2.25.2007

வித்தைக்காரன்


இளஞ்சிவப்பு மலர்கள் உதிரும் சாலை வழி
நடந்துகொண்டிருக்கிறேன்
சிக்கல்கள் இன்னும் விழித்தெழாது
கடந்து செல்லும் முதியவரின்
முகமொத்துக்கனிந்திருக்கிறது காலை.

“ஏய்…!”தூங்குமூஞ்சி மரத்தடியிலிருந்து
இரைந்த குரலுக்குரியவன்
மேலும் இறைக்கிறான் தூஷணையை.
திருப்தியுறாத பெண் வந்துபோன
சேலைக்கடையாகிறது காலை.

அன்று பேசாதிருந்திருக்கலாம்
சித்தம் சிதைந்தவனுக்கு இணையென.

திரும்பும்வழியில் கூட்டம் சேர்ந்திருக்கிறது
லேகியம் விற்றுக்கொண்டிருக்கிறான்.
மற்றொருநாள் குரங்காட்டியாயிருந்தான்
பாம்பும் கீரியும்
பில்லி சூனியம்
கயிற்றில் நடத்தல்
குட்டிக்கரணம்
தேசப்பித்து
பெரியோர் வாழ்த்து
கண்கட்டி வித்தை
கூவிக் கூவி முதுகின்பின் குரல் தேய்கிறது.

நேற்றுப் பார்த்தேன்
தூங்குமூஞ்சி மரமும் அவனும்
தனித்துப் பேசிக்கொண்டிருந்ததை.

2.23.2007

நதியின் ஆழத்தில்…


நதியின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருக்கின்றன
பூக்களும் சருகுகளும்
சிலசமயங்களில் கழிவுகளும்.

ஆழத் துளைந்து அடி மடியில் அமிழ்ந்து
முங்கிக் குளித்துக் கரையேறி
வாயிலடைத்த நீரைத் ‘தூ’வென உமிழ்ந்த
சிறுவர் குறும்பிற்கு
வாய்விட்டுச் சிரித்து
மீளவருகவென்று அனுப்பியது.

அன்றொருவன் வேண்டுமென்றே எறிந்த கல்லில்
மீன் செத்து மிதக்கவும்
தாங்கி ஒரு வார்த்தை தானும் சொல்லாமல்
கரையொதுக்கி நடந்தது.

ஆழத்தின் குளிர்மையை
அடிமடியில் கிடக்கும்
பேசிப் பேசித் தேய்ந்த கூழாங்கற்களை
காட்டு வழி நடக்கும் தனிமையை
கடலின் நெடுந்தொலைவை
எவரும் அறிவதில்லை.

கரையோரம் நிழல்விழுத்தி
காற்றடிக்க கண்ணிமைத்து
நெடுநாளாய் நிற்கும் மருதமரத்தின்மேல்
நதி கொண்ட காதலை
அந்த நாணலும் அறியாது.

2.22.2007

படம் காட்டுறாங்க…. படம்…!


ஒருவர் தீபாராதனை காட்ட சாமி முகம் தெரிகிறது. அதனையடுத்து ‘எல்லாம் நல்லபடி நடக்கும்’என்று யாரோ ஒருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். ‘நைக்’ போட்ட ஒரு சப்பாத்துக் கால்… மன்னிக்கவும் இரண்டு கால்கள் தூசி பறக்க ஓடிவருகின்றன. கமெரா அங்குலம் அங்குலமாக மேலேற அது விஜயின், அஜித்தின், சிம்புவின், சூரியாவின், தனுஷின் அல்லது ஏறக்குறைய முழுவதும் புதரடர்ந்த ராஜேந்தரின் முகத்தில் வந்து முடிகிறது. அவர் சட்டைக் கொலரைப் பின்தள்ளிவிட்டுக்கொள்கிறார். புயலடிப்பது போல காற்று சுழற்றி அடிக்கிறது. அவர் தலையை அசைக்கிறார். பிரமாண்டமான விசிறி உபயத்தில் தலைமயிர் பறக்கிறது. அதுவரை முதுகின் பின்புறம் ஒளித்துவைத்திருந்த அரிவாளை அல்லது சைக்கிள் செயினைக் கையிலெடுக்கிறார். இப்போது திரை முழுவதும் வியாபித்து நிற்கிறது புனித பிம்பம். ‘உய்… உய்’எனும் விசில்களால் திரையரங்கம் அதிர்கிறது. உற்சாக மிகுதியால் கைக்குட்டைகள் தலைக்கு மேலால் உயர்ந்து அசைகின்றன. ‘தல’, ‘தளபதி’, ‘தெய்வமே’எனும் தழுதழுத்த குரல்களால் திரையரங்கு நனைகிறது.

