3.27.2008

கோடை மழை


இரத்தம் உறிஞ்சி
பளபளக்கும் உடலோடு
கழன்றுவிழுகின்றன உறவட்டைகள்.

எழுதுமேசையில்
திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்
முதல்தேதியை முரசறைவித்தபடி...

மண்டைக்குள்
சிலந்திவலை படருமிக்காலம்
வாக்குறுதி மீறுகிறேன்
வாய்திறக்கவியலாத புத்தகங்களே!
மன்னித்துவிடுங்கள்.

கோடை தீங்கங்குகளோடு வருகிறது
அறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்
நீ உவமித்தபடி
ஒரு அகதியின் கழிவிரக்கத்தை நினைவுறுத்திச்
சதா கரைந்துருகும் மின்விசிறி.

வீதியில் இறங்குகிறேன்
மாந்தளிர் விரலசைத்து
சின்னக்குமிழ் வாயால்
எச்சில் நூலிழைய
செல்லமே! நீ சிரித்துவிட்டுப்போகிறாய்.

மழையற்றும் குளிர்கிறது மண்.

3.20.2008

நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா - பேசியதும் கேட்டதும்

ஆசிரியர்:ஆதவன் தீட்சண்யா
தொகுப்பு:க.பிரகதீஸ்வரன்
வெளியீடு: பூபாளம் புத்தகப் பண்ணை

ஐந்தரை மணியாகியும் அடங்காமல் வெயில் சுளீரிட்டுக்கொண்டிருந்த தெருக்களினூடே தேவநேயப் பாவாணர் நூலக அரங்குநோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நேரமாகிவிட்டதே என்ற பதைப்பு மிகுந்திருந்தது. ஆறேகால் மணியளவில் அரங்கிற்குள் நுழைந்தபோது இருபத்தைந்து பேர்வரை ஆங்காங்கே சாவதானமாக உலவிக்கொண்டிருந்தார்கள். நேரம் குறித்த தமிழர் ‘பாரம்பரிய’த்திலிருந்து யாரும் (நான் உட்பட)வழுகியதேயில்லை.

அரங்கின் முதல் நிகழ்வாக, ஆதவன் தீட்சண்யாவின் நேர்காணல்களை உள்ளடக்கிய ‘நான் ஒரு மநு விரோதன்’என்ற நூலை, தேர்ந்த ஆய்வாளரும்,பெண்ணியச் சிந்தனையாளருமாகிய வ.கீதா அவர்கள் வெளியிட்டுவைக்க, புதுக்கோட்டை மருத்துவர் ஜெயராமன் பெற்றுக்கொண்டார். ஆதவன் கீற்று.காம் மற்றும் பூபாளம் புத்தகப் பண்ணையால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த விழாவிற்கு நாடகவியலாளரான பிரளயன் தலைமை தாங்கினார்.

கீற்று.காம் சார்பில் மினர்வா வரவேற்புரை நிகழ்த்தியபோது, ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தாளுமை பற்றிக் குறிப்பிட்டார். சிறுகதை,கவிதை போன்ற வடிவங்கள் ஊடாக அரசியலைப் பேசும் திறன் ஆதவன் தீட்சண்யாவிற்கு நன்கு வாய்த்திருப்பதாகச் சொன்னார். மேலும்,தலித் இலக்கியம் என்று வரும்போது, ஒப்பாரி இல்லாமல் ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்க்குணம் பொருந்திய எழுத்தாக அவருடையதை அடையாளம் காணமுடிகிறது என்றார். பெண்களைக் குறித்து கழிவிரக்கத்துடன் நோக்கும்,எழுதும் பெரும்பாலான படைப்பாளிகளிலிருந்து மாறுபட்டு அவர்களை உயர்ந்தேத்தி எழுத்தில் அணுகும் பாங்கினையும், கீற்று.காம் இற்கு அளித்த நேர்காணல் முழுவதிலும் தொனித்த நேர்மையையும் குறிப்பிட்டுப் பேசினார். இறுதியாக,பாரதி பற்றிய கேள்விக்கு மட்டும் ஆதவன் பதிலளிக்காமல் அதைக் கடந்துசென்றுவிட்டது ஏனென்று தனக்குப் புரியவில்லை- ஒருவேளை அவர் சார்ந்த அமைப்பு விதிகள் குறித்த தயக்கத்தினால் மௌனித்திருந்தாரோ என்று ஐயம் எழுப்பினார்.

வ.கீதா பற்றி முன்பே அறிந்திருந்தபோதிலும் மேடைகளில் பேசிக் கேட்டதில்லை. செறிவார்ந்த உரைவீச்சும்,தமிழ்ப்பெருக்கும் நிறைந்த பேச்சாக அது அமைந்திருந்தது. வரலாற்று நினைவுகளை மீளக்கொணரும் ஒரு பதிவாக ஆதவன் தீட்சண்யாவின் நூலைக் கொள்ளலாம் என்றார். வர்க்க எதிர்ப்புக்கு சாதி எதிர்ப்பே வழிகோலுமென வலியுறுத்தினார். சாதிப்பாகுபாடு என்பதை வேலைப்பிரிவினையாக மட்டும் நாம் பார்க்கக்கூடாது; அது உழைப்பாளிகளைப் பிரிக்கும் ஒரு தந்திரம் என்றதானது சிந்திக்கத் தூண்டியது. சாதி மற்றும் மூடச்சிந்தனை பழக்கவழக்கங்களைப் பற்றி பெரியார் எவ்விதம் பகடி பண்ணினாரோ அந்த மரபின் நீட்சியை ஆதவன் தீட்சண்யாவின் இந்நூலில் காணமுடிந்ததாகச் சொல்லிய கீதா, இந்நூலில் பேசப்பட்டிருக்க வேண்டிய-கூடிய ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, மூளை உழைப்பு எவ்விடங்களிலும் தூக்கிப்பிடிக்கப்படுவதும் உடல் உழைப்பு புறந்தள்ளிக் கவனத்திற்கெடுக்காது செல்லப்படுவதும் வருத்தந்தரத்தக்கதொன்று-அது குறித்தும் பேசியிருக்கவேண்டுமென்றார்.

