5.20.2008

மிருகாபிமானம்


எங்கள் தெருவில் ஒரு நாய் சதாசர்வகாலமும் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. போகும்போதும் வரும்போதும் தன் ஈரம் நிறைந்த கறுப்புக் கண்களால் எங்களை அண்ணாந்து பார்க்கும். வெயிலோ மழையோ அதன் கழுத்திலிருக்கும் சங்கிலி மட்டும் அவிழ்க்கப்படுவதேயில்லை. யாரோ ஒரு மகானுபாவன் வீட்டைக் கட்டி, அதற்குக் காவலாக ஒரு நாயையும் கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தப் பிரமுகரின் ஓய்வில்லமாக அது இருக்கக்கூடும். அவரின் உத்தரவு அன்றேல் வேண்டுகோளின் பிரகாரம் அதே தெருவிலிருக்கும் ஒரு கூலித்தொழிலாளியின் குடும்பம் அதைப் ‘பார்த்து’க்கொள்கிறது. பார்த்துக்கொண்டுதானிருக்கிறது. உணவோ தண்ணீரோ வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் சொற்பம். எப்போதாவது ‘லக்கி’ தெரு முனைவரை கொண்டுவரப்படும்; பிறகு இயற்கை உபாதைக்கென தூக்கிய கால் தூக்கியபடியிருக்க இழுத்துப்பறித்துக் கொண்டுபோய்விடுவார்கள். லக்கி walking போகிறதாம். முதலில் புளு குறொஸிற்கு அறிவிக்கலாமென யோசித்தோம். ஆனால், அமைப்புகள் மீதான அவநம்பிக்கையும் அயர்ச்சியும் அவ்வாறு செய்யவிடவில்லை. நாளடைவில் ‘லக்கி’யைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். நாங்கள் ஊரை நீங்கிய பிற்பாடு அந்த நாய் என்னாகும்? அதனைக் கட்டிவைத்து வெயிலைக் குடித்து பைத்தியம் பிடிக்கவைக்கும் உரிமையை அந்த வீட்டுச்சொந்தக்காரரிடம் கையளித்தது யார்?

கடவுள் என ஒருவர் இருந்தால், பிராணிகளின் படைப்பு விடயத்தில் அவர் முழுமுட்டாளாக இருக்கவேண்டும். மனிதனிலும் ஓரறிவு குறைந்த(அதையும் மனிதர்கள்தான் சொல்கிறார்கள்)விலங்குகளுக்கான தேவை இவ்வுலகில் என்ன? காவலுக்கு நாய், எலி பிடிக்கப் பூனை, வண்டி இழுக்க மாடும் குதிரையும்…(சில சமயம் சகமனிதனும்) இயற்கையிலிருந்து விலங்குகள் வரை தன் தேவைக்கியைபுற வளைத்துக்கொள்ளும்படியாக மனிதனை கூடுதல் அறிவோடு படைத்தது அந்தாளின் குற்றமல்லவா?

தெருக்கள்தோறும் தோல் மட்டும் வயிறாய் அமையப்பெற்ற நாய்கள் அலைகின்றன. குப்பைக் கூடைகளுள் இறங்கி அரிதிலும் அரிதான உணவைத் தேடுகின்றன. அவற்றின் பசி தேங்கிய பார்வையிலிருந்து குற்றவுணர்வோடு தப்பித்தோடிக்கொண்டிருக்கிறோம். ஒரு உச்சுக்கொட்டலில் பின்னால் ஓடிவந்துவிடுமோ என அஞ்சி அதன் கண்களையே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டியிருக்கிறது. ‘என்னை யாராவது கூட்டிப்போக மாட்டீர்களா?’என்ற இறைஞ்சுதலோடு நூற்றுக்கணக்கான பிராணிகள் வீதிகளெங்ஙணும் திரிகின்றன. மனிதர்களே சகமனிதர்களில் தங்கியிருக்க நேரும்போது, ‘நாயே’எனப் பார்க்கும் இக்குரூர உலகில் நிஜ நாய்களின் கதி அதோகதிதான்! உங்களில் எவரேனும் ‘ஜாதி’நாய்களைத் தெருக்களில் கண்டிருக்கிறீர்களா? ஏன் ராஜபாளையமோ, பொமரேனியனோ, ஜேர்மன் செப்பேட்டோ, டால்மேஷனோ வீதியில் திரிவதில்லை? பூனைகளோவெனில் எல்லா இடங்களிலும் விரட்டப்படுகின்றன. பூனைகள் களவெடுக்கின்றனவாம்! ஆத்திசூடி, பஞ்சசீலம், திருக்குறள், இன்னா நாற்பது-இனியவை நாற்பது இன்னபிறவெல்லாம் படித்துமுடித்துவிட்டு பசிதீர்க்கவும் ஆடம்பரமாக வாழவும் மனிதன் களவெடுக்கும்போது, ஓரெழுத்தும் வாசிக்கத் தெரியாத பூனை களவெடுத்தாலென்னவாம்? விசுவாசமற்றவையாம்! ஐயோ… இந்த மனிதர்கள்-புனிதர்களாலாயது இவ்வுலகு!

