று தனசேகரின் கவிதையை வாசித்தார்.

பாவலர் கரிகாலன்: கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் - காங்கிரஸாரைத் திருப்திப்படுத்த சீமான் உள்ளிட்டோரைக் கைது செய்திருக்கிறீர்கள். அவர்களை விடுதலை செய்யாவிடில் அது தேர்தலில் தி.மு.க.வினருக்குப் பாதகமான விளைவுகளை அளிக்கும்.

பாவலர் குட்டி ரேவதி: உணர்ச்சிவசப்பட்டுப் பேசி உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. வெறுமனே உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி அறிவார்த்தமாக நாம் அடுத்து செய்யக்கூடியது என்ன என்று சிந்திக்கவேண்டும். இதுநாள்வரை இந்தப் பிரச்சனை குறித்து பேசுவதற்கான ஒரு சூழல்கூட இங்கே இருக்கவில்லை. இப்போது அந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். முதலில் நாம் பழம்பெருமை பேசுவதை நிறுத்தி அறிவின் தளத்தில் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.


சிவாஜிலிங்கம் (இலங்கை.பா.உறுப்பினர் - தமிழ் தேசிய கூட்டமைப்பு)
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலே உருவாகி வருகிற எழுச்சியைக் கட்டுப்படுத்த மறைமுகமாகப் பல வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிகிறேன்.
‘இது சிங்களவர்களுடைய நாடு’என்று சரத் பொன்சேகா சொன்னார். ‘தமிழர்கள் வந்தேறு குடிகள்’என்று சந்திரிகா குமாரதுங்கா சொன்னார். ஆனால், சிங்களவர்கள்தான் வந்தேறு குடிகள் என்கிறது வரலாறு. விஜயன் இலங்கைக்கு வரும்போது ‘விசா’வாங்கிக்கொண்டா வந்தான்? (கைதட்டல்)

பாவலர் லலித்குமார் தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு உருவான கதையைச் சொன்னார்.
மும்பாய் தாக்குதல் நடைபெற்ற அன்றிரவு அதைப்பற்றி குறுஞ்செய்திகள், ஆதங்கம் செறிந்த தொலைபேசி உரையாடல்கள் இரவிரவாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக அந்தத் தாக்குதலை ஒளிபரப்பிக்கொண்டேயிருந்தன. அப்போது எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. 2000 மைல்களுக்கப்பால் இருக்கும் மும்பாயைப் பற்றி, வேறு மொழி பேசுகிறவனைப் பற்றி இவ்வளவு கவலைகொள்கிறோமே… 20 கடல் மைல்களுக்கப்பால் இருக்கிற ஈழத்தமிழனைப் பற்றி நாம் கவலைகொள்கிறோமா…? எழுதுவது மட்டுந்தான் படைப்பாளியின் கடமையா? சமூக அக்கறை சார்ந்து இயங்குவதற்கு ஒரு அமைப்பு தேவையாக இருந்தது. அதனடிப்படையிலே உருவானதுதான் தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு.

பாவலர் சி.சுந்தரபாண்டியன்: காங்கிரஸார் தமிழகக் கட்சியினருடனேயே கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்துக்கொண்டு தமிழர்களுக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் தோற்கவேண்டும்.

அ.பத்மநாதன்: காங்கிரசுக்கு இது தேய்பிறை காலம். தங்கபாலு தமிழனே இல்லை. பிரபாகரன்தான் தமிழர்களின் தனிப்பெருந்தலைவன். எதிர்வரும் 26ஆம் திகதி நடக்கவிருக்கும் தமிழீழ அங்கீகார மாநாடு அதை முரசறையும்.


ஓவியர் வீரசந்தானம்: விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறலிலே ஈடுபடுவதாகச் சிலர் சொல்கிறார்களே…மாவிலாறிலே இரண்டு நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் ஒரு இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டாள். மாட்டுப்பட்டியொன்றின் மீது குண்டுவீசியதில் 85 மாடுகள் செத்துமடிந்திருக்கின்றன. பரந்தன் வீதியில் இருந்த தேவாலயமொன்றில் இன்றைக்கு குண்டு போடப்பட்டதில் பலர் சிதறிப் பலியாகியிருக்கிறார்கள். கிளிநொச்சியில் 56,500 வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 22,500 போராளிகள் களத்தில் பலியாகியிருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் அகதிகளாக அலைகிறார்கள். யார் மனித உரிமை மீறலைச் செய்வது என்று தெரியவில்லையா?
இலங்கை இராணுவத்திற்கான புதைகுழி அங்கே தோண்டப்பட்டுவிட்டது.