இப்போது நாங்கள் இரண்டாம் காட்சிக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக மென்மையான சங்கீதம் ஒலிக்கத் தொடங்குகிறது. இம்முறை கால்களில் இருந்தோ தலையில் இருந்தோ காட்சி தொடங்குமென்று உத்தரவாதம் தருவதற்கில்லை. எந்த அதிர்ச்சிக்கும் உங்களைத் தயாராக்கிக்கொண்டு காத்திருக்க அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டம்?) திரிஷாவின்,அசினின்,சிநேகாவின்,நமீதாவின் முகத்தில் கமெரா தரிக்கிறது. முகத்திலிருந்து கமெரா அங்குலம் அங்குலமாகக் கீழிறங்கி இந்தத் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாநாயகிக்கு எங்கெங்கே சதை போட்டிருக்கிறது, வற்றியிருக்கிறது இன்னோரன்ன விபரங்களை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். ‘ஸ்லோ மோசனில்’கதாநாயகி ஒய்யாரமாக நடந்துவர மீண்டும் விசிறி உபயத்தில், படப்பிடிப்பிற்கென பளபளப்பாக்கப்பட்ட கூந்தல் அலையாடுகிறது. அடங்காத விருப்போடு மீண்டுமொரு முறை இடுப்பை கமெரா நெருங்கிப் பார்க்க ஒருவித பதட்டம் நமக்குள் தொற்றிக்கொள்கிறது. கதாநாயகியின் வயிறு இலேசாக மேடிட்டிருப்பதை எங்களுக்கு நிரூபித்துவிட்ட திருப்தியோடு கமெரா பின்னகர்ந்துகொள்கிறது.

இப்போது வில்லன்கள் கதாநாயகியைக் கிண்டல் அடிக்க வேண்டும். அல்லது கதாநாயகி கதாநாயகனின் மீது தெரியாத்தனமாக மோதிக்கொள்ள கையிலிருக்கும் புத்தகங்கள் விழவேண்டும் என்பதே விதிமுறை. நாங்கள் முன்னதைத் தேர்வோம். அவர்களில் ஒருவர் நேராக நடந்து சென்று கதாநாயகியை- (சரி ஒரு வசதிக்காக எனது நண்பர்களிலொருவருக்கு மிகப்பிடித்த அசின் என்று வைத்துக்கொள்வோம்.) அசினின் தோளை ஒரு காட்டெருமையைப் போல உரசுகிறார். அசின் பயத்தோடு தனது நீண்ட விழிகளால் வீதியை அலசுகிறார். பொதுமக்கள் என்ன செய்ய வேண்டுமோ அதிலிருந்து இம்மியளவும் பிசகாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நனைந்த கோழிக்குஞ்சைப் போல அசின் நடுங்கிப் போகிறார் என்றுதான் நான் இப்போது எழுதவேண்டும். சரி ஒரு வித்தியாசத்திற்காக மிரண்ட மானைப்போல என்று எழுதுகிறேன். ராட்டின இருக்கைகள் அந்தரத்தில் மையத்தைச் சுற்றிவருவதைப் போல, தொந்தி பெருத்த, தலை வளர்த்த தடியன்கள் அசினைச் சுற்றி வருகிறார்கள்.

“பாவம்பா அந்தப் பொண்ணு… விட்டுடுங்கப்பா…. போட்டும்”

அட! பார்வையாளர்களினிடையிலிருந்து யாரோ பேசுகிறார்களே…! நீங்கள் நினைப்பது சரி… அவர் ஒரு ஆண்மகன்! மறுநொடியே ‘சொத்’தென ஒரு சத்தம். அவர் தரைக்கு ஐந்தடி மேலாகப் பறந்துசென்று கூட்டத்தினர் நடுவில் விழுகிறார். பார்வையாளர்கள் பயத்தோடு அவசர அவசரமாக விலகிக்கொள்கிறார்கள். நீங்கள்தான் எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறீர்கள்! இப்போது கதாநாயகன் வந்து அவரைத் தூக்கி நிறுத்தி சட்டையில் படிந்த புழுதியைத் தட்டிவிடவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இயக்குநர்கள் எப்போதும் உங்களை ஏமாற்றும் பாவத்தைச் செய்வதில்லை.

கதாநாயகன் முன்தயாரிக்கப்பட்ட, ஏற்கெனவே உங்களுக்குப் பரிச்சயமான வசனங்களைப் பேசுகிறார். அவர் சாம,பேத,தானங்களைக் கடந்து தண்டத்திற்குத் தயாராகும்போது உங்கள் நரம்புகள் முறுக்கேறிப் புடைக்கின்றன. உங்கள் மெலிந்த தேகங்களுள் இருக்கும் இரத்தம் உற்சாக நதியாக ஓடத்தொடங்குகிறது. ‘மூஞ்சிலயே போடு’உணர்ச்சி மிகுதியால் உங்களையறியாது நாற்காலியிலிருந்து எழுந்துவிடுகிறீர்கள். பின்னிருக்கையில் இருப்பவர் வயதானவராக இருக்கும் பட்சத்தில், உங்கள் கலாபிமானத்தின் முன் சற்று அடக்கியே வாசிப்பார். இளைஞராக இருந்தால் அவருக்கும் நரம்புகள் உண்டென்பதை நீங்கள் நினைவிற் கொள்ளல் நன்று.