‘மநு விரோதனாய்’இருப்பது உள்ளுணர்வில் படிந்துள்ள அடிப்படைகளுக்கு ஏற்புடையதல்ல போலும். மருத்துவர் ஜெயராமனும் ‘நான் ஒரு மநு விரோதன் அல்ல’என்றே நூலின் பெயரைக் குறிப்பிட்டார். சபையில் சிறு சலசலப்பு எழுந்து அடங்கியது. ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தாளுமை பற்றிப் பேசும்போது, தலித் என்ற சிமிழுக்குள் இவரை அடைத்து வைக்க முடியாது என்றார். எல்லாவிதமான சிக்கல்களுக்கும் மூலகாரணமாயிருக்கும் சாதிய வேறுபாடுகளே முதலில் களையப்படவேண்டும் என்பதை புத்தகம் நெடுகிலும் காணமுடிந்ததாகச் சொன்னார். குடும்பம் என்ற அமைப்பானது சாதியைப் பேணுவதில் முதனிலை வகிப்பதாகவும், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தீண்டாமை இருப்பதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார். மிகப்பெரிய சிந்தனையாளர்களின் சிந்தனைகளை உள்ளடக்கிய அறிவார்த்தமான தொகுப்பு என ‘நான் ஒரு மநு விரோதன்’ஐப் பரிந்துரைத்தார்.

அடுத்து பெரியார் திராவிடக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி பேசுகையில், ஆதவன் தீட்சண்யாவின் ‘இட ஒதுக்கீடு அல்ல மறு பங்கீடு’என்ற புத்தகம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகச் சொன்னார். வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம் என சங்க இலக்கியங்களில் வகைப்படுத்தப்பட்டிருப்பதுபோல, ‘நான் ஒரு மநு விரோதன்’இன் ஆசிரியர் தனது வாழும் பிரதேசத்தை ‘ரோடும் ரோடு சார்ந்த இடமும்’ என அடையாளப்படுத்தியிருப்பதாகக் கூறியதைக் கேட்டதும் மதிப்பு ஒருபடி உயர்ந்தது. ஏனென்று எவராவது கேட்பின், பதிலாக கொஞ்சம் சுயபுராணம் பாடவேண்டியிருக்குமென்பதால் உங்கள் கற்பனைக்கேற்றபடி விரித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ‘இந்த சமூகத்தை ஒரு அருந்ததியப் பெண்ணின் கண்களால் பாருங்கள்’என்று கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்தார். மனிதருக்குள் பால்,சாதி வேறுபாடுகளை அதிகமும் பேசுகிற,தூண்டுகிற மநுநீதிக்கிணங்கவே இந்தியாவின் குற்றவியல்,குடியியல் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்ற அபத்தத்தை விமர்சித்தார். மருத்துவர் ஜெயராமன் சொன்ன அதே கருத்தை, அதாவது குடும்பந்தான் சாதியைப் பேணுகிற நுட்பமான கருவி என்பதை வலியுறுத்திப்பேசினார். ஆக,சமுதாயத்தில் இருக்கும் சாதி வேறுபாடுகளைக் களைவதொன்றே சகல மேம்பாடுகளுக்குமான திறவுகோல் என்ற, ஆதவன் தீட்சண்யாவின் நூல் வழியான குரலை கொளத்தூர் மணியும் வழிமொழிந்தார்.

