5.31.2007

பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது


சென்னை
பகல் 10:30
வெயிலும் இருபதின்ம பையன்களும்
படுத்திருக்கும் அறை வாசலில் நிற்கிறேன்
தரையதிர விழும் பாத்திரமாய்
என் குரலுயர்த்தி
கனவுகளின் இழை அறுக்கவே
முதலில் நினைத்தேன்

கடைவாயொழுகக் கிடக்கும் இளையவன்
காதலியின் பெயர் மாதுளா என்னும்போதில்
விழிகள் பூக்கின்றன அடர்சிவப்பில்
இலைகள் சிலிர்க்குமந்த
ஆலமர விழுதொன்றில்
அவள் அழுதிருக்கக்கூடுமென்றான்
காதல் பிரவகித்து வழியும்
பின்னேரப் பொழுதுகளில்
கடற்கரையோர கல்லிருக்கையில்
இருளும் அவனும் அமர்ந்திருப்பதை
காணாது கண்டதுண்டு

மற்றவனின் கண்களில்
புழுதிகிளர் ஒழுங்கைகள் எழுதப்பட்டிருக்கின்றன
நண்பர்கள் சைக்கிள்களை
உந்தி மிதித்துப் பறக்கிறார்கள்
நீச்சல் பழகிய நாட்களைச் சொன்னபோது
நீர்சுழித்தோடும் வாய்க்கால்களையும்
மீன்கொத்திகளையும் வயல்களையும்
நாங்கள் பார்த்தோம்
போகுமிடமெல்லாம் அவன்
நிலத்தைக் கொண்டு திரிகிறான்

கடந்த மாதம் வந்துசேர்ந்தவன்
மௌனம் பழகியவன்
‘அடித்தார்கள் அக்கா’என
கண்கள் தாழ்ந்திருக்கச் சொன்னான்
தன்னுடலில் ஒட்டிய சதைத்துணுக்கை
பதறிப்போய் பிய்த்தெறிந்த கணத்தை
பேச்சின்போது அவசரமாகக் கடந்தான்

என்னோடு அழைத்துவந்தவளிடம்
எழுதமுடியாமற்போன பரீட்சைத்தாள் மாதிரிகள்
நிறையவே இருந்தன
மரங்கள் அனுப்பும் காற்றினையொத்தவள்
சின்ன அன்புக்கும் கரைந்துவழிபவள்
இப்போதெல்லாம்
அனைவர் குரலையும் மூடுகிறது
அவள் கோபம்

கல்லூரிகளாலும் வேலைத்தளங்களாலும்
மறுதலிக்கப்பட்டவர்கள்
தூங்கும் பகற்பொழுது
பதட்டம் தருகிறது

திருவான்மியூர் கடற்கரையில்
அலைகள் கதைக்கின்றன
வேம்புகளும் குயில்களும் நிறைந்த
வீடுகளைப் பிரிந்து வந்த
பிள்ளைகளைப் பற்றி
என்னுடன் இப்போது
உயிருள்ள ஐந்து பிள்ளைகளும்
சில ஞாபகங்களும்
சொற்ப ரூபாய்களும் உள்ளன

இலங்கையில்தான் போர் நடப்பதாக
எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

5.29.2007

சொல்லாத சொல்



நமது உரையாடலின் முடிவுப்புள்ளியில்
தொடங்குகிறது அழுத்தமான மௌனம்.
அள்ளிக்கொள்ளவியலாத
இளவேனில் நிறங்கள்
முழுவதுமாய் உள்ளிழுக்கவொண்ணா
மல்லிகை வாசனை
குழந்தையொன்றின் உள்ளங்கால்களை
எத்தனை முத்தமிட்டும் எஞ்சியிருக்கும்
அதீத அன்பினையொத்திருக்கிறது அது.

எனதொரு சொல்லின் மீதேறி
நீ இந்தக் கோடையைக் கடந்துவிடலாம்
துருவேறிய என் தனிமையின் தாள்களை
உனதொரு பாடல் திறந்துவிடலாம்

பூட்டப்பட்ட அறையினுள்
விலங்கென அலைகிறது வேட்கை

மௌனம் படபடவென்றடிக்க
மூச்சுத்திணறலுடன்
சடாரென நமது புனித அறைகளுக்குள்
பாய்ந்தோடி விடுகிறோம்
இறுக்கமான கவசங்களின் கீழ்
தட்டையாகிறது உடல்

இந்த உடலை வானத்தை நோக்கி
எய்துவிட முடியாதா அன்பே!

நீயும் நானும் பாதுகாப்பாய்
யன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறோம்
படியும் இடம்தேடி மிதந்துகொண்டிருக்கும்
வண்ண நீர்க்குமிழியை.