மாயாஜாலங்கள், அம்புலிமாமாக் கதைகள், சின்ன வயதில் வாசித்த இரும்புக்கை மாயாவியின் வித்தைகள் ஆரம்பமாகிவிட்டன. அந்தோ! கதாநாயகனுக்குள் ஒரு டார்ஜான் புகுந்துவிட்டார். அவரது முதுகிலுள்ள கண்கள் திறந்துகொள்கின்றன. ஒரு கத்தியோடு பின்னாலிருந்து பாய்கிறவனைத் திரும்பாமலே அடித்து வீழ்த்துவதெனில் அவருக்கு முதுகில் கண்கள் இருப்பது அவசியம் என்பதைப் பார்வையாளர்களாகிய நீங்கள் எவ்வித தயக்கமுமின்றி ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒரு ராஜாளியைப் போல பறக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு காலால் முன்னே இருப்பவனையும் மறுகாலால் பக்கவாட்டில் இருப்பவனையும் பறந்து பறந்து உதைப்பதெனில் சாதாரணமானதல்ல. சண்டை நடப்பது வீதியெனில் அது சந்தையாக இருப்பதும் அவசியம். கதாநாயகன் அடித்துப் போடும் வில்லனின் அடியாட்கள் சென்று விழுவதற்கு தள்ளுவண்டிகளில் தக்காளிகள் தயாராக இருக்கின்றன. மடமடவெனச் சத்தமிட்டுக்கொண்டு சரியத்தக்க பீப்பாய்கள் இருப்பது இன்னும் சிறப்பு. குவித்து வைக்கப்பட்ட அரிசிகள்,அப்பிள் பழங்கள்,மீன்கள் சிதறுதலன்றி சண்டைக்காட்சிகளை எம்மால் ரசிக்க முடிவதில்லை. உங்களிடமும் என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. ஒரே சமயத்தில் இந்த வில்லனின் அடியாட்கள் கதாநாயகன் மீது பாயாமல், ஏதோ பொதுஇடத்திலுள்ள கழிவறைக்குப் போவதுபோல முறைவைத்துப் பாய்வது எதனாலென்ற கேள்வி பதிலிறுக்கப்படாமலே இருக்கிறது. சரி! இப்போது அனைவரையும் வீழ்த்தியாகிவிட்டது. வலியில் முனகியபடி ஆங்காங்கே கிடக்கும் அவர்களில் ஒருவன் திடீரென எழுந்து கையில் ஒரு ஆயுதத்தோடு பாயாமலிருந்தால் சண்டை அத்துடன் அப்போதைக்கு நிறைவுற்றது.

இப்போது அசின் கதாநாயகனின் கையிலுள்ள கண்டுகொள்ளப்படாத ரத்தத்திற்குப் பதறிப் போகவேண்டும். அத்துடன் நன்றி சொல்லவும் வேண்டும். அதற்கு கதாநாயகன் ‘எனது கடமையைத்தானே செய்தேன்’என்ற வசனத்திற்கு வாயசைத்தால் போதுமானது. ஏனெனில், அந்தத் தேய்ந்த வசனத்தை நீங்கள் உச்சரித்துக்கொண்டிருக்கிறீர்கள். ‘என்னாச்சுடா…?’ என்று சண்டை முடிந்த பிற்பாடு பதறிவரும் கதாநாயகனின் நண்பர்களை இன்னும் காணோம். முன்பெனில் சின்னி ஜெயந்த் இருந்தார். பின்பொருகாலம் தாமுவும் வையாபுரியும் இருந்தார்கள். விவேக் கூட இருந்தார். இன்றைய நிலவரப்படி வடிவேல் இருந்தேயாக வேண்டும். அவரோடு மேலும் சிலர் இருக்கலாம். ம்… சரியான கணிப்புத்தான்! அவர்கள் வந்துவிட்டார்கள்.

“என்னாச்சுடா கையெல்லாம் ரத்தம்?”நண்பர்கள் விழி பிதுங்கக் கேட்கிறார்கள்.

“ச்சும்மாதான்”என்பதனோடு கதாநாயகனுக்கு அல்லது இயக்குநருக்கு விட மனதில்லை. அந்தப் பக்கத்தில் அசின் வேறு தனது அழகான கண்களால் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

“ஒரு தடவ தீர்மானிச்சுட்டா எம் பேச்சை நானே கேக்க மாட்டேன்”
“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”
“தலகிட்ட மோதறவனுக்கு தலயே இருக்கக்கூடாது”
“நான் போலீஸ் இல்லடா பொறுக்கி”

மேற்குறிப்பிட்ட சாயலையொத்த இறவாப்புகழுடைய ‘பன்ச்’வசனம் ஒன்றைச் சொல்லிவிட்டுக் கதாநாயகன் கமெராவின் கண்களை உற்றுப்பார்ப்பார். அந்த வசனங்களை ஒப்புவிக்கும்போது கைகளால் ஏதாவது ஒரு முத்திரையைக் காட்ட வேண்டுமென நீங்கள் அதீதமாக எதிர்பார்க்கிறீர்கள். தலைமயிரைப் புறங்கையால் பின்னொதுக்குதல், தோள்களைக் குலுக்குதல் போன்ற வித்தைகளோடு விரல்களால் சிலம்பம் ஆடுவதில் சிம்பு ஏனையோரைப் பின்தள்ளிவிடுவாரென்பதில் ஐயமில்லை. கதாநாயகனை காதல் வழியப் பார்த்துவிட்டுப் இடுப்பசைத்துப் போகும் அசினைப் பின்தொடர்ந்து சில நொடிகள் செல்லவேண்டியது இப்போது கமெராவின் கடமையாகிறது.