பூனைகளோடு அதிகமும் பழகிப் பழகி எப்போதும் அடங்கிய குரலில் பேசிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களுக்கு, ‘தலித் முரசு’ சஞ்சிகையின் ஆசிரியரான புனிதபாண்டியனின் கணீரென்ற குரல் இலேசான பொறாமையைத் தூண்டுவதாயிருந்தது. ‘நான் ஒரு பார்ப்பனனல்ல’என்று பெரியார் அறிவித்துக்கொண்ட அதே தொனியில்- ‘நான் ஒரு மநு விரோதன்’என்று ஆதவன் பிரகடனப்படுத்தியிருப்பதாகக் கூறினார். குறிப்பிட்ட நூலிலிருந்து சில மேற்கோள்களைக் காட்ட விளைந்ததாகவும், ஈற்றில் ஆதவனது நேர்காணலின் எல்லா வரிகளையுமே சுட்டுவதில் கொண்டுசேர்க்கும் என்பதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் புனிதபாண்டியன் சொன்னார். ஒரு நீதிபதியாக இருப்பவர்கூட தான் சார்ந்த இனம்,சாதி,பால் சார்புநிலைகளுக்கேற்பவே இயங்கும் நிலை குறித்து வருந்தினார். ‘சட்டம் நீதிக்குக் கட்டுப்பட்டது. ஆனால், நீதியோ சாதிக்குக் கட்டுப்பட்டது’என்றார். பௌத்தம் ஒரு கோட்பாடுதானேயன்றி அதுவொரு மதமாகாது என்ற அவர், தனது உரையின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டது ஒரு கேள்விக்காகவே. அதாவது, ‘சாதிக்கெதிராக,வர்க்க ஆதிக்கங்களுக்கெதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவரும் எழுதியவரும், அதற்கிணங்க வாழ்ந்தவருமாகிய டாக்டர் அம்பேத்காரை ஏன் விவாதத்திற்கெடுத்துக்கொள்வதில்லை?’என்பதே அந்தக் கேள்வியாகும். ‘இந்த ஜாதீய சமூகம் ‘காங்கிரீட்’பாவிய தளம்; இங்கு எதுவும் பூக்காது’என்ற அவர், ‘இவன் தலித் எழுத்தாளன்’என்று பிற்படுத்தப்பட்டவர்களை மட்டும் சுட்டுவது பொருள்திரிபுடையது எனவும், சமுதாயத்தை நேர்செய்ய விரும்பும் எவரும் தலித் எழுத்தாளரே எனவும் விளக்கினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், மார்க்சிஸ்டுகள்,பெரியாரிஸ்டுகள் என்று நாம் பிரித்துப் பேசிக்கொண்டிராமல், நாமெல்லோரும் இணையும் புள்ளி எதுவென்பதைப் பற்றியே இனி நாம் பேசவேண்டும் என்றார். ஆதவன் தீட்சண்யாவின் நூலிலுள்ள வார்த்தைகள் ஆதிக்க மனோபாவத்தின் மீது சவுக்கடிகளாக இறங்குவதாக வியந்துபேசினார். சாதி போன்றவற்றுக்கெதிரான போராட்டங்களில் பார்ப்பனர்களையும் இணைத்துக்கொள்வதே முறை எனக் கூறிய தமிழ்ச்செல்வன், சாதியைப் பேணிக்கொண்டிருக்கும்,இயக்கிக்கொண்டிருக்கும் நுட்பமான கருவி குடும்பந்தான் என முன்னர் பேசியவர்களிலிருந்து மாறுபட்டு ‘குடும்பம் சாதியை மட்டும் பாதுகாக்கவில்லை. அது வேறு பலவற்றையும் காக்கிறது’என்று குடும்ப அமைப்பிற்குச் சார்ந்துரைத்தார். ஆதவன் தீட்சண்யாவைப் போல சமூக அநீதிகளுக்கெதிராகக் குரல்கொடுக்க படைப்பாளிகள் பலர் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ‘பாரதி பற்றிய கேள்விக்கு ஆசிரியர் பதிலிறுக்காமற் போனதற்கு அமைப்பின் விதிகள், கட்டுப்பாடுகள்தான் காரணமா?’ என்று ஆரம்பத்தில் கீற்று.காம்மின் சார்பில் தோழி மினர்வா எழுப்பிய கேள்வியை நினைவிற்கொணர்ந்து பேசிய தமிழ்ச்செல்வன், அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் படைப்பாளிகளுக்குக் கிடையாது என்றார்.

அடுத்து கருத்துரையாற்ற வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளராகிய பி.சம்பத் ‘நான் ஒரு மநு விரோதன்’இல்தான் ஆரம்பித்தார். ஆதவன் தீட்சண்யா ஒரு தலித் எழுத்தாளரல்ல;இடதுசாரி எழுத்தாளர்,
முற்போக்கு எழுத்தாளர் என்றார். நேரம் ஆக ஆக அதுவொரு கட்சிக் கூட்டம்போன்றதொரு தோற்றம் காட்டும்படியாக அவரது பேச்சு வளர்ந்தது. சகல விடயங்களிலும் பெரியாரிஸ்டுகள், மாக்ஸிஸ்டுகள் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டியிருப்பதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார். வர்க்கத்தை ஒழிப்பதன் வழியாக சாதியை ஒழிப்பதா? அன்றேல் சாதியை ஒழிப்பதன் வழியாக வர்க்க வேறுபாட்டை ஒழிப்பதா? என்றொரு கேள்வி எழுமெனில் நிச்சயமாக சாதிதான் முதலில் ஒழிக்கப்படவேண்டியது என்று அடித்துச்சொன்னார். அரசுக்கட்டிலேறிய தன்னுடைய மகனிடம் மொகலாய மன்னர்களில் ஒருவன் ‘இந்தியா பிளவுண்டிருப்பது சாதியமைப்பினாலேயே. அதில் மட்டும் கைவைத்துவிடாதே’என்று அறிவுறுத்தியதிலிருந்து சாதியின் ஆதிக்கம் எவ்வாறு மேலோங்கியிருந்தது என்பதை எடுத்துரைத்தார். மேலும், இந்து மதத்தை ஈவிரக்கமில்லாமல் தோலுரித்துக் காட்டியது அம்பேத்கார்தான் என்றார். அவ்வப்போது சுற்றிவந்து ‘நான் ஒரு மநு விரோதன்’இல் தொட்டதானது, 'தென்னை மரத்தில் மாட்டைக் கட்டிய கதை'யை நினைவுறுத்தியது.