5.19.2007

நதியின் ஆழத்தில்…


நதியின் மேற்பரப்பில்
பூக்கள் சருகுகளுடன்
கழிவுகளும் மிதக்கும்
தாகித்த மான்களை
புலிகள் பசியாறிய
குருதி கலந்து
கூடவே ஓடிவரும்

கடந்து வந்த காடுகளின்
நிழல் நினைவு…
கரைத்த சாம்பல்…
பின்னிராப்பொழுதொன்றில்
கரையோரக் கல்லமர்ந்து
பிரிந்த துணை நினைவில்
இருளும் கரையும்படி
ஒருவன் அழுத குரல்
எல்லாம் சுமந்தபடி
இன்னும் நடக்கிறது

எத்தனை பேர் உமிழ்ந்த எச்சில்
எத்தனை பேர் எறிந்த கற்கள்
சிறுநீர் மலம் விந்து
தன்னைத்தான் அலசி
தளராது போகும் நதி

ஆழத்தின் குளிர்மையை
பேசித் தேய்ந்து அடிமடியில்
மௌனம் பழகிவிட்ட கூழாங்கற்களை
கடலின் நெடுந்தொலைவை
எவரும் அறிவதில்லை

கடந்த வழியொன்றில்
கரையோரம் நிழல்விழுத்தி
காற்றடிக்க கண்ணிமைத்து
நெடுநாளாய் நிற்கும்
மருதமரத்தின்மேல்
நதி கொண்ட காதலை
அந்த நாணலும் அறியாது.



பிற்குறிப்பு: திருத்தி எழுதியது. ஒரு சோதனை (உங்களுக்கல்ல :)) நிமித்தம் போடப்பட்டது.

5.18.2007

கவிஞர் நகுலன் நினைவாக...


நகுலனின் படைப்புகளை அங்குமிங்குமாக வாசித்திருந்த நிலையில், அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகிய 'கண்ணாடியாகும் கண்கள்' புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. அந்த வரிகளில் இருந்த தனிமை மிக வருத்தியது. அந்தப் புத்தகத்திலிருந்த புகைப்படங்கள் பேசியதும் அதிகம். எளிமையான வரிகள் ஊடாக அவரால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகள் வாழ்வின் பொருளின்மையை எள்ளும் அதேநேரம் எளிதில் மறுத்தோடவியலாத அதன் இருப்பையும் உணர்த்துவன. காவ்யா சண்முகசுந்தரம் அவர்களால் தொகுக்கப்பட்ட 'நகுலனின் இலக்கியத்தடம்' என்ற நூலின் பதிப்புரையில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

"வாழ்க்கை என்பதுதான் என்ன? ஒன்றுமில்லை என்று சொல்லிவிடலாமா?? அதெப்படி? இல்லாத ஒன்றுக்கா இத்தனை பிரயத்தனங்கள்... இருத்தலுக்கான முயற்சிகளும் இருப்புக்கான அர்த்தங்களைத் தேடுவதும்தான் வாழ்வு. பலர் வெளியே தேடுவர்; தனக்கு வசதியான இடங்களில் தேடுவர்; தன்னைத் தேடுவர்; கண்டவர்கள் கொஞ்சம்; விண்டவர்கள் அதனினும் கொஞ்சம். எழுதுதலும் ஒரு தேடலே; எழுத்தும் ஒரு கண்டடைதலே. கதை, கவிதை,கட்டுரை,உரையாடல் எல்லாமே படைப்பு முயற்சிகளின் பன்முகங்கள்."

இன்று காலை,வா.மணிகண்டனின் பதிவின் மூலம் நகுலன் 'காலம்' ஆகிவிட்டதாக அறியக் கிடைத்தது. நகுலனின் கவிதைளிற் சில:

இல்லாமல் இருப்பது
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.
----

கடைசிக் கவிதை

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்

---

"எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்கி
ன்
அவைகளைத்
துடைத்தெறிய வேண்டும்
வேண்டும்"

----


"இன்று காலையில்
உறங்கி
விழித்ததும்
என்னை நான்
காணவில்லை"
இதைப் படித்ததும்
எஸ். நாயர்
சொன்னது நினைவில் வருகிறது:
இங்குதான்
சர்ப்பம் சீறுகிறது
என்று;
அப்பொழுது
எனக்கு எமிலி டிக்கின்ஸன்
ஒரு கவிதையில் எழுதியது
ஞாபகம் வந்தது:
'கண்கள் ஒரு தடவை கண்ணாடியாகின்றன'
இது சாவு.

---
வெளித் திண்ணையை
அணைத்த நீண்ட தட்டியை
சுருட்டிக் கட்டி
திட்டையருகே சூரல் நாற்காலியை இழுத்து
முன்கிடந்த வெற்றுப்பாதையை
எட்டிப் பார்க்க இரு கண் பசித்த
என் முன்னர்
வேறாக வந்தவர் எவரும் சேறாக
அவர் பேச்சும் மாறி வீச
நான் தனியாக
என்னை மீறிய
என்னினும் வேறாய
நானே ஆய ஒரு நிலை.
அந்நிலையில்
சூரல் நாற்காலி
என்னைத் தாங்கிச்
சமைந்து சலனமற்றுக்
காலபீடமாகப் பரவெளியாகப்
படர்ந்து விரியும்.
---

மீண்டும் வீதியில் யாருமில்லை
வெறும் தனிமை.
வெகு துலைவில்
வேகம் குறைந்துவரும்
டாக்சி என் வீடு வரும் என்று
நம்பிக்கையின்
வேதனை தாங்கி
நான் வாழ மனந்தூண்ட
நான் வறிதே வீற்றிருக்க
வந்த வண்டி
என் வீடு தாண்டிப்போகும்.

