3.11.2007

நன்றி: உதிரும் நட்சத்திரம்-தமிழ்நதி


கடந்த ஒரு வார காலமாக நட்சத்திர வெளிச்சத்தில் அமர்ந்து எனது பிரியத்திற்குரிய நண்பர்களுடன் ஆசை தீரப் பலதும் பேசிவிட்டேன். நாளை இந்த ஒளியில் குளித்தபடி உங்களோடு உரையாட வேறொருவர் வருகிறார்.

எனக்கு வழங்கப்பட்ட ஒரு வாரத்தையும் நான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற அக்கறை எனக்கு இருந்தது. முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு எனக்குத் திருப்தியாகவே இந்த வாரம் அமைந்தது. ‘நாங்களும் மனுசங்கதான்’ என்ற பதிவின் வழியாக நான் பேசியதை விட, அதற்கு எதிர்வினையாக நீங்கள் வைத்த எதிர்க்கதையாடல்கள் ஆரோக்கியமான திசை நோக்கி நகர்ந்ததை நிறைவாக உணர்கிறேன். ஒரு மெழுகுவர்த்தியின் ஒற்றைச் சுடரிலிருந்து பல நூறு மெழுகுவர்த்திகளை ஏற்ற முடிவது, மிக இயல்பாக அமைந்துவிட்ட ஆச்சரியம். கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட எங்கள் மக்களின் வாழ்வு குறித்த பல்லாயிரம் பக்கங்களில் ஒரு பக்கத்தை ‘அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்பும்’வாயிலாக தமிழகத்துச் சகோதரர்களில் ஒரு பத்துப் பேருக்கேனும் தெரியவைத்ததையிட்டும் மகிழ்வடைகிறேன்.

மற்றவர்களுடைய எழுத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்குக் கூட ஒரு நல்லிதயம் இருக்கவேண்டும். அப்படிப் பல நண்பர்களை காலம் எனக்குக் காட்டியிருக்கிறது. ஆனால்,‘நன்றாயிருக்கிறது’என்று மட்டும் சொல்லி என்னைத் தேங்கவைத்துவிடாதீர்கள். நான் ஓடிக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். குறைகளைச் சுட்டிக்காட்டுவதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது.(அதற்காக சும்மா பூதக்கண்ணாடி வைத்தெல்லாம் பார்க்கக்கூடாது :))) உடனே என்ன தோன்றுகிறதோ அதுதான் உண்மையான விமர்சனம். உட்கார்ந்து யோசிப்பதெல்லாம் விஷமத்தனம்… அப்படித்தானே…?

எழுதுவது,வாசிப்பது,பின்னூட்டமிடுவது இவையெல்லாம் இந்த வாழ்வெனும் சமுத்திரத்தில் உள்ளங்கைக்குழிவு கொள்ளத்தக்க நீர் மட்டுமே. எமக்கு நாமே உண்மையாகவும் சகமனிதர்களைக் காயப்படுத்தாத மென்மனதுடையோராய் இருப்பதுமே எல்லாவற்றிலும் சிறப்பு.

இந்த வாரம் முழுவதும் எனது பக்கத்திற்கு வந்து வந்து பேசியும் மௌனமாகவும் சென்ற நண்பர்களுக்கும், இந்த ஒரு வாரமாக எனக்கு சிறப்பு வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் ‘நன்றி’ என்று சொல்லி இறுகப் பற்றியிருந்த விரல்களை நெகிழ்த்துகையில் இந்த மனமும் ஏனிப்படி நெகிழ்ந்துபோயிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. நன்றி.


நட்புடன் தமிழ்நதி

சின்னச் சின்னத் தூறல்கள்



வாசிப்பு
பூக்கள், மழைத்துளி கிளப்பும் மண் வாசனை, வாசனைத் திரவியங்கள் இவற்றிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல புத்தகங்களின் வாசனை. அம்புலிமாமாவிலிருந்து அசோகமித்திரன் வரை பிடித்த எழுத்துக்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், கிளர்ச்சியூட்டும் புதிய உறவைப்போன்று புத்தகங்கள் மீதான காதல் மட்டும் மாறுவதேயில்லை. அந்தப் பைத்தியம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. புத்தகக் கடைகளுக்குள் நுழைந்தால் புறவுலகம் மறந்து,மறைந்து போகிறது. முன்பெனில் ஒரு புத்தகத்தை வாசித்து ஆண்டுக்கணக்கானாலும் அந்தப் பாத்திரங்கள் மனதிலிருந்து இறங்குவதேயில்லை. அலையோசை சீதாவையும், மரப்பசு அம்மணியையும், சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவையும் இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தளவிற்கு கதையோடு ஒன்றித்திருந்தது வாசிப்பு. இன்று வெயிலில் தரிக்கமுடியாத பாதங்களைப்போல வரிகளுக்கிடையில் அலைந்துகொண்டிருக்கிறது மனசு. ஓரிடத்தில் நில்லென்றால் நிற்க முடியவில்லை அதற்கு. வாசிப்புக்குச் சமாந்தரமாக மற்றொரு துணை வாசிப்பு உள்ளுக்குள் நடந்துகொண்டிருப்பதை எவ்வளவு முயன்றும் விலக்கமுடிவதில்லை. தர்க்கங்கள்,முரண்கள்,உடன்பாடுகள், மனக்குரங்கின் கிளை தாவல்கள் இவற்றினிடையே ஊடாடிக்கொண்டிருக்க வாசிப்பு எங்கோ பின்தங்கிவிடுகிறது. எமது தீர்மானங்களுடன் தொடர்ந்து பொருத முடியாமற் தோற்றுப்போய் அலமாரியில் மீண்டும் சென்றமர்ந்து காத்திருக்கும் புத்தகங்களை நினைக்க வருத்தமாய்த்தானிருக்கிறது.

-----


கோவில்

‘நான் கடவுள் மறுப்பாளன்…’-‘கோவிலுக்கெல்லாம் போவதில்லை’என்று சொல்வது பெரும்பாலானோரிடையே புதிய கலாச்சாரமாக,நாகரிகமாக உருவெடுத்து வருகிறது. பெரியோர்கள் கற்பித்த, பெரும்பான்மையினரால் கைக்கொள்ளப்படும் ஒரு வழக்கத்தின் மீது,மரபின் மீது கேள்வி கேட்டுத் தெளிந்து தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்வது வேறு. ‘எல்லா மாடும் ஓடுகிறது என்று சின்னான் வீட்டு செத்தல் மாடும் ஓடிய கதை’யாக இருக்கிறது சிலரின் பேச்சு.கோவில் என்பது வழிபடும் இடம் மட்டுமில்லை. நாத்திகர்களும் கோவிலுக்குப் போவதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. உலகமே அழிந்துகொண்டிருப்பதைப் போன்ற பேரிரைச்சல் நிறைந்த வீதிகள்,அங்காடிகள்,தொழிலகங்கள்,உறவுகளின் பிக்கல் பிடுங்கல்களால் நிறைந்த வீடுகள் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளக்கூடிய வெளிகளில் கோவிலும் ஒன்று. துக்கத்தை,ஆதங்கத்தை,பேராசையை,பிரிவின் வாதையை,இல்லாமையை,வேண்டுகோள்களை,கடவுளுடனான பேரங்களை எத்தனையை இறைத்தாலும் அந்த வெளியை அடைத்துவிட முடிவதில்லை.
பிரகாரத்தின் கருங்கற்களைத் தொடும்போது கடந்தகாலத்தைத் தொடுவதைப் போலிருக்கிறது. அங்கு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது கலையின் பேரனுபவம் விளைகிறது. விழுந்து விழுந்து கும்பிடுபவர்களைப் பார்க்கும்போது அகங்காரம் மறைந்துபோகிறது. வாசலில் கையேந்தும் பிச்சைக்காரர்கள் வாழ்வு நம்மை இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதை உணர்த்துகிறார்கள். பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தைகளில், நாதஸ்வர இசையில்,மரங்களினிடையே தெரியும் பிறைத்துண்டில்,வன்னிமரத்தின் ஆழ்ந்த மௌனத்தில்,யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்தன்மை இருக்கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்பதாக எவர் சொன்னது?

-----


இசை

செவிப்புலனற்றவர்கள் ஒருவகையில் கொடுத்துவைத்தவர்கள். சகமனிதர்களின் பொய்யில் தோய்த்தெடுத்த வார்த்தைகளிலிருந்து அவர்களுக்கு நிரந்தர விடுதலை. ஆனால், இசை என்ற அற்புத அனுபவத்தை இழந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே. மனித மொழியிலான இசை வார்த்தைகளாலும் வாத்தியங்களாலும் கோர்க்கப்படுகிறது. அது மனிதனை உன்னதங்களை நோக்கி அழைத்துச்செல்கிறது. அழுக்கைக் கரைக்கிறது. அழுகையைத் துடைக்கிறது. கோபத்தை அணைக்கிறது. தாபத்தை வளர்க்கிறது. தனிமையில் துணையாகிறது. கனவுகளுக்குத் தூபமிடுகிறது. இசையற்ற உலகம் என்பது துணையற்ற வாழ்வினைப்போல் வெறுமையானது. (வெறுமையை விளைவிக்கும் துணைகளும் உண்டுதான்)

குளத்தங்கரைகளில் தேன்பிலிற்றும் மருதமர இலைகள் பாடும் பாட்டு, கற்களை மேவி நடக்கும் நதியின் சலசலப்பு,பறவைகளின் பள்ளியெழுச்சி,மாடுகளின் நடைக்கேற்ப அசையும் கழுத்துமணிச்சத்தம்,ஒரே வார்த்தையைச் சலிக்காமல் பாடும் அலையின் ஓசை இவற்றிலிருந்து இசையைப் பிரித்தெடுத்து ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழத் தகுதிபெற்றோர்.

-----


உடல்

கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. எம்மோடு பேசுவதற்காக உறவுகள் காத்திருக்கின்றன. பூட்டிய கதவினுள்ளிருந்து உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முகமறியாத எவருடனோ உரையாடிக்கொண்டிருக்கிறோம். எம்மோடிருக்கும் உறவுகளின் குரல்களை மட்டுமல்ல, உடலின் கெஞ்சுதலையும் நாம் செவிமடுப்பதில்லை. எம்மவரில் பெரும்பாலானோருக்கு உடல் வேண்டாதவற்றைக் கொட்டும் குப்பைக்கூடை. நாக்கின் பேச்சைக் கேட்டு உடலின் ஏனைய பாகங்கள் அத்தனையையும் கைவிட்டுவிடும் அதிபுத்திசாலிகள் நாங்கள். புகைபிடித்தல், மதுப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற எமது தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உடல் முடிந்தவரை போராடுகிறது. அடங்கிப்போகும் ஒரு இனத்தை மேலும் மேலும் வதைக்கிற சர்வாதிகாரிகள்போல நாம் எமது உடலளவில் கருணையற்றவர்களாக நடந்துகொள்கிறோம்.
கருணையற்றவர்களில் ஒருத்தியாகிய நான், கைகால்களை அசைக்காமல் ஓரிடத்தில் அமர்ந்திருந்து இதைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். உறக்கத்திற்கு அழைக்கும் விழிகளின் மீது சிறிதும் கருணையற்றவர்களாக நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

-------


நட்பு

அப்போது எனக்குப் பத்து அல்லது பதினொரு வயது இருக்குமென்று நினைக்கிறேன். அப்பாவின் வேலை நிமித்தம் ஊர் மாறி பள்ளிக்கூடமும் மாறிய சிலநாட்களில் என்னை அந்தக் கடிதம் வந்தடைந்தது. அதுதான் எனது பெயருக்கு வந்த முதற் கடிதம். “எனது நண்பி ஒரு கறுப்புக் காரிலேறி எனது கண்களிலிருந்து மறைந்துவிட்டா. நான் அண்டைக்கு இரவு அம்மாவுக்குத் தெரியாமல் அழுதேன்”என்று விஜயமாலினி என்ற எனது பழைய வகுப்புத்தோழி எழுதியனுப்பியிருந்தாள். அதை வாசித்ததும் எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எனது தோழியைப் பின்பற்றி நானும் அம்மாவுக்குத் தெரியாமல் அழுதுவைத்தேன். அந்த உணர்வின் முழு அர்த்தத்தையும் அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதன்பிறகு நான் நடந்த வழியெல்லாம் நட்பின் வாசனை வீசிக்கொண்டிருந்தது.
உண்மையான நட்புக்கு இணையான உறவு எதுவும் இல்லை என்று நிறையப்பேர் பேசி,எழுதி,படம் போட்டும் காட்டி விட்டார்கள். அதில் மாற்றுக்கருத்துடையவர்கள் நல்ல நட்பு வாய்க்கப்பெறாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இனிக் கொஞ்சம் சுயபுராணம்: எனக்கு இருபது வயதாக இருக்கும்போது அந்த இனிய அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவள் அப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தாள். என்னிலும் மூன்று வயது இளையவள். நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டிற்குப் பக்கத்து வீடு அவளுடையது. எல்லோரையும் போல பக்கத்து வீட்டோடு எங்கள் வீடு ஒட்டிக்கொண்டது. அதுவரை ஒழுங்காகவிருந்த வேலியில் சின்ன ‘பொட்டு’வைத்துப் போக்குவரத்தும் ஆரம்பித்தது. அது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் பூர்வ ஜென்மம் போன்ற பூச்சுற்றல்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தபோதிலும் அவளைப் பார்த்ததும் அதிலெல்லாம் நம்பிக்கை வந்துவிடுமோ என்று பயம் வந்துவிட்டது. அந்தளவிற்கு அவளை நானும் என்னை அவளும் ஈர்த்தோம். படிக்கும் காலத்தில் அவள் மிக அழகாக இருப்பாள். பெரிய கண்களை இன்னும் அகல விரித்து அவள் பேசும் அழகே தனி. அந்த வயதில் அழகானவர்களைப் பிடிக்குமென்பதும் அவள் என்னை ஈர்த்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாமல்லவா…?

பேசிப் பேசி அன்று மாலைதான் பிரிந்திருப்போம். இரவே ஒரு கடிதம் எழுதி மறுநாள் காலையில் கொடுத்துவிடுமளவிற்கு பைத்தியம் பிடித்திருந்தது. அந்தக் கடிதங்கள் வரி பிரித்து எழுதப்படாத கவிதைகளாக இன்னமும் என்னிடம் இருக்கின்றன. கைலாசபதி கலையரங்கின் பின்புறப் படிக்கட்டுகள்,நிழல் சடை விரித்த மரங்கள்,நூல்நிலையத்தின் முன்னாலுள்ள மரத்தடி,வெறுமையாகக் கிடக்கும் வகுப்பறைகள் எங்கெங்கும் எங்கள் இருவரையும் காணலாம் எனுமளவிற்கு நெருக்கம் வளர்ந்தது. அவளிடம் அற்புதமான எழுத்தாற்றல் இருந்தது. மென்மையாக மனதைத் தொடும், அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளின் அகராதி அவள். நான் ஏதோ எழுதுகிறேன் என்று பேர்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவள் தன்னை முடக்கிக்கொண்டுவிட்டாளே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் எழுவதுண்டு. நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிவிட்டபின்னரும் கூட எனது சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து அவளைச் சந்திப்பதற்காகப் போவேன். எங்கள் இருவர் வீட்டிலும் கேலி பேசுமளவிற்கு அன்பின் ஊற்று எங்கள் இருவரையும் நனைத்தது. பிறகொருகாலம் போர் சூழ்ந்தபோது அவளும் நானும் சந்திக்கும் நாட்களின் இடைவெளி அதிகரித்தது. கடிதத்தாலும் பேச முடியாது போயிற்று. அப்போது கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்து அவளோடு நான் கற்பனையில் பேசினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எவ்வளவு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறோம் என்று சிரிப்பாகக்கூட இருக்கிறது. ஆனால், நான் அடிக்கடி சொல்வது போல ‘அந்தந்தக் கணங்கள் அற்புதமானவை’இப்போது அவை அர்த்தமற்றவையெனத் தோன்றலாம். அந்த அன்பும் நாட்களும் நெருக்கமும் பொய்யல்ல பழங்கதை அவ்வளவே.

இப்போது என் தோழி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில், காதலித்து மணந்த தனது இனிய துணையுடன், துறுதுறுவென்றலையும் இரண்டு அழகான பூக்களுக்குத் தாயாக இருக்கிறாள். நானும்- காலமும்,காதலும் எனக்களித்த அதியற்புதமான மனிதரான என் துணைவரும் அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி போவோம். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களை அணைத்துக்கொள்ளும்போது எனது சதையிலிருந்து பிரிந்து உருவானவர்களாக உணர்கிறேன். எங்கள் பிள்ளைகள் நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடியளவு வளர்ந்ததும் இருவருமாக அவர்களிடம் சொல்லுவோம் “நட்பைப் போல உன்னதமானது ஒன்றுமில்லை குழந்தைகளே… !”என்று.


----

வளர்ப்புப் பிராணிகள்

கடவுள், மேலான சக்தி அல்லது இந்த உலகத்தைப் படைத்தவன்-படைத்தவள் முட்டாளா என்ற எண்ணம் எனக்குள் அடிக்கடி எழுந்திருக்கிறது. இந்த நாய்,பூனை,பாம்பு இதையெல்லாம் எதைக் கருதிப் படைத்தார் என்ற சிந்தனை அவற்றின் நிராதரவான நிலையைப் பார்க்கும்போது எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்தப் ‘பெட்டை’நாய்,பூனைகள் குட்டி போட்டுப் பல்கிப் பெருகிவிடும் என்பதனால் யாரும் அண்டுவதில்லை. ஊரில் என்றால் பனைவடலிகளுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவோம். அவை பசியோடு ‘மியாவ் மியாவ்’என்றபடி அலைவதான துக்கம் மனசுக்குள் இருந்துகொண்டேயிருக்கும். வீதிகளில்,குப்பைத்தொட்டிகளுள் காண நேர்கிற நீர் கோர்த்த பசியின் விழிகள் கடவுள் மீதான கோபத்தைக் கிளறிக்கொண்டேயிருக்கின்றன. நாய்,பூனைகள் பாடு பரவாயில்லை என்றாக்கிவிடுகின்றன பாம்புகள். நீண்டு பளபளவென்று நெளிந்தோடும் அவற்றின் தோற்றத்தின் மீதான அருவருப்புடன் பயமும் சேர்ந்துகொள்ள, பாம்புகள் மனிதர்களின் எதிரிகளாகிவிட்டன. பாம்பைக் குறித்த மனிதர்களின் பயத்திற்கும் மனிதர்களைப் பற்றிய பாம்பின் பயத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பெரும்பாலும் மனிதர்களே வெல்கிறார்கள். உயிரிழந்த அதன் கண்களைப் பார்க்கும்போது வாழ்வுரிமை என்பது மனிதர்க்கு மட்டுமானதா என்ற கேள்வி எழுகிறது. ஆறறிவு, வாசிப்பு, புத்தி இவையெல்லாம் படைத்தவர்கள் என்பதன் அடிப்படையில் அவர்கள் செய்வது சரியாகத்தானிருக்கும். தமது ஆயுளைத் தீர்மானிக்கவியலாத கோபத்தை விலங்குகள்,பிராணிகளின் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்றிருக்கிறது.