‘அவன் பாம்பு மாதிரி… பழகுவது கவனம்’என்று இந்த மகாமனிதர்களிற் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். எந்தப் பாம்பாவது ‘சிவனே’என்று நின்றிருக்கும் உங்களை நோக்கி ஓடோடிவந்து கடித்ததுண்டா? உங்கள் படுக்கையின் கீழ் கிடக்க நேர்ந்து, நீங்கள் காதல் மற்றும் கடன் நினைவில் புரண்டு புரண்டு உங்கள் மாமிசத்தால் அதனை அழுத்தும் வலியில் கடிக்கிறது. இல்லையேல் அதனை மிதித்தால் கடிக்கிறது. தற்காப்பு வன்முறை, திருப்பித்தாக்குதல் என்பன எல்லா உயிர்களிடத்தும் உள்ளதே. முகட்டுவளையில் சுருண்டிருக்கும் பாம்பைக் கண்டால், விரட்டிவிரட்டிக் கொல்கிறோம். பயிர்பச்சைகளினடியில் தன்பாட்டில் சரசரத்துப்போகும் பாம்பை போவெனத் துரத்திவிடுவதில்லை. மாற்றான் படை கண்டாற்போல ஊரையே கூட்டி அடித்துக் கொழுத்தி துவம்சம் செய்யும்வரை அடங்குவதில்லை நம் கொல்வேட்கை. எத்தனை எத்தனை போராளிகள் காடுகளில் எல்லைக் காவலுக்கு இருக்கிறார்கள். பாசறை அமைத்து முறைவைத்து உறங்கவும் உறங்குகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் பாம்பு தீண்டி மரணித்தார்கள்? மறுபடியும் இந்தக் கடவுளைத்தான் வம்பிற்கு இழுக்கவேண்டியிருக்கிறது. அவர் ஒரு பாரபட்சன். வளவளவென்றொரு தோலும், நெளிநெளியென்று நெளியும் அரியண்ட நகர்தலும் அதற்கு மட்டுமேன்? பாம்பு கடித்தாலும் விஷம். நாய் கடித்தாலும் விஷம். பூனை கடித்தாலும் விஷம். இதில் நாய் நன்றியுள்ளது. பூனை விசுவாசமற்றது. பாம்பு படையையும் நடுங்கவைப்பது. எல்லாற்றுக்கும் ஒவ்வொரு குணங் கற்பிக்கும் மனிதன் எந்தவகைக்குள் அடங்குகிறான்?