---

நான்

எனக்கு
யாருமில்லை
நான்
கூட....

----

"நந்தனைப் போல்
நான் வெளியில் நிற்கிறேன்
நானும் ஒரு பறையன்தான்
அதில்தான் எவ்வளவு செளகரியங்கள்
எல்லாக் குழுவிற்கும்
வெளியில்
இருப்பதால் ஒரு தனி செளகரியம்"

----

ராமச்சந்திரன்

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை.

----

"அறையில் நாற்காலி
சுவரில் எட்டுக்காலி
தெருவில் விட்டவழி
அறையுள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
பயணத்தின் முடிவில் ஒருவன்
பயண வழி நெடுக
ஒருவன்
கடலின் இக்கரையில்
மணல் வெளி
அக்கரையில்
அலைகளின்
அடங்காத வெளி
கரையிரண்டும்
மணலென்று
கண்டால்
எல்லாம் வெட்ட வெளி"

---

நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை

கவிஞர் நகுலனின் முதுமையை, வாழ்க்கை வழங்கிய வார்த்தைகளின் தனிமையைப் பார்த்தபிறகு அவர் சொன்னதையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. நகுலன் கவிஞர் மட்டுமல்ல; கதை, கட்டுரை எனப் பன்முக ஆற்றல் மிக்க படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.














5.16.2007

வெயில் எழுதியது…



கூடுகையில் துணையிழந்த பாம்பினைப்போல
சினம் தழலும் விழிகளுடன்
துரத்தி வருகிறது கோடை
தெருச்சண்டியனாய்
வலுச்சண்டைக்கிழுக்கும் சூரியனுக்கஞ்சி
வீட்டிற்குள் நுழைகிறேன்
ஒவ்வொரு அறையும் அயர்ந்துகிடக்கிறது
வெயிலின் விசாரணையில்.

அதீதமான துயரம்,கோபம்,மகிழ்ச்சி எல்லாவற்றையும் உறிஞ்சுதாள்போல தனக்குள் இழுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் தன்மையது எழுத்து. ஆனால், அதைக்கூடச் செய்யவொட்டாமல் சிந்தனையின் ஈரத்தை உலர்ந்துபோகச் செய்யும் இந்த வெக்கையுடன் மல்லுக்கு நிற்பதிலேயே இந்நாட்கள் கரைந்துகொண்டிருக்கின்றன. எந்நேரமும் மின்விசிறிகளின் தொணதொணப்பின் கீழ் இருக்கக் கட்டளையிட்டிருக்கும் இக்கனற் காலமானது, சொற்களின் ஊற்றுக்கண் மீது அழிச்சாட்டியமாக அமர்ந்து அடைத்துக்கொண்டிருக்கிறது.
காலநிலை, கண்ணுக்குத் தெரியாத கோலொன்றினைக் கையில் ஏந்தியபடி மனோநிலையை ஆண்டுகொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் மனசு குளிரோடையாகிவிடுகிறது. நடக்கும் இடங்களெல்லாம் பூ மலர்ந்து கிடக்கிறது. மெல்லென சிறகு விசிறிக் கிளையமரும் பறவைகள் தம் குரலெனும் திவலைகளால் விடியலின் வாசல் தெளிக்கின்றன. எவரையும் கடிந்துகொள்வதற்கு முன் யோசிக்கிறோம். மாறாக கோடை தன் வெம்மையை மனிதருக்குள் கடத்துகிறது. வெயிலின் கண்களால் பார்த்து, வெயிலின் உதடுகளால் பேசும்படியாகிறது. அது கொலைக்கும் தற்கொலைக்கும் தூண்டுகிறது. பைத்தியக்காரர்களை உருவாக்குகிறது. காதலைப் பொசுக்குகிறது. கண்ணீரையுமா அது உறிஞ்சிவிட்டது…? ஒரு கையசைப்பு தானுமின்றி மௌனமாக நிகழும் பிரிவுகளை சாத்தானைப்போல இந்த வெயில் ஆசீர்வதிக்கிறது.

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நகரமொன்றில் துப்பாக்கி ஏந்தியலையும் இராணுவத்தானைக் கண்டு பீதியோடு ஒளிவதைப் போன்றிருக்கிறது பதைத்தபடி வேகவேகமாகத் தெருவில் நடந்துபோகிறவர்களின் முகம். மண்டைக்குள் அமிலக்குழம்பென இறங்கித் தகிக்கும் இந்த வெப்பத்திலிருந்து குளிர்நிலமொன்றிற்குத் தப்பித்து ஓடிவிட முடிந்தவர்கள் பாக்கியவான்கள். (அப்படியானால் பாக்கியவதிகள் எங்கே போவார்கள்?)