“இந்த நாய்,பூனைகள்…. இவை நாம்தான் தஞ்சம் என்று எங்களோடு ஒட்டிவாழும் வாய் பேசத் தெரியாத ஜீவன்கள். நாங்கள் அவைகளை வளர்த்திருக்கக்கூடாது. வளர்த்துவிட்டோம். நாளையைப் பற்றி அவற்றிற்கு எதுவும் தெரியாது. நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவற்றிற்கு எதுவும் புரியாது. நாங்கள் எங்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிடலாம். ஆனால் எங்களோடு வளர்ந்த, நாங்கள் வளர்த்த இந்த உயிர்களும் உயிர்தானே…? மனிதர்களைவிட எங்களில் அன்பையும் நன்றியையும் வைத்திருக்கும் இந்த உயிர்களை விட்டுவிட்டு ஓடுவதில் எனக்கு விருப்பமில்லை.”


-கடந்த வாரம் ஊரிலிருந்து எனது தந்தையார் எழுதியனுப்பிய கடிதத்திலிருந்து மேற்குறித்த வரிகளை எடுத்துக்கொண்டேன்.

வார்த்தைகளுடன் வாழ்தல்

சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. அவையெல்லாம் நாளாந்த வாழ்வில் பிரயோகிக்கப்படாமல் மனதின் ஆழத்தில் வாழ்ந்துகொண்டுதானிருக்கும். வாசிப்பவர்களின் மனம் என்பது ஏறக்குறைய ஒரு அகராதி போல. அல்லது சொற்களின் கிடங்கு எனலாம். யவனிகா ஸ்ரீராமின் வார்த்தைகளில் சொல்வதானால் மனமொரு ‘சொற்கள் உறங்கும் நூலகம்’என்றுகூடத் தோன்றுகிறது. சொற்களின் உறக்கத்தைக் கலைத்துப் பேசவைக்கிற உத்தி கைவரப்பெற்றவர்களே எழுத்தாளர்களாகக் கவனிக்கப்படுகிறார்கள்.

அண்மையில், அ.முத்துலிங்கம் அவர்களின் ‘வியத்தலும் இலமே’என்ற நேர்காணல் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல்கள் உள்ளடக்கப்பட்ட தொகுப்பு அது. அதில் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாம் விரும்பி ‘வாசிப்பது’அகராதியையே என்று குறிப்பிட்டிருந்தார்கள். புதிய வார்த்தைகளோடு அறிமுகம் செய்துகொள்கிறவனால் (இந்த ‘ன்’ விகுதியை விலக்குவதெப்படி…? வாசகர்களுக்கு அதுவே பழகிப்போனதால் அந்த லயத்தைத் திசைமாற்றி குறுக்கீடு செய்ய விரும்பாது ‘ன்’ இலேயே தொடர்ந்து இந்த ‘ள்’ ஆனவள் எழுதிக்கொண்டு போகிறேன்.) தேய்ந்த வழக்காறுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புதியதோர் உலகத்தைத் தரிசிக்கவும், தான் கண்டுணர்ந்த பேரொளியை வாசகர்களின் மனங்களில் ஒரு சிறு சுடராகவேனும் ஏற்றவும் முடிகிறது.

‘எழுதிய மறுகணம் அந்தப் படைப்பு இறந்துவிடுகிறது’என்பது எத்தனை உண்மை. உள்ளுக்குள் ஊடாடிக்கொண்டிருக்கும்வரைதான் அதற்கு உயிர் இருக்கும். அதை இறக்கிவைத்தவுடன் எழுதியவனைப் பொறுத்தளவில் அந்த உன்னதம் அழிந்துபோகிறது. நேசத்திற்குரிய குழந்தையைப்போல எண்ணத்தைச் சுமந்துகொண்டிருக்கும்வரை அதனோடு எவ்வளவு பேசிக்கொண்டிருந்தோம். சரி, தவறு என விவாதித்துக்கொண்டிருந்தோம். படைப்பாக இறக்கிவைத்தவுடன் நேற்றின் துயர் போல அதுவும் கரைந்துபோய்விடுகிறது. அந்த வெற்றிடத்தை வேறொன்று இட்டு நிரப்புகிறது. தெளிந்த சிந்தனையுடைய எவராலும் தங்கள் எழுத்தை ‘நன்றாயிருக்கிறது’என்று கட்டித்தழுவிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. எழுதியவனுக்கே பிடிக்காமற் போய்விடும் எழுத்தை மற்றவர்கள் கொண்டாடும்போது ‘ஏமாற்றுகிறோமே…’என்றொரு உறுத்தல் எழுதலே இயல்பு. ஒவ்வொரு எழுத்தாளனுமே ஒரு படைப்பை அதன் முழு உருவத்தோடும் வீச்சோடும் இறக்கிவைக்க முடியாமற் போகும் அயர்ச்சியோடும் ஆற்றாமையோடும்தான் இந்த வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொள்கிறான் என்று தோன்றுகிறது.

‘அது தன்னையே எழுதிக்கொண்டது. நான் அதற்கொரு கருவியாக இருந்தேன்’என்று சொல்வது மிகைப்படுத்தலல்ல. ஒப்பனை வார்த்தையுமல்ல. நாற்காலியை நோக்கித் தன்னை இழுத்துச் சென்று அதில் பொருத்திக்கொள்வதுதான்; எழுதுபவர்களுக்குக் கடினமானதெனத் தோன்றுகிறது. பேனாவால் எழுதுவதோ தட்டச்சுவதோ எதுவானாலும் உட்கார்ந்து கையை வைத்த சில நிமிடங்களுக்கு ‘விளையாடப் போகிறேன்’ என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போல எழுத்து சிணுங்கிக்கொண்டிருக்கும். பிறகு நடப்பதுதான் விந்தை! பிறகு வேறொரு உலகம்… வேறு மனிதர்கள்… வேறு இசை…. அந்த மாயக்குழலோசையைத் தொடர்ந்து நாமறியாத வீதிகளில் நடந்துகொண்டிருப்போம். என்றோ நாம் சந்தித்த மனிதர்களுடன் பேசத் தொடங்குகிறோம். அவர்கள் பேசத் தவறியதைப் பேசத் தூண்டுகிறோம். அல்லது அவர்கள் வழியாக நாம் பேசுகிறோம். எம்முள் புதையுண்டிருக்கும் நகரங்கள் உயிர்க்கின்றன. உறைந்தவை யாவும் சலனமுறத் தொடங்குகின்றன. காட்டின் இருள், கடலின் ஆழம், இரவின் இரகசியம் போல அந்தக் குரல் நமக்கே புரிபடாத வசீகரத்துடன், புதியதொரு மொழியில் பேசுகிறது. அதை மொழிபெயர்த்து ஒரு சிலரால் எழுதிவிட முடிகிறது. ஒரு தியானத்தைப்போல அதை உணர்ந்துகொண்டிருக்கத்தான் சிலரால் முடிகிறது. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று சொல்லவும் முடிவதில்லை. காலம் குறித்த பிரக்ஞை அற்றுப்போகிறது. பூட்டிய கதவுக்கப்பால் ஓருலகம் இயங்கிக்கொண்டிருப்பது மறந்துபோகிறது.

இயற்கையை மனிதரால் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லையோ எழுத்தும் அத்தன்மையதே. நதியை வகிர்ந்தொரு படகு போகிறது. போன மறு கணம் சுவடும் இல்லாமல் நீர் கூடிவிடுகிறது. எழுத்துக் கூடிவரும் லயமும் அப்படித்தான். அந்தக் கணத்திலிருந்து நாம் ஒன்றைப் பொறுக்கிக்கொள்கிறோம். கொடுத்துவிட்டு ஒரு துளியும் குறையாத முழுமையுடன் அழகுடன் பொலிவுடன் அது இருந்துகொண்டுதானிருக்கிறது.

‘இந்தக் கருவில் இதை எழுதிக்கொடுங்கள்’என்று யாராவது கேட்கும்போது, சாத்தியமற்றதெனத் தெரிந்தும் மறுக்கமுடிவதில்லை. ஒரு சட்டையைத் தைப்பதுபோலவோ ஒரு அலமாரியைச் செய்வதுபோலவோ அல்ல எழுதுவது. அது தன்னியல்பானது. ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையைப் குப்பையில் வீசிவிடுகிறோம். மண்ணுக்குள் அது தன்னைத் தயார்ப்படுத்துகிறது. மழைக்காகக் காத்திருக்கிறது. வீரியமுள்ளது வேளை வரும்போது மண்ணை முட்டி மோதிக்கொண்டு முளைவிடுகிறது. நாமாக முனைந்து எழுதுவதும், கால நிபந்தனைகள் வழங்கி எவரும் எழுதக் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதுவதும் ‘பிளாஸ்டிக்’காலான செயற்கைத் தாவரம் மாதிரித்தான். அழகிருக்கும். வாசனை இருக்காது. பிறகு உயிரை எங்கேயென்று தேடுவது…? சொற்களைத் தேர்ந்து ஒப்பனை செய்து பார்வைக்கு விட்டுவிடலாம்.(அல்லது விற்றுவிடலாம்) அதற்கு வணிகனுக்குரிய தந்திரமும் சாதுரியமும் போதுமானது. உண்மை தேவையில்லை.

எழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது. ‘என்னை அடி, அணைத்துக்கொள், வதைசெய், வசம்செய், புறக்கணி, கொண்டாடு எதுசெய்தும் உன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்’ என்று முழுவதுமாகத் தன்னைத் தருகிறது. அதன் தோள்களில் சாய்ந்துகொள்கிறோம். அதன் மடியில் படுத்துக்கொள்கிறோம். ‘என்னைக் கைவிட்டுவிடாதே’என்று கெஞ்சுகிறோம். மெல்லிதயம் கொண்ட அது புன்னகையோடு நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லோரும் கைவிட்டுவிட்டபோது கடைசிப் பற்றுக்கோடாக எழுத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தூற்றுகிறது. புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது.

‘எழுத்து சோறு போடாது’என்று பலரும் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் உண்மையாகத்தானிருக்கிறது. சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள். வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது. ஒருவனின் படைப்புத்திறனை வேலை விழுங்கிவிடுகிறது. அவனுள் ஓடிக்கொண்டிருக்கும் நதி வற்றிப்போகிறது. அவன் காலத்தால் பின்தள்ளப்பட்டு கவனிக்கப்படாது போகிறான்.

“எந்தப் புத்தகத்தைப் படித்தாலும்
பிளேட்டோ சொன்னதுதான் சரி.
நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது அதை மீறி ஒன்றுமில்லை.”

என்று ‘கண்ணாடியாகும் கண்கள்’இல் நகுலன் சொல்லியிருப்பதுபோல கதைகளைத் தேவதைகள் (எனக்கு இந்தத் தேவதை என்ற சொல் பிடிக்கும்)கொண்டுவந்து நம்மிடையே எறிந்துவிட்டுப்போவதில்லை. அவை எமக்குள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துப் பேச முடிந்தவர்கள் இருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் முயற்சியில் காணாமற் போனவர்களும் இருக்கிறார்கள். நாம் கண்டுபிடிப்பவர்களா தொலைந்துபோகிறவர்களா என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டுச் செல்லவே விருப்பம். ஆனால், சந்தர்ப்பங்களும் செல்வாக்கும் காழ்ப்புணர்வும் பக்கச்சார்பும் எழுத்துலகத்தையும் ஆக்கிரமித்திருக்கும் போது அவ்விதம் சொல்லிச் செல்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது.

3.09.2007

சுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்



இந்தச் சுடர் சுற்றிச் சுற்றி வரும்போதே அது போகுமிடமெல்லாம் பயம் கலந்த கண்களால் தொடர்ந்துகொண்டிருந்தேன். ‘எங்கே என்னிடம் தந்துவிடுவார்களோ…’என்று உள்ளுக்குள் பதட்டமாகவே இருந்தது. கடைசியில் பயந்தபடி நிகழ்ந்துவிட்டது. ‘பாசத்திற்குரிய சகோதரி’என்று விளித்தபடி சுடரை பொன்ஸ் என்னிடம் நீட்டியபோது, இடமும் வலதுமாகத் தலையாட்டவே விரும்பினேன். பொன்ஸ் ‘சகோதரி’என்று சொல்லிய சொல்லின் ரீங்காரம் பின்னணியில் ஒலிக்க என்னையறியாமலே மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிவிட்டேன். என்னாலான வரை ஒப்பேற்றியிருக்கிறேன். வெறுப்பேற்றியிருக்கிறேனா என்று நீங்கள்தான் பார்த்துச் சொல்லவேண்டும்.

1. நீங்கள் வந்த புதிதில் சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?

வேறொரு நாட்டிலிருந்து வந்தவள் என்பதன் அடிப்படையில் எனது பார்வை வித்தியாசமாக இருக்கும் என்பதனாலேயே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். (இல்லாவிட்டால் நானென்ன பொதுப்பணித் துறை அமைச்சரா?) பொன்ஸ்! சுடரைத் தந்த உங்கள் அனுமதியுடன் ‘அடுத்து செய்யவேண்டிய’என்ற வார்த்தையைக் கொஞ்சம் மறந்துவிட்டு இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கலாமென எண்ணுகிறேன். ‘அடுத்து’என்று வரும்போது ‘உடனடி’என்று பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. உடனடி மாற்றம் என்பது வளர்முக நாடொன்றில் அமையப்பெற்ற நகரமொன்றில் சாத்தியப்படுமென்பது கண்விழித்தபடி காணும் கனவுதான். அதனால், ஒரு தொலைநோக்கில் சீரமைக்கப்பட வேண்டிய, விழிகளை உறுத்திய சில விஷயங்களைத் தொட்டுச் செ(சொ)ல்லலாமென்றிருக்கிறேன்.

-மக்களிடையிலான ஏற்றத்தாழ்வுகள்:இது எங்கேயும் உள்ளதுதான் என்றபோதிலும், சென்னையில் இந்தச் சமத்துவமின்மை என்பது மனம் கனக்க வைப்பதாக இருக்கிறது. இன்னும் விரித்துக் கூறினால், ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மலைக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு நேர உணவுக்கே வழியில்லாமல் விழிகளில் பசி மிதக்க அலையும் நடைபாதைவாசிகளை,பிச்சைக்காரர்களை,குழந்தைகளைப் பார்க்கும்போது-நான் மிகைப்படுத்திக் கூறவில்லை-நியாயமற்ற இந்த உலகத்தைக் கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருப்பதை விட செத்துப் போய்விடலாம் போல தோன்றியிருக்கிறது. இது ஒரு உணர்ச்சியின்பாற்பட்ட மனோநிலை என்றெனக்குத் தெரிகிறது. ஆனால், ‘ச்சே!என்ன உலகமிது!’என்ற கசப்புணர்வு ஒவ்வொரு தடவையும் வீதியால் போய்வரும்போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனியொரு மனிதரால் இந்த சமத்துவமற்ற சமூகக் கட்டமைப்பை மாற்றியமைத்துவிட இயலாது. அடிப்படையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களாலேயே அது சாத்தியப்படும். இப்போது சென்னைக்கு வேண்டியது, அமெரிக்காவுக்கு மென்பொருள் தயாரித்துக்கொடுப்பதல்ல - அடித்தட்டு மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழிசெய்வதுதான். இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் ‘பசி… பசி’என்று வீதிகளில் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கையில், ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து பேசி கோடியைப் பல்கோடிகளாகப் பெருக்க வழிசமைத்துவிட்ட திருப்தியுடன், ஐந்து நட்சத்திர வகையறா உணவுகளை மிகச் சிரமப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு, மேலதிகமாக நெய்யொழுகும் பண்டங்களை ஒரு கடி கடித்தபின் குப்பைத் தொட்டிகளில் எறிந்துகொண்டிருக்கிறது தொந்தி பெருத்தவர்களின் வர்க்கம் ஒன்று.

இதேபோல, முதியோர் இல்லங்களைக் கடக்கும்போது இருண்ட பின்னணியில் தெரியும், சுருக்கம் நிறைந்த, நம்பிக்கை இழந்த அந்த முகங்களைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. தம் குழந்தைகளை, இந்த நாட்டை வளர்த்தவர்கள் அவர்கள். மனிதம்,அன்பு,தாய்மை என்ற பதங்களெல்லாம் வெற்று வார்த்தைகள்தானா…? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் கருணையுடையவனாக-கருணையுடையவளாக இருந்தால் வயோதிபர்களுக்கு ஏனிந்த நிலை?

தெருக்களில் துரத்தி வந்து கையேந்தும், பலநாட்கள் எண்ணெய் கண்டிராத தலையுடைய குழந்தைகள் இந்த நகரத்தில் குற்றவுணர்வைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு நகரத்தின் மாற்றமும் முன்னேற்றமும் அடித்தட்டு மக்களிலிருந்தே தொடங்கப்படல் வேண்டும். அதுதான் இப்போதைய மற்றும் எப்போதைய தேவையும்கூட.


கழிப்பறை வசதிகள்: ‘பல்கனி’யிலிருந்து வெளியில் பார்க்கும்போது கண்களை அடிக்கடி தாழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அருகிலிருக்கும் வெறும் நிலத்தின்(எசமாடனில் வந்த நிலம்) சுற்றுமதிலை எப்படியாவது சாய்த்துவிடக் கங்கணங் கட்டிக் கொண்டவர்களைப் போல இடைவிடாமல் ‘பெய்து’கொண்டிருக்கிறார்கள். வீதியோரங்களில் இருக்கும் அநேக சுவர்களுக்கு இதே நிலைதான். ஆங்காங்கே பொதுக் கழிப்பறைகளைக் காணமுடிகிறது. அவையெல்லாம் ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’என்ற கதைதான். சுற்றுச்சூழலின் சுத்தம்,சுகாதாரம் போன்றன எத்தகு முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஊட்டப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதைப் போல, வீடுகள் கட்டப்படும்போது அவை மக்கள் வாழத் தகுதியானவையா… எனப் பார்த்து அனுமதி வழங்கப்படுவதுபோல இங்கேயும் கொண்டுவரப்படல் வேண்டும்.(இங்கேயும் இருக்குமென்றுதான் நினைக்கிறேன்) ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை மட்டும் இருந்தால் போதாது… அந்தச் சமையலறையில் சமைத்துச் சாப்பிட்டதில் செரித்தது போக எஞ்சியவற்றை ‘வெளியனுப்பும்’கழிப்பறைகள் அவசியம்.