‘பிராணிகளுக்காகப் பரிந்துரைப்பது சரி…எத்தனை நாடுகளில் எத்தனை மனிதர்கள் வறுமையாலும் போராலும் மடிந்துகொண்டிருக்கிறார்களே… அது கவனத்தில் உறுத்தவில்லையா…?’ என்று ‘மனிதாபிமானிகள்’எவரேனும் கேட்கக்கூடும். வறுமைக்குக் காரணம் வளங்களின் பாரபட்ச பகிர்தல். ஆதிக்க மனோபாவமும் பேராசையும் கூடிப்பெற்ற குழந்தைதான் போர். கடவுள் என்றொருவர் இருந்து இந்த உலகம் அவரால் படைக்கப்பட்டிருந்தால் அனைத்துயிரும் சமமே என்றெண்ணியல்லவோ படைத்திருப்பான்? (இங்கும் படைத்திருப்பாள் என்று சொல்ல முடியாது. என்னே மொழிப்பிரட்டு, சூழ்ச்சி) மனிதன் மட்டும் இதிலென்ன உசத்தி…?இயற்கைச் சமநிலையையும் குழப்பவல்ல சர்வவல்லமை படைத்ததாலா? அதிலும் அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், நடிகர்கள் இன்னபிற பிரமுகர்களின் உயிர் பொற்சரிகைப்பட்டில் பொதியப்பட்ட வைரக்கல் (அல்லது ‘பிளாட்டினம்’). சாதாரணர்களின் உயிர் உதிரும் ஒற்றை மயிருக்குச் சமானம். அதிகாரச் சேற்றிலூறிய நாட்டாமைக்காரர்கள் மனுச மனங்களில் ஊன்றியிருக்கும் விஷவித்துக்களை நினைத்தால், வலியற்ற மரணத்தைத் தேர்ந்து போய்விடலாம்போலிருக்கிறது. (போவது போவது என்று சும்மா போக்குக் காட்டுவதுதானன்றி வேறில்லை)

இந்தக் கோபத்தை என்னதான் செய்வது? அயர்ச்சியூட்டும் உறவுகளிடம் காட்டவியலாது. அலையவைக்கும் அதிகாரிகளிடம் காட்டவியலாது. நாகரிகம் கருதி நண்பர்களிடம் வெளிப்படுத்தமுடியாது. பொறுக்கிக்கொடுத்த மாம்பழங்களை ஒரு வித்தைக்காரனின் சாகசத்தோடு கண்ணெதிரிலேயே மாற்றும் நடைபாதைக் கடைக்காரனிடமோ, ஏறும்போதும் இறங்கும்போதும் வெவ்வேறு நாக்குகளால் பேசும் ஆட்டோக்காரனிடமோ, நாறிய மீனை விற்றுத்தள்ளிப்போன மீன்காரியிடமோ காட்டுதல் சாத்தியமன்று. கண்ணில் பொய்முள் பொருத்திய கபடர்களிடமோ, பூமி உருண்டையானது என்று நிறுவப்பட்டதையே தம் வாய்ச்சாதுரியத்தால் சதுரமாக்கிவிடக்கூடிய சில விதண்டாவாதிகளிடமோ பேசவியலாது. பரபரப்பிற்காக மற்றவர்களின் உணர்வுகளைப் பலியிடும் சில பத்திரிகையாளர்களிடமும் காட்டலாகாது. இப்போதைக்கு கோபத்தை பிராணிகளின் மீதான கருணையாக மடைமாற்றுவதொன்றே வழி. இன்று எழுத்து கோபத்தை தன் முதுகில் வாங்கிக்கொண்டது. பாவந்தான். அதுவும் ஒருவகையில் வாய்பேசா வளர்ப்புப்பிராணிதான். அதனாற்றான் அதன் மீதான வாஞ்சை நாளாக நாளாக பெருகிக்கொண்டேயிருக்கிறது.

பிற்குறிப்பு: இதனை எழுதத்தூண்டிய ‘லக்கி’(அ)க்கும் தெருநாய்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் என்று சொல்வதன் மூலம் இதனை முழுமொக்கையாக்கிப் போகிறேன்.

5.15.2008

குற்றவாளி


அனலில் ஊறிய அறைகளுள்
இயலாமையுடன்
கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.
வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!

அன்பின் நீரூற்றுகள்
மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்து
மட்டுமே பீறிடுகின்றன.

நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடி
வாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்
விழுந்து சுருண்டிருக்கும்
கிழவனைப் புறக்கணித்து
எலக்ரோனிக் அடிமைகளை
ஏற்றிச்செல்கின்றன
சொகுசுப் பேருந்துகள்.
தண்ணீர் தேடியலைகின்றன
கால்களுக்கிடையில் வால்நுழைத்து
எச்சில் இழையொழுகும் நாய்கள்.