கோடை இத்தனை குரூரமாகிவிட்டதற்கு இயற்கைச் சமநிலையைக் குழப்பிய மனிதன்தான் காரணம் என்று நொந்துகொண்டார் நேற்றொரு நண்பர். மரங்களை வெட்டி மழையைத் துரத்திவிட்டோம். மரத்தால் ஆன கதவுகளுக்குள்ளிருந்து, மரத்தால் ஆன மேசையிலமர்ந்து, மரக்கூழால் ஆக்கப்பட்ட காகிதத்தில் ‘மழை’என்ற சொல்லை எழுதிப் பார்ப்பதற்குப் பதிலாக ‘முட்டாள்’என்று எம்மைக் குறித்தொரு வார்த்தையை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

குளிரூட்டப்பட்ட வீடுகளிலிருந்து புறப்பட்டு, குளிரூட்டப்பட்ட கார்களில் பயணித்து, குளிரூட்டப்பட்ட நீண்ட அறைகளுக்குள் பிரவேசித்து போத்தல்களில் அடிக்கப்பட்ட குடிநீர் சகிதம் அனல் தெறிக்கும் வார்த்தைகளால் ‘நாற்காலி’க்கு அடிபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எல்லாக் காலமும் இளவேனில்தான். ஆனால், நடைபாதைவாசிகளின் மீது காலநிலையும் கருணை காட்டுவதில்லை. மாரியில் காலடியில் வெள்ளம் சுழித்தோட உட்கார்ந்தபடி உறங்குவதும், கோடையில் நெருப்புக் கங்குகளாய் உடலில் இறங்கும் வெயிலைச் சகித்தும் சபித்தும் இருப்பதும் வாழ்வின் பெறுமதி மற்றும் பொருள் குறித்துக் கேள்விகளை எழுப்பத் தூண்டுவன. குறைந்தது மூன்று தடவைகளேனும் குளிக்கத் (குளிக்கும் வழக்கம் உடையவர்களை :)) தூண்டுகிறது இக்கொடுங்கோடை. தண்ணீர் வண்டியை எதிர்பார்த்து வெற்றுக் குடங்களுடன் வரிசையில் காத்திருக்கும் இம்மாநகரத்து கடைக்கோடி மக்களுக்கோ ஒருவேளை குளிப்பென்பதும் ஆடம்பரம்தான்; அதிகபட்சம்தான்.

வெயில் ஊற்றப்பட்டிருக்கும் சுவர்களால் வீடொரு நெருப்புத்துண்டாகிறது. வீட்டின் ஒவ்வொரு அறைக்குள்ளும் அந்தரித்து அலைய வேண்டியதாயிருக்கிறது. எப்போதும் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருப்பதற்கு குற்றவுணர்வைக் கழற்றிவைக்கவேண்டியிருக்கிறது. வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கே போதுமான மிகச்சிறிய அறைகளில் வாழ விதிக்கப்பட்டிருக்கும் நகரவாசிகள் மழைக்காலம் வரை உயிர்த்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான். தெருவில் நடந்துபோன சாரதியொருவர் வெயிலின் கொடுமை தாளாமல் விழுந்து இறந்தார் என்ற செய்தியைப் படித்தபோது, ‘இப்படிக்கூட நடக்குமா…’ என்றிருந்தது. ஆனால் நண்பர்களே! சென்னை வெயிலில் சில தடவைகள் வெளியில் போய்வந்தபிறகு அது குறித்த வியப்பு தீர்ந்துவிட்டிருக்கிறது. தெருவில் நடந்துசெல்பவர்கள் தண்ணீர் நனைக்கப்பட்ட கைக்குட்டைகளை நெற்றியின்மேல் போட்டுக்கொண்டு போகிறார்கள். வெற்றுப் பாதம் தகிக்க நடந்துபோகிறவர்களைப் பார்த்துத் தலையைக் குனிந்துகொள்ளுமளவிற்கே நமது மனிதாபிமானம் இருக்கிறது. மேலும், இந்த இரக்கம் ஒரு சோடி செருப்புடன் முடிந்துவிடாதென்ற உள்ளுணர்வின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டியுமிருக்கிறது. வாங்கிக் கொடுக்கவியலாமற் போன செருப்பை மனசுக்குள் சுமந்துகொண்டலைய வேண்டியிருக்கிறது.

வெயில் குடித்த சுவர்களுக்குள்ளிருந்தபடி, அடுத்த வளவிற்குள் ஒரே ஆறுதலாக இருந்து தலையசைக்கும் வேம்புகளைப் பார்க்கிறேன். இலைகளில் ஒரு துளியும் இல்லைக் களைப்பு. போதாததற்கு கபில நிறத்தில் துளிர்கள் வேறு. அந்தப் பச்சையில் முகம் புதைத்துப் பின் தலைதூக்கிப் பார்க்க இந்தக் கோடை கடந்துபோய் விட்டிருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்!