இத்தகைய சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாமல், ‘மந்திரவாதிகளும் பிச்சைக்காரர்களும் அசுத்தமும் நிறைந்த நகரம்தான் சென்னை’ என்று இங்கு வந்து போகும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகள் எழுதுகிறார்களே என்று சத்தமிடுவதில் அர்த்தமில்லை.

போக்குவரத்து நெரிசல்: சென்னை போன்றதொரு மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கமுடியாததே. எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, சனத்தொகைப் பெருக்கத்திற்கமைய பிரதான வீதிகளை விசாலிப்பதற்கமைய சென்னை வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்றெனக்குத் தெரியவில்லை. மேலதிகமாக சில உப சாலைகளை இணைத்துக்கொள்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். பெரும்பாலும் வாகனப் பெருக்கத்திற்கேற்ப சாலைகளைப் பெருக்குவதென்பது சாத்தியமில்லை. ஏதோவொரு கட்டத்தில் அந்த நடவடிக்கையும் மேலே நகரமுடியாத தேக்கநிலைக்கே கொண்டுபோய்விடும். ஆனால்,மாநகரமொன்றை உயிர்பெற்றசைய வைக்க இரத்த நாளங்களான சாலை வசதிகள் கவனிக்கப்படுதல் முக்கியம் என்பதை நான் மட்டுமல்ல நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

பொழுதுபோக்கு வசதிகள்: ஒருநாள் காலையில் கண் விழித்து எழுந்து பார்க்கும்போது, திரையரங்குகளும், கடற்கரையும் மறைந்துவிட்டால் சென்னையின் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இவ்விரண்டையும் தவிர்த்துப் பார்த்தால் மத்தியதர வர்க்க, அடித்தட்டு மக்களுக்கு வேறென்ன பொழுதுபோக்கு வசதிகள் இருக்கின்றன? டிஸ்கோதே,ஆடம்பரமான கோப்பிக் கடைகள் இவையெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினருக்குரியவை. ஒரு சராசரி சென்னைவாசியின் தொய்ந்த சட்டைப்பை, இந்த இடங்களை காலடி எடுத்துவைக்கவே அஞ்சும் புனித இடங்களாக்கிவிட்டிருக்கிறது. குழந்தைகள் வி.ஜி.பி.யையும் எம்.ஜி.எம். ஐயும் வள்ளுவர் கோட்டத்தையும் எத்தனை தடவைதான் பார்ப்பார்கள்?

இயந்திரமயமாகிக்கொண்டிருக்கும் இந்த உலகம் மனிதனின் மெல்லுணர்வுகளை நசுக்குகிறது. அவனது ஈரத்தன்மையை உறிஞ்சிவிடுகிறது. மனிதன் மனிதனாக இயங்கவேண்டுமெனில், பொழுதுபோக்கு வசதிகள் அவசியம். சென்னையில் அவற்றின் போதாமைதான் அதிகரித்துவரும் குற்றங்களுக்கு மறைமுகமானதொரு காரணமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால்,பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்த மேலைத்தேய நாடுகளிலும் குற்றச்செயல்கள் மலிந்து வருகின்றனவே அதற்கென்ன காரணம்… என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

2.தமிழக தொலைக்காட்சிகளில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?

ஒரு நிகழ்ச்சியையும் தொடர்ந்து பார்ப்பதில்லை. இரவு உணவின் பின், வரவேற்பறையில் சிறிது நேரத்தைக் கழிக்க நேரிடுகையில் ‘கோலங்களில்’எப்போதும் அடைமழையாய் அழுதுகொண்டிருக்கும் தேவயானியையும், அழுது எரிச்சலூட்டாத ‘கம்பீரமான’ அரசி ராதிகாவையும் எப்போதாவது பார்ப்பதுண்டு.

‘யாரு மனசுல யாரு… அவங்களுக்கு என்ன பேரு…’என மலையாள வாடையுடன் தமிழ் பேசும் ப்ரதீப் நடத்தும் ‘கிரான்ட் மாஸ்ரர்’ஐப் பார்க்கப் பிடிக்கும். அதேபோல ‘க்ரோர்பதி’பொது அறிவு நிகழ்ச்சியும் பிடிக்கும். ‘தங்க வேட்டை’என்றொரு நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் நடத்திக்கொண்டிருந்தவரை, அவருடைய வியப்புக் கலந்த அழகான புன்னகைக்காகவும், என்னிடம் கேட்கப்படாத கேள்விகளுக்கு விழுந்தடித்துக்கொண்டு பதிலளிப்பதற்காகவும்(தவறான விடை சொல்லி சக பார்வையாளர் மத்தியில் மூக்குடைபடவும் நேர்ந்திருக்கிறது)பிடித்திருந்தது. இப்போது ரம்யா கிருஷ்ணன் நடத்துவதில்லை. நானும் பார்ப்பதில்லை.

‘கோப்பி வித் அனு’என்றொரு நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பேன். பிரபலங்களை நேர்காணல் செய்யும்போது அவர்களின் ஆழத்திலிருந்து பதில்களை வெளிக்கொணரத்தகு புத்திசாலித்தனமான கேள்விகளும், ஏதோ நெடுநாள் பழகியதுபோன்றதொரு நட்பில் கனிந்த முகமும், பார்வையாளருக்கும் நிகழ்ச்சிக்கும் இடையில் சரியான முறையில் தொடர்பைப் பேணி தன்னோடு பிணைத்துவைத்திருக்கும் தன்மையும் மிகப் பிடிக்கும். ஆகவே அனுதான் பிடிக்கும்.

3.பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?

வீட்டில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் பெண்களால் தொலைக்காட்சியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கவியலாது. அப்படி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலும் கண்ணீரும் கம்பலையுமான நாடகங்களைத் தாண்டிப் போக பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. பத்திரிகைகள் தமது தர்மத்தை மறந்து வணிகப்பாதையில் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றன. ‘காலையில் கன்னிப்பெண்ணைக் கட்டியணைத்து சரமாரியாக முத்தமிட்ட பால்காரன் கைது’ என்ற விதமான ‘திகில்’, ‘பணால்’, ‘திவால்’ செய்திகளைத் தாங்கியே அவை வெளிவருகின்றன. வானொலி என்றால் வேலை செய்தபடியே கேட்டுக்கொண்டிருக்கலாம். பெண்களால் இலகுவில் உள்வாங்கப்படக்கூடிய ஊடகம் வானொலிதான். ஆனால், ‘எனக்காக இந்தப் பாட்டைப் போடறேளா’என்ற ரீதியில்தான் அவையும் ‘தமில்’தொண்டாற்றிக்கொண்டிருக்கின்றன. புத்தகங்களை ஊடகக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தேர்ந்த நல்ல புத்தகங்களே பெண்களுக்கு விழிப்புணர்வூட்டக் கூடியன என்பது எனது கருத்தாகும்.

4.எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்குச் சொல்லமுடியுமா?

இப்படியொரு கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் என்று எனது அண்ணாவின் மகனிடம் சொன்னபோது அவன் சொன்னான்: “இதுவே ஒரு நகைச்சுவைத் துணுக்குத்தானே…”என்று.

ஒரு ஆபிரிக்காக்காரனும் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொண்டார்களாம் (கதை சொந்தச் சரக்கல்ல என்பதனால் இந்த ‘ளாம்’) முதற் குழந்தை அப்பாவைப் போல கறுப்பாக சுருட்டை முடியோடு இருந்ததாம். அந்த வீட்டில் அம்மாவின் ஆட்சிதானாம். தனது மொழியில் அடிக்கடி வரும் ‘ங்’இல் அவளுக்கு அதீத பிரியமாம். அதனால் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது இரண்டு ‘ங்’குகளேனும் வரவேண்டுமென விரும்பி, தந்தையைப் போலிருந்த முதற் குழந்தைக்கு ‘சிங்காங் காங்’ என்று பெயர் வைத்தாளாம்.

இரண்டாவது குழந்தை அம்மா சாடையில் மஞ்சள் நிறத்தில் குச்சி குச்சியான தலைமயிருடன் பிறந்ததாம். சந்தோசப்பட்ட தாய் அக்குழந்தைக்கு ‘சாங் காங் கிங்’என்று பெயர் வைத்தாளாம்.

மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அதைப் பார்த்த அப்பன்காரனுக்கு ஒரே திகைப்பு. அம்மாவின் சாடையிலும் இல்லாமல் அப்பாவின் சாடையையும் கொண்டிராமல் அது வெள்ளைக்காரச் சாயலில் இருந்ததாம். உடனே அப்பன்காரன் சொன்னானாம்: இந்தக் குழந்தைக்குப் பொருத்தமான பெயரை நான்தான் பெயர் வைப்பேன் என்று. ‘அப்படி என்ன பொருத்தமான பெயர்?’என்று தாய்க்காரி ஆச்சரியத்தோடு கேட்டாளாம்.

“சம்திங் ராங்”என்று கணவன் சொன்னானாம்.

5.வலைப்பதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

சமூக சீர்திருத்தம்: சீரிய நோக்கம் கொண்ட பதிவுகள் மூலம் சமூகத்தில், அதன் பிற்போக்குத்தனமான கருத்தாக்கங்களில் ஓரளவேனும் மாறுதல்களை ஏற்படுத்த முடியும். சரியான கருத்துக்கள் ஒரு சரியான வாசகரிடம் போய்ச் சேரும்போது, ஒரு நூறு பேரிடமாவது அவர் அதனைக் காவிச் செல்கிறார். செவி வழியாக இடைவிடாமல் அது பயணம் செய்துகொண்டேயிருக்கிறது. ஒரு வீம்புக்காக உடனே மறுத்துரைக்கப்படும் நல்ல கருத்துக்கள் அப்படியே கைவிடப்படுவதில்லை. மனசின் ஆழத்தில் சென்று படிந்து சமயம் வரும்போதெல்லாம் பேசிக்கொண்டேயிருக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும் மிக மெதுவாகவேனும் பதிவுகள் வழியாக மனதளவில் மாற்றங்களை நிகழ்த்தலாம்.

சமூக அக்கறை: செந்தழல் ரவி வேலை வாய்ப்புக்களை அடையாளம் காட்டுகிறார். இந்தச் சுடரை என்னிடம் தந்த பொன்ஸ் வலைப்பூ தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களில் தன்னால் இயன்றவரை சகபதிவர்களுக்கு உதவுகிறார். ஒரு மாணவி தனது படிப்பை இடைநிறுத்தி வாழ்வே தேங்கிப் போய்விடும் நிலையில் இருந்தபோது, வலைப்பதிவர்கள் பலர் சேர்ந்து நிதி சேகரித்து அந்தப் பெண் தனது கல்வியைத் தொடர் வழி செய்தார்கள். இன்னுமின்னும் எத்தனையோ நற்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பதிவுகள் மூலமாக நாம் வாழும் சமூகம் குறித்த அக்கறை தூண்டப்பட்டு உருப்படியாக நிறையச் செய்யலாம்.

தொழில்நுட்ப அறிவு: வலைபதிய வரும்வரை தட்டச்ச மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.(இப்ப மட்டும் என்னவாம்) என்னைப் போலவே பலரும் கணனியை விசித்திரப் பிராணியைப் பார்ப்பதுபோல, பயங்கலந்த வியப்புடன் சற்றே தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால்,வாழ்வாகட்டும் அறிவாகட்டும் தவறுகளிலிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம் என்பது உண்மை. என்னைப் போல சோம்பற்படாமல் தேடல்,உற்சாகம்,ஆர்வம் உள்ளவர்கள் தமது பதிவுகளை இட முயலும்போது இத் தொழினுட்பம் தொடர்பாக நிறையவே கற்றுக்கொள்ள வலையிற் பதிதல் வகைசெய்கிறது.

திறமை இனங்காணப்படல்: இணையத்தளங்களில் குறிப்பாக தமிழ்மணத்தில் எமது பதிவுகளை இடுவதன் முன், எங்களிற் பலர் எம்முடன் நாமே பேசிக்கொண்டிருந்தோம். (இப்பவும் அப்படித்தான் என்கிறீர்களா…?) எமக்கென ஒரு களம் கிடைத்ததும், மதகு திறக்கப்பட்ட குளங்களாகிவிட்டோம். உள்ளுக்குள் முட்டிமோதிக்கொண்டிருந்த துக்கங்கள்,மகிழ்ச்சிகள்,அனுபவங்கள் படைப்புகளாக வெளிப்படுத்தப்படுவது பெரியதொரு ஆசுவாசம். மேலும், எழுத்தாற்றல் மிக்கவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சரியாக அமையுமிடத்தில் எழுத்தே வாழ்வாகக்கூடிய தளங்களுக்கு இந்தப் பதிவுகள் எடுத்துச் செல்லக்கூடும்.

ம்… இப்போது யாரிடம் இந்தச் சுடரைக் கையளிப்பது என்று யோசித்தபோது நினைவில் வந்தவர் பொடிச்சி. என்னை பதிவுலகம் என்ற பெருங்கடலில் தள்ளித் தத்தளிக்க விட்டவர் அல்லவா அவர்…! பழிவாங்கும் நடவடிக்கையாக இதோ சில கேள்விகள்:

1. வாசிக்கும் புத்தகங்கள் ஒரு மனிதரை (ஆண்-பெண்) அவர்தம் உணர்வுகளை, நடத்தையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

2.தமிழ்மணத்தில் இப்போது அதிகமான பெண் பதிவர்கள் இணைந்திருக்கிறார்கள். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?

3.ஒரு படைப்பை அதை எழுதுபவரின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் மனோநிலையானது எழுதுபவரைக் களைத்துப் போகச் செய்கிறது அல்லது பின்னடையத் தூண்டுகிறது என்பதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

4.இணையத்தளங்களில் அண்மைய நாட்களில் விவாதங்கள் சூடுபிடித்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். விவாதங்கள் வழியாகச் சரியான திசையில் பயணித்து முடிந்த முடிபொன்றை அடையமுடியும் என்று கருதுகிறீர்களா? அல்லது எதிரெதிரான கருத்துக்கள் விவாதங்கள் வழியாக ஒரு புள்ளியில் சந்திப்பது சாத்தியமா?

5.ஒரு படைப்பு பரவலான வாசகர்களைச் சென்றடையாது போவதென்பது அப்படைப்பின் தோல்வியா?

3.08.2007

ஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்



வாசிப்பு குறித்த பகிர்தல்


ஜனநாயகம், சுதந்திரம், புரட்சி, மக்கள் சக்தி இன்னோரன்ன சொற்களை, அதன் முழு அர்த்தத்தினைக் குறித்து எந்தவித கேள்வியும் எழுப்பாமல் எம்மால் வெகு எளிதாக உச்சரிக்க முடிகிறது. தவிர,அச்சொற்களால் வசீகரிக்கப்பட்டு, அது வழங்கும் நிழல் பாதுகாப்பானதென முழுமையாக நம்ப வேறு செய்கிறோம். எமது நடைமுறை வாழ்வின் சுழற்சி பாதிக்கப்படாமலிருக்கும்வரை அவற்றின் அபத்தம் எம்மை உறுத்துவதில்லை. உண்மையில் கட்புலனாகாத பல்வேறுபட்ட அதிகார மையங்கள்தான் எம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்குக் கட்டுப்படாத குரல்களை தொண்டைக்குழிக்குள் முடக்கவும் செயலற்றதாக்கவும் தேவையேற்படின் இந்த உலகிலிருந்தே தூக்கியெறியவும் சர்வவல்லமை பொருந்திய அவர்களால் இயலும்.

ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்று சொல்லத்தக்க நிலையிலிருப்பவர்களின் அல்லது அவ்விதம் நம்பிக்கொண்டிருப்பவர்களின் நிலையே இவ்வளவு பரிதாபத்திற்குரியதாக இருக்க, கல்வியறிவோ வெளிமனிதர்கள் மற்றும் உலகத்துடனான தொடர்பாடல்களோ, தொழினுட்பம் குறித்ததான அறிமுகமோ அற்ற பழங்குடி மக்களின் இருப்பு பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

சில மாதங்களின் முன்னர் ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’என்ற நாவலை வாசிக்க நேர்ந்தது. அது கிளர்த்திய வலி வார்த்தைகளால் விபரிக்கவியலாதது. அந்த வலிக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறும்.

‘ஜானு-ஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு’என்ற பெயரில் பாஸ்கரன் என்பவரால் எழுதப்பட்ட நூல், எம்.எஸ்ஸால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கேரளத்தில் பழங்குடி இனத்தில் பிறந்த, முறையான கல்வியறிவற்ற ஜானு என்ற பெண், நாகரீக மனிதர்கள் அல்லது பொதுச்சமூகம் என்று சொல்லப்படுபவர்களால் தனது இனத்திடமிருந்து சூறையாடப்பட்ட நிலங்களையும் இயற்கையோடியைந்த இயல்பான வாழ்வையும் மீட்பதற்காக நடத்திய போராட்டங்களைப் பற்றி அவருடைய மொழியிலேயே பேசுகிறது இந்நூல். கேரளத்தின் வயநாடு என்ற இடத்தில் ஜானுவுடனேயே நடந்து, பழங்குடி இன மக்களிடையே வாழ்ந்து, அவர்களின் வலிகளைக் கண்ணாரக் கண்டுணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

ஒப்பீட்டளவில் குறைவெனினும் அறிவின் சாளரங்கள்(கதவுகள் அல்ல) திறக்கப்பட்டு, படித்து பட்டம் பெற்று, குடும்ப பொருளாதாரத்திலும் ஓரளவு பங்கெடுத்து நாகரிக சமூகம் என்று சொல்லப்படுகிற சமூகத்திலே வாழ்கிற பெண்களிடத்தில் இல்லாத கம்பீரம், அதிகார மையங்களின் மீது கேள்வி எழுப்புகிற துணிவு, அவற்றுக்கெதிரான போர்க்குரல், சொல்லளவில் மட்டுமல்லாது களத்தில் இறங்கிப் போராடும் சக்தி, அநியாயங்களுக்கெதிராகக் கிளர்ந்தெழுதலை தான்சார்ந்த மக்களிடம் தூண்டும் ஆற்றல், தலைமைப்பண்பு இவையனைத்தினதும் கலவைதான் ஜானு என்ற போராளி என இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

ஜானுவைப் பற்றித் தனது முன்னுரையில் நூலாசிரியர் பாஸ்கரன் குறிப்பிடுகையில் இவ்வாறு கூறுகிறார்.