அட!இப்போது தாரை தப்பட்டைகள் முழங்கத் தொடங்குகின்றனவே! நீங்கள் ஆச்சரிப்படவில்லை. சேலையணிந்த அல்லது தொப்பூளுக்குக் கீழ் ஜீன்ஸ் அணிந்த, கதாநாயகியை விட சற்று அழகு குறைந்த பெண்களுடன் அதே எண்ணிக்கையிலான ஆண்களும் இரண்டு மூலைகளிலும் இருந்து திடீரென ஓடிவர குத்துப்பாட்டொன்று தொடங்குகிறது. அது என்ன பாட்டு என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நீங்களே குணா ‘றேஞ்சில்’ ‘கண்மணி…பொன்மணி’ எல்லாம் போட்டுக்கொள்ளுங்கள். சரியா…?

அடுத்த காட்சியை நீங்கள் சொல்லப்போவதாக அடம்பிடிக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்ததுதான். உங்களுக்குத் தெரியுமென்று இயக்குநருக்கும் தெரியும். எதிர்பார்க்கும் காட்சியைக் கொடுக்காமல் விட்டால் எங்கே நீங்கள் திரையரங்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்களோ என்ற பயம் அவர்களுக்கு. கதாநாயகன், வெயிலில் மயங்கிவிழுந்த கிழவியைத் தூக்கி நிழலில் இருத்துவதையோ, விழிப்புலனற்றவர் ஒருவர் வீதியைக் கடக்க உதவுவதையோ, அனாதை இல்லத்தில் உள்ள சிறுவர்களைப் பாட்டுப் பாடி மகிழ்விப்பதையோ அந்த வழியாகப் போகும் அசின் பார்த்துவிடுகிறார். (அவரன்றி யார் பார்ப்பார்…)காதலின் ரசவாதம் வேலை செய்யத் தொடங்குகிறது.

அசின் கண்ணை மூடிக்கொள்ள, அவரோடு நீங்கள் இப்போது சுவிற்சர்லாந்தில் நிற்கிறீர்கள். குளிர்கிறது. ஒரு சதம் கூடச் செலவில்லாமல் சுவிற்சர்லாந்தைக் காட்டும் இயக்குநரை நன்றியோடு விழிகசிய நினைத்துக்கொள்கிறீர்கள். (தகுந்த தயாரிப்பாளர் அகப்படாது போனால் உள்ளுருக்குள் ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ அழைத்துப் போவார்கள்) வாகனத் திருத்தகத்திலோ, திரையரங்கிலோ பணி புரியுமொருவன் இருந்தாற்போல ‘கோட்-சூட்’ சகிதம், அம்பானியின் மகனையொத்தவனாக ஆடுவதை ஒரு கேள்வியும் கேட்காமல் வாய்பிளந்து பார்க்கிறோம். ஆனால், கதாநாயகி ஏழை பாழைதான் என்பதை இயக்குநரோடு முரண்படாமல் நாங்களும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எலும்பைத் துளைக்கும் குளிரில், மேலே அரை அடியிலான ஆடையும் அதேவிதத்தில் கீழொன்றும் மட்டுமே அணிந்து ஆடும் அவர் பஞ்சத்தில்தான் இருக்கிறார் என்பதை எந்த அறிவுஜீவியாலும், பின்நவீனத்துவக்காரர்களாலும் மறுக்கவியலாது. திடீரென உங்கள் புலன்களுக்குச் சட்டென புரியாததொரு காட்சி திரையை நிறைக்கிறது. நிதானித்து(ஜே.ஜே. படம் பார்த்தபோது நான் பயந்த ஞாபகம்)யோசிக்க… குகையல்ல அது தொப்பூள்தான் என்பதை அறிந்து ஆசுவாசம் கொள்கிறீர்கள். ஒவ்வொரு தடவை விருது வழங்கப்படும்போதும் தொப்பூளுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாகவே நான் வருந்தியிருக்கிறேன். ஏனெனில் எத்தனை படங்களில் அது நடித்தாலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. பாரபட்சம் என்பது திரைத்துறையிலும் இருப்பது வருந்தத்தக்கதே.

அடுத்தடுத்த காட்சிகளில் அசின் நிறைய வெட்கப்பட வேண்டும். தலையணையைப் பஞ்சு வெளிக்கிளம்பாமல் பிய்த்துக்கொண்டு படுக்கையில் உருளவேண்டும். அசின் வில்லனின் மகளாய் இருப்பது தமிழ்ச்சினிமாவின் நீண்டநாள் பாரம்பரியத்தைச் சிதைக்காமலிருக்க உதவும். இதற்கிடையில் நமது கதாநாயகனின் நிழலெனத் தொடரும் நண்பர்களிலொருவர் அசினை எவ்விதமோ நெருங்கிவிடுவதையும், அசின் ஒரு நல்ல பண்பாடான, குடும்பப் பாங்கான பெண்ணென்பதையும் சாடைமாடையாகத் தொட்டுக் காட்டிவிடவேண்டும் (அசினைத் தொட்டல்ல. அது நட்புக்குத் துரோகம்!) அதைக் கதாநாயகனின் காதுகளில் போட வேண்டியது இப்போது நண்பரின் கடமைகளில் ஒன்றாகிறது. ஆயிற்றா…? இப்போது அசினின் காதல் நோய் குரங்குபோல கதாநாயகனைத் தொற்றிக்கொள்கிறது.