5.10.2007

எழுது இதற்கொரு பிரதி


கறுப்பு மையால் அழித்த
உன் பெயரிலிருந்து
எழுத்துக்கள் எறும்புகளாய்
ஊர்ந்து வெளியேறிவிட
மை மட்டும் எஞ்சியிருக்கிறது

நெருப்பினையொத்து வெயிலின் நாக்கு
பொசுக்குமிக் கொடுங் கோடையில்
அடுப்பின் முன்னமர்ந்திருக்கிறேன்
நீயே சொல்
முதலில் எதைப் போடுவது…?


பொய்களால் கட்டமைக்கப்பட்ட
உன் புனித பிம்பத்தை…
காதலில் ஊறிய கவிதைப் பிரதிகளை…
தேவதைக் கதைகளை…
தொலைவை நொந்தழுத விழிகளை...
காமம் செப்பிக் கழிந்த மதியங்களை…
நம்பிக்கையில்
தனிமையில்
தோழமையில் நீ துப்பிய எச்சிலை…
கண்களை எதிர்கொள்ளப்
பயந்த உன் கயமையை…
வார்த்தைகள் சிதைத்த நரம்புகளிலிருந்து
பெருகும் குருதியை....
எதைப் போடுவது முதலில்...?

இந்தப் பின்நவீனத்துவம் போல
எழுது இதற்கொரு பிரதி
உயிரை அழிக்காமல்
ஒரு பெயரை அடிப்பதெப்படி என்று.

5.05.2007

ஒரு பயணம்… சில குறிப்புகள்…


துப்பாக்கி முனைகளின் சூடு ஆறும்வரை (அது இப்போதைக்கு ஆறாது என்றறிந்தும்) இலங்கைக்குப் போவதில்லை என்ற தீர்மானத்தை ‘விசா’என்ற வில்லங்கம் தகர்த்தெறிந்தது. தெரிந்தே ஏதோவோர் தடயத்தை விட்டுச்செல்லும் திருடனைப்போல இந்த மனமும் விசித்திரமானதுதான். தீர்மானம் திரிந்துபோனதறிந்ததிலிருந்து மனசின் மற்றப் பக்கம் மத்தளம் கொட்டத்தொடங்கிவிட்டது. எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் பொறுப்புள்ள பக்கத்திற்குப் பழிப்புக் காட்டிவிட்டு, பழகிய வீதிகளில் இந்த நாடோடி மனம் நடக்க ஆரம்பித்துவிட்டது.

உயரம் மளமளவெனச் சரிந்து விமானம் தள்ளாடும்போது தெரியும் சாலைகளும் தென்னை மரச் செறிவும் எப்போதும்போல கிளர்ச்சியூட்டத் தவறவில்லை. பிறந்த பொன்னாடு, தவழ்ந்த மண் இன்னபிற மீதெல்லாம் கால இடைவெளியும் ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’என்ற பயமும் அயர்ச்சியைத் தந்துவிட்டபோதிலும், உள்ளுக்குள் ஒரு தந்தி அதிரத்தான் செய்தது. பறப்பின்போது தொற்றிய வானத்துக் குளிர் தோலில் எஞ்சியிருக்க வெளிவந்த உடலின் மீது அறைந்த வெம்மையுடன் உடனடி சமரசத்தில் இறங்கவேண்டியிருந்தது. வறுமையும் செழுமையும் இணைந்தே எழுதிய வீதிகளில் மாற்றங்கள் எதுவுமில்லை. வீதிகள் நெடுகிலும் மரப்பச்சை குளிர்ச்சி என்றால் இராணுவப் பச்சை அச்சமூட்டுகிறது. ஆங்காங்கே சோதனைச் சாவடிகளில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் என்று வரிசைகட்டி நின்றிருக்க அடையாள அட்டைகளை உற்று ‘வாசித்து’ சீருடையினர் ஏதோ ‘கண்டுபிடிக்க’ முயன்றுகொண்டிருந்தார்கள்.

புதுமையொன்றும் இல்லாத வார இறுதி நாட்களை விடுதியொன்றில் தூக்கத்திலும் ஞாபகங்களிலும் கழித்தபிறகு, திங்களன்று இந்தியத் தூதரகத்திற்குச் சென்றேன். காட்சிப்பிழை என்று கவிஞர் தாமரை எழுதியதுதான் எனக்கும் நிகழ்கிறதோ என்று வியந்து பார்க்கும்படியாக நீ…. ள….மா…மா….ன வரிசையொன்று தூதரகத்தின் முன் காத்திருந்தது. வளைந்து வளைந்து பல வரிசைகளாகியிருந்த அதை நீட்டி நேர்ப்படுத்தினால் காலிமுகத்திடலைத் தொடக்கூடும் என்பது மிகைப்படுத்தலன்று. உக்கிரத்தோடு எறித்த-எரித்த வெயில் உடலைக் கருக்கிக்கொண்டிருந்தது. குழந்தைகள் உரத்த குரலில் அழுதுகொண்டிருந்தார்கள். வெயிலில் முகம் சிவக்க நின்றிருந்த வெள்ளைத்தோல்காரரைக் கழித்துப் பார்த்தால், முன்னொருகாலம் ‘பாஸ்’வாங்க முத்திரைச் சந்தியில் வரிசையில் நின்ற காட்சியை அது நினைவுபடுத்தியது. நின்று கால் வலித்தவர்களிற் பலர் குடைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