“தாங்கள் பறிகொடுத்த நிலங்களை மீட்பதற்காக அந்நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்ய மக்களைத் தூண்டிவிட்டு அதற்குத் தலைமை தாங்கியதற்காக ஜானுவை போலிசார் ஒன்பது தடவைகள் தாக்கினார்கள். ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டார்.”

புகழ் என்பது ஒரு மயக்கம். அடையாளப்படுத்தப்படுதல் என்பது கிறக்கம் தரும் அங்கீகாரம். தெளிவற்றவர்களை சுயமோகத்தில் திளைக்கவைத்து, தேக்கத்துள் தள்ளி செயலற்றதாக்கிவிடுவன விருதுகள். 1994இல் கேரள அரசு, ‘சிறந்த பழங்குடி இன உழைப்பாளர்’என்ற விருதை ஜானுவுக்கு வழங்க முன்வந்தபோது, மலைவாழ் மக்களின் பதின்மூன்று கோரிக்கைகளை அரசு செயற்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக அந்த விருதைப் புறங்கையால் தள்ளியிருக்கிறார் ஜானு.

தனது மக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டதைப் பற்றி ஜானு இப்படிச் சொல்கிறார்.

“எங்கள் ஆட்கள் வயலில் வேலை செய்யும்போது வரப்பில் நின்று ஓர் ஆள் கவனித்துக் கொண்டிருப்பான். கையில்லாத சட்டை போட்ட ஆள். பார்க்கப் பயமாயிருக்கும். எனக்கு அப்போது எதற்கும் பயம்தான். எங்கள் ஆட்களின் முதுகு இவ்வளவு வளைந்து இருப்பது தலைமுறை தலைமுறையாக இப்படிப் பயந்து பயந்து வாழ்ந்ததனால்தான் என்று தோன்றும். எங்கள் ஆட்கள் பேசும்போது முகத்தைப் பார்க்காமல் பேசுவதும் இந்தப் பயத்தினால்தான்.”

கட்சி,பண்ணையார்கள்,தோட்ட முதலாளிமார் எனப் பல்வகைப்பட்ட அதிகாரங்களும் இந்த எளிய மனிதர்களிடமிருந்து போட்டி போட்டுக்கொண்டு நிலங்களைப் பறித்துக்கொண்டன. பழங்குடியின மக்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதற்கென நிறுவப்பட்ட கட்சியானது பணக்காரர்களின் முகவர்களாக,இடைத்தரகர்களாகத் தொழிற்பட்டதை ஜானு பல இடங்களில் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் வாழ்வதற்கான நிலத்தை மட்டுமல்லாது இவர்களுக்குச் சொந்தமான இடுகாட்டையும்கூட, பணம் எனும் செல்வாக்கினால் சிலர் கையகப்படுத்திபோது அதனை எதிர்த்து அந்நிலத்தை மீளக் கைப்பற்ற வேண்டியேற்பட்டது. அந்நிலையில் காவற்துறை தலையிட்டு பழங்குடியினரைக் கைதுசெய்து நையப்புடைத்தது. ஒரு ஜனநாயக நாட்டில் அனைவரும் சட்டத்தின் முன் சமானமே என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்,சட்டைப்பை கனத்தவனின் விரலசைவிற்கு ஆடும் பொம்மலாட்டம் என்றே அது புரியப்பட்டிருக்கிறது. ‘நிலமே வாழ்வுரிமை’என்பது பறிக்கப்பட்ட துயரை ஜானு இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.

“பண்ணையார்கள் எங்கள் நிலத்தை மட்டுமே எடுத்துக்கொண்டனர். குடியேற்றக்காரர்கள் எங்கள் ஆட்களையும் கைவசப்படுத்திக் கொண்டு வேலை செய்ய வைத்தனர். அதையும் இதையும் சொல்லி நல்ல விளைச்சல் உள்ள நிலத்தையெல்லாம் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். ஒரு குப்பி சாராயத்துக்கும் ஒரு கழி புகையிலைக்கும் ஒரு சேலைக்கும் நிலத்தை விட்டுக்கொடுத்தவர்கள் நிறையப்பேர்.”

ஒரு ஆணாதிக்க சமூகத்திலிருந்து கொண்டு பார்க்கும்போது கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தனது மக்களுக்காக இத்தனை தீரத்துடன் போராடியிருப்பது வியப்பைத் தந்தது. ஆனால், மேற்கொண்டு புத்தகத்தை வாசித்துக்கொண்டு போகும்போது ஒன்று புரிந்தது. அதாவது,பழங்குடி இனக் குழுமத்தைச் சார்ந்த ஆண்களிற் பெரும்பாலானோர் திண்ணையிற் சோம்பிக் குந்தியிருந்து வெறுமனே நேரத்தைக் கழிக்கிறவர்களாகவும், காடுகளிற் சுற்றித் திரிபவர்களாகவும், வெளி ஆட்களின் ஆசை வார்த்தைகளில் கட்டுண்டு,அவர்கள் வாங்கிக்கொடுக்கும் சாராயத்திற்காக நிலத்தை விட்டுக்கொடுப்பவர்களாகவும் இருந்த காரணத்தினால் பெண்களே அந்தச் சமூகத்தில் நிலம் முதற்கொண்டு யாவற்றிலும் உழைப்பவர்களாகவும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவர்களாவும் இருந்திருக்கிறார்கள். தங்கியிருப்பவர்கள் தம்மைத் தாங்கிப் பிடித்திருக்கிறவர்களுக்குக் கட்டுப்படுவரென்ற பொதுநியதியின் அடிப்படையிலேயே ஜானு என்ற பெண், மக்கள் போராளியாக உருவாகியிருக்க வேண்டும்.

நீர்நிலைகள் நிரப்பப்பட்டு வீடுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. மரங்கள் அழிக்கப்படுவதனால் வானம் கைவிரித்துக்கொண்டிருக்கிறது. காடுகள் குறைந்துவரும் காரணத்தால் பறவைகள் துயரோடு தூர தூரமாய்ப் பறந்துவிட்டன. இயற்கையோடான உறவு இல்லாதொழிந்து கட்டிடக்காடுகளுக்கிடையில் நாகரிக விலங்குகளாக வலம்வரும் துர்ப்பாக்கியத்தை நாம் தேர்ந்தெடுந்திருக்கிறோம். இந்தப் புத்தகத்தில் காடு பற்றிய விபரணையும் அதை இழந்த ஏக்கமும் விரவிக்கிடக்கிறது. அழகிய சொல்லாடலைக் கொண்டமைந்த அந்த வரிகளை வாசித்தபோது காட்டிற்குள் நின்றுகொண்டிருப்பதைப் போன்றிருந்தது.

“சில பறவைகளின் குரலைக்கொண்டே நேரத்தையும் காலத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மரங்கள் இலைகளை உதிர்க்கும்போது மாதங்களை அறிந்துகொள்ளலாம். வெயிலைப் பார்த்துப் பகல் முடிவதையும், மேகத்தைப் பார்த்து மழை வருவதையும் அறியலாம். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் உயரே இருள் வீழ்வதைப் பார்த்தால் எங்கே காற்று வீசுகிறது என்பது தெரியும்………………………….. காட்டில் விழும் மழையும் காட்டில் விழும் வெயிலும் காட்டில் விழும் பனியும் எங்களுக்கு ஒன்றுதான். காலனிகளில் குடிசைகளில் எங்களை அடைத்தபோது நாங்கள் பறிகொடுத்தது நிலத்தை மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கைச் சூழலையுந்தான்.”

தங்களால் இழக்கப்பட்ட நிலங்களுக்காக ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தபோதிலும், போராட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும் அங்கும் பெண் என்பவள் அதிகாரம் மிக்கவர்களால் வேட்டையாடப்பட்டு போகப்பொருளாக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை ஜானுவின் வரலாற்றில் காணமுடிகிறது.

“அங்கிருந்த பெண் குழந்தைகளை படிப்பதற்கென்று சொல்லி ஹாஸ்டல் கட்டி அங்கே கொண்டு தங்கவைத்து அதிகாரத்துக்கும் பதவிக்கும் பணத்துக்குமாக பொறுப்பானவர்களே அவர்களைப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுடைய வேட்கையுள்ள அச்சமூட்டுகிற அதிகாரமுள்ள பலமான கைகளே எங்கள் பெண் குழந்தைகளை விலைபேசின.”

என்ற வரிகளை வாசித்தபோது ‘சோளகர் தொட்டி’மீளவும் நினைவில் எழுந்தது. தேடுதல் என்ற பெயரில் இதே போன்றதொரு விளிம்புநிலை(நன்றி மிதக்கும் வெளி) சார்ந்த பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வக்கிரங்கள், வன்முறைகள், குரூரம் வழிந்த காமக்களியாட்டங்கள் நியாயத்தின்பால் நம்பிக்கை கொண்ட எந்த மனிதரையும் (ஆண்-பெண் என்றில்லாமல்)ஆடிப்போகச்செய்துவிடும்.

“ஒரு சைக்கிள்கூட இல்லாத காலனிகளுக்காக ரோடுகள் அமைப்பது அதனால்தான்”

“திருமணம் ஆகாத தாய்மாரை உருவாக்கியதில் கட்சிக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் பெரிய பங்கு உண்டு. கட்சி ஆட்களின் குழந்தைகள் எங்கள் குடிசைகளில் வளர்வது கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமோ என்று தெரியவில்லை”

மேற்கண்ட எள்ளலின் பின்னாலிருக்கும் கசப்பு எத்தன்மையதாக இருக்க வேண்டும்! மனிதர்கள் மீதான நம்பிக்கை எவ்வளவு சிதைக்கப்பட்டிருந்தால் இப்படிப் பேசுதல் இயலும்!
காட்டின் மடியில் குழந்தைகளாக இருந்தவர்கள், காலனிவாசிகளாகவும் எஞ்சியோர் புரியாத நகரங்களின் அழுக்குகளில் அலைவுற எனவும் விதிக்கப்படுவதென்பது எத்தகைய துரோகம்.

பெரும்பாலும் ஒருவரைக் குறித்த வரலாற்று நூல்கள், அகப்படும் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து சுயதம்பட்டம் அடிப்பவையாகவும், குறிப்பிட்ட நபரின் பின்னால் ஒளிவட்டத்தைச் சுழலவிடுவனவாகவும், அதிமானுடச் சித்தரிப்பையுமே செய்கின்றன. அல்லது வறண்ட தத்துவார்த்தக் குவியலாக அமைந்து வாசிப்பவரை விடாப்பிடியாக வெளியேற்றிவிடும். எளிமையான மொழிநடையில் எழுதப்பட்ட, சிறிய புத்தகம் இது. காட்டுக்குள் ஒலிக்கும் பறவைகளின் குரலைப்போல ஒப்பனையற்ற உண்மையின் குரலாக அது இருந்தது.

தமிழக சகோதரர்களுக்கு…

“நாங்களும் மனுசங்கதான்! நாங்களும் மனுசங்கதான்!”

முற்குறிப்பு: நட்சத்திர வாரத்துக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பில்லை.

பொதுவில் சொந்தக் கதை… சோகக்கதை சொல்லி ‘ஜல்லியடிப்பதென்பதில்’எனக்கு உடன்பாடில்லை. அது ஒரு பயண அனுபவமாக இருப்பின், சமூக அக்கறை குறித்ததான பகிர்தலாக இருப்பின் எமது ‘வீட்டு’க் கதைகளைச் சொல்லலாம். மற்றபடி எழுத்தில் நாங்கள் வரலாமேயன்றி எழுத்தே நாங்களாயிருப்பது குறித்து எனக்குத் தயக்கங்கள் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை இன்று கொஞ்சம் மீறிப்பார்க்கலாமென்றிருக்கிறேன். எழுத்து ஒன்றுதான் என்னைப்போன்றவர்களுக்கு வடிகால். சாய்ந்து அழும் தாய்மடி என்ற வகையில் எனது கோபத்தை,வருத்தத்தை இங்கே வெளிப்படுத்தலாமென்றிருக்கிறேன். எனக்கான ஆறுதலை இதன்மூலம் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல இந்தப் பதிவின் நோக்கம். உயிருக்கு அஞ்சி ஓடோடி வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சகமனிதர்களாகப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்காகவும் இதனைப் பதிகிறேன்.

‘அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்பும்’ என்ற அனுபவப் பகிர்வுக்கு அனுதாபம்,ஆதங்கம்,கோபம்,துக்கம் எல்லாம் பொங்க பின்னூட்டமிட்டிருந்தீர்கள். அதைப் பார்த்தபோது இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்ட எமது சகோதரர்களுக்கு எங்கள் மீது இத்தனை அக்கறை இருக்கிறதே என்று பூரித்தது உண்மை. ஆனால், உள்ளுக்குள் ஒரு கவலை அலைந்துகொண்டிருந்தது. அதாவது வீடு தேடுவது பற்றிய கவலை. எனது நட்சத்திர வாரம் அந்தக் கவலையுடனேயே ஆரம்பித்தது. அதைக் காட்டிக்கொள்ளக்கூடாதென்றிருந்தேன். ஆனால், தொடர்ச்சியான நிராகரிப்பு தந்த கோபம் என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

நாங்கள் இப்போது இருக்கும் வீட்டில் கடந்த ஓராண்டாகக் குடியிருக்கிறோம். இது சகல வசதிகளையும் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு. பாவனைக்கு வேண்டிய தளபாடங்கள் அத்தனையையும் உள்ளடக்கிய இதன் மாத வாடகை 22ஆயிரம் இந்திய ரூபாய்கள். இதைத் தவிர கட்டிட பராமரிப்புச் செலவுக்கென மாதாந்தம் 1075ரூபாய்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வாடகைக்கு வீட்டை விட்டிருப்பவர் இந்த மாத ஆரம்பத்தில் வந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “நீங்கள் மிக நல்ல குடியிருப்பாளர். உங்களை நான் இழக்க விரும்பவில்லை. ஆனால், இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களை வாடகைக்கு வைத்திருப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் வரும் மாதம் வீட்டை விட்டுவிடுங்கள்”என்றார்.

கனடிய அரசாங்கம் எங்களை அந்த நாட்டுப் பிரஜையாக அங்கீகரித்து கனடிய கடவுச்சீட்டை வழங்கியிருந்தாலும் மனதளவில் நான் முற்றுமுழுதாக ஈழத்தைச் சேர்ந்தவளே. எனது கடவுச்சீட்டின் மூலம் உலகத்தின் எந்த நாட்டிற்கும் போகலாம் வரலாம். ஆனால், இந்தியாவுக்கு விசா எடுத்தே வரல் வேண்டும். எனது தாயாருடையதும் கனேடிய கடவுச்சீட்டே. இருவரிடமும் இந்திய விசா இருக்கிறது.

அக்காவின் பிள்ளைகள் மூவரும்(அக்கா ஒரு ஆணாதிக்கவாதியின் வதைகளைத் தாங்கவொண்ணாமல் தற்கொலை செய்து பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனார்.) அண்ணாவின் பிள்ளைகள் இருவருமாக ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். ஐவரும் பதினேழு வயதிலிருந்து இருபத்திரண்டு வயதிற்குட்பட்டவர்கள். எங்களுக்கெல்லாம் செல்லமான அண்ணாவின் பெண் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தவள். போர் அவளைப் படிப்பிலிருந்து துரத்தியது. ஏனைய நால்வரில் மூத்தவர் படிப்பை ஏற்கெனவே விட்டுவிட்டார். மற்றைய மூவரில் இரு பையன்களும் க.பொ.த. உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவர்கள். கடைசிப்பையன் திருகோணமலையில் பெயர்பெற்ற பாடசாலையான சென்ற்.ஜோசப் கல்லூரியில் பத்தாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தவன். உயிரோடு காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அவர்களையும் படிப்பிலிருந்து பிடுங்கியெடுத்துக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். முறையான கடவுச்சீட்டில் வந்து விசா முடிந்ததும் மற்றெல்லா ஈழத்தமிழர்களையும் போல போலிசில் பதிந்துவிட்டு பிள்ளைகள் ஐவரும் இங்கு என்னோடு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் இங்கு இருக்கவேண்டியுள்ளது. எல்லோரும் கணனி,ஆங்கிலம்,பாடசாலை என்று எங்கோ படித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

எங்களுக்கு வாடகைக்கு வீட்டைத் தந்திருப்பவர் சொல்லும் காரணம் என்னவென்றால் ‘விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு –பிள்ளைகளுக்கு- வீட்டை வாடகைக்குக் கொடுக்கமுடியாது’என்பதே. சரி அவரின் புரிதல் அவ்வளவுதான் என்ற வேதனையோடு வேறு வீடு பார்க்கத் தொடங்கினோம். எல்லாம் சரியென வந்து கைகூடும் தருணத்தில் ‘ஈழத்தமிழர்களா… அப்படியானால் வீடு இல்லை’என்று சொல்வதைப் பல தடவை கேட்டுவிட்டோம். ஒவ்வொரு நாளும் வீடு பார்க்கப் போவதும், அவர்கள் சரியென்பதும் பிறகு வீடு பார்க்கும் இடைத்தரகர் வாயிலாக நாங்கள் ஈழத்தமிழர்கள் என்று அறிந்ததும் ‘இல்லை’என மறுப்பதும் சில நாட்களாகவே நடந்துகொண்டிருக்கிறது.

நாங்கள் செய்த தவறுதான் என்ன? ஈழத்தமிழர்களாகப் பிறந்தது நான் வளர்க்கும் பிள்ளைகளின் குற்றமா? சொந்த மண்ணில் வாழ முடியவில்லை. வந்த இடத்திலும் வாழ இடமில்லை. நான் பன்னிரண்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தேன். அங்கு மிக மதிப்பிற்குரிய மனிதர்கள் என்று கருதப்படுபவர்களின் அறிமுகத்தையும் நட்பையும் கொண்டவள். எனது பிள்ளைகளும் என்னைப்போல மரியாதையான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களே. அவ்விதமிருக்க, முகமறியாத ஒன்றினால் தொடர்ந்தும் நாங்கள் துரத்தப்பட்டுக்கொண்டிருப்பது ஏன்?