நேரமாகிக்கொண்டிருந்தது. வீட்டிற்கும் எனக்கும் ஒருமணித் தொலைவு. எனக்கு எந்த ‘யிஸ்ட்’கள் மீதும் கோபம் கிடையாது.(ஒரு இசமும் தெரியாது என்றெப்படிச் சொல்வது…?)‘ராமராஜ்ய'த்தின் சாயல் கூட தெரியாத நிலையில் நான் நேரத்திற்கு வீடுதிரும்பவேண்டியிருந்தது. சம்பத் அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையை வற்புறுத்திப் பேசிக்கொண்டிருக்க, அரங்கிலிருந்து மெதுவாக வெளியேறினேன். (நழுவினேன் என்பதே சரி)வெளியேறும்போது ஏறக்குறைய அரங்கு நிறைந்திருந்ததைக் கவனித்தேன். ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பேர் வந்திருந்து பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தது வியப்பளிப்பதாக இருந்தது. ஆதவன் தீட்சண்யாவின் ஏற்புரையைத் தவறவிட்ட கவலை இருளினூடே வீடுவரை தொடர்ந்தது. அண்ணாசாலைக்கும் நீலாங்கரைக்கும் இடையிலான தூரம் ஒரு தார்மீகக் கோபக்காரனின் உரையைச் செவிமடுப்பதிலிருந்து விலக்கிவைத்துவிட்டது. ‘நான் ஒரு மநு விரோதன்’மீது முன்தீர்மானங்கள் பல உருவாகிவிட்ட நிலையில் அதை எப்படிக் கையிலெடுப்பது என்று தயக்கமாக இருக்கிறது. எனினும், இடைக்குரல்களை ஒதுக்கிவிட்டு அதைத்தான் முதலில் வாசிப்பதற்காக எடுத்துவைத்திருக்கிறேன்.

3.19.2008

சூடான இடுகை


எனது பக்கத்தை மாற்றி எழுத நேரமில்லை. இல்லையெனில் எழுதாமலிருப்பதற்காக எனக்கு நானே சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். நீண்டநாட்களாக மொக்கைப் பதிவு போடவேண்டுமென்றொரு ஆசை. ‘இவ்வளவு நாட்களும் போட்டதெல்லாம் வேறென்னவாம்’என்ற உங்கள் முணுமுணுப்பு எனக்குக் கேட்கவில்லை. ‘சூடான இடுகை நிறுத்தப்பட்டது’என்பதை வாசித்ததும், இந்தப் பக்கத்தை மாற்ற எனக்கொரு வழி தோன்றியது. ‘கவுதை’மாதுரி ஒண்ணு எழுதிப்பார்த்தேன்.

சூடான இடுகை சுட்டதேன்
கை விட்டதேன்?
தமிழ் மணத்தை
பாடாய் படுத்தி
பழிசுமக்க வைத்து
புதரடரும் காடாக்கி
ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடுகிற அரங்காங்கி
தேடிக் குவித்த புகழ்
கண் மூடிக் கிடக்கையிலே
கண்டதொரு கனவாச்சு…!
ஆனாலும் என்ன...
அடடாவோ
தப்பிப் பிழைத்தது தமிழ்!

இது கவிதையில்லை. பக்கம் மாற்றுவதற்காகப் போட்ட ‘கவுதை’. எவராவது நக்கீரனாய் வந்து ‘உன் தமிழிலே தவறிருக்கிறது’என்றால், ‘எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல கழித்துக்கொண்டு கொடுங்கள்’என்று தருமியைப்போல் கேட்கமாட்டேன். கேட்டாலும் யாராவது தரப்போறீங்களா என்ன…?

3.08.2008

என் விமர்சனம்



உனது புத்தகத்தைத் தந்துபோகிறாய்
சொல்விழிகளால் அது
அண்ணாந்து பார்க்கிறது

விமர்சனங்களுக்கும் இதயங்களுக்கும்
இடையிலோர் பெருங்கடல்
இருள் திரைகளில் தீட்டப்படும்
பைசாச ஓவியங்கள்

மதுச்சாலைகளில்
கண்ணாடிக்குவளைகளை உயர்த்தி உரசிய ஒலி
சில நாட்களில் மீள்ரீங்கரிக்கிறது
சஞ்சிகையொன்றில்.

அறிவாய் நண்ப!
கடன்பட்டவர்களும்
சில வார்த்தைகளுக்குக் கடமைப்பட்டவர்களே!

விருந்தாட போன வீட்டில்
தட்டுக்கருகில்
தொட்டுக்கொள்ள கவிதைகளை வைப்பரெனில்
கைகழுவி எழுந்துகொள்ளலே தர்மம்.

பட்டியலிடுவோரும்
தரவரிசையிட்டு ஓங்கித் தலையில்
அரக்குமுத்திரை அடிப்போரும்
பல்கிப்பெருகிய இந்நாளில்
நான் சொல்லக்கூடியது ஒன்றுதான்....

மரணதண்டனையை எழுதிக்கொண்டிருக்கும் விரல்களைவிட

பொய்க்கணக்கு எழுதி
தற்கொலைக்குத் தூண்டுகிறவனைவிட
ஒரு மதுக்குப்பி வாங்க
வற்றியுலர்ந்த மனைவியின் மூக்குத்தியை
அடகுவைத்துக் கையெழுத்திடுகிறவனைவிட
திருப்தியோடிரு!
நாம் கவிதை எழுதுகிறோம்
அன்றேல் அவ்வாறு நம்புகிறோம்.

3.06.2008

ஒரு இரவின் பதிவு


கைவிடப்பட்டதான இந்த மனோநிலையை எழுத்தின் முதுகில் இறக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் எத்தனைக்கென்றுதான் தாங்கும்? சுமைதாங்கவியலாமல் ஒருநாள் இடிந்து அமர்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ‘என்னை விட்டுவிடுங்கள்’என்று கதறியபடி தெருவில் இறங்கி ஓடவாரம்பித்துவிட்டால் என்ன செய்வது?