கடந்த தடவை வந்திருந்தபோது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்காரர்களுக்கு சிறப்புச் சலுகையாக தனி வரிசை இருந்தது. மண்ணிறத்தவர்களாகிய நாங்களும் வெள்ளைத்தோல் வரிசையில் இணைந்த ‘மிதப்புடன்’உள்ளே சென்று சுலபமாக விசா பெற்று வந்தோம். தனி வரிசை என்ற நினைப்பில் நின்று நிதானித்து இடியப்பமும் வடையும் சாப்பிட்டுவிட்டு பத்து மணி கடந்து இங்கு வந்தால்… அடிவயிற்றில் இடிவிழுந்து அத்தனையும் செரிமானம் ஆகிவிட்டது. ஏதோ மந்திரி பதவி பறிபோகும் விதமாக நின்ற இடத்தைத் தக்கவைக்க ஒரே தள்ளுமுள்ளு. உடல் தகித்து அனல் எறிகிறது. வியர்வை இன்றைக்கு விட்டால் இனியில்லை என்ற நினைப்பில் பெருக்கெடுக்கிறது. இதற்குள் பக்கத்தில் நின்ற பெண்மணியோடு ‘கூடைக்காரி’தரத்தில் சண்டையொன்றும் போடவேண்டியிருந்தது. (‘கூடைக்காரிகள் என்றால் குறைந்தவர்களா?’ என, விளிம்புநிலை மாந்தருக்குப் பரிந்துபேசுவோர் சண்டைக்கு வந்தால் கைகளை உயர்த்துமளவிற்கே இப்போது தெம்பு இருக்கிறது.)

“நீங்கள் இடையிலை வந்து புகுந்தா நாங்கள் என்ன செய்யிறது…?”

“நான் கடைசியிலைதான் வந்து சேந்தனான். அதுக்குள்ளை எனக்குப் பின்னாலை சனம் சேர்ந்திட்டுது. அது சரி நான் வந்து நிக்கேக்குள்ளை உங்களைக் காணேல்லையே”

“என்ரை ஹஸ்பன்ட் (?) எனக்காக நிண்டவர்”

“அப்ப என்னெண்டு நான் வரிசையிலை நிக்கேல்லை எண்டது உங்களுக்குத் தெரியும்… சும்மா ஏன் கொழுவுறீங்கள்”