எழுத்தாளர் இராசேந்திரசோழன் (மண் மொழி சஞ்சிகை ஆசிரியர்) படைப்பாளிகளுக்கென்று தனித்துவமான அடையாளங்கள் இருக்கின்றன. தென்னாபிரிக்கா நிறவெறியை எதிர்ப்போம்; பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்போம்; வியட்நாமியப் போராட்டத்தை மெச்சுவோம்; ஆனால், ஈழத்தமிழர்களது பிரச்சனை குறித்துப் பேசாதிருப்பது எப்படி?
த.மு.எ.ச. சார்புடைய மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அதைப் பற்றி விமர்சனங்கள் உண்டு.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்: மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதே கேள்வியைக் கேட்கிறேன்… நந்திக்கிராமம் பிரச்சனையைப் பற்றி த.மு.எ.ச. ஏன் கேள்வி எழுப்பவில்லை? ரஷ்யாவின் ‘தாய்’நாவலைப் பற்றிப் பேசுகிறீர்கள். அந்தத் தாயைக் கொண்டாடுகிறீர்கள். தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிவைக்கும் ஈழத்தாய்மாரைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை? போர் ஆலோசனைக் குழுவிடம் தனது 3 குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு களத்திற்குச் சென்ற ஈழத்துத் தாயை நீங்கள் அறிந்ததில்லையா? ஏன் இந்த மௌனம்? ஒரு ஆக்கிரமிப்பிற்கெதிராகக் குரல் எழுப்பாதவர்கள் ஏகாதிபத்தியத்தோடு உடன்படுவதாகத்தானே பொருள்?

பாவலர் இன்குலாப்: இந்தக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பமாக அனுமதி வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் என்ன? நமது ஜனநாயகம் எதிர்ப்புக் குரலுக்கு இணக்கமாக எப்போதும் இருப்பதில்லை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்… காங்கிரஸாரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சேர்ந்து ஒரு சாதனையைச் செய்திருக்கிறார்கள். அதாவது, பெரிய பெரிய சிறைச்சாலைகளைக் கட்டியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் மக்கள் விரோதப் போக்கை முறையாகப் பயின்றிருக்கிறார்கள். 150பேர் மும்பையில் இறந்துபோனார்கள் என்று கூக்குரலிடுகிறவர்கள் - ஈழத்தமிழர்கள் கூட வேண்டாம் - தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாமா? ஆக, மக்கள் அரசுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற இந்திய அரசு, தன் மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறதா?

செத்துக்கொண்டிருப்பவன் தமிழன் என்பதற்காக மட்டும் அவனை ஆதரிக்கவில்லை; அவன் ஒரு மனிதன் என்பதற்காகவுந்தான் ஆதரிக்கிறோம். இனவழிப்புப் போர் சிங்களவன் மீது நடத்தப்பட்டால் சிங்களவன் பக்கம் நின்றுதான் பேசியிருப்போம். அதைக் கண்டித்திருப்போம்.

இப்படியாக பேசினார்கள்.. பேசினார்கள்… பேசினார்கள். ஆனால், காலையிலிருந்து மாலை ஐந்தே முக்கால் மணிவரை அங்கிருந்தும்கூட களைப்புத் தோன்றவில்லை. ஏனென்றால், செவிக்குணவு ஈயப்பட்டுக்கொண்டிருந்தது. வாகனங்கள் போக்குவரத்து ஓகோகோவென்று இரைச்சலாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் தோன்றியது. பிறகு சத்தம் ஒடுங்கிவிட்டது. பேச்சு மட்டுந்தான் செவிகளில் இறங்கியது.

அரசியலுக்கும் ஈழத்தமிழருக்கும் பெண்களுக்கும் அப்படியென்ன ஒவ்வாமையோ… கவிஞர்கள் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் மட்டுந்தான் அதிகமான பெண்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் குட்டி ரேவதி, நந்தமிழ் நங்கை, இன்பா சுப்பிரமணியம், தமிழ்நதியாகிய நான் ஆகியோர்தான் கலந்துகொண்டோம்.

'சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து’என்று பதாகையில் போடப்பட்டிருந்தாலும் அதிகம் கண்டிக்கப்பட்டதென்னவோ காங்கிரஸார்தான். இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் கடைசிவரை கூட்டம் கலையாதிருந்ததுதான். இரண்டு மூன்று பேரைத் தவிர ஏனையோர் அமர்ந்தது அமர்ந்தபடி பேச்சில் இறங்கி அன்றேல் கிறங்கிக் கிடந்தார்கள். தவிர, பிரபாகரன், புலிகள், தமிழீழம், தாயகம், தேசியத் தலைவர் என்ற பதங்களெல்லாம் தாராளமாகப் பிரயோகிக்கப்பட்டன. கண்ணை உருட்டி விழிப்பது, காதருகில் கிசுகிசுப்பது இன்னபிற இல்லாதிருந்தது உவப்பளித்தது.

ஈழப்பிரச்சனை பற்றிய அறிவும் தெளிவும் பொதுமக்களுக்கு வருமோ இல்லையோ நானறியேன். ஆனால், எப்போதும் குண்டாந்தடியும் கையுமாக நிற்கும் பொலிஸ்காரர்களுக்கு வந்துவிடுமென்ற நம்பிக்கை இருக்கிறது.

சீமான் சேகுவேராவின் ‘ரீ சேர்ட்’ஐப் போட்டுக்கொண்டு பேசி சிறைப்பட்டாலும் பட்டார். அதுவொரு ‘மாதிரி’ஆகிவிட்டது. இந்தக் கூட்டத்திலும் பலர் சேகுவேராவை மார்பிலும் முதுகிலும் தாங்கித் திரிந்தார்கள்.

எப்போதும்போலதான்… நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், பெருமிதங்களைக் கூட்டங்கள் தரத் தவறுவதில்லை. தெருவில் இறங்கி வீடு நோக்கிப் போகும்போது ஜி.நாகராஜனின் நாவல் தலைப்புப் போல (நாளை மற்றுமொரு நாளே) ‘இதுவும் இன்னுமோர் கூட்டம்’என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது பெயரிலி…? ‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’சும்மா இருக்கவும் முடிவதில்லை.:)











12.21.2008

சீமான் கைதும் இறை ‘ஆண்மை’யும்


சீமான்,கொளத்தூர் மணி,பெ.மணியரசனைக் கைது செய்துவிட்டார்கள். அவர்கள் செய்தது இமாலயத் தவறு. அவர்கள் வார்த்தைகள் கண்காணிக்கப்படும் ஒரு நாட்டில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மறதி மன்னிக்கப்பட முடியாதது. இப்போது உங்களுக்கு சிதைந்துபோன ரஷ்யாவும் அதன் உளவுப்படையும் நினைவில் வந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. முகத்தை மூடாத பெண்களுக்குத் தண்டனை வழங்கும் தலிபான்கள் நினைவில் வருவதற்கும் நான் பொறுப்பாக முடியாது. தஸ்லிமா நஸ்ருதீன், சல்மான் ருஷ்டி போன்றோரின் அலைச்சல்களும் உளைச்சல்களையும் ஏன் நினைத்துக்கொள்கிறீர்கள்? கருத்துரிமைப் புண்ணாக்கு கட்டாயம் வேண்டுமா என்ன? சாப்பிடுவதற்கும் அதிகபட்சமாக எச்சிலை உமிழ்வதற்கும் மட்டுந்தான் வாயைத் திறந்திருக்கவேண்டும். ஈழத்தமிழருக்காக உணர்ச்சிவசப்பட்டோ உருப்படியாகவோ பேசி உள்ளே போய் உட்கார்ந்திருக்க வேண்டிய தேவையென்ன?

‘இத்துடன் சீமான் பெரியாளாகி விடுவார்’என்றார் ஒரு நண்பர். அடுத்தவன் வீட்டில் இழவு விழுந்தால் எட்டாம் நாள் இறைச்சிக் கறிச்சோறு என்றில்லாமல், பதிலளிக்க முடியாத கேள்விகளை அதிகார மையங்களைப் பார்த்துக் கேட்கும் சீமானுக்கு இதுவும் வேண்டும்: இன்னமும் வேண்டும். ‘இவர் தன் வேலையைப் பார்க்காமல் பிரபாகரன், வெங்காயம் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்’என்றார் இன்னொருவர். உண்மைதானே… காலையில் எழுந்து காப்பி குடித்து கக்கூசுக்குப் போய் அதன்பிறகு வேலைக்குப் போய் களைத்துத் திரும்பி தொலைக்காட்சியில் ‘குலுக்கல்’களைப் பார்த்து மனைவியையோ காதலியையோ கூடிவிட்டுத் தூங்காமல், ‘ஐயோ.. அண்டை நாட்டில் சகோதரனைச் சாகடிக்கிறார்களே… கேட்பாரிலையா…?’என்று கைகளை உயர்த்திக் கேட்பது மன்னிக்க முடியாத குற்றந்தான்! பெரியவர்கள், விடயமறிந்தவர்கள் அவரைத் தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள்.