நண்பர்களே! நாங்கள் குண்டு வைத்திருக்கவில்லை. சமூகவிரோதிகள் அல்ல. நாங்கள் சாதாரண நடத்தைகளையும் வாழ்வு குறித்த கனவுகளையும் கொண்ட சாதாரண மனிதர்கள். இன்னும் சொல்லப்போனால் போர் எங்களைப் புண்படுத்தியிருந்தாலும் அந்தத் துயரங்களால் நாங்கள் மேலும் பண்படுத்தப்பட்டவர்களாகவுமிருக்கிறோம் என்பதே உண்மை.

எனது கவலை என்னவென்றால், வெளிநாட்டிலிருந்து வந்து வாடகை கட்டக்கூடிய வசதியோடு இருக்கும் எங்களுக்கே இந்த நிலைமை என்றால், தமிழகம் எங்கள் தாய் அகம் என்று நம்பி வரும் ஏனைய, எங்களை விட வசதியில் குறைந்த ஈழத்தமிழர்கள் எங்கெங்கு எப்படியெப்படியெல்லாம் கிழிபடுவார்கள், அவர்கள் எத்தகைய துயரங்களை,அவமானங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே.

கனடாவில் வாழ்ந்த காலங்களில் உண்மையாக உழைப்பார்கள் என்ற காரணத்தினால் எங்களவர்களை விரும்பி வேலைக்குச் சேர்ப்பதும், சுத்தமாக வைத்திருப்பார்கள் என நம்பி வாடகைக்கு வீடு தருவதும்தான் நான் கண்டது. சிங்களவர்கள் பெருவாரியாக வாழும் கொழும்பில் கூட ‘தமிழர்கள் ஒழுங்காக வாடகை தருவார்கள்’என்ற காரணத்தினால் எந்தத் தயக்கமும் எவரிடமிருந்தும் எழுவதில்லை. அதிலும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மரியாதை வழங்குவார்கள். காரணம் எங்களை பணம் காய்க்கும் மரங்களாக(நாங்கள் குளிரில் விறைப்பதையும் வாழ்வை வெறுப்பதையும் எவரறிவார்)ப் பார்ப்பதே.

நான் இதை யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. கொல்லப்படுவதும் வன்புணர்வுக்காளாக்கப்படுவதும் சிறைகளில் வதைக்கப்படுவதும்தான் மட்டும்தான் வன்முறை அல்ல. மனங்களைச் சாகடிப்பதும் வன்முறை சார்ந்தது என்பதை இதை வாசிக்கும் ஒருவராவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. எழுத்தினால் பூமிப்பந்து புரட்டப்பட்டுவிடும் என்ற பூச்சுற்றல்களையெல்லாம் நான் நம்பவில்லை.

‘ராஜீவ் காந்தியைக் கொல்வதன் முன் எல்லாம் ஒழுங்காகவே இருந்தது’என்று சிலர் சொல்கிறார்கள். நண்பர்களே!மகாத்மா காந்தியை கோட்சே கொன்றான். இந்திராகாந்தியை ஒரு சீக்கியன் கொலை செய்தான். சீக்கியரில் இன்னமும் வஞ்சம் பாராட்டிக்கொண்டிருக்கிறீர்களா? கோட்சேயின் தலைமுறை அந்தக் கொலையால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதா…? யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற இடத்திலே பிரம்படி ஒழுங்கை என்ற வீதியில் வைத்து இந்தியப்படையினரால் கவசவாகனங்களை ஏற்றி உயிரோடு சிலர் நசித்துக்கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்தேன். அதற்காக நான் எவரையும் வெறுக்கவில்லை. வன்மம் பாராட்டவில்லை. போரின் விதிகள் நாமெல்லோரும் அறிந்தவை.

நீங்களே அறிவீர்கள்…உங்களில் எத்தனை பேர் எனக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள் என்பதை. கனடாவில் எனது கணவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களில் எழுபது வீதமானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களே என்பதை ஒரு உபரித்தகவலாகச் சொல்ல விரும்புகிறேன். மேலும், தமிழகத்து சகோதரர்களின் ஆதரவில்லாமல் ஈழத்தமிழர் போராட்டம் வெற்றிபெற மாட்டாது என்றுதான் நாங்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

‘உலகத் தமிழர்களின் தலைவர்’என்று சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தபிற்பாடு எங்களைக் கருணையோடும் அனுதாபத்தோடும் நடத்துவார்கள் என்று நம்பினோம். ஆனால், முன்னர் இருந்ததைக் காட்டிலும் குற்றவாளிகளாகத்தான் பார்க்கப்படுகிறோம். உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவரானவர் எங்களை மனிதர்களாகப் பார்க்க மறுப்பது ஏனென்பது துயர்தரும் புதிராயிருக்கிறது. நியாயமான ஒரு போராட்டத்தில் பங்கெடுக்காமல் ஓடி வந்ததற்குத் தண்டனையாகத்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படுகிறோமோ என்ற குற்றவுணர்வு இப்போது கூடுதலாக உறுத்துகிறது. இப்படியெல்லாம் இருப்பதற்கு திரும்பிப் போய்விடலாம் என்றே தோன்றுகிறது. முன்பொரு கவிதையில் எழுதியதைப் போல ‘இறப்பதற்கல்ல நாங்கள் இழிவுசெய்யப்படுதலுக்கு அஞ்சியே’இங்குற்றோம்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே! உங்களைப் போல இரத்தமும் சதையும் உணர்வுகளும் கனவுகளும் குடும்பத்தின் மீது நேசமும் காதலும் இழைத்த சாதாரண மனிதர்கள்தான் நாங்கள்.

அயர்ச்சி பொங்க மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம்:

“நாங்களும் மனுசங்கதான்! ஐயா! நாங்களும் மனுசங்கதான்!”

பிற்குறிப்பு: எனது சொந்த நலனைக் கருதி இதனைப் பதிவு செய்யவில்லை. எந்தவொரு வேண்டுகோள்களும் இதன் பின்னால் இல்லை. நாங்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் போல. எங்கேயும் பிழைத்துக்கொண்டு விடுவோம். அதற்கான வசதியும் இருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் அவமானத்தையும் நிராகரிப்பையும் எதிர்கொள்ளும் நாங்கள் உங்கள் சகோதரர்கள் என்பதை நினைவுபடுத்தவும் மனதளவிலேனும் ஒரு சிறு மாறுதலை வேண்டியுமே இந்தப் பதிவை இட்டேன். நானறியாமல் எவரையும் புண்படுத்தியிருப்பின் தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

3.06.2007

நேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

“உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான்”

தமிழ்நதி: இப்போதிருக்கும் இதே வீச்சுடன் பெண்கள் எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தடுத்த தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

குட்டி ரேவதி:கண்டிப்பாக நம்புகிறேன். இப்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த உடல் அரசியல் என்பதனோடு மட்டும் இந்த வீச்சு தேங்கிப்போய் நின்றுவிடாது. அதற்கான மாற்றத்தை இப்போது உணரமுடிகிறது. முன்னரே நான் குறிப்பிட்டதுபோல முன்பு சிவசங்கரி,வாஸந்தி போன்ற மேட்டிமைசாதியினர்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் விளிம்புநிலையில் இருக்கிறவர்களும் அதிகமாக எழுதுகிறார்கள். வேறு வேறு பின்னணிகளில் இருந்து எழுத வருகிறவர்கள் தாம் சார்ந்த பின்னணி சார்ந்த அரசியல் விடயங்களையும் எழுதக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இது இப்போதிருப்பதிலிருந்து வேறொரு கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இன்னுமொரு விடயம் என்னை மிகவும் பாதித்தது. அதாவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. எப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இந்தப் பிரச்சனையை முன்வைத்துப் பேசப் பின்னின்றதில்லை. அதைப் பற்றி நான் பேச நினைக்கிறபோதெல்லாம் அப்படியொரு விஷயம் இருக்கிறதா என்ன என்று கேட்பார்கள். உதாரணமாக இப்போது நொய்டாவில் நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். நான் இதைக் குறித்து சில களஆய்வுகள் செய்திருக்கிறேன். ஐந்து ஆறு வயதுடைய பெண்குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் கொலை செய்வதென்பது சாதாரணமாக நடந்திருக்கிறது. கருப்பை சீரழிந்த நிலையிலெல்லாம் நான் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பாலியல் அடையாளத்தைக் கூடப் புரிந்துகொள்ளவியலாத குழந்தையை உபயோகித்துக்கொள்வது பல வீடுகளில் நடந்துகொண்டுதானிருக்கிறது. குழந்தையானது அதை உடல்ரீதியாக அசௌகரியமாக உணருமேயன்றி என்ன நடந்ததென்று சொல்லக்கூடத் தெரியாமலிருக்கும். தவிர, தந்தை போன்ற தமது நெருக்கமானவர்கள் இவ்விதம் நடந்துகொள்ளும்போது அதை மறுத்து ஒன்றும் சொல்ல முடிவதுமில்லை. இதுகூட ஆணாதிக்கத்தினுடைய ஒரு வடிவம்தான். பெண்ணியத்தினுடைய நீட்சி எவ்விதம் அமையவேண்டுமெனில், குழந்தைகள் மீதான இந்தப் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு வளரவேண்டும். ஆண் தனது பாலியல் ரீதியான அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய ஒரு உயிராகப் பெண் எப்போதும் இருப்பது என்பது விசனத்திற்குரியது.

என்னை ஒரு கூட்டத்திலே ஒரு ஆண் கேட்கிறார்: “இந்தியாவில் எத்தனையோ வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. அணுவாயுதப் பிரச்சனை இருக்கிறது. பயங்கரவாதம்,முதலாளித்துவம்,ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடவா பெண்ணியம் உங்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது…?”என்று. அதற்கு நான் சொன்னேன் “நீங்கள் சொன்னவையெல்லாம் பிரச்சனைகள்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பெண்ணியம் என்பது பிரச்சனை கிடையாது. அதுவொரு கோட்பாடு,பயிற்சி முறை. ஆணும் பெண்ணும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு பாதையை உருவாக்குவது. அது எப்படிப் பிரச்சனையாகும்…?”என்று கேட்டேன். முதலாளித்துவத்தைச் செயற்படுத்துவதில் பெண் எங்கு வருகிறாள் என்பது எனக்குப் புரியவேயில்லை. அதற்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்…? எங்கோ ஓரிடத்தில் ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து நான்கு ஆண்கள் திட்டமிடுவதில் நமக்கென்ன பங்கு..?

இன்னொரு விடயம், நான் இந்தியாவிற்கான பெண்ணியம் என்று சொல்வது வந்து தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பெண்ணியம் என்று பொருளல்ல. ‘சாதீயமற்ற பெண்ணியம்’என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எல்லா மட்டங்களிலும் சாதியினால் அறையப்பட்டிருக்கும் பெண்களை விடுதலை செய்வதுதான் ‘தலித் பெண்ணியம்’என்பதன் பொருள். இந்தியாவில் பெண்ணியம் என்று உருவானால் அது எல்லா அடுக்குகளிலும் இருக்கும் பெண்களை விடுவிப்பதாக அமையவேண்டும். ஒரு பெண் விடுதலை அடையும்போது பிரமையிலே கட்டுண்டிருக்கும் ஒரு ஆணும் விடுதலை அடைவதாகவே நான் கருதுகிறேன்.

“நீங்கள் தலித் பெண்களுக்காகப் பரிந்து பேசுகிறீர்கள். மேல்சாதிப் பெண்களுக்கு ஒடுக்குமுறை கிடையாதா….?” என்று மேல்சாதியைச் சார்ந்த பெண் படைப்பாளிகள் ஒருதடவை பாமா என்ற எழுத்தாளரைக் கேட்டபோது அவர் சொல்லுகிறார்: “மேல்சாதிப் பெண்களுக்கு ஒரு பக்கத்திலிருந்து அதாவது மேல்சாதி ஆண்களிடமிருந்து மட்டும்தான் ஒடுக்குமுறை வருகிறது. ஆனால், தலித் பெண்கள் மீது மூன்று விதமான ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. ஒன்று, மேல்சாதி ஆண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. இரண்டாவது,மேல்சாதி பெண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. மூன்றாவது, கீழ்ச்சாதி ஆண்கள் தங்களது பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை.”இந்த அடிநிலை ஒடுக்குமுறையிலிருந்து முதலில் விடுபட்டால்தான் எல்லா அடுக்குகளிலிருக்கும் பெண்களுக்கும் விடுதலை என்பது சாத்தியமாகும் என்பது எனது கருத்தாகும். அதற்கு சாதியம் என்ற தளையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையைப் பார்க்கும்போது, முதலில் சாதிய ரீதியான பிரச்சனையாகவும் அதற்குப் பிறகு பாலியல் ரீதியான பிரச்சனையாகவும் அதனையடுத்து வர்க்கரீதியான பிரச்சனையாகவும் அதை அணுகுவதே சிறப்பு. ஆனால், எல்லாம் தலைகீழாகப் பார்க்கப்படுவதனால்தான் இங்கே தமிழ்நாட்டிலே எந்தவொரு முழுமையான மாற்றமும் நடக்கமாட்டேனென்கிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்கெல்லாம் தாங்கள்தான் காரணமென திராவிட இயக்கங்கள் பேசிக்கொள்கின்றன. பெரியார் கூட கடவுள் வழிபாட்டை மறுப்பதனூடாகத்தான் பகுத்தறிவைப் பார்த்திருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடயங்களை முன்வைக்கவில்லை என்று இன்று தலித் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்.

தமிழ்நதி:பெண்கள் குறித்த விழிப்புணர்வை அவர் பரப்பவில்லையா…?

குட்டி ரேவதி:ஆமாம் சொன்னார்… ‘பெண்கள் தங்களுடைய கருப்பையை அறுத்தெறிந்து விட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’என்று சொன்னார். ஆனால், என்ன மாற்றம் வந்தது…? குஷ்புவை விளக்குமாற்றைக் காட்டி விரட்டினார்கள். திராவிட இயக்கங்கள் மேடையில் பேசும்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் - ஒரு தனிப்பட்ட பெண்ணின் மனத்தில் மாறுதல் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்களும் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், தாங்களெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாகத்தான் அவர்களுடைய மனைவிமாரெல்லாம் நம்பிக்கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையைத் தளர்த்தும் எந்தவொரு விடயத்தையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தமிழ்நதி:உங்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’எனத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’தொகுப்பிலும் நான் வாசித்தவரையில் ‘தனிமை’, ‘உள் தனிமை’ என்ற இரண்டு கவிதைகள் இருக்கக் கண்டேன். பெண்களின் தனிமை என்பது உங்களை மிகவும் உறுத்துவதாக அமைந்திருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

குட்டி ரேவதி:நீங்கள் ஒருவர்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்கு என்றில்லை, நீங்களே கூட கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீர்கள்… ‘நான் மிகவும் தனிமையில இருந்தேன்’ என்று. பொதுவாக ஆண்களால் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரே வெளி தனிமைதான். வீட்டின் ஏதாவது அறைகளிலொன்றில் குறிப்பாக சமையலறையில் பெண்களாகிய நாம் இருப்போம். அதுதான் வழமை. எல்லாப் பெண்களும் அளவில்லாத ஒரு தனிமையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. இது என்னுடைய ஒரு கண்டுபிடிப்பு என்றுகூடச் சொல்லலாம். ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’என்பது என்னுடைய ஒற்றைக்குரல் அல்ல. நான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்களுடைய வெளி தனிமையால் மூழ்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து போய்விடக்கூடாதென்பதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சமையலறை என்ற வெளி. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’என்று அம்பைகூட ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். ஆணாதிக்கக் கட்டமைப்பின் இறுக்கத்தினால் உங்களுக்குக் கிடைக்கிற ஒரு தனிமை. ‘உடலே இல்லாத வெளியில் நாங்கள் மிதந்துகொண்டிருந்தோம்’என்று அம்பை ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதாவது, உடலை விரிப்பதற்கான ஒரு வெளிகூட உங்களுக்குக் கிடையாது.எத்தனை பெண்கள் தங்களுடைய உடலைத் தாங்களே பார்த்திருப்பார்கள்…? மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்புவதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால்,அவ்வாறு செய்வதுகூட ஒரு தகாத செயல் என்பதான எண்ணம் எப்படியோ எங்கள் மனங்களிலே படிந்திருக்கிறது. எங்களை நாங்கள் பார்க்கக் கூச்சப்படுகிறோம் என்று சில மாணவிகள் என்னோடு பேசியபோது சொன்னார்கள். ஏனென்றால், நம்முடைய உடலில் நமக்கு உரிமையில்லை… அது வேறொருவருக்கு உடமையானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் நாளின் இருபத்துநான்கு மணித்தியாலமும் நாம் உடலைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் - அதாவது, இந்த உடலை வேற்று ஆட்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று என்று பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். பாலியல் விகற்பத்திற்கு ஆட்பட்டுவிடாமல் உடலைப் பாதுகாத்துக்கொள் என்று அடித்துச் சொல்லப்படுகிறது.இதெல்லாம் இயல்பாகவே ஒரு தனிமைக்கு இட்டுச்செல்கிறது. உங்களைச் சுற்றி எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான். அந்தத் தனிமையைக் கட்டியமைப்பதற்கான விடயங்கள்தான் குடும்பம்,சாதி,மதம் போன்றவை. இவற்றினடிப்படையில்தான் நான் தனிமையை முக்கியமான பேசுபொருளாகப் பார்க்கிறேன்.

தமிழ்நதி:உங்களுடைய அடுத்த கவிதைத் தொகுப்பைப் பற்றிச் சொல்லுங்களேன்.

குட்டி ரேவதி: ‘உடலின் கதவு’என்பது அதன் தலைப்பு. அந்தப் பெயரைப் பார்த்ததும் உறுப்பைச் சார்ந்தது அப்படியென்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அது ஒரு சொல்லாக, ஒரு முத்தமாக, ஒரு அனுபவமாக, நல்ல கலந்துரையாடலாக இருக்கலாம். அது உங்கள் உடலைத் திறந்துகொடுக்கலாம். அந்தத் தலைப்பிலே உண்மையில் ஒரு கவிதைகூட இருக்காது. அந்தத் தலைப்பின் சாயலை பல கவிதைகள் கொண்டிருக்கும். இப்போது நான் செய்துகொண்டிருக்கும் வேலைக்கு, பயணத்துக்கு அந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. துயரமான ஒரு தருணத்தில் வருகிற தோழியின் தொலைபேசி அழைப்பும் விசாரிப்பும் ஒரு கண்ணீர்த்துளியாக கன்னத்தில் உருள்கிறபோது அந்த ஒரு விசாரிப்பு உடலின் கதவாக அமைகிறது அல்லவா? அந்த முக்கியமான தருணங்களின் நெகிழ்வைக் கருதித்தான் அந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.