இப்போது பாடலாசிரியர் தனது வேலையைக் காட்ட வேண்டும். ‘நீ மலரா நிலவா… கனவா…. தளிரா…’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்க, கதாநாயகனும் அசினும் கட்டித் தழுவி உருண்டு புரண்டு ஆடுகிறார்கள். இடையிடையில் இடையைக் காட்டி தமிழ்ச்சினிமாவைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்துகிறார்கள். செடி மறைவில் உதட்டு முத்தமும், கதாநாயகியின் நாணமும், கதாநாயகன் ஏதோ வெட்டி வீழ்த்தியது போன்ற பெருமிதத்தோடு உதட்டை நாவால் நனைத்துக் கொண்டு கமெராவைப் பார்ப்பதும் நமது தலையில் எப்போதோ எழுதப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் பழைய பகையொன்று இருப்பது தெரியவர வேண்டும். அது கடைசிக் காட்சியை உக்கிரப்படுத்த உதவும். கதாநாயகனின் அக்காவைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொன்றவர்களில் ஒருவராக வில்லன் இருக்கலாம். அன்றேல், கதாநாயகனின் தந்தையைக் கொன்றவனாக இருக்கலாம். சிலசமயம் கதாநாயகனின் தாயை ஏமாற்றிச் சுகித்துவிட்டு வேறொருத்தியை மணந்துகொண்டு சுகவாழ்வு வாழும் ‘அப்பா’ வில்லனாகக் கூட இருக்கலாம்.

இனித்தான் கதை (பொலிஸ் நாயை அனுப்பியேனும் அப்படியொன்று கண்டுபிடிக்கப்பட்டால்) உச்சக் கட்டக் காட்சியை நோக்கி நகரப்போகிறது. வில்லனாகப்பட்டவர், பெரிய சரவிளக்குத் தொங்கும் பரந்த வெளி போன்ற மண்டபத்தில் தனது தொண்டரடிப்பொடிகளுடன் கதாநாயகனைக் கறுவிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கதாநாயகனையும் அவரது குடும்பத்தையும் எப்படியாவது வேரறுக்க வேண்டுமென்று சூளுரைப்பதை நாங்கள் நாற்காலியின் நுனிக்கு நகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் விசுவாசமற்ற அடியாட்களில் ஒருவன் சட்டெனச் சுடப்பட்டு பொட்டெனப் போவதைக் காட்டி வில்லனை அதி வில்லனாக்கலாம். ஒரு வெள்ளை வாகனம் விரைந்துவந்து சரேலென்று நிறுத்தப்பட்டு, அதற்குள் அசினும் கதாநாயகனின் தாயாரும் தங்கையும் அள்ளிப் போடப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். வாகனத்துக்குள்ளிருந்து பயணிக்கும்போது தாங்கள் கதாநாயகனுக்கு என்ன உறவு முறையென்பதை அறிமுகப்படுத்திக்கொள்வார்களாயிருக்கும். இல்லையெனில், வில்லனின் இருப்பிடத்தில் ஒருவரையொருவர் வியப்பும் கேள்விகளும் ததும்பப் பார்த்துக்கொண்டிருக்கவல்லவா வேண்டும்?

இது வில்லன் வாயைத் திறந்து அடுக்கு வசனங்களை அள்ளியெறியும் நேரம். அவ்வளவு நாள் படப்பிடிப்புக்கு வந்து போன காரணத்தால் இயக்குநரும் அதை அனுமதித்திருக்கிறார். ‘உன்னுடைய மகன் இங்கே வந்து உங்களைக் காப்பாற்றுகிறானா பார்க்கலாம்’இன்னோரன்ன ரீதியில் வில்லன் வாயோயாமல் பேசிக்கொண்டிருக்க, கதாநாயகனுக்குத் தகவல் போய்விடுகிறது. கதாநாயகனின் உறவுகள் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் வடிவேலுவோ விவேக்கோ கண்டுவிட வேண்டுமே என்று நாங்கள் (குறிப்பாக அன்னையர்) நெஞ்சில் கைவைத்து வேண்டிக்கொண்டிருந்தது கடவுளின் செவிகளை எவ்வண்ணமோ தவறாமல் சென்றடைந்துவிடுகிறது.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு(யதார்த்தத்தின்படி தூக்கித் தோளில் வைத்துக்கொண்டுதான் போகவேண்டும். பூட்டிச் சாவியைப் பையில் போடாமல் இங்கெவரும் போவதில்லை.) அதன் சொந்தக்காரரோ பொலிசாரோ பின்துரத்த கதாநாயகன் சீறிப்பறந்து போகிறார். இந்த உச்சக்கட்டக் காட்சியை நாங்கள் நாற்காலியிலிருந்து விழுந்துவிடப் போகிறவர்களைப் போல பார்த்துக்கொண்டிருக்கிறோம். வில்லனின் ஆட்களுடைய வாகனம் ‘மர்ம தேசம்’பாணியில் நெருங்குகிறது. அதை அவர் மயிரிழையில் தவிர்க்க, அது தரையிலிருந்து பதினைந்தடி உயரத்திற்கு எகிறிப் பின் ஆசையோடு தரையைத் தழுவி அப்பளமாக நொறுங்குகிறது. விழிகளுக்கு நல்ல விருந்தென மகிழ்கிறோம்.