இன்றைக்கு ஏனிப்படித் துயரப்பனி பொழிகிறது? பல்கனியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருக்கிறேன். நிலவு கூடவே இருக்கிறது. மரணத்தின் இருள் எந்நேரமும் கவிந்திருக்கும் வீதிகளைத் துறந்து வரும்போது நிச்சயமான காலைகளை விளைந்திருந்தேன். இடையூறற்ற உறக்கத்தைக் கேட்டேன். நாய்கள் அரண்டு குரைக்கும்போதெல்லாம் மரணம் வாசலில் வந்து நிற்பதாகப் பதறினேன். எல்லா அறைகளிலும் இதயம் பதட்டத்தில் படபடக்க, அனைவரது விழிகளும் சில மணிகளேனும் திறந்தேயிருந்தன. யன்னலருகில் துப்பாக்கியின் நிழல் அசைவதாகத் தோற்றம் காட்டிய ஓரிரவு பகலாயிற்று. காலையில் எழுந்திருந்து முதல் வேலையாக அந்தச் செடியைத் தேடிப்போய்த் தடவிக் கொடுத்தேன்.

‘இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’என்று பொலிசில் பதிவு செய்யப் போனபோது கேட்டார்கள். ‘நாங்கள் இங்கே உயிரோடு இருக்கிறோம்’என்று சொன்னதைக் கேட்டதும் அந்த அதிகாரியின் இறுக்கமான முகத்தில் புன்னகையின் ஒளி ஒருகணம் பரவியது. எல்லோருக்குள்ளும் எங்கேயோ ஓர் ஓரத்தில் ஒரு துளி ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாமே பிழைத்திருத்தலுக்கான போராட்டங்கள் என்றுதான் தோன்றுகிறது. வீதியில் வெயில் வெளிர்த்திய பரட்டைத் தலையோடு அமர்ந்திருப்பவனுக்கும், குளிரூட்டப்பட்ட அறையில் உயரமான சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடிக்கொண்டிருப்பவனுக்கும் உயிரோடு இருப்பதொன்றே உச்சபட்ச நோக்கமாயிருக்கும். சிந்தித்துப் பார்க்கும்போது அபத்தமாகத்தானிருக்கிறது. உயிரோடு இருப்பதற்காகப் பற்றிக்கொண்டிருப்பதன் மீதான பிடி தளர்கிறபோது தற்கொலையைப் பற்றிய எண்ணம் வருகிறது.

மேன்சன் அறைகளில் தங்கியிருக்கும் இளைஞர்கள் அறைக்குத் திரும்பியதும் எப்படி உணர்வார்கள்? பூட்டியிருக்கும் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து மின்விளக்கின் ஆளியை அழுத்தும் விவாகரத்தான பெண்ணொருத்தியின் மனோநிலை எவ்விதம் இருக்கும். இருள் படர்ந்து வரும் தெருவைப் பார்த்தபடி வராண்டாவில் அமர்ந்திருக்கும் வயோதிபத் தம்பதிகளை ஒவ்வொரு நாட்களும் எப்படியெல்லாம் சிறுகச் சிறுகச் சிதைப்பனவாயிருக்கும். கந்தலைப் போர்த்திக்கொண்டு வீதியோரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரியின் குழிவிழுந்த கீற்றுக் கண்களுள் என்ன நினைவு தேங்கியிருக்கும்? தன்னிலும் அகலமான போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரை இந்தச் செங்குத்தான படிகளில் ஏறிச் சுமந்துகொண்டு வந்து வைத்துவிட்டுப்போன குழந்தைத் தொழிலாளியின் மனதில் நான் என்னவாகத் தோன்றுவேன்?

மது தன்னிரக்கத்தைத் தூண்டுகிறது. இறந்தகாலத்தின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறியழச் சொல்கிறது. காறியுமிழவும் கைநீட்டிச் சபிக்கவும் உந்துகிறது. பாடலின் வாத்திய இரைச்சல்களையும் மீறி யாரோ விசும்பும் ஒலி. யன்னல்கள் நிலைபெயர்ந்து திரியும் இவ்விரவில் குழாயிலிருந்து தண்ணீருக்குப் பதிலாக பாம்பு வழிகிறது. ஒரு ரொட்டித் துண்டுக்கும் பிரதியுபகாரம் எதிர்பார்க்கும் இவ்வுலகம், உறவு-நட்பு-மனிதம்-கருணை போன்ற சொற்களை அகராதியிலிருந்து விரட்டியடிக்கத் தூண்டுகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் நான் என்னைப் புகழ்ந்து சொல்லப்படும் ஓரிரு வார்த்தைகளை எதிர்பார்க்கிறேனா… இந்த உலகம் கேவலமாக இருக்கிறது. நான் உட்பட! நந்திதா! நீ ஒருபோதும் முகம் காட்டிவிடாதே. அருவமாய் இருப்பவர்களைத்தான் நேசிக்க முடிகிறது.

நந்திதா! நிராதரவு இந்த இருளில் அசையும் இலைகளில் தெளிக்கப்பட்டிருக்கிறது. குப்பைத்தொட்டியைக் கிளறும் நாயின் கண்களில் ஒளிர்கிறது. சைக்கிளை அவன் தள்ளிக்கொண்டு போகிறானா… சைக்கிள் அவனைத் தள்ளுகிறதா என்று மயக்கமூட்டியபடி தெருவோடு போகும் குடிகாரனின் பாடலில் ஒலிக்கிறது. சோகையாக வீசும் இந்தக் காற்றில் இருக்கிறது. நான் போக வேண்டும். உனக்கும் எனக்கும் தெரியும். கூடத்தில் எனது சிரிப்பொலி சில மணிகளில் கேட்கலாம். ஆனால் நந்திதா! சில இரவுகள் உண்மையிலேயே இருண்டவைதாம்.