எழுதியிருக்க வேண்டிய
அனைத்து வார்த்தைகளையும்
இரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை.

இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!

5.02.2008

ஒரு பயணம்… பயங்கள்… மேலும் சில பரவசங்கள்…


விமானம் உயரம் விழுங்கித் தரைதாழ்கிறது. பிரமாண்டப் பஞ்சுப்பொதிகள் ஐதானதில் குறுஞ்செடிகளாய் தெரியவாரம்பித்த தென்னைகளின் அழகிலும் வேறு ஏதோவோர் உணர்விலும் (அதை நீங்கள் பிறந்த பொன்னாடு இன்னபிறவற்றின் கலவை என உணரலாம்) மனம் இளகி பரவசம் பொங்க அதுவரை முகம்பார்க்காதிருந்த சகபயணியின் பக்கம் திரும்பி ‘அழகு’என்கிறேன். ‘பச்சை நிலம்’என அவரும் வழிமொழிகிறார். கொழும்பு அப்போதிருந்து/அப்போதிருந்த கொழும்பாய்த்தானிருக்கிறது. சென்னையில் அதிகம் காணக்கிடைக்காத பாவாடை-சட்டைப் பெண்கள், ஓராண்டின் பின் ஊர்திரும்பிய எனக்கு காட்சிப்பிழையெனத் (நன்றி தாமரை) தோன்றியது என் கண்களினதும் காலத்தினதும் பெரும்பிழையே. பெருநகருக்கேயுரித்தான நெரிசல்களுடன் அங்கிங்கெனாத இராணுவப் பிரசன்னமும் நெரிக்கிறது.

போய் இறங்கியது ஒரு வெள்ளிக்கிழமை. சனி,ஞாயிறில் விசா வழங்கும் அலுவலகத்திற்கு விடுமுறை என்றார்கள். எங்கோ வெகுதொலைவில் இருக்கும் வீடு மாயக்கரமசைத்து அழைக்கிறது. இரத்த நிறத்திலும் அதற்கு சற்றே இளைத்த நிறத்திலும் லசந்தரா மலர்கள் மென்காற்றில் இழைகின்றன. பூனைக்குட்டிகளின் பஞ்சுப்பாதங்கள் மனம் முழுதும் மெத்துமெத்தென அலைகின்றன. அதன் பாத அடிப்பகுதி இளஞ்சிவப்பு நிறம். ஐந்துவிரல்களையும் பிரித்துத் தடவிக்கொடுத்தால் அது கண்சொருகி மிக மெலிதாய் ‘மியாவ்’என்கும்.

வெளிநாடொன்றிலிருந்து கொழும்பிற்குப் போய், அங்கிருந்து வவுனியாவுக்குப் போகவிரும்புகிறவராக நீங்கள் இருந்தால் இதை வாசிப்பது நல்லது. இரவு இரயிலில் முதல் வகுப்பு கிடையாது. இரண்டாம் வகுப்பிலும் நீங்கள் எதிர்பார்க்கும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இல்லை. அன்று காலையிலேயே பயணச்சீட்டுப் பெறப்போன எனக்குக் கிடைத்ததோ மூன்றாம் வகுப்புக்கான இருக்கைதான். பயணப்பைகளை புதையல் காப்பதுபோல காக்கவேண்டும். இல்லையெனில், நீங்கள் தூக்கத்தில் கனவுகண்டு சிரித்துக்கொண்டிருக்கும்போது வெறெவரோ உங்களது உடமைகளுடன் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கத்தகு சாத்தியங்கள் அதிகம்.