வில்லனாகப்பட்டவர் தாயின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும்போது அல்லது நேரக்குண்டினை வெடிக்கவைக்கும் விசையை அழுத்த விரல் வைக்கும் அந்தக் கணத்திற்கு சற்று முன்னேயோ பின்னேயோ அல்லாமல் மிகச்சரியாக அந்நொடியில் கதாநாயகன் கண்ணாடியைப் பிய்த்தெறிந்துகொண்டு மோட்டார் சைக்கிள் சகிதம் அரங்கினுள் பிரவேசிக்கிறார். இப்போது மீண்டும் பீப்பாய்கள், பலகைகள், வெற்றுப்பெட்டிகளின் தேவையேற்பட்டுவிட்டது.இப்போது நீங்கள் விசிலடிக்க வேண்டும். வெட்கம் துக்கம் பார்க்காதவரெனில் ஓரிரண்டு கெட்டவார்த்தைகளைச் சொல்லி உற்சாகத்தை வெளிப்படுத்தலாம். இனி நடக்கப்போவதைச் சொல்ல இயக்குநர் தேவையில்லை. மூன்று வயதுக் குழந்தையைக் கொண்டு வந்து உட்கார்த்தி விட்டால் அது தன் மழலையில் அழகாகச் சொல்லிவிட்டு எழுந்து தன்பாட்டில் பாற்போத்தலைத் தேடிப் போய்விடும்.

வில்லனைக் கதாநாயகன் தனது கைகளால் கொல்வது அவ்வளவு வரவேற்கத்தக்கதல்ல. வில்லனாகப் போய் மின்சாரத்தில் விழுந்து கைகால்களை இழுத்துக்கொண்டு அடங்குவதோ, கூரிய கம்பியில் தன்னைத்தானே கழுவேற்றிக்கொள்வதோ… கதாநாயகன் கடைசியில் அசினோடு ஒரு தடையுமின்றி இணைந்து பாட்டுப்பாட உகந்தது.
எதிர்பார்த்ததே நடக்கிறது. நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறவரெனில் ஓரிரு கண்ணீர்த்துளிகளைத் தயாராக வைத்திருங்கள். கடைசிக் காட்சியில் இயக்குநர் அதை எப்படியும் உங்களிடமிருந்து கறந்துவிடவே பார்ப்பார். பார்த்தீர்களா…?’சென்டிமென்ற்’நெடியடிக்கும் வார்த்தைகள் உங்கள் மனதில் பாரத்தை ஏற்றுகின்றன. எதிர்பார்த்தபடி படம் முடிந்த திருப்தியில் எழுந்திருக்கிறீர்கள். விளக்குகள் எரிகின்றன. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அஞ்சி வேகவேகமாக உங்கள் உங்கள் பிரச்சனைகளை மீள்ஞாபகித்தபடி வெளியேறுகிறீர்கள்.
அநேகமாக படங்களைப் பார்த்துவிட்டு வீட்டிற்குப் போன வழியெல்லாம் துக்கமாகவே நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வருடத்தில் எத்தனை ஏப்ரல் முதலாம் திகதிகள் வருகின்றன என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

2.19.2007

நீ… நான்… இவ்வுலகம்


நாமொரு புள்ளியில் சந்தித்துக்கொண்டோம்
பிறகு எதிரெதிர் திசை ஏகினோம்
கோடை தொணதொணக்கும்
பாலைப் பெருவெளியில்
சில சொற்களும் நானும்.
குளிர் உயிர்குடிக்கும்
துருவத்தனிமையிலே
நீயும் நின் பணியும்.

தனிமைக்கிளையில் என் கூடு
அசைத்தசைத்துப் பார்த்துத்
தோற்கிறது காலப்புயல்.

காற்றுக்கு என்மீது கருணையில்லை
உன்குரலை மட்டும் ஒளித்துவைத்திருக்கிறது.
நல்லது பேசாதே!
பேச்சு கலைத்துப்போட்டுவிடுகிறது
தெரிந்தே காணும் மாயக்கனவுகளை.
வர்ணச் சிறகுதிர்த்து புழுவாய் மாற
எவருக்கும் பிரியமில்லை.

காதல் கனன்றெரியும் மாலையில் ஒரு முத்தம்…
விழிக்கடையில்
எனக்கே எனக்கென திரளும் கண்ணீர்த்துளி…
போகிற போக்கில் பொறுக்கிக்கொள் எனவொரு சொல்…
எதுவும் வேண்டிலேன்.
உரிமைகளை இழந்ததோர் தேசத்தவள்
எல்லைகளைக் கடந்தொரு
எட்டும் எடுத்து வைக்கேன்.

நீ இருக்கிறாய்
நான் இருக்கிறேன்
இனிய நினைவு
இருக்கிறது இவ்வுலகம்.