3.03.2008

சில மனிதர்கள்… சில ஞாபகங்கள்… - ஒன்று

அன்புள்ள உங்களுக்கு,

எழுத்து புனைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேறெங்கோ சென்றுகொண்டிருப்பதான ஓருணர்வை அண்மைய வாசிப்புகளின்போது பெற்றுக்கொள்ள முடிகிறது. அது புனைவும் உண்மையும் கலந்து நெய்யப்பட்ட புதுவடிவாய் அழகுருக் காட்டுகிறது. முற்றிலும் கற்பனித்து எழுதுவதென்பது சுயவதையே! வார்த்தைகளின் பின்னால் கையேந்தியபடி நீண்டகாலத்திற்குத் திரியவியலாது. மிகைபேச்சுத் தவிர்த்து புத்தகங்களோடு மட்டுந்தான் தொடர்பாடல் என்றானபிறகு, இறந்தகாலத்தின் நலிந்த குரல் அடியாழத்திலிருந்து பேசத்தொடங்கியுள்ளது. காலச்சகதியினுள் புதைந்து போவதற்கிடையில், மொழி முற்றிலுமாய் கைவிட்டுவிடுவதற்கிடையில் சந்தித்த மனிதர்களிற் சிலரையேனும் பதிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டுமென்றொரு அவாவினால் இதனை எழுதத் தொடங்குகிறேன். ‘சாதாரணத்தில் அசாதாரணத்தைக் கண்டுணர்ந்து காட்டுவதே எழுத்து’என்று அண்மையில் ஒருவர் சொன்னார். என்னுள் தாக்கம் விளைவித்த சம்பவங்கள், மனிதர்கள், ஊர்கள்… எதைக் குறித்தெனினும் பத்தியாக எழுதலாமென்றிருக்கிறேன். யார் கண்டது…? நீங்களும் இதில் வரக்கூடும்.

கனவின் நினைவூட்டுகை – திலக்

அந்தக் கனவுதான் விழிப்பை மீட்டிருக்க வேண்டும். மனசுக்குள் அருவமான இருள்புகை அலைந்துகொண்டிருக்க படுக்கையிற் கிடந்தேன். கனவைக் கண்ட சமயத்தில் உணர்ந்த வலி அந்நாளின் முடிவுவரை நீள்வதை பல தடவைகள் அனுபவித்ததுண்டு. நாமே கலந்துகொள்ளும் நிகழ்விலும் பார்வையாளராக இருப்பது கனவுகளிலேயே சாத்தியம். இந்தக் கனவில் நான் வாசித்த வரிகளை திலக் எழுதியிருந்தான். (எத்தனை கனவு எழுதுகிறேன்…)திலக் ஒரு சிங்களப்பெடியன். ஆனால் தமிழில்தான் எழுதியிருந்தான். கனவுகள், காண்பவர் மொழியிலானவையோ…?

“அவள் என் கண்களைப் பார்த்தாள். பின் நடுங்கும் கைகளால் அருகிலிருந்த தோழியைப் பற்றிக்கொண்டாள். உதடுகளில் சொற்கள் துடித்தன. அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. நான் என்றென்றைக்குமாக விடைபெற்று அந்த மண்ணொழுங்கையில் இறங்கி நடந்தேன். தெருவில் மனிதர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். உலகம் அன்று ஒலிகளற்றுக் கிடந்தது. ஒருவேளை இந்த உலகம்… நான் இப்படி இறந்தவனைப்போல நடந்துகொண்டிருப்பது எல்லாமே பொய்யோ…அபிரா! நீ இப்போது எங்கே இருக்கிறாய்?”

கனவில் எழுதி கனவிலேயே அழிந்த கவிதைகளைப் போலல்லாமல், சஞ்சிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்தக் கடிதம் வரிக்கு வரி நினைவில் நின்றது. முன்பு வாசிக்கக் கிடைத்த மல்லிகையின் வடிவினையொத்த சஞ்சிகை. திலக்கை நான் சந்தித்தே பல்லாண்டுகளாகிவிட்டன. திடீரென எங்கிருந்து அதிரத்தொடங்குகிறது அவன் குரல்?

எங்கள் அறைத்தோழி அபிராமியை திலக் காதலித்தான் என்றுதான் கதைசொல்லத் தொடங்கவேண்டும். ‘அபிரா’ என்றே அவளை அழைத்தான். அதிலொரு சிங்களச்சாயல் இருந்ததாக நாங்கள் கிண்டல் செய்தோம். எண்பதுகளின் நடுப்பகுதியில், தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையில் பயிலவென வந்திருந்தான். உயரமாக, நிறமாக, எவரோடும் நட்பு விளையும் புன்னகையோடு அவன் இருந்தான். ஈர்க்கத்தகு தோற்றமுடைய விளையாட்டு வீரனைப் போலிருந்த அவனை நாங்கள் - அபிராமியும் நானும் - ஓடும் புகையிரதத்தில் நடனமாடிக்கொண்டிருந்தபோது முதன்முதலில் பார்த்தோம். மகாப்பொல புலமைப்பரிசில் (பல்கலைக்கழக நுழைமுகத் தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை.)கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாங்கள் கொழும்பிற்குப் பயணித்துக்கொண்டிருந்தோம். புகையிரதத்தின் நான்கு பெட்டிகளை பல்கலைக்கழக மாணவர்களே நிறைத்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் ரயிலேறும்போது எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்திருந்ததாகத்தான் ஞாபகம். பிறகு ஓரிருவரைத் தவிர மற்றோரெல்லாம் எழுந்து நடமாடவும் நடனமாடவும் ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டை விட்டு வெளியே ஓரிரவு தங்குதலே பாவமெனப் பயிற்றுவிக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த எங்களைப் போன்ற பெண்களுக்கு பல்கலைக்கழக வாழ்வு புதிய கதவுகளைத் திறந்துவிட்டது. அபிராமி அறைத்தோழிகளுடன் கூட அதிகம் பேசாதவள். சின்ன உருவமாக ‘நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்’என்று சொன்னால், கேட்பவர்கள் ஒரு கேள்வியுமற்று நம்பக்கூடியவிதமாகத் தோற்றமளிப்பாள். கண்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவள் சுமாரான அழகுதான்.