தமிழ்நதி:பொதுவாக உங்களுடைய கவிதைகளிலே ஒரு காட்சிப்படுத்தலைக் காணமுடிகிறது. கவிதை மொழியில் இது எப்படிச் சாத்தியமாகிறது?

குட்டி ரேவதி:உண்மையில் ‘காட்சிப்படுத்தல்’என்ற இந்தப் படிமத்தைத் தமிழில் தொடக்கிவைத்தவர் பிரமிள்தான். படிமம் என்றால் ஒன்றின்மீது ஒன்று படிந்து வார்த்தையை அர்த்தப்படுத்துவது என்று பொருள். கவிஞன் வார்த்தை அடுக்குகளை மூடி மூடி ஒரு காட்சியிலிருந்து அல்லது ஒரு படைப்பிலிருந்து வெளியே வருகிறான். கவிஞனால் மூடப்பட்ட அடுக்குகளைக் கலைத்துக் கலைத்துப் போட்டு அந்தக் காட்சியைக் கண்டுபிடிப்பவனாக வாசகன் இருக்கிறான். நவீன கவிதையில் காட்சியைப் பிரதானப்படுத்தி அதற்கான சொல்வீச்சைத் தேர்ந்தெடுக்கும்போது பொருளற்ற சொற்களையல்லாமல் கூர்மையான சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லையென்றால் படிமத்தின் நோக்கம் அடிபட்டுப்போகிறது. இந்தக் காட்சிப்படுத்தலுக்கு தமிழில் நீண்ட மரபு இருக்கிறது. தமிழர்கள் மிகுந்த அழகியல்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம். அழகியல் என்பது ஆழத்திலிருந்து மலர்வது, அதை ஒரு ஒப்பனை என்பதாகப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். நீங்கள் தீவிரமாக ஒரு விடயத்தில் ஈடுபடும்போது அதன் இறுதி விளைவாகக் கிடைப்பதுதான் அழகியல் என்றும் சொல்லலாம். படிமம், காட்சிப்படுத்தல், அதற்கான சொல் தேடுதல் என்பதன் வழியாக அழகியலைச் சாத்தியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நதி:உங்கள் மனதில் இருக்கிற கவிதையை உங்களால் வார்த்தைகளில் முழுமையாக வெளிக்கொணர முடிகிறதா?

குட்டி ரேவதி: அது மிகவும் கடினம். எல்லா இலக்கியவாதிகளும் சொல்வார்கள் நாங்கள் நினைத்த கவிதையை எழுதவேயில்லை என்று. அது அப்படியே அழிந்துபோய்விடுவதுமில்லை. அதனுடைய சாரம் காத்திருந்து வேறொரு கவிதையில் வேறொரு வடிவத்தில் வெளிப்படும். அதற்கு நாங்கள் கவிதையின் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஆழத்திலிருக்கும் அந்தக் கவிதையின் கவித்துவத்தை நாங்கள் வெளியில் கொண்டுவர முடியும்.சில கவிதை வரிகள் சட்டென்று வந்து விழுந்துவிடும். சில நேரங்களில் திருத்தங்கள் செய்யவேண்டியேற்படும். நிறைய திருத்தங்களை வேண்டி நிற்கும் கவிதையை நான் விட்டுவிடுவேன். கவிதையை எழுதுபவர்தான் முதல் விமர்சகராக இருக்க முடியும். தமிழில் சுய விமர்சன மரபு என்ற ஒன்று இல்லாமற் போனதுதான் பொதுவாக எல்லா இலக்கியங்களுமே நலிந்து போவதற்கான காரணமாக இருந்திருக்கிறது.

நிறைவு

மழையின் இரவுகளில் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன

மழையின் இரவுகளில்தாம் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன

பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த நாவல்களிலுள்ள
கதைமாந்தர்களான முதிய கிழவனும் அகதிப் பெண்ணும்
ஆட்டுக்குட்டியும் போலீஸ்காரனும்
தங்கள் கதைகளிலிருந்து வெளியேறி
நகரை உலா வருகின்றனர்
வாசகர்களோ சாலை நடைபாதைகளின் தாழ்வாரங்களில்
ஒதுங்கி நிற்கின்றனர் மழையின் கூச்சல் ஓயட்டுமென
அந்த அகதிப்பெண் தனது உடலின் ரசம்
புத்தகச்சுவரெல்லாம் வழியக் கீறி வெளியேறி
மழை பெருகிய வழிகளை நீந்திக் கடக்கிறாள்
காமத்தின் சாரல் முகத்தைக் கிழிக்கத்
தனியே கதைகளுக்குள் உறங்கும் கன்னிப்பெண்களும் ஏராளம்
மழைக்கு ஒதுங்கிய புறாவும்
இப்படித்தான் படைப்பாளியின் கதைக்குள் நுழைந்தது
புத்தகங்கள் நனையாமலிருக்க ஜன்னல் கதவுகளை மூடும்
அத்தோல் நரைத்த கைகள்
தனது அடுத்த புனைவை நெய்யத் துடிக்கின்றன

‘முலைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

3.05.2007

ஓ கனடா…!

உயர்தர வகுப்பில் புவியியல் படித்தவேளையில், கனடாவை நிறம் தீற்றிப் பிரித்தபோது, அது மிகப்பரந்த நிலப்பரப்பெனத் தெரிந்துகொண்டோம். அமெரிக்காவை அண்மித்த நாடு(அண்டிப் பிழைக்கும் என்றல்ல) எனவும் அங்கிருக்கும் ஒன்ராறியோ ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றெனவும் கற்பிக்கப்பட்டது. நாங்களாகத் தெரிந்துகொள்ளும் வரையில் ஒவ்வொன்றைக் குறித்தும் எங்கள் மனதிலொரு சித்திரம் இருக்கும். அப்பா என்றால் கண்டிப்பும்… அம்மா என்றால் சோறு போடுவதும்தான் பெரும்பாலானோருக்கு நினைவு வரும். பாடசாலை என்றால் வலிக்கும் பிரம்பாலும், சுவைக்கும் பிஸ்கெட்டாலும் ஆனதென்ற ஞாபகம் பத்துவயது வரை இருந்தது. பாலும், தோடம்பழச் சுவையுடைய இனிப்பும் கையில் கிடைத்ததும் ஓசைப்படாமல் வெளியேறி அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டில் இருந்தது, பாலர் பள்ளிக்கூடத்திற்கு நான் போன காலங்களில் நடந்தது.

தேசப்படத்தில் விரல்களால் தொட்டுப் பார்த்த கனடாவில் காலம் அள்ளியெறிந்தபோது, முன்னர் கற்பிக்கப்பட்ட சித்திரங்கள் எல்லாம் அழிந்துபோயின. குளிரும் தனிமையும் இணைந்தொரு புதிய வரைபடத்தை எழுதின. மிகச் சடுதியாக இருள் சூழ திசை தொலைந்த திகைப்புச் சூழ்ந்தது. தனிமை… குளிர்… இரவில் அருகில் உறங்க ஒரு துணை… வேறொன்றுமில்லை! இலையுதிர்காலம் வார்த்தைகளில் விவரிக்கவொண்ணாத அழகுதான்! நிறங்கள் எழுதிய கவிதைதான்! ஆனால், அந்தக் குறிப்பிட்ட இலையுதிர்காலம் தனிமையெனும் கறுப்பு நிறத்தினாலானது.

வெள்ளைக்காரன் இலங்கைத்தீவை ஆண்டு முடித்து, அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, தமிழர்களின் தலைவிதியை பெரும்பான்மைச் சிங்களவர்களின் கைகளில் தாரைவார்த்துவிட்டுப் போகும்போது போனால் போகிறதென்று ஆங்கிலத்தையும் அதுசார்ந்ததொரு மேட்டுக்குடியையும் விட்டுவிட்டுப்போனான். அதனால் அப்பாக்களும், மாமாக்களும்(கவனிக்க, அப்பாக்களும் மாமாக்களும்தான்) ஆங்கிலத்தில் பிளந்துகட்டுகிறவர்களாக இருந்தார்கள். பின்வந்த நாட்களில் பெரும்பாலான ஈழத்தமிழர்களின் பயில்மொழி தமிழாயிற்று என்பதறிவோம். ஆங்கிலம் துணை மொழிதான். இன்னொரு பொருளில், தூங்கிவழியத் துணை செய்யும் மொழி. வகுப்பு அரட்டைக்களமாக மாறியிருந்தால் ஆங்கிலப் பாட வேளை என்பது பொது அறிவு படைத்தவர்களுக்குப் புரியும். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லாமலே கூட சில பாடசாலைகள் இயங்கியதை இப்போது நினைத்தால், நாங்கள் பெரிய கெட்டிக்காரர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆங்கிலம் பிடிக்காதவர்கள் அல்லது படிக்காதவர்கள் தமிழில் ‘புலி’களாக ஆனதொரு உபகதை.

கனடாவில் ஐந்து வயதிலிருந்து அறுபது வயதுவரை அதற்குப் பிறகும் கூட பள்ளிக்கூடம் போகலாம். தாத்தா-பேத்தியெல்லோரும் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பது முதலில் வியப்பைத் தந்தாலும், வயதானவர்களைப் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பத்தில் கூச்சமாக இருந்தபோதிலும் குளிரைப்போல எல்லாம் பழகித்தான் போயிற்று. ஒரு சுபநாளில் ஆங்கிலம் படிக்கவென்று பள்ளிக்கூடம் போனபிறகுதான் தெரியவந்தது, ஆங்கிலம் தெரியாத கெட்டிக்காரர்கள் உலகமெங்கும் இருப்பது. மஞ்சள் நிறத்தில் பெரிய முகங்களுடன் எப்போதும் விறைத்தபடியிருக்கும் அடங்காத் தலைமயிருடன் இடுங்கிய சிறிய கண்களோடிருந்த சீனாக்காரர்கள் (அப்போது அத்தோற்றத்துடன் இருந்த எல்லோரும் சீனாக்கார்கள். கொரியா,வியட்நாம்,இந்தோனேசியா இந்தப் பெயர்களெல்லாம் பின்னர் தெரியவந்தவை) உச்சரித்த ஆங்கிலத்தைக் கேட்டவுடன் எங்கள் வகுப்பில் இருந்த தமிழர்களுக்கு அசாத்தியத் துணிச்சல் பிறந்துவிட்டது. சேக்ஸ்பியரை நெருங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டோம். ஆங்கிலத்தைத் துவைத்துத் தோளில் போடுவதற்கும் ஆயத்தமாகிவிட்டோம். கனடாவிற்குப் புலம்பெயர்பவர்களின்; தனிமையை முதலில் துடைக்கும் கைக்குட்டைகள் பள்ளிக்கூடங்கள்தான் என்று சொன்னால் அது மிகைப்படுத்தலல்ல. அவ்வாறு போகாதவர்களைத் தொழிற்சாலைகளின் இயந்திரப்பற்கள் அரைத்துச் செரித்துவிடுகின்றன.

பேரூந்தின் பயணச்சீட்டை முத்திரை வடிவத்தில் முன்னரே வாங்கிவைத்துக்கொள்ளலாமென்பதும், அதைக்கொண்டு நகரின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம் வரையும் பயணித்துவிடலாமென்பதும், நூலகத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீட்டிற்கு(பதிந்துதான். சுட்டுக்கொண்டல்ல) எடுத்துச்செல்லலாமென்பதும், நகர வாழ்விலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ளக் கொள்ள உதவும் பூங்காங்கள் ஆங்காங்கே அமையப்பெற்றிருப்பதும் அதில் பறவைகள் நடத்தும் சங்கீதக் கச்சேரிகளும் வியப்பளித்த அனுகூலங்கள். காலையில் நடந்து செல்லும்போது எதிரே வருபவர் எவரெனினும் தலையசைத்துப் புன்னகைத்து வணக்கம் சொல்லும் நல்ல பழக்கத்தை முதிய வெள்ளையர்களிடமிருந்து கற்றுக்கொண்டதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிறம்,மொழி,இன பேதமறியாத குழந்தைகளின் சிரிப்பும் காலைப் பனித்துளி போல இதமானது.

இருந்தபோதிலும், அந்நாட்களில் பனியில் நனைந்து பாதையோடு ஒட்டிக்கிடந்த பலவித நிறங்களாலான இலைகளை மிதித்தபடி நடந்து வீட்டிற்கு வரும் பாதையெங்கும் ஒரே ஒரு கேள்விதான் அலைந்துகொண்டிருந்தது. “இங்கே என்ன இருக்கிறதென்று எல்லோரும் ஓடி ஓடி வருகிறார்கள்…?” அந்தக் கேள்வியை முன்பும் ஏதோ ஒரு காலத்தில் கேட்டுக்கொண்டு அந்த வழியில் நடந்துகொண்டிருந்ததான விசித்திரமான நினைவுகூட வந்ததுண்டு. அதன் காரணம் யாதென யாராவது தத்துவக்காரர்களைக் கேட்டால் தாவோ, நோவோ என்று ஏதாவது பெயர்களைச் சொல்லிப் பயங்காட்டக்கூடும்.

மொழிக்குருடு நீங்கும்வரை தொலைக்காட்சியில் ‘ஊமைப்படங்களாகப்’பார்த்துக்கொண்டிருப்பதில் பொழுது கழிந்தது. நீண்ட பகல்களாலும் குறுகிய இரவுகளாலும் ஆன சில ஆண்டுகளைத் துரத்திப் பின்னொருநாள் விழித்துப் பார்த்தபோது இயற்கை என்பது எத்தனை அழகு என்பது புரிந்தது.

ஊரில் இருந்தகாலத்தில் ‘கொக்கு வெள்ளை’என்றோம். கொக்கைக் காணாதவர்கள் ‘பால் வெள்ளை’என்றோம். கொக்கையும் பாலையும் பின்தள்ளிவிட்டது பனி வெண்மை. விடிகாலையில் எழுந்து பார்த்தால் கண்கூச வைக்கும் வெண்மை. அதற்கு இணையாக எந்தச் சொட்டு நீல வெண்மையையும் ஒப்பிடவியலாது. உலகம் சட்டெனத் தூய்மையாகிவிட்டதுபோல வீடுகளும் வீதிகளும் மரங்களும் வாகனங்களும் பனியால் போர்த்தப்பட்டிருக்கும் அழகைப் பார்த்து பனி உருகும்வரை மனம் உருகும். குளிரால் எலும்பும் உருகும். உயிரின் வடிவம் நீர் எனில் உயிர் உறையும். பனித்துகள் தலையில் மீசையில் ஆடையில் ஒட்டியிருக்க ‘விதியே’என்று வீதியில் போய்க்கொண்டிருப்பவர்களைக் காண வருத்தமாகக் கூட இருக்கும். காலநிலை குறித்து யாரோ ஒருவர் எழுதியிருந்தது நினைவில் வருகிறது.

மரங்கள் அம்மணமாகியபோது
மனிதர்கள் போர்த்திக்கொண்டார்கள்.
மரங்கள் போர்த்திக்கொண்டபோது
மனிதர்கள் அம்மணமானார்கள்.

குளிர்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பமாவது எந்தக் கணத்திலென்று புரிவதில்லை. நட்பு காதலாக மாறும் கணத்தைப் பிரித்தறிய முடியாததுபோலத்தான் அங்கு காலநிலை மாறுவதும். சொல்லாமல் புகுந்துவிட்ட காதலினால் எழில் வழியும் இளம்பெண்ணைப்போல புசுக்கென்று பொங்கிப் பொலியும் மரங்கள். கடினமான அந்த மரங்களுக்குள் காலம் வரும்வரை கண்மூடித் தவமிருந்தனவா அந்தப் பசுந்தளிர்கள் என்று வியந்துமாளாத அழகு அது. சிலநாட்கள்தான் இளம்பச்சைத் தளிர் முகம் காட்டும். இருந்தாற்போல அடர்பச்சையும் பூவுமாய் திருவிழாவுக்குப் புறப்பட்ட பெண்ணாய் புதுக்கோலம் காட்டும். அதிலும் சில மரங்கள் இலைகளே இல்லாமல் பூக்களாலானவை. அத்தகைய மரங்கள் இருபுறமும் நிற்கும் சாலையோரத்தில் விடிகாலையில் நடந்துபோவதற்கிணையான சுகம் காதலிலும் இசையிலும் மட்டுமே கிடைக்கும்.

இலையுதிர்காலமென்பது மழை நேர வானவில் போல மரங்கள் எழுதும் வானவில். இயற்கையின் மீதான காதலை இழந்தவர்கள்தான் அதீத அழகுணர்ச்சி ஆகாதென்கிறவர்கள். வாழ்வின் பக்கங்கள் அத்தனையையும் கண்ணீரும் குருதியும் மட்டுமே எழுதுவதில்லை. சிரிப்பாலும் சில அற்புதமான தருணங்களாலும் கூட எழுதப்பட்டதே வாழ்க்கை.