2.18.2007

புராணப் புனைவுகளும்...புண்பட்ட பெண்ணிலையும்

கம்பர் இராமாயணத்தை எழுதினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தமிழுக்குத் தந்தார். வியாசர் மகாபாரதத்தைத் வழங்கினார். மனுதர்ம சாத்திரத்தை மனுவேதான் படைத்தார். சந்தேகமேயில்லை! ஆனால்… யாரும் பெண்ணை எழுதவில்லை. உண்மையில் அவள் பேசிய வார்த்தையை எழுதவில்லை.

கம்பரின் ராமன்: சீதை! நீ இவ்வளவு நாளா ராவணனோடை இருந்தனியெல்லோ… நீ எப்பிடிக் கற்போடை இருந்திருக்க முடியுமெண்டு ஒரு வண்ணான் கேக்கிறான். நான் இந்தக் குடிமக்களுக்கெல்லாம் அரசன். நீ பத்தினிதான் எண்டு அவையளுக்கு நான் நிரூபிக்காட்டில் நாளைக்கு என்னை நாயெண்டும் மதிக்கமாட்டாங்கள். நீ குறைநினைக்காமல் கொஞ்ச நாளைக்குக் காட்டிலை போய் இரு.

கம்பரின் சீதை:நீங்கள் சொல்லி நான் எண்டைக்காவது மாட்டனெண்டு சொல்லியிருக்கிறனா… நீங்கள் கிணத்துக்கை விழு எண்டால் எந்தக் கிணத்துக்கை எண்டு கேக்கிறவளெல்லோ நான்… இப்பவே போறன்.

சீதையைக் கம்பர் பேசவிட்டிருந்தால்: நீங்கள் அயோத்திக்கு மகாராசாவாய் இருக்கிறதுக்கு முதல்லை ஒரு மனுசனாய் இருங்கோ. ஒரு வில்லை முறிச்சு சூரத்தனம் காட்டினவுடனை நீங்கள்தான் எனக்கு எல்லாம் எண்டு உங்களுக்குப் பின்னாலை நான் வரேல்லையே… உங்கடை சின்னம்மா கைகேயிக்கு வயசு போன காலத்திலை உங்கடை அப்பர் குடுத்த சத்தியத்தைக் காப்பாத்த வேணுமெண்டதுக்காக நீங்கள் எல்லாத்தையும் விட்டிட்டுக் காட்டுக்குப் போனீங்கள். நான் ஒரு வார்த்தை கேட்டனா… ஒண்டும் கதைக்காமல் அந்தக் கல்லிலையும் முள்ளிலையும் உங்களுக்குப் பின்னாலை இழுபட்டுக்கொண்டு வரேல்லையே…! ராவணன் என்னைப் பிடிச்சு வைச்சிருக்கேக்கை நீங்களும் தனியத்தானே இருந்தனீங்கள். சூர்ப்பனகை அவள் இவளெண்டு உங்களைப் பாத்து ஆசைப்படாதவை ஆர்…? நீங்கள் எல்லா நேரத்திலையும் சுத்தமாய் இருந்திருப்பீங்களெண்டு எனக்கெப்பிடித் தெரியும்…? நீங்கள் ஏகபத்தினி விரதனெண்டு நிரூபிக்க லட்சுமணனைச் சாட்சிக்குக் கூப்பிடாதையுங்கோ… நீங்கள் அனுமனுக்கு ரெண்டு வால் எண்டால்… ‘ஓமண்ணை ஒண்டு நீளம் மற்றது கட்டை’ எண்டு அவன் சொல்லுவான்.

இளங்கோவடிகளின் கோவலன்:கண்ணகி! நீ எனக்காக வாசல்லையே காத்துக்கொண்டிருந்தனியா… நீதானடி பத்தினி! நான் திரும்பி வந்திட்டன். திருந்தியும் வந்திட்டன். சாப்பாட்டைப் போடு. இனி அந்த மாதவியின்ரை வீட்டுப் பக்கம் தலையே வைச்சுப் படுக்கமாட்டன்.

இளங்கோவடிகளின் கண்ணகி: ஐயோ…! என்ரை ராசா…! நீங்கள் எப்பிடியும் திரும்பி வருவீங்களெண்டு எனக்குத் தெரியும். நான் ஊணுறக்கம் இல்லாமல் உங்களுக்காகத்தானே வாசல்லை நிண்டு பாத்துக்கொண்டு நிண்டனான். உங்களுக்குப் பிடிச்ச மீன்குழம்பு வைச்சிருக்கிறன். நீங்கள் வயிறாரச் சாப்பிடவேணும். நான் அதைப் பக்கத்திலை இருந்து பாக்கவேணும்.


கண்ணகியைப் பேச விட்டிருந்தால்:எங்கை வந்தனீங்கள்…? என்னிலை என்ன உரிமை இருக்கெண்டு வந்திருக்கிறீங்கள். நான் கறுப்பி. என்னைப் பிடிக்கேல்லை எண்டுதானே அந்த ஆட்டக்காறி மாதவி வீட்டிலை போய்ப் படுத்துக் கிடந்தனீங்கள். பாட்டும் ஆட்டமுமாய் பம்பல் அடிச்சுப்போட்டு இப்ப அவள் ஆரையோ நினைச்சு ஏதோ பாடினாளாம் எண்டு கோவிச்சுக்கொண்டு இங்கை ஓடிவந்திருக்கிறியள்… அங்கை இல்லையெண்டா இஞ்சை… இஞ்சை நான் மாட்டனெண்டா அங்கை… உங்களுக்கு வெக்கமில்லையே…!