திலக் அபிராமியை எழுந்து நடனமாட அழைத்தான். அவள் இருக்கையின் மூலைக்குள் இன்னும் அதிகமாகத் தன்னைச் சொருகிக்கொண்டாள். ‘கம் ஆன்…’என்ற அவனது குரல் புகையிரதத்தின் இரைச்சலை மீறி கால்மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் களைத்துப்போனான். பிறகு ஆடுவதை நிறுத்திவிட்டு எங்களெதிரில் வந்து அமர்ந்தான். அவன் என்னைப் பாடும்படி கேட்டான். அவனது ‘தமிழில்’ அஃறிணைகள் உயர்திணைகளாகவும் உயர்திணைகள் அஃறிணைகளாகவும் பெயர்ந்து திரிந்தன. நான் வழக்கமான பதிலை – நான் பாடினால் நீ புகைவண்டியிலிருந்து குதித்து ஓடிவிடுவாய்-என்பதான பதிலைச் சொன்னேன். அபிராமியைப் பாடும்படி வற்புறுத்தினான். அவள் தன் பெரிய கண்களால் பரிதாபமாக என்னைப் பார்த்தாள்.

“அவளை விட்டுவிடுங்கள். அவளுக்குப் பாடத்தெரியாது”

நாங்களே எதிர்பாராததொரு தருணத்தில் அவன் பாடவாரம்பித்தான். அப்போது பிரபலமாயிருந்த ஹிந்திப் பாடலொன்றைப் பாடவாரம்பித்தான். ‘குர்பானி… குர்பானி’என்று அது முடிந்ததாக நினைவு. அவனோ ‘அபிராமி… அபிராமி’ என்று அதை மாற்றிப் பாடினான். எங்களுரிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த பெடியங்களின் முகத்தில் இலேசான எரிச்சலைக் கவனிக்க முடிந்தது. அபிராமி தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள். அவள் சம்மதித்தால் அன்றைக்கே கையில் மோதிரம் மாட்டித் தனது ஊருக்கு அழைத்துப்போய் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசியும் பெற்று விடுவான் போலிருந்தான். அவன் கண்களில் மின்னிய அந்த வேகமும் பரபரப்பும் பரிதவிப்பும் பயமளிப்பதாக இருந்தன.

“அவருக்கு யாழ்ப்பாணப் பெட்டை கேக்குதாக்கும்”என்றொரு குரல் பின்னிருக்கையொன்றிலிருந்து எழுந்தது.

“டேய்…!நாங்களெல்லாம் வாத்தியார்தானே… அவன் டொக்டரெல்லே”எதிர்ப்பாட்டாய் மற்றோர் குரல்.

புகையிரதம் சடசடத்து விரைந்தது. காடுகள், மலைகள், நீரோடைகளை நிலவு தழுவிக்கிடந்தது. திலக் எழுந்து தன்னிருக்கைக்குத் திரும்பியபின் அபிராமி என் தோளில் தலைசாய்த்து உறங்கிப்போனாள்.
---

கொழும்பிலிருந்து திரும்பி வந்தபிறகு எல்லா மாலைப்பொழுதும் திலக் எங்கள் அறைக்கு தவறாது வந்தான். தட்டுத் தடுமாறித் தமிழ் பேசினான். அவன் வரவு ஆரம்பத்தில் சங்கடமளித்தது. போகப் போக நாங்களே அவனை எதிர்பார்க்கவாரம்பித்தோம். குறிப்பாக அபிராமியின் கண்கள் அவனைக் கண்டதும் ஒளிர்வதை அவதானித்தேன். அவனது கொச்சைத் தமிழை நாங்கள் கிண்டலடித்து அதேபோல பேசிக்காட்டுவோம். அவனோ சளைக்காமல் அந்தத் தமிழின் உச்சபட்ச சாத்தியங்களைக்கொண்டு அபிராமியின் காதலைப் பெற முயற்சித்தான்.

அவளோ தன்னைத் திறக்க பிடிவாதமாக மறுதலித்தாள். நாங்கள் திலக்கோடும் நண்பர்களோடும் கூத்தடிக்கும்போது அவள் மட்டும் மௌனமாக இருப்பாள். ஆனால், அவளது அனுமதியின்றியே கண்கள் களவிற்குப் போய்விடும். அவை திலக்கின் மீது கவிந்திருக்கும். அவன் பார்க்கும் கணங்களிலோ முற்றத்திற்குத் தாவிவிடும்.