‘புனிதமான’ அரசியல் தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாக சீமானும் கொளத்தூர் மணியும் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் குண்டுகளை வாங்கி அண்டை அயல்களுக்குக் கொடுத்தால் என்ன… அதைத் தனது மக்களின் தலைகள் மீதே போட்டு சிதறுதேங்காய் ஆக்கினாலென்ன? அரசாங்கங்கள் எல்லாம் சம்பந்தக்குடிகள் என்பதை மறந்தது தமிழ்த்தேசியம் பேசுபவர்களின் குற்றமல்லவா? வியட்நாமில் எரியும் நெருப்பிலிருந்து அம்மணமாக ஒரு குழந்தையை அலறியடித்துக்கொண்டு ஓடிவரச்செய்தது தீவிரவாதிகளன்றோ? ஈராக்கைப் பிணக்காடாக்கியது, பங்காளாதேஷில் பல ஆயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது, யாழ்ப்பாணத்தின் பிரம்படி ஒழுங்கையில் உயிரோடு மக்கள் மீது கவசவாகனங்களை ஏற்றி இரத்தமும் சதையும் தெறிக்கத் தெறிக்கக் கொன்றது, உகண்டாவில் மனிதக்கறி சாப்பிட்டதெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள்? அனைத்து அரசாங்கங்களும் காவியுடை உடுத்திக்கொண்டு கொல்லாமை விரதத்துடன் இருப்பதை நீங்கள் அறியீர்களா? கறுப்பாடையும் கழுத்து மாலையுமாக ஐயப்ப பக்தர்களான அரசாங்கங்கள் சாலைகளில் நடந்துபோவதை நீங்கள் கண்டதில்லையா? பிள்ளைப் பூச்சிகளான, அஹிம்சாவாதிகளான தலைவர்களைப் பற்றி சீமானும் ஏனைய தலைவர்களும் இப்படி அபாண்டமாகப் பேசலாமா?

இறையாண்மை என்பது, பிணக்குவியலின் மேல் குந்தியிருந்தபடி சிக்கன் பிரியாணியும் 65வும் சாப்பிடுவது என்ற கருத்துப்பட நீங்கள் பேசியிருக்கக்கூடாது. சொந்தக்காரப் பிணங்களுக்கு மட்டும் ஒப்பாரி வைப்பது அதன் வரைவிலக்கணங்களுள் ஒன்றெனச் சுட்டிக்காட்டியிருக்கக் கூடாது. ‘ஹிண்டு அன் கோ’வினரின் தினப்படிச் சாப்பாட்டில் விழும் உப்பெனச் சாடியிருக்கக்கூடாது. காங்கிரஸ்காரர்களின் சொல்லாயுதமென சொல்லியிருக்கக்கூடாது. குற்றம் குற்றமே! (இங்கே ‘திருவிளையாடல்’நினைவுக்கு வரவேண்டும்.)

சட்டங்களும் சித்தாந்தங்களும் மக்களை மந்தைகளாக்கி மேய்க்கின்றன என்று நீங்கள் நினைப்பது தவறு.சீமான்! நீங்கள் சினிமாவைப் பற்றிப் பேசுங்கள். ‘தம்பி’எடுத்ததுபோல ‘தங்கச்சி’என்றொரு படம் எடுங்கள். பெரியாரைக் குறித்துப் பேசுங்கள். ‘இறையாண்மை எங்கே இருக்கிறது?’என்று கையை உயர்த்தி காற்றைத் துளாவி உதடு துடிக்கத் தேடாதீர்கள். அது பரம்பொருள். கறுப்புச் சட்டைக்காரர்களின் கைகளுக்கு அகப்படாதது. கண்ணுக்குப் புலப்படாதது.