வியாசரின் தருமன்: பாஞ்சாலி! நான் என்னை, சகோதரங்களை, நாட்டை, பொன்பொருளெல்லாம் இழந்த பிறகு உன்னையாவது வைச்சுக்கொண்டிருந்திருக்கலாம். உன்னையும் இழந்துபோனனடி! இனியென்ன செய்யிறது… மூட்டை முடிச்சு ஏதாவது இருந்தா எடுத்துக்கொண்டு வெளிக்கிடு. வனவாசம் போவோம்.

வியாசரின் பாஞ்சாலி:உங்களைச் சூதாட்டத்திலை இழந்தாப்பிறகு என்னை வைச்சு ஆடுறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. எண்டாலும் அதை யோசிக்காமல் நீங்கள் என்னைப் பணயம் வைச்சுப்போட்டியள். என்ரை தலைமயிரைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்து சபைக்கு முன்னாலை தள்ளினான் துச்சாதனன் எண்ட துலைஞ்சுபோவான். அது மட்டுமில்லாமல் அவ்வளவு பேருக்கு முன்னாலை என்ரை சீலையை உரியப் பாத்து பரிசுகெடுத்துப்போட்டான். துச்சாதனன், துரியோதனன் எண்ட ரெண்டு பேரின்ரை ரத்தத்தையும் எடுத்து எண்ணெயாய் வைச்சுத்தான் என்ரை தலைமயிரை முடிவன். அதுவரைக்கும் இது இப்பிடியே விரிச்சது விரிச்சபடி இருக்கட்டும்.

பாஞ்சாலியைப் பேச அனுமதித்திருந்தால்: நீயொரு மனுசனெண்டும் புருசனெண்டும் கதைக்காதை. ஒருத்தனில்லை… மல்லன் மாதிரி அஞ்சு பேரை நம்பி நான் வந்தன். அவங்கள் சீலையை உரியிறாங்கள். நீங்கள் கையைக் கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிக்கிறீங்கள். கோத்தை குந்திதேவி உப்புப்போட்டு உங்களுக்குச் சாப்பாடு தரேல்லையே…! துரியோதனன் எண்டவனைப் பாத்து நான் சிரிச்சனெண்ட ஒரே காரணத்துக்காக இண்டைக்குச் சபையிலை எல்லாரும் என்னைப் பாத்துச் சிரிக்கிற மாதிரிச் செய்துபோட்டான். நீங்கள் எல்லாரும் சேந்து அவங்களைக் கொல்ல வேணும். அதுக்குப் பிறகு சொல்லியனுப்புங்கோ… வனவாசமோ மாளிகை வாசமோ எங்கையெண்டாலும் வாறன்.

கம்பர்,இளங்கோ,வியாசர் கூட பரவாயில்லை. அங்கையிங்கை பொம்பிளைக்குச் சார்பாக் கதைச்சிருக்கினம். இவர் மனு என்ன சொல்லுறாரெண்டால்….

மனு 1:வீட்டுக்குத் தேவையான பாத்திரம் பண்டத்தை வாங்கிறதுக்காக பொம்பிளைக்குக் கொஞ்சக் காசைக் குடுத்து வைக்கலாம். அவள் அந்தக் காசை வைச்சு தேவையான நேரம் அதைச் சிக்கனமாச் செலவு செய்யலாம். மற்றது தட்டுமுட்டுச் சாமான்களையும் வீட்டையும் கழுவித் துடைச்சு வைச்சிருக்க வேணும். ஆம்பிளை பூசை செய்யிறதுக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்து வைக்கிறது, குசினிக்கை இருந்து சமையல் சாப்பாட்டைக் கவனிச்சுக் கொள்ளுறது, பாயை, மெத்தையைத் தட்டிப் போட்டு வெயில்லை காயவைக்கிறது இப்பிடியான வேலையளைக் குடுத்தால் அவளுக்கு வேறை ஒண்டிலையும் மனம் போகாது. ஒழுங்கா நல்லபிள்ளையாய் வீட்டுக்குள்ளையே இருப்பாள்.

மனு 2:புருசன்காரன் சூதாடுறவனாய் இருக்கட்டும். ஒவ்வொருநாளும் குடிச்சுப்போட்டு வீட்டை வாறவனாய், வருத்தக்காறனாய் எப்பிடியும் இருந்திட்டுப் போகட்டும். ஆனால் அவன்ரை மனுசிக்காறி திமிர்பிடிச்சவளாய் அவனுக்குச் செய்யவேண்டிய வேலையளைச் செய்து குடுக்காம இருந்தாளெண்டால்….. அவளை பூ வைக்கிறது, பொட்டு வைக்கிறது, பவுடர் போடுறது இதையெல்லாம் செய்யவிடக்கூடாது. நல்ல