எனது உடமை என்று நிலத்தை எவரும் உரிமை கொண்டாட முடியாத பல்லின கலாச்சார நாடாக கனடா மாறிவருகிறது. எங்கேயும் போல கறுப்பு-வெள்ளை பேதங்கள் அடியாழத்தில் இருந்தாலும், ஒப்பீட்டளவில் யாரும் யாரையும் அடிமைகொள்ளக்கூடிய பெரும்பான்மையினராக இல்லை என்பதே அதன் சிறப்பு. ஒரு புகையிரதத்தில் வெள்ளை, மஞ்சள், கறுப்பு, மண்ணிறம் என்ற எல்லா முகங்களையும் காணலாம். ‘வெள்ளை என்றால் சிறப்பு’, ‘கறுப்பு என்றால் கள்ளன்’, ‘மண்ணிறம் என்றால் குறைவு’, ‘மஞ்சள் என்றால் சுயநலம்’போன்ற பொதுப்புத்திசார் கருதுகோள்களும் இல்லாமலில்லை.
ஈழத்தமிழர்களுள்ளேயே எத்தனை பிரிவினைகள்! (அப்படியொன்றும் கிடையாது என்று போர்த்து மூடிக்கொள்பவர்கள் அறுவைச் சிகிச்சையைத் தள்ளிப்போட்டுப் புண்ணைப் புரையோட விடுபவர்கள்) எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த, ஆங்கிலம் தெரிந்த, தங்களை மேட்டுக்குடியினராக, வெள்ளைக்காரர்களுக்கு இணையானவர்களாகக் கருதும், ‘மம்மீ!-டாடி’என்றழைக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோரான ‘வெள்ளைக் கொலர்’(கொலருக்குத் தமிழ் என்ன…?) தமிழர்கள், தொண்ணூறுகளின் பின் வந்து உணவகங்களிலும், தொழிற்சாலைகளிலும் உடலையும் ஆன்மாவையும் தேய்த்து பொருளாதார ரீதியாக நிமிர்ந்தபடி கனேடிய அரசாங்கத்திற்கு வரிவருமானத்தைத் தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கும் ‘நீலக் கொலர்’தமிழர்கள், இரண்டாயிரத்தின் பின் கால்பதித்து குடிவரவுத் திணைக்களத்தினரிடம் கதை கதையாகச் சொல்லியலைந்து தமது இருப்புக் குறித்த நிச்சயமின்மை தொடர்பான மனவுளைச்சல்களோடிருப்பவர்கள் என ஈழத்தமிழர்களையே பல்வகைப்படுத்தலாம். தவிர, சாதியாலும் சங்கங்களாலும் ஊராலும் தாம்சார்ந்த அரசியல் கொள்கைகளாலும் தம்மைச் சுற்றி வரைந்த வட்டங்களாலும் வேறுபட்டவர்கள். ஆயினும், பெரும்பாலான எல்லோரும் சந்திக்கும் ஒரே புள்ளி எமக்கென்றொரு நாடு வேண்டும் என்பதுதானாயிருக்கும். தேச மறுப்பாளர்கள் என்று நான் யாரையும் சந்தித்ததில்லை என்பதன் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறத் துணிந்தேன்.

அங்கிருந்த காலத்தில் மிகவும் மனதைப் பாதித்த ஒன்றெனில் அது முதியோரது தனிமைதான். போர் குறித்த அச்சத்தை விட புகலிடங்களில் விளைந்த தனிமை குறித்த அச்சம் அவர்களைப் பாதித்ததை, அங்கு ஒலிபரப்பாகும் வானொலிகளில் ஒலித்த நடுங்கும் குரல்கள் வழி கேட்கக்கூடியதாக இருந்தது.

படித்த, நல்ல உத்தியோகங்களில் அமரும் தகைமை பெற்ற இளைய தலைமுறை ஒன்று உருவாகிவருவது ஒருவகையில் ஆறுதலளிப்பதென்றால், புதிய நிலம் வழங்கிய எல்லையற்ற சுதந்திர வெளியாலும், எளிதில் ஆயுதங்கள் கிடைக்கப் பெறுதலாலும், மிதமிஞ்சிய சக்தியை எங்கு இறைப்பதெனும் இளமைத் துடிப்பாலும் சில இளைஞர்கள் தங்களை ‘ரேமினேட்டர்’களாகக் கருதி அலைவது எதிர்காலம் குறித்த பயம் கலந்த கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.

உலகத்தின் எந்த நாட்டிற்கும் (இந்தியா தவிர்ந்த) ‘விசா’எடுக்காமலே சென்றுவரக்கூடிய கனடியக் கடவுச்சீட்டு பெறுமதியானதே. இலஞ்சம், ஊழல் போன்ற பெருவாய்ப் பேய்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு என்பதும் உண்மையே. இனம்,மதம்,நிறம்,மொழியில் வேறுபட்ட பல இலட்சக்கணக்கான மக்கள் நீரோட்டத்தில் ஒருதுளியாய் உறுத்தாமல் கலந்திருப்பது உன்னதமே. கிழமைக்கொரு கலாச்சார நிகழ்வு, பரத நாட்டிய அரங்கேற்றங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், ஊர் ஒன்றுகூடல்கள், பத்துக்கு மேற்பட்ட பத்திரிகைகள், வார இறுதிநாட்களில் உறவினர் வீடுகளில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள், அறுபதாம் கல்யாணங்கள், அங்கு வீணாக இறையும் உணவுகள், சத்தமெழ உடைபடும் ஷம்பெய்ன்கள், பியர்ப் போத்தல்கள், தொட்டுக்கொள்ள ஊறுகாயாய் அரசியல், ஊர்ப்புதினம்…. மேப்பிள் மர நிழலில் குறைவற்ற வாழ்வுதான். இருந்தும், ‘வா… வா…’என்றழைக்கும் ஊரின் வசியக்குரலை எப்படித்தான் மறுதலிக்க?

நேர்காணல்:கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-2

பகுதி -2

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் ‘கலாச்சாரக் காவலர்கள்’ என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.


“தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும்”

தமிழ்நதி: இந்தப் பத்தாண்டுகளில் முன்னரைக் காட்டிலும் பெண்களின் எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றன. பேசப்படுகின்றன. முன்னர் பெண்கள் இந்தளவிற்கு எழுதவில்லையா…? அல்லது எழுதியும் கவனிக்கப்படவில்லையா…? இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழலுக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
குட்டி ரேவதி: முன்பு எழுதவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அம்பை குறுநாவல்கள்,சிறுகதைகள்,நாடகங்கள் என்று நல்ல ஆளுமையோடு எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கே நிறைய வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் ‘விளக்கு’விருது கொடுத்திருக்கிறார்கள். இடையில் ஒரு இருபது ஆண்டுகள் வாஸந்தி,அனுராதா ரமணன்,ராஜம் கிருஷ்ணன்,சிவசங்கரி போன்ற மேல்சாதியைச் சேர்ந்த பெண்கள்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் வெகுஜன இதழ்களில் இடமிருந்தது. அவர்கள் வெகுஜன இதழ்களால் இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டார்கள். ஆனால், வாஸந்தி போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்த ஒரு இருபது ஆண்டுக் காலம் தீவிர இதழ்களில் பெண்ணியம் சார்ந்த கருத்தாக்கங்கள் இடம்பெறவில்லை. அதற்கு இன்னொரு காரணம் என்னவென்று பார்த்தீர்களானால் தீவிர இதழ்கள் மேல்சாதி ஆண்களின் கைகளில் இருந்தன. அவர்கள் யாரையும் உள்ளே வரவிடாத சூழ்நிலையில், அம்பை கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் எழுதியிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். அவரிடம் கேட்டால் தான் பட்ட சிரமங்களை எப்படி எதிர்கொண்டார் என முழுமையாக அறிந்துகொள்ள இயலும்.
அதுக்கப்புறம்தான் மெல்ல மெல்ல பெண்களின் கவிதைகள் வர ஆரம்பிக்கின்றன. மிகவும் கூர்மையாக எழுதுகிறவர்களே இப்ப ஒரு இருபது பேர் வரையில் இருக்கலாம். பனிக்குடத்தில் போடுவதற்கு தேர்ந்தெடுப்பதற்கே சிரமமாக இருக்கிற அளவிற்கு பெண்கள் தீவிரமான கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் கவிதைகள் இப்போது கூடுதல் கவனம் பெற்றிருப்பதற்கு அவர்கள் தங்களுக்கென்றொரு அரசியலை எடுத்துக்கொண்டுவிட்டதுதான் காரணமாக இருக்கலாம். தமிழ்ச்சூழலில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் முதலில் பாயுமிடம் பெண்களின் உடல்கள்தான். எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுடைய சொந்த வாழ்க்கையைப் பார்த்தீர்களானால் துயரங்கள்,சிக்கல்கள் மிகுந்ததாக இருக்கும். அதையெல்லாம் அவர்கள் வெளிக்கொணரும் ஒரு ஊடகமாக கவிதை அமைந்தது. அதனால் கூடுதல் கவனம் பெற்றதாக எல்லாம் சொல்ல முடியாது. எழுதுகிறவர்களுக்கு ஒரு உத்வேகம் ஏற்பட்டதாக வேண்டுமானால் சொல்லலாம். இது ஒரு இணக்கமான சூழ்நிலை என்பதில் ஐயமில்லை. இது இந்த உடல் அரசியல் என்பதையும் கடந்து வேறு வேறு கட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இனியும் நிறையப் படைப்பாளிகள் வந்து புதிய கருத்தாக்கங்களைக் கொணர்ந்து தமிழ்த் தேசத்திற்கான பிரத்தியேகமானதொரு பெண்ணியம் உருவாக்கப்பட வேண்டும். மேலைநாட்டுப் பெண்ணியம், மாக்சியம் தொடர்பான பெண்ணியம் இவற்றை நாம் உள்வாங்கிக்கொள்கிறோம். அப்படி என்றில்லாமல் தமிழ் புவியியல் பரப்பிற்கேற்ற வலிய பெண்ணியம் உருவாவதற்கான ஒரு தளமாக இப்போதிருக்கும் இந்த இணக்கமான சூழ்நிலையைக் கொள்ள வேண்டும்.
தமிழ்நதி: பொதுவாக ஒரு பெண் படைப்பாளியாக இனங்காணப்பட்டவுடனேயே சமூகம் அவளையொரு பெண்ணியவாதியாகவும் கலகக்காரியாகவும் பார்க்கிற ஒரு கண்ணோட்டம் உருவாகிவிடுகிறது இல்லையா…? உங்கள் வாழ்வில் இதை உணர்ந்திருக்கிறீர்களா?

குட்டி ரேவதி:தமிழ்நாட்டிலேயே நிறையப் பெண் கவிஞர்கள்,எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துவிட்டார்கள். சில பெண் எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிலருடன் தாம் சேர விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், ‘இவர்கள் மிக ஆபாசமாக எழுதுகிறார்கள். உடல் என்பது ஒரு புதிர்… அந்தப் புதிரை இவர்கள் எழுத்தால் விடுவிக்கிறார்கள். அதனால், இவர்களில் ஒருத்தியாக நான் அடையாளங் காணப்பட விரும்பவில்லை’என்கிறார்கள். ஆண்கள் எப்படி எழுதுவார்களோ அதையொட்டியே இந்தப் பெண்களும் இணைய மற்றும் அச்சு இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் ஒரு பெண்ணியவாதிகளாக அடையாளங் காணப்பட விரும்பவில்லை. எழுதுகிறவள் ஒரு பெண்ணாக இருப்பதனாலேயே அவள் பெண்ணியவாதி என்று பொருளல்ல. எழுத்தின் உள்ளடக்கம்தான் அவள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. உள்வாங்கும் விடயம் ஆணாதிக்கமாக இருந்தால் வெளிப்படுத்தலும் அதையொட்டியே நிகழ்கிறது.
எம்மை நாமே கேள்வி கேட்கும்போது சுயவிமர்சனத்திற்குட்படுத்தும்போது நமக்குள்ளேயே எவ்வளவு ஆணாதிக்கம்,இந்துத்துவம் சார்ந்த விடயங்கள் ஊறிப்போயிருக்கின்றன என்பது தெரியவருகிறது. எங்களைப் போன்றவர்களுடன் அடையாளப்படுத்தப்பட விரும்பாத பெண்கள் என்ன சொல்கிறார்களென்றால், ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும். ஆண்கள் வர்ணித்து எழுதுவார்கள். ‘அவளுடைய விழிகள் கயல் மீனைப் போலிருந்தன… அவள் மாம்பழம் போன்ற நிறத்திலிருந்தாள்… அவளுக்குப் பருத்த மார்பகங்கள் இருந்தன’என்றெல்லாம் வர்ணித்து எழுதுவார்கள். நாங்கள் வைக்கும் அரசியலில் அதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் வேறு பொருளில், வேறு நோக்கத்தில் அவற்றைப் பயன்படுத்துகிறோம்.

தமிழ்நதி: பெண்கள் இன்னின்ன சொற்களைத்தான் தனது படைப்பில் பிரயோகிக்கலாம் என்றொரு எதிர்க்குரல் சில கலாசார காவலர்களிடமிருந்து எழுந்தது. நீங்கள் எழுத உட்காரும்போது அந்தக் குரல் ஒருவித மனத்தடையை,வரையறையை,எச்சரிக்கை உணர்வை,சோர்வை உங்களுக்கு ஏற்படுத்துகிறதா?

குட்டி ரேவதி:நிச்சயமாக. என்னுடைய அடுத்த தொகுப்பின் தலைப்பு ‘உடலின் கதவு’என்பதாகும். அது அச்சுக்குப் போய்விட்டது. அதிலுள்ள சில கவிதைகள் குறித்து எனக்கு தயக்கம் இருந்தது. இவற்றைப் பற்றி என்ன விமர்சனம் வரப்போகிறதோ… எடுத்துவிடலாமா என்று குழப்பமாக இருந்தது. இவ்வாறு குழப்பத்தை உருவாக்குவதுதான் சம்பந்தப்பட்டவர்களின் நோக்கமே. ‘நான் என்னுடைய எழுத்துக்கள் பற்றித் தெளிவாக இருக்கிறேன்… குழப்பமே கிடையாது’என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இந்த சமூகத்தினுடைய தாக்கமும் அது ஏற்படுத்தும் குழப்பமும் களைப்பும் சோர்வும் நம்மோடு இருந்துகொண்டேயிருக்கும். நம்முடைய வேறுபட்ட அனுபவங்கள் ஊடாக நாம் அந்தச் சோர்விலிருந்து மீண்டு வரவேண்டும். இலக்கியம் என்பதே அதுதானே இல்லையா…? இவர்கள் விளைவிக்கும் குழப்பங்களுக்கெல்லாம் நாம் ஆடிப்போய்விட்டோமென்றால் அது அவர்களுடைய வெற்றியாகிவிடும் அல்லவா…?அதனால், மீண்டும் மீண்டும் நம்மைப் புத்துணர்ச்சியூட்டிக் கொள்வது மிக அவசியம். அதற்கு எனக்கு மிக உதவியாக இருப்பது என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்து ஆக்கபூர்வமாக உரையாடுவது. ஒரு கிராமப்புறத்திற்குப் போய் அங்கு வயல்வெளியில் இருக்கும் ஒரு பாட்டியிடம் உரையாடினாலே உங்களுக்கான புத்துணர்ச்சி கிடைத்துவிடும். அவர்கள் வாழ்வில் எத்தனை துயரங்களை எதிர்கொண்டிருப்பார்கள்… அதிலொரு துளிகூட நாம் அனுபவித்திருக்க மாட்டோம். அந்தத் துயரங்களையெல்லாம், சிக்கல்களையெல்லாம் அவர்கள் நம்மைவிட நுட்பமாகக் கையாண்டு கடந்துபோயிருப்பார்கள். அவர்களையெல்லாம் சந்தித்துப் பேசுவதுதான் எனக்கு உத்வேகம் தருகிறது.
நான் நிறையப் பயணம் செய்வேன். கேரளாவுக்கு ஒரு வகுப்பு எடுக்கப் போகிறேன் என்றால், அதையடுத்து வரும் நாட்களில் இரண்டொரு நாட்களையாவது அந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கப் எடுத்துக்கொண்டுவிடுவேன். பெண்ணியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக நிறையப் பயணம் செய்வதைப் பார்க்கிறேன். வீட்டின் அறைகளுக்குள் குறிப்பாக சமையலறைக்குள் முடங்கிப்போய்விடுகிறவளாக பெண் இருக்கக்கூடாது. பல்வேறுபட்ட நிலவெளிகளை நமக்கு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். வேறு வேறு ஊர்களுக்குப் பயணம் செய்வது,திருவிழாக்களில் கலந்துகொள்வது இவையெல்லாம் எமது பார்வையை விரிவுபடுத்துவன. பெண்ணியத்தின் மற்றொரு கூறு என்னவென்றால், நிறையப் பெண்களைச் சந்தித்துப் பேசவேண்டும். பேசுவதென்றால் வம்பு பேசுவதல்ல. ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். அதில் அப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும்.

தமிழ்நதி: .இந்த ஆணாதிக்க சமூகத்தை மீறி ஒரு பெண் தனது படைப்புகள் வழியாக அடையாளங் காணப்படுவதென்பது சிரமமானதுதான் இல்லையா…? உங்கள் அனுபவங்கள் பற்றி…

குட்டி ரேவதி:என்னுடைய வீட்டிலிருந்து பெரிய எதிர்ப்புக் கிளம்பவில்லை. என்னுடைய அப்பாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான கல்வியறிவு கிடையாது. ஆகவே, அவர் தன்னுடைய பெண்கள் படிக்கவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வத்தோடிருந்தார். நானும் என் தங்கையும் படித்து மேலே வரவேண்டுமென்பதே அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், குடும்பம் என்ற எல்லையை விட்டு வெளியே வரும்போது நிறையப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
‘முலைகள்’என்று எனது கவிதைத் தொகுப்பிற்குப் பெயரிட்டபோது தொலைபேசி மற்றும் அஞ்சல் வழியாகவெல்லாம் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இணையத்தளங்களில் கீழ்த்தரமான விமர்சனங்கள் வந்தன. ஒரு பெண்ணின் ஆழ்மனதில் சென்று தைக்கக்கூடிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து துல்லியமாகக் குறிபார்த்து எறிந்தார்கள். எனது குடும்பத்தினரும் இதனால் பயங்கரமான மனவழுத்தத்திற்கு ஆளாகவேண்டியிருந்தது. இதையெல்லாம் பெண்களாகிய நாம் செய்வோமா என்றால்… இல்லை! பொதுவாக ஆண்களுடைய வன்முறையைவிட அவர்களுடைய மூர்க்கம் என்னை மிகவும் பாதித்த விடயம். பெண்களாகிய நாமும் அவ்விதமான மனோநிலையை நமது ஆண் பிள்ளைகளிடம் வளர்க்கிறோமோ என்று சிலசமயங்களில் தோன்றுவதுண்டு.குடும்பத்தின் தூண்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தமட்டில் வீடு என்பது சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் பெண்களோடு படுத்துக்கொள்வதற்கும் இன்பங்களை அனுபவிப்பதற்குமான ஒரு இடம். அவர்களுக்கு அது ஒரு தற்காலிகமான தங்குமடமாக இருக்கிறதேயன்றி அது அவர்களுக்கான நிரந்தர இடம் கிடையாது. உண்மையில் வீட்டைச் சுமப்பவர்கள் பெண்கள்தான். அடுப்பு மூட்டுவதிலிருந்து பிள்ளைகளை வளர்ப்பது வரை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் கற்பைக் கட்டிக்காக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். பார்த்துக்கொண்டே போனால் குடும்பத்தின் இத்தகைய இறுக்கமான கட்டமைப்பிற்கு மூல காரணமாக இருப்பது இந்துத்துவம்தான். இதற்கு மாற்று வழி என்று ஒன்று இல்லை. அதனால், குடும்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிற இந்தத் தூண்களைக் கொஞ்சம் இளக்குவதன் மூலம் நமது சுமைகளைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமேயன்றி, மற்ற விதிகள் எல்லாம் அப்படியேதான் இருக்கும். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதையேதான் மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பீர்கள்.