இன்னவகையில் கதை வளர்ந்தது. ‘என்ரை தலையெழுத்தைப் பார்றா’என்று உள்ளுக்குள் வெட்கமும் துக்கமும் பொங்கியது. இதற்கிடையில், ‘பதினொரு மணிக்குப் பிறகு விண்ணப்பப் படிவங்கள் ஏற்கப்படமாட்டா’என எனக்கு அருகில் நின்றவர் சொன்னார். நேரமோ பத்தரையாகியிருந்தது. இந்நிலையில் கறுப்பு மோட்டார் சைக்கிளில் இராணுவச்சிப்பாய் ஒருவர் ஹெல்மெட் துப்பாக்கி சகிதம் விறைப்பாக வந்திறங்கினார். ‘உலக உருண்டையே எனது உள்ளங்கைக்குள்’ என்பதான விறைப்புடன் நடந்துசென்று, வரிசையை நெறிப்படுத்திக்கொண்டிருந்த பொலிஸ்காரரின் காதுக்குள் ஏதோ உரைக்க (உரத்துச் சொன்னாலும் சிங்களம் புரியாது) அந்த இடத்தை ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது. “யண்ட… யண்ட”என்று பொலிஸ்காரர் பக்கத்து வளவிற்குள் எங்களைப் போகப் பணித்தார் என்பது பொய்; விரட்டப்பட்டோம். அதுவரை நேரமும் பிடித்திருந்த இடம் பறிபோன துக்கம் பலரது முகத்தில் அப்பிக்கிடக்க ‘என்ன நடக்கிறது’என்ற கேள்விக்குப் பதிலற்றுக் கலைந்தோம். நாங்கள் அனுப்பப்பட்ட வளவின் கதவுகள் ஆரவாரமாகப் பூட்டப்பட்டன. அதன் முன் படபடவென்ற ஓசையுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன. ஆயத்த நிலையில் நிமிர்த்திய துப்பாக்கிகளும் சந்தேகப் பார்வையுமாக அவ்விரு இராணுவத்தினரும் எங்களைக் கண்ணும் கருத்துமாகக் ‘காவல்’காத்திருக்க, ‘ஜேம்ஸ் பொன்ட்’பாணியையொத்த காட்சிகள் நடந்தேறின. முன்னே தலைக்கவசமணிந்த மோட்டார் சைக்கிள் இராணுவத்தினர் சர் சர்ரென விரைய, அவற்றினைத் தொடர்ந்து கார்கள்,ஜீப்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. ‘எதுவும் நடந்துவிடக்கூடாதே’என்று என்னைப்போல வேறு சிலரும் வேண்டிக்கொண்டிருந்திருக்கலாம். சில நிமிடங்களின் பின் நாங்கள் திறந்துவிடப்பட்டபோது, எங்களோடு நின்றிருந்த வெள்ளைக்காரர்கள் முகத்தில் சிறுநகை இழையப் பார்த்தேன். அதன் பொருளென்னவென்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அன்றைய நாளின் இரண்டு மணித்தியாலங்களை வெயில் குடித்து அழித்தபின் ‘இனி நாளை வாருங்கள்’ என்ற குரலில் கலைந்து அவரவர் திசைகளில் துயர்பொங்க நடந்தோம். மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்தேன். எனக்கு முன்னால் முன்னூறு பேர் இருந்தார்கள். உங்களுக்குத் தெரியும்… பூதங்களைப் பற்றி… முன்னூறாவதாக நின்றிருந்த என்னை பதின்மூன்றாவது ஆளாக்க அதனால் முடிந்தது. “நாங்கள் விடியற்காலை நான்கு மணியிலிருந்து இங்கு நிற்கிறோம்”என்று எனக்குப் பின்னால் பதின்னான்காவதாக நின்றிருந்த பெண்மணி சொன்னார். ஆனால், அவருக்கு முன்னால் நின்று ‘இடம்பிடித்துத் தந்தவர்’மூன்று மணியிலிருந்தே அந்த இடத்தில் நின்றதாகச் சொல்லியிருந்தார். ஆக, நான்கு மணிநேரத் தூக்கத்தின் விலை எழுநூறு இலங்கை ரூபாய்கள் என்பதறிக. வெயிலில் மயங்கிவிழுந்தாலும் வரிசையைவிட்டு யாராவது வந்து தண்ணீர் தெளித்து எழுப்புவார்களா என்பது அன்றைய சூழ்நிலையில் ஐயமாகத்தான் இருந்தது. நீட்டி முழக்கியென்ன… விசா கிடைத்தது! வரிசையில் நின்றபோது ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. என்றாலும், எந்த நாயும் உயிரைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு நாடு நாடாக ஓடியதாக, நான் வாசித்த எந்தவொரு சிறுவர் கதைப் புத்தகத்தில் தானும் எழுதப்பட்டிருக்கவில்லை.

கொழும்பு அதற்கேயுரிய சந்தடிகளோடும் வாகன நெரிசல்களோடும் வெளிக்கு பரபரப்பாக இயங்கினாலும், ஒரு பதட்டம்,பாதுகாப்பின்மை காற்றில் கலந்திருக்கிறது. “சிங்களவர்கள் என்றால் கொடியவர்கள்”என்ற பொதுப்புத்தி பரவலாக அநேகரிடையே இருக்கிறது. ஆனால், பல்லாண்டு வெளிநாடுகளில் வாழ்ந்தபிறகு கொழும்புக்கோ அதன் சுற்றுப்புறங்களுக்கோ செல்லும் தமிழர்களுக்கு ஒரு வினோதமான உணர்வு (ஒருவேளை வினோதமில்லையோ) ஏற்படும். அதாவது,வெறுக்கப்படவேண்டியது எல்லா மட்டங்களிலும் இருக்கின்ற அதிகாரங்கள்தானேயன்றி மனிதர்களல்லர் என்பதே அது. வெள்ளவத்தையில் வாழைப்பழம் விற்கும் சிங்கள இளைஞன் என்னை அடையாளம் கண்டு “ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரேல்ல… யாப்னா (யாழ்ப்பாணம்)போயிருந்தீங்களா…?”என்று கேட்டபோது நெகிழ்ந்துபோனேன். அறிமுகமற்றவர்களின் புன்னகையும் விசாரிப்பும் தரும் மலர்ச்சி தனியானதுதான். அந்த ‘அன்பில்’கனிந்து தெருவில் என்பாட்டில் சிரித்துக்கொண்டு போனதை சில நொடிகள் கழித்து கவனித்துத் திடுக்கிட்டேன்.

சென்னையில் உணவகங்களில் சாப்பிட உட்காரும்போது ‘காரமான உணவு எது…?’என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவதே வழக்கம். கொழும்பில் அந்தப் பிரச்சனையே இல்லை. வெள்ளவத்தையில் வீட்டுச் சாப்பாட்டை நெருங்கி வரும் வகையிலான ‘மயூரி’என்றொரு உணவகம் - இல்லை – சாப்பாட்டுக் கடை இருக்கிறது. மூக்கிலிருந்து சளி ஒழுக ஒழுகச் சாப்பிடலாம். அவ்வளவு உறைப்பு. விடுதியில் தங்கியிருந்த ஏழு நாட்களும் அதன் உபயத்தில் உண்டிக்கு ஒருவித கேடுமில்லாதிருந்தது.