கடந்தமாதம் திருவனந்தபுரத்திற்குப் போயிருந்தபோது, கேரளாவை ‘கடவுளின் தேசம்’என்று சொல்வது மிகையன்று என அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். ‘உங்கள் ஊர் இதுபோல இருக்குமாமே?’என்று அங்கு ஒரு நண்பர் கேட்டார். ‘அழகில் இதனிலும் ஒரு படி குறைவாகத்தான் இருக்கும்’என்று பதிலளித்திருந்தேன். ஆனால், அது தவறென அந்தப் புகையிரதப் பயணத்தின் வழிநெடுகிலும் தோன்றிக்கொண்டேயிருந்தது. பகலெல்லாம் வெயில் உயிரின் ஈரத்தை உறிஞ்சிக்குடிக்கும். ஏப்ரல் மாதமாக இருந்தபோதிலும், இம்முறை, மாலையானதும் முகில் திரண்டு மழைகொட்டிக்கொண்டிருந்தது. அன்றிரவு மழையில்லை. அதுவொரு மனோரம்மியமான பௌர்ணமி இரவு. யன்னலூடாக நுழைந்த குளிர்காற்றில் இலைகளின் வாசனை மிகுந்திருந்தது. நிலவு தழுவிக்கிடக்கும் வயல்களையும் மரங்களையும் மலைகளையும் நீர்நிலைகளையும் கடந்தபடி இரயில் குரலெடுத்துக் கூவியபடி விரைகிறது. ‘இவ்வூரில் இருக்கமுடியாமற் போனது எவ்வளவு துரதிர்ஷ்டம்!’ ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டுமாம்! மெத்தச் சரி! உயிரோடிருப்பதற்கான சமரசங்கள், விட்டுக்கொடுத்தல்கள் மிக அதிகந்தான். விடிகாலையில் ஓரிரு மணிநேரம் இமைகளுக்கும் நித்திரைக்கும் பயங்கரமான இழுபறி நடந்துகொண்டிருக்க ஈற்றில் மதவாச்சியை வந்தடைந்தோம்.

விடிகாலையிலும் விழித்திருந்த காவலர்களால் பயணப்பொதிகள் கிண்டிக்கிளறப்பட்டன. என் ‘டிஜிட்டல்’ புகைப்படக்கருவியில் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த படங்களை உன்னிப்பாகப் பார்த்து ‘ஒன்றும் பயமில்லை’எனத் தெளிந்தார்கள். வெளிநாட்டிலிருந்து ஒருவர் கொண்டுவந்திருந்த இனிப்புகள்,ஆடைகள்,நவீன கருவிகள் மேசையில் பரப்பப்பட்டு அத்தனை பயணிகளுக்குமான காட்சியாயிற்று. புகையிரத நிலையத்திலிருந்து ஒன்றரை-இரண்டு மைல் தூரத்திற்கு ஆட்டோவில் பயணம். குளிர் முகத்தில் இழைய, மழைக்கு மதர்த்துச் செழித்த செடிகொடிகளைப் பார்த்தபடி ஊர் விழித்திராத இளங்காலையில் பேருந்து நிற்குமிடத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது ஏனோ விதியின் நினைவு வந்து அருட்டிற்று.

சலிப்பில் தோய்ந்த வார்த்தைகள், குழந்தைகளின் அழுகைகள் இன்னபிற பின்னணியில் அரைமணிநேரம் காத்திருந்தபின் ஒருவழியாய் புறப்பட்டு வவுனியாவைப் போய்ச் சேர்ந்தோம். நேரம் காலை 7 மணி.; மீண்டும் ஆட்டோவிலேறி வீடுநோக்கிப் பயணம். கதவைத் திறந்தபோது நாய்கள் திகைத்துப் பின்வாங்கிக் குரைத்துப் பின் தெளிந்து… நாய்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஞாபகசக்தியையும் நன்றியையும். மூத்த பூனைக்குட்டி பல மணிநேரம் என்னைச்சுற்றிக் கத்தித் திரிந்தது. பாதங்களில் முகம்வைத்து பிரசவ வேதனையில் கதறியது. (பூனைகளுக்கு விசுவாசமில்லை என்ற கூற்றை அதுவரை நம்பியிருந்தேன்.) என் கண்ணெதிரில் அன்றிரா மூன்று குட்டிகளை ஈன்றது. இனி அது குட்டியில்லை. பூனை குட்டி போடுவதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றார்கள். எனக்காக அது காத்துக்கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள்.