தமிழ்நதி: கவிதையில் இருண்மை என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பல நவீன கவிஞர்களுடைய கவிதைகள் புரிவதில்லை என்றொரு முணுமுணுப்பு வாசகர்களிடையே நிலவுகிறதே…
குட்டி ரேவதி:இது மொழி அரசியல் தொடர்புடையது எனலாம். திராவிட இயக்கங்கள் பெரிய இலக்கியங்களைப் படைத்துவிட்டதான ஒரு கற்பனை உலவுகிறது. வைரமுத்து போன்றவர்களெல்லாம் பெரிய கவிஞர்கள் என்று பேசப்படுகிறது. அவர்களுடைய மொழி எல்லோருக்கும் புரியும் வகையில் இருப்பதனால் அப்படிச் சொல்லப்படுகிறது. எடுத்த எடுப்பில் ஒருவர் பல் வைத்தியராக ஆகிவிட முடியுமென்றில்லை. அதற்கு நாலோ ஐந்தோ ஆண்டுகள் படிக்க வேண்டியிருக்கிறது. நிறைய நாட்கள் மொழியைப் பயின்று ஒரு கவிஞன் எழுதுகிற கவிதை மட்டும் உடனடியாக ஒரே வாசிப்பில் புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? நவீன கவிதையானது பழைய மொழியினுடைய வீச்சைத்தான் உள்வாங்கியிருக்கிறதே தவிர அந்தச் சொற்களை அது வைத்துக்கொள்ளவில்லை. தனக்கான சொற்களோடு அதனுடைய இசைவுடன்தான் வருகிறது. பாலகுமாரன்,சுஜாதா,வைரமுத்து வகையறா எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு பரிச்சயம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நவீன மொழிக்கட்டமைப்பை இலகுவில் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதுதான் உண்மை. புதிய மொழியை உருவாக்கியதும் அதை வளர்த்தெடுத்ததும் வைரமுத்துவாலோ கலைஞராலோ உருவானதல்ல. ஆனால் அவர்கள் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக வரும் கவிஞர்கள் ஆழம் மிக்க சொல்லாடலுடன் வருகிறார்கள். அதன் மூலம் மொழியின் கதவுகள் திறக்கப்படுவதாக நான் உணர்கிறேன். அந்த அனுபவத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் தயாராக இருந்தால்தான் மொழி எம்முடன் உரையாடும்.


(தொடரும்)


நீளமான இரவுகள்

இப்பொழுதும் இரவின் நீளத்தை
வார்த்தைகளால் அளந்துகொண்டிருக்கிறேன்
வாடைக்காற்று காதருகில்
பலமான வார்த்தைகளைக் கொண்டுவருகிறது
பனி தனது பாதங்களை
எனது மேனியின் எல்லா இடுக்குகளிலும்
பதுக்குகிறது
எனது இரவைவிட அம்மாவின் இரவு நீளமாயும்
அதைவிட அவரது அம்மாவின் இரவு நீளமாயும்
மரங்களின் இரவுகளை விட
பறவைகளின் இரவுகள் நீளமானவை
அதிகாலையில் பறவைகள் அலகினால்
இறகைக் கோதுவதையும்
ஒரு சூரியக்கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்
காண்கிறேன்

கவிஞரின் ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

3.04.2007

நேர்காணல்:கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-1

கவிஞர் குட்டி ரேவதியைப் பற்றி சிறிய அறிமுகம் தரும்படி கேட்டிருந்தீர்கள். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின் ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவம் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

“கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல;அதுவொரு இயக்கமும் கூட”

பகுதி-1

தமிழ்நதி:உங்களைக் கவிதை எழுதத் தூண்டியது வாசிப்பு அனுபவமா அல்லது இயல்பாகவே எழுந்த உள்ளார்ந்த தூண்டுதலா? நீங்கள் எப்படி எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

குட்டி ரேவதி:வாசிப்பு அனுபவம் என்று சொல்லமுடியாது. நான் சித்தமருத்துவம் படிக்க ஆரம்பித்த பிறகுதான் கவிதையில் ஈடுபாடு வந்தது. ஆனால் புத்தகங்கள் படிக்கிறது உண்டு. நான் பத்தாவது பரீட்சையில் நல்ல புள்ளிகள் பெற்றிருந்தேன். மருத்துவம்,பொறியியல் என்று எது வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் எனக்கென்னவோ தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இவ்வளவு புள்ளிகள் எடுத்துவிட்டு எதற்காக தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்று அப்பா நினைத்தார். அப்புறம் நான் சித்த மருத்துவம் படிக்கலாமென்று தீர்மானித்து அதில் இணைந்துகொண்டேன்.
சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்பு என்னவென்றால், அந்தப் பாடத்திட்டத்தில் பெரும்பாலும் எல்லாமே செய்யுள் வடிவத்தில் இருக்கும். அழுத்தமான மொழிநடை இருக்கும். அதிலே பிரயோகிக்கப்படுகிற சொல்லகராதி வந்து புழக்கத்தில் இல்லை. ஆனால் நவீனத்துடன் கூடிய ஒரு உக்கிரம் அதில் இருக்கும். சித்த மருத்துவத்தில் ஆர்வத்தோடு படித்து முதல் மதிப்பெண்கள் வாங்கியபோதிலும், தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து அதன் தொடர்ச்சியாக ஒரு நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் எனக்கு இருக்கவில்லை.


அதனையடுத்து படிப்பதிலிருந்து விடுபட்டு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்த நாட்களில் எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத் தோன்றியதை எழுதினேன். அதை வாசித்த ஒரு நண்பர் ‘நன்றாக இருக்கிறது… நீங்கள் ஏன் இதைப் பிரசுரத்திற்கு அனுப்பக்கூடாது…?’ என்று கேட்டார். சில சிற்றிதழ்களுக்கு அனுப்பியபோது அவை உடனடியாக வெளிவந்தன. அதன் பிறகு தமிழினி பதிப்பகத்தார்தான் தாமாகவே முன்வந்து என்னுடைய கவிதைகளைத் தொகுப்பாகப் போடலாமென்று சொன்னார்கள். பொதுவாகப் பார்த்தீர்களானால், அவர்கள் கவிதைப் புத்தகங்கள் போடுவதில்லை. அதன்படி 2000ஆம் என்னுடைய முதற்தொகுப்பான ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’வெளிவந்தது. அதனையடுத்து 2003ஆம் ஆண்டு ‘முலைகள்’என்ற தொகுப்பு வெளிவந்தது. அந்தத் தலைப்புக் குறித்து ஆரம்பத்தில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. பிரச்சனையில்லை என்று உற்சாகமூட்டி, தயக்கத்தைப் போக்கி, அத்தொகுப்பையும் வெளியிட்டது தமிழினி பதிப்பகந்தான்.

தமிழ்நதி:கவிதையில் ஆதர்சம் என்று யாருடைய கவிதைகளை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வீர்கள்? இதற்குப் பதிலளிப்பது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் வேண்டாம்.

குட்டி ரேவதி:சங்கடம் என்றெல்லாம் இல்லை. நான் ‘பனிக்குடம்’இதழுடைய ஆசிரியராக இருக்கிறேன். அதனால் எல்லாக் கவிதைகளையும் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்து வாசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல கவிதையை, அது உருவாகும் பரிணாமத்தை என்னால் பகுத்துணர முடிகிறது. நானும் எழுதுகிறவள் என்ற வகையில் ஒரு நல்ல கவிதையை நிராகரிக்கவோ தரமற்ற கவிதையை முன்னெடுத்துச் செல்லவோ முடியாது. கூடாது. ஈழத் தலத்திலே இருந்து வந்து, தமிழகத்திலே இயங்கி, இன்றைக்கு ஏறக்குறைய எல்லோராலும் மறக்கடிக்கப்பட்டு விட்ட கவிஞர் பிரமிள் மற்றும் தேவதேவன் ஆகியோரை என்னுடைய ஆதர்சம் என்று சொல்லாம்.தமிழில் நவீன கவிதை என்பது பிரமிள் என்ற மொழிவீச்சுள்ள ஆளுமை பொருந்திய கவிஞன் இல்லையென்றால், இப்போதுள்ள தளத்திற்கு வந்திருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடைய விசை இருந்திருக்கிறது. அண்மையில் அவருடைய கவிதை பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை வாசிக்கக் கிடைத்தது. கவிதையியல் என்பது குறித்த அவருடைய விமர்சனங்கள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக பிரமிக்க வைக்கின்றன. அதற்கு அவர் அரசியல் நிர்ப்பந்தங்கள் நிறைந்த ஒரு நிலத்திலிருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். நான் பெரும்பாலான கவிஞர்கள் எல்லோருடைய கவிதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால், ஆதர்சம் என்று வரும்போது தேவதேவன்,பிரமிள் ஆகியோரைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. தேவதேவனுடைய கவிதைகள் அதிநவீனமான பாணியைக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். தொடர்ந்து கவிதையின் தளத்தில் இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுந்தான் அத்தகைய ஒரு இயைபாக்கத்தை நீங்கள் பெறலாம்.

அப்புறம் கவிதை எனப்படுவது இலக்கியத்துள் மட்டும் அடங்காதது, அது ஒரு இயக்கம் என்றுதான் நான் சொல்வேன். சிறுகதை,நாவல் என்பதெல்லாம் ஓரளவுக்கு புனைவு கலந்த வடிவங்கள். கவிதைக்கென்றொரு அழகியல்,இலக்கியத்தன்மை,மொழிவளமை,நவீன தன்மை எல்லாம் இருக்கவேண்டுமென்பதால் அதனை இலக்கியம் என்பதனைக் காட்டிலும் இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்நதி:‘முலைகள்’என்ற உங்கள் கவிதைத் தொகுப்பின் தலைப்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டதன் அடிப்படையான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குட்டி ரேவதி:இப்போது கேரளாவிலிருந்து என்னை நிறைய இலக்கியக்கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே என்னை இலக்கியக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், என்மீது இருக்கின்ற அந்த அடையாளம்…! ‘முலைகள்’என்ற பெயரில் ஒரு தொகுப்புப் போட்ட காரணத்தினால் என்னை யாரும் அழைப்பதில்லை. அந்தச் சொல் ஆபாசமான,அசிங்கமான,அருவருப்பான ஒரு விடயமாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில், மலிவு இலக்கியத்தில், வெகுஜன இதழ்களில் பெண்களுடைய மார்பகங்கள் வணிகப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நான் அதை ஒரு எதிர்நிலையில் நின்று பார்க்கிறேன். அதாவது, நம்முடைய உடலை நான் ஒரு பெரிய நிலவெளியாகப் பார்க்கிறேன். ஒரு புவியியல் நிலப்பரப்பானது இலையுதிர்காலம்,இளவேனில்,கோடை என எப்படிப் பலவிதமான பருவங்களைக் கடந்து வருகின்றதோ அப்படியான ஒரு நிலவெளியாகத்தான் உடலைப் பார்க்கிறேன். அதையொரு உறுப்பாக,பொருளாகப் பார்க்கவில்லை.
அப்படி நான் அந்தச் சொல்லைப் பிரயோகித்தது ஆண்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். பெண்கள் அவர்களுக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளுள் நின்று எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், பாலியல் உரிமைகளைப் பற்றிப் பேசிவிடமுடியாது. அதற்கான அதிகாரம் பெண்களுக்குக் கிடையாது என அவர்கள் நினைக்கிறார்கள். இன்னுமொரு விடயம் என்னவென்றால், சாதீயம் மிகப்பெரியதொரு விடயமாக இருக்கிறது. இப்போது பாலியல் உரிமைகள் குறித்துப் பேசுவதற்கான வெளி திறந்துவிடப்படுகிறதெனில் அடுத்து சாதீயம் பற்றித் தயக்கமின்றிப் பேசப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற பயம். மூன்றாவதாக, தமிழ்த்தேசியவாதம் என்றொரு விடயம்…. இங்கு பேசப்படுகிற தமிழ்த்தேசியவாதம் என்பது வேறு. ஈழத்தில் அதன் பொருள் வேறு. இங்கே பேசப்படும் தமிழ்த்தேசியவாதத்திலே பெண்களின் கற்பு என்பது முக்கியமான அம்சம். தனக்கு உடமையான ஒரு பெண் இன்னொருவனோடு போய்விடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையிலேதான் கண்ணகியைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இவர்கள் மணிமேகலை மற்றும் மாதவியைத் தூக்கிப் பிடிப்பார்களா என்றால்… இல்லை! என்னை மிகவும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது மணிமேகலைதான். தன்னைக் காதலித்த உதயகுமாரன் மீது அவளுக்கும் காதல் இருக்கிறது. அதைக்; குறித்த மனவெளிப் போராட்டங்கள் அவளுக்கு இருந்திருக்கின்றன. ஆனால், அதை அவள் வெளிப்படுத்தாமல் அறநெறியில் போய் இணைந்துகொள்கிறாள். இந்த மாதிரியான கதாபாத்திரங்களை இவர்கள் தூக்கிப்பிடிப்பதில்லை. அதற்கு இன்னொரு காரணம் இங்கு வேரோடியிருக்கும் இந்துத்துவம் என்று சொல்லலாம். பௌத்தத்தைப் பேசும் மணிமேகலையை அவர்கள் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த இந்துத்துவம்தான் காரணம். ஆணாதிக்கத்தினுடைய மூலாதாரம் இந்துத்துவம்தான். ஒரு பெண் பத்தினியாகச் சித்திரிக்கப்பட்டிருந்த சிலப்பதிகாரத்தை தலைமேல் தூக்கிவைத்துக்கொள்வதற்கும் மணிமேகலையை இருட்டடிப்புச் செய்ததற்கும் இதுதான் காரணம். என்னைக் கேட்டால் மணிமேகலையைத்தான் காவல்தெய்வம் என்று நாங்கள் வணங்கவேண்டும் என்று சொல்வேன். பெண்கள் என்றால் தாய்மை,பொறுமை,விட்டுக்கொடுப்பு,கருணை இவற்றின் வடிவமாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். பெண்களிடத்தில் வீரம்,போராடும் குணம்,பகுத்தறிவு இன்னோரன்ன குணாம்சங்கள் இருப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மணிமேகலை தனது மனவெளியில் காதல் தொடர்பான ஊடாட்டங்கள் இருந்தபோதிலும் அதையெல்லாம் துறந்து பௌத்தத்திலே இணைந்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்ற வழியைத் தானே தேர்ந்தெடுக்கிறாள். இவ்வாறு ஒரு பெண் தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுப்பது இவர்களுக்கு உவப்பானதல்ல என்ற காரணத்தினால் மணிமேகலை இருட்டடிப்புச் செய்யப்படுகிறாள்.
இவ்வாறான மனோநிலை கொண்ட ஒரு சமுதாயத்திற்கு ‘முலைகள்’என்ற சொல் எவ்வாறான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதனால் விளைந்த எதிர்வினைகளால் ஒரு ரெண்டு வருஷம் நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

தமிழ்நதி:இதே சொல்லை ஒரு ஆண் எழுதியிருந்தால்…?

குட்டி ரேவதி:எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் வெகுஜன இதழ்களில் பெண்களுடைய முலைகள் மிகவும் கவர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி யாரும் சர்ச்சை எழுப்பத் தயாராக இல்லை. ஆண் எதைச் செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்னுடைய மிக நெருங்கிய ஒரு நண்பர் சொன்னார் “உங்களுடைய ‘முலைகள்’ கவிதைத் தொகுப்பு அத்தனையையும் நானே பணம் கொடுத்து வாங்கி எரித்துவிட விரும்புகிறேன்”என்று. இந்த அதிகார விடயத்தில் நட்பு,உறவு ஒன்றும் கிடையாது.

தமிழ்நதி:‘சண்டைக்கோழி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தின் பின்னால் நீங்கள் கூடுதல் கவனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறதே…!

குட்டி ரேவதி:எல்லோருமே அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், என்னுடைய வாழ்க்கையிலே அதனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாகச் சொல்லமுடியாது. ‘முலைகள்’என்ற பெயரில் தொகுப்பு வெளியிடப்பட்ட பிறகு எந்தவொரு இலக்கியக்கூட்டத்திலோ கல்லூரிகளில் நடக்கும் விழாக்களிலோ கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. அதற்கான தகுதியை நான் இழந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து என்னை அழைக்கிறார்கள். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களிலாவது நான் கலந்துகொள்கிறேன். அவர்களது பண்பாட்டில் ‘முலைகள்’என்பது வழக்கிலிருக்கும் ஒரு சொல். பாலியல் உரிமைகள்,மனிதவுரிமைகள்,சாதியம் இவை பற்றியெல்லாம் மாணவர்களிடையே பேசுவதற்கு கேரளாவில் படைப்பாளிகள் முன்வராத நிலையில் அதற்கான தேவை அங்கே நிறைய இருக்கிறது. அதனால் என் போன்றவர்களை அழைக்கிறார்கள். ‘சண்டைக்கோழி’படத்திலும் என்னுடைய பெயர் தேவையற்று இழுக்கப்பட்டிருந்தது. இங்கே சினிமா என்பதும் ஆணாதிக்கம் நிறைந்ததென்ற வகையில் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகச் சூழலில் மேற்குறித்த சர்ச்சைகளால் நான் கூடுதல் கவனம் பெறவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு அதனால் சாதகம் என்று ஒன்றுமேயில்லை. அதனால் நான் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதே பொருந்தும்.


(தொடரும்)


உள் தனிமை

தனிமையில் மட்டுமே

கசியும் உள்தனிமை
பெருங்கடலாய் உருவெடுத்து
அலையெழுப்பும்
வேறு மனித வாசனை வீச
ஒரு துளியாய்த் திரண்டு விழி நிரப்பும்
கோள நீர்ப்பரப்பில்
காட்சியாகும் உள்தனிமை
காலச்சரிவில் உருண்டோடிப்
பழுத்த பாறைகளைப் போல்
பாரமாய் விழும் கண்ணீர்த்துளிகளை
ஏந்த வலுவுண்டா உன் கைகளுக்கு?

கவிஞரின் ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.