இலங்கைத்தீவானது போர் நடந்துகொண்டிருக்குமொரு நாடு என்பது எல்லா இடங்களிலும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. பயணச் சீட்டுப் பெறவெனக் கிளம்பியபோது காலி வீதியில் போனால் தாமதமாகுமென்று கடற்கரைச்சாலை வழியாகப் போனோம். திடீரென வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. ஒரு மணித்தியாலமாகியும் ஓரங்குலமும் அசையவில்லை. ‘தேடுதல்’நடப்பதாக வாகன ஓட்டுநர் சொன்னார். வாடகை வண்டிக்குக் கணக்கைத் தீர்த்துவிட்டு காலிவீதிக்கு நடந்துவர மறுபடி வாகனங்கள் அசையவாரம்பித்தன. போக்குவரத்து தடைப்பட்ட இந்த ஒருமணித்தியாலத்தில் விமானநிலையத்திற்குச் செல்லவேண்டியவர்கள்,வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்… இவர்கள் நிலை என்ன…? என்ற கேள்வி எழுந்தது. காலிமுகத்திடலின் ஆரம்பத்திற்கும் முடிவெல்லைக்கும் இடையில் மட்டும் மூன்று தடவைகள் நான் சென்ற முச்சக்கரவண்டி நிறுத்திச் சோதனைக்காளாக்கப்பட்டது. கடவுச்சீட்டில் திருப்தியடையாத ஒரு சீருடையாளர் அடையாள அட்டையைக் காட்டும்படி கேட்டார். ‘என்னிடம் இல்லை’என்ற பதில் அவருக்குத் திருப்தியாக இல்லை. எனினும், தொடர்ந்து விசாரிக்கவொட்டாமல் மொழி தடைவிதிக்க மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டேன்.

தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு பயந்தருவதாயும் நெருங்கிப் பார்ப்பவர்களுக்கு சொந்தநாடெனும் இனிமை தருவதாகவும் சிலர் சொல்லக்கேட்டேன். அதில் ஓரளவு உண்மை உண்டெனினும், ஒரு குண்டில் அந்த இனிமை சிதறிக் கூடும்-சிதறக் கூடும் கணங்களில் வாழும் மனத்திண்மை எல்லோருக்கும் இருக்குமென்றில்லை.

இவ்வளவு தூரம் வந்துவிட்டு வீட்டை, பார்த்துப் பார்த்து உருவாக்கிய உலகமான எனதறையை, பூனைக்குட்டிகளை, மொட்டை மாடியில் அள்ளியெறியும் காற்றை, வேப்ப மரங்களை, கிணற்றடிக் குளிர்ச்சியை, தென்னங்கன்றுகள் மற்றும் பூச்செடிகளைப் பார்க்காமல், அனுபவிக்காமல் திரும்பிச் செல்கிறேனே என்ற துயரத்தை எழுத மொழியில்லை. ‘நாடு இருக்கிற இருப்பிலை நாய் நாலு நாள் லீவும் ஒரு நாள் போனசும் கேட்டதாம்’என்ற கதையாக ஊராசை எங்களளவில் பேராசையாகிவிட்டிருக்கிறது. போவதென்பது எனது விருப்பமெனினும், மீளத் திரும்பி வருவதென்பது வேறெவருடையவோ தெரிவாயும் முடிவாயும் இருக்கும் நிலையில், ஆசைகளை அள்ளி நெருப்பில் இடுவதே எங்கெங்கோ கொண்டலையும் இந்த உயிருக்குப் பாதுகாப்பு. உயிருக்கு அடுத்ததன்றோ எல்லா உன்னதமும்.




5.03.2007

உடலின் அரசியல்



சொற்களின் உடுக்கடிப்பில்
உடல் பூக்கிறது சணற்காடாய்
நரம்புகளுள் நதிகளின் பெருக்கெடுப்பு

முதலில் விலங்கின் கூரிய பற்களை
பறவைகளின் சிறகுகளுக்குள் பதுக்குகிறோம
எனதும் உனதும் மேன்மைகளை
பரஸ்பரம் காட்சிப்படுத்துகிறோம்
மேலும் தாவர உண்ணிகளாய்
இயற்கை எழில் மற்றும் பிரமிள்
‘சக்கரவாளத்தை’யும் பேசித் தொலைக்கிறோம்

வலிந்து இமை சாத்தியபடி
நடக்குமெல்லையில்
மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன

கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொருகாலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்

சொற்கள் தீர்ந்துவிட்ட அப்பொழுதில்
குற்றமற்ற குற்றத்தின் மடி சாய்ந்து
பெண் எனும் ஞாபகத்தொடு
நானும் விசும்பிக்கொண்டிருக்கலாம்.