நிலவில் ஒளிர்ந்த மொட்டை மாடியில் நின்றபடி கீழே பார்த்தபோது, எங்கெங்கோ வியர்த்தமாக்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை செடிகொடிகளினிடையில் கண்டேன். எத்தனை தண்ணீர் ஊற்றியும் உரம் போட்டும் உயரமாட்டேன் என்று அடம்பிடித்த செவ்விளநீர் முத்துக்களாய் பாளை வெடித்து நின்றது. கிணற்றைச் சுற்றி பாக்குமரங்கள் உயர்ந்துவிட்டன. மஞ்சளில், சிவப்பில், ஒறேஞ்சில் நிறம்நிறமாய் பூத்திருந்தன செம்பருத்திகள். வாழைத்தார்கள் குரங்குகளை வாவென்றழைத்தன. ஓ லசந்தரா மலரே! நீ ஏன் குருதியை நினைவூட்டுகிறாய்?(இதை நான் எனக்காகவுந்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.)

இரண்டு நாள் வீட்டுக்காவலின் பின் திரும்புகிறேன்… கவனியுங்கள் அனானிகளே! ஒரு ‘அகதி’ நாய் மீண்டும் மீண்டு வருகிறது. நேசிக்கும் மனிதர்களிடமும் காலைச் சுற்றும் பிராணிகள் மற்றும் வாய்பேசவியலாத வீட்டினிடத்திலும் விடைபெறுதல் சுலபமில்லை. உயிர் என்பது மயிருக்குச் சமானம் என்று இனி எவரும் சொன்னால், ஓரமாகப் போய் காறித்துப்பிவிட்டு வரவேண்டும்.

பொதிவதை படலம் மீண்டுமொரு முறை அரங்கேறுகிறது. ஆட்டோ-பேருந்து-ஆட்டோ-மதவாச்சியிலிருந்து அனுராதபுரம்வரை இரயில்-அனுராதபுரத்திலிருந்து கொழும்புவரை மற்றோர் இரயில்-ஆட்டோ என்று மாறி மாறித் தாவி விடுதியை வந்து சேர்வதற்கிடையில் அவர்கள் கிளறிய கிளறலில் பருத்தியாடை பஞ்சாயும் பட்டாடை புழுவாயும் மாறாதிருந்தது ஆச்சரியம். வெயில் முகத்தை கூர்நகங்களால் பிறாண்டிக்கொண்டிருந்தது போதாதென்று இரயில் வேறு சிறுபிள்ளை விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. கொஞ்சத்தூரம் முன்னால் போகும்@ பிறகு பின்னோக்கி பயணிக்கும். பிறகு ஏதோ நினைத்துக்கொண்டாற்போல அரைமணிக்கும் மேலாக ஒரு நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும். சகிப்புத்தன்மையற்றவர்கள் இந்தப் பயணத்தைத் தவிர்த்தல் நன்று. இல்லையெனில், குதித்திறங்கி வேறுவழியில் கொழும்புநோக்கிப் பயணிக்க முடிந்தவர்கள் போகலாம்.

விமானம் மேலெழுகிறது. அலைக்கழித்து என்னை அழவைத்து, அழகில் திளைக்கவைத்து, அயர்ச்சியில் துவளவிட்டு, பயத்தின் திகைப்பாழ்த்தி, நெகிழ்ந்து நெக்குருகச்செய்த மண்ணே போகின்றேன். ‘வரமாட்டேன்’என்று ஒருபோதும் எழுதேன். என்னை மீறி ஏதோவொரு வெறுப்பில் ‘போகின்றேன்’என்பேன். ஆனாலும், மீண்டும் மீண்டும் அழைக்கும் குரலுக்கு அடிபணிந்து வருவேன். பூக்குட்டீ! நான் திரும்பிய காலை அட்டைப்பெட்டிக்குள் குட்டிகளை அடைகாத்தாய். இப்போது ‘குளோசெற்’இன் மேல் தூக்கிப்போய் வைத்திருக்கிறாயாம். குட்டிகளை ஏழு இடம் மாற்றும் பூனை என்பர். நாங்களோ ஏழு கடல் தாண்டி அலைகின்றோம். இன்னும் இருப்புத்தான் தரிக்கவில்லை.