அபிராமிக்கு பொறுப்பற்ற தந்தையொருவரும், பிள்ளைகளுக்காக தன்னை உருக்கி வார்க்குமொரு தாயும் இருந்தனர். தாய் எங்கோ ஒரு கிராமத்தில் இடியப்பம் அவித்து வீடு வீடாக விற்றாள். தோசை வார்த்து கடைகளுக்குக் கொடுத்தாள். இருந்திருந்துவிட்டு தலையில் ஒரு அரிசி மூட்டையும் மரக்கறிகளுமாக மகளைப் பார்க்க வருவாள். அந்தத் தாய் தன் வியர்த்த விரல்களால் எடுத்துக் கொடுக்கும் கசங்கிய ரூபாய் நோட்டுகளை அபிராமி வெறித்துப் பார்ப்பாள். கண்கள் கலங்கிவிடும். அபிராமியின் அம்மா ஒருநாள் பெரியதொரு பலாப்பழத்தைத் தன் தலையில் சுமந்தபடி வெயிலில் நடந்து வந்து தண்ணீர் கேட்ட நாள் இன்னும் மனசில் ஈரமாக இருக்கிறது.

1987ஆம் ஆண்டு மே மாதமென்று நினைவு. அப்போது இயக்கத்தில் மன்னார் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்து அவரது உடல் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நாங்களும் போய்ப் பார்த்து வந்தோம். அன்றிலிருந்து அபிராமி திலக் வந்தால் உள்ளறைக்குள் அமர்ந்துகொண்டு வெளியே வர மறுத்தாள். அவனோ நாள்தவறாது வந்து மன்றாடினான். ஒவ்வொரு நாட்களும் ஏமாற்றத்தோடு உரையாடிவிட்டுத் திரும்பிச்செல்வான்.

அன்றைக்கு அவன் தீர்மானத்தோடு வந்திருந்தான். அதுவொரு ஞாயிற்றுக்கிழமை மாலை. நாங்கள் ‘பொறுக்கப் போவதை’த் தவிர்த்து வீட்டில் இருந்தோம். அவன் திடீரென்று தோன்றி ‘அபிராமியோடு பேச வேண்டும்’ என்றான். நான் உள்ளறைக்குப் போக எழுந்தேன். அவள் என் கைகளைப் பிடித்திழுத்து தன்னருகில் அமர்த்தினாள்.

அவன் தன் காதலைச் சொன்னான். படிப்பு முடிந்ததும் அவளையே திருமணம் செய்துகொள்வதாகவும் காத்திருக்கும்படியும் கேட்டான். எப்போது வேண்டுமானாலும் அவளைத் தன் தாய் தந்தையிடம் தன்னால் அறிமுகப்படுத்திவைக்க முடியும் என்றான்.

அபிராமி உதடு நடுங்க அமர்ந்திருந்தாள். கைகளும் நடுங்கின. மழையில் நனைந்த ஒரு பறவைக்குஞ்சைப் போலிருந்தாள். பிறகு தீர்மானமான குரலில் சொன்னாள்.

“இது நடக்காது. என்னை மறந்துவிடுங்கள்”

அவன் தனக்குத் தெரிந்த தமிழில் நெடுநேரமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவனது காதலின் அடர்த்தி கண்ணீராக வழியவாரம்பித்தது.

அபிராமியின் உதடுகளில் சொற்கள் துடித்தன. அவள் அதைப் பல்லைக் கடித்து உள்ளே திருப்பியனுப்பினாள். பிறகு வெடித்தெழுந்த விசும்பலோடு உள்ளறைக்குப் பாய்ந்தோடி கதவைப் பூட்டிக்கொண்டாள்.

திலக் எழுந்து நின்றான். துடைக்கத் துடைக்க அவனுடைய கன்னத்தில் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தது. படியிறங்கி இறந்தவனைப்போல அந்த இரும்புக்கேற்றைத் திறந்துகொண்டு வெளியேறினான்.

“ஏனடி?”என்று நான் அபிராமியைக் கேட்கவுமில்லை. அவளாக என்னிடம் வந்து சொன்னதுமில்லை. “அவன் ஒரு சிங்களப் பெடியன்”என்பதையன்றி அவளிடம் என்ன பதில் இருந்திருக்கக்கூடும்!

அதன் பிறகு அவன் கொழும்பிற்குப் போய் அங்கு படிப்பைத் தொடர்வதாக எங்கள் தோழர்களில் ஒருவன் சொல்லித் தெரிந்துகொண்டோம்.

அதன் பிறகு வந்த நாட்களில் அபிராமி மௌனத்தின் குழிக்குள் முற்றிலுமாக வீழ்ந்துவிட்டாள். மாலை நேரங்களில் கிணற்றுக் கட்டில் அமர்ந்திருந்து மரச்செறிவினுள் பார்வையைத் தொலைத்திருப்பதை அடிக்கடி காணமுடிந்தது. சில நாட்கள் இரவுகளில் விழித்துப் பார்த்தால் அபிராமி அறையின் சுவரோரம் சாய்ந்தபடி அமர்ந்திருந்ததையும் கண்டிருக்கிறேன்.
பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து நாங்கள் திசைக்கொருவராகத் தொலைந்தோம்.

கொழும்பிற்குப் போகிற நாட்களில் உயரமான, நிறமான, இளைஞர்களைக் காணும்போதெல்லாம் திலக் ஞாபகத்திற்கு வருவான். அவன் அன்றழுத கண்ணீர் அடிமனதுள் ஓடிக்கொண்டிருந்து நேற்றொரு கனவாக வழிந்துவிட்டது. நாம் காணும் கனவுகளிற் பல பொருளற்று உதிர்ந்துவிடுகின்றன. அதற்காக நமது விழிகள் கனவுகாண்பதை நிறுத்திவிடுகின்றனவா என்ன?