அரசாங்கங்களுக்கு முகங்கள் இல்லை. கண்ணாடி பார்ப்பதுமில்லை. இல்லையெனில் பயங்கரவாதிகளென தங்களைத் தாங்களே தூக்கிலிடவேண்டியதாகிவிடும்.
இந்த ‘ஜனநாயகம்’என்ற செத்துப் புழுத்த வார்த்தையை என்ன செய்வதென்று தெரியவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை இதையெல்லாம் பொட்டலம் கட்டமுடிந்தால் கட்டி ஒவ்வொருநாளும் உரத்த குரலில் கூவியபடி வரும் குப்பை வண்டிக்காரனிடம் போட்டுவிடலாம்.

ஆக மொத்தத்தில் நம்மால் செய்யக்கூடியது ஒன்றுதான்… ‘மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்’ என்ற பிரயோகத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகைச்சுவைத் துணுக்காக அறிவிக்கும்படி பரிந்துரைக்கவோ இரந்துகேட்கவோ செய்யலாம்.

மண்டையைக் குடையும் கொசுறுக் கேள்வி: அடுத்தவன் மனைவியை, தங்கையை, மகளை துடிக்கப் பதைக்க வன்கலவி செய்வதும் கொல்வதும் இறை ‘ஆண்மை’யின் கூறுகளில் ஒன்றா நண்பர்களே?

12.14.2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் உண்ணாநிலைப் போராட்டம்


ஈழத்தமிழர்கள் துயர்ப்பட மட்டுமே பிறந்தவர்களன்று; பெருமிதப்படவும் தகுந்தவர்கள் என்ற எண்ணத்தை யாராவது இருந்திருந்துவிட்டு விசிறிச் செல்வதுண்டு. நேற்று சனிக்கிழமை கோயம்பேட்டில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் மனம் நெகிழ்வும் நிறைவும் அடைந்திருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால சென்னை வாசத்தில் கலந்துகொண்ட எந்தவொரு நிகழ்வும் இத்தகு மனவெழுச்சியைத் தந்ததில்லை.

“துப்பாக்கிகளுக்கு இதயம் இல்லை... உங்களுக்கு?’ – ‘போரை நிறுத்து’ஆகிய வாசகங்களைக் கொண்ட ‘ரீ சேர்ட்’டுகளை அணிந்த இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அரங்கினுள் நுழைந்தபோது நீண்ட சொற்பொழிவுகளில் செவிகள் களைத்துப்போய்விடும்… விரைவில் எழுந்து வேறு வேலை பார்க்கச் சென்றுவிடலாமென்றே நினைத்திருந்தேன். ஆனால், பேச்சு என்பது எப்போதும் பேச்சு அல்ல… பேசுகிற விதத்தில், சென்றடையும் இடத்தில் பேசினால் அதுவொரு விளக்கை ஏற்றிவிடும் என்பதைக் கண்கூடாகக் கண்டேன். வார்த்தைப் பொறியொன்றால் எத்தனை சுடர்களை ஏற்றமுடியும் என்பதை அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அத்தனை இளைஞர்கள் கூடியிருந்த அரங்கில் தேவையற்ற பேச்சு இல்லை; கைத்தொலைபேசிகள் விதவிதமாகப் பாடவில்லை; அவசியமற்று எழுந்து ஓடித் திரிந்து யாரும் தங்கள் இருப்பைத் துருத்திக் காண்பிக்கவுமில்லை. கவனச்சிதறலற்று, கூடியிருக்கும் நோக்கத்தில் குவிந்திருந்தன எல்லா மனங்களும்.

எங்களில் அநேகர் பொதுப்புத்தி சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறோமென்பதை அங்கே பேசியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அதாவது, ‘தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள்; வேலை நேரம் போக களியாட்டங்களில் திளைக்கிறவர்கள்; பணத்தைத் துரத்துவதில் வாழ்க்கையை இழக்கிறவர்கள் என்றெல்லாம் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு உங்களிடம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’என்ற வியப்பை அங்கு உரையாற்றிய அநேகர் வெளிப்படுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், எழுத்தாளர் ராசேந்திரசோழன், சி.மகேந்திரன் (கம்யூனிஸ்ட் கட்சி) பேராசிரியர் கல்யாணி, சுப.வீரபாண்டியன், விடுதலை ராசேந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வைகோ, இயக்குநர் சீமான், தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, ஓவியா, கவிஞர் அறிவுமதி, வழக்கறிஞர் அருள்மொழி, ஜெகத் கஸ்பர்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், பேரினவாதத்தின் வெறியாட்டங்கள், அதற்கு ஒத்தூதும் ஊதுகுழல்கள், தமிழர்களின் அவலநிலை, அதன் மீதான பாராமுகங்கள், போராட்டத்தின் நியாயம், அதனை இழிவுபடுத்துவோரின் ஈனச் சுயநலம் என பல்வேறுபட்ட விடயங்கள் அங்கு பேசப்பட்டன.

கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகங்களைத் திரும்பிப் பார்த்தேன். ஒவ்வொருவரும் சொற்களைத் துளி சிந்திவிடாமல் அருந்திக்கொண்டிருந்தார்கள். அது பேசியவர்களின் ஆற்றலா… மழைக்காக ஏங்கிக் கிடந்த மண்ணின் உறிஞ்சலா...? பேச்சுக்கேற்ப அந்த முகங்கள் மாறியதைப் பார்க்கும்போதில் ‘இந்தக் கூட்டத்தில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ’என்ற நினைவு எழுந்தது. அண்மையில்தான் மு.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’என்ற நூலை வாசிக்கப் பொழுது வாய்த்தது. அன்றைக்கு மாணவர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அநேகர் மகத்தான அரசியலாளர்களாக உருவானதுபோல, நேற்றைய கூட்டமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தோன்றியது. அவர்கள் கண்களைப் பார்க்க நேர்ந்திருப்பின் நான் மிகைப்படுத்தவில்லை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

பழ. நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலியும் ‘கீற்று’இணையத்தள அமைப்பாளர் ரமேசும் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து வழங்கிக்கொண்டிருந்தார்கள். சக பதிவரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவருமான லஷ்மணராஜா அங்கு நடைபெற்ற நிகழ்வுகளைத் தனது புகைப்படக்கருவியினுள் பதிவுசெய்துகொண்டிருந்தார். என்னாரெஸ் பிரின்ஸ் உடனிருந்தார். எத்தனையோ நாள் உழைப்பின் விளைவு அற்புதமான ஒழுங்கமைப்பில் தெரிந்தது.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் கலந்துகொண்டதானது உறுத்தலாக இருந்தது. பொது நிகழ்வுகளில் எப்போதும் பெண்களின் எண்ணிக்கை பாயாசத்தில் முந்திரி மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருப்பது (புதுசாக ஏதாவது யோசிக்க வேண்டும்) எப்போதும் அயர்ச்சியூட்டுவதாகும். அதற்கான நதிமூலம் தேடினால், ‘சமூகம், ‘அதன் கட்டமைப்பு’ 'குடும்பம்' என்ற சலிப்பூட்டும் பழக்கப்பட்ட பதில்களையே வந்தடைய வேண்டியதாய் இருக்கும்.


ஈழப்போராட்டத்தை ஒரு கருவியாகக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஊடகக்காரர்களைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் தலையைக் காட்டுபவர்களைப் பார்த்து வெறுத்திருந்தேன். ஒரு புல்லையும் தூக்கிப் போடாமல் சொல்லையுண்டு செழிப்பவர்களைக் காணநேர்ந்திருக்கிறது. இந்நிகழ்வு நெஞ்சார்ந்த நிறைவு. உணர்வாளர்களின் ஒன்றுகூடல். தகவல் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு ஈழத்தின் வரலாற்றுத் தகவல்களை வழங்கிய காலப்பதிவு. வார்த்தைகள், கூடியிருந்த எல்லா மனங்களுக்கும் விளக்கினை எடுத்துச்சென்றன.

அடுத்த தலைமுறையிலும் பற்றிக்கொண்ட பொறி பற்றிப் படரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வெளியில் வரும்போது, அந்த நாளின் நிறைவு தந்த நெகிழ்வில் பாடல் வரிகள் உள்ளே ஓடுகின்றன.

‘குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா…’

நாம் முணுமுணுக்கும் பாடலாவது அவ்விதம் இருந்துவிட்டுப் போகட்டுமே...!

பிற்குறிப்பு: உண்ணாநிலைப் போராட்டம் இன்றைக்கும் தொடர்கிறது. நாளையும் தொடரும். மாணவர்கள் சோர்ந்துபோய் படுத்திருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார். நேரம் அனுமதித்தால் இன்றைக்கும் கலந்துகொள்ள வேண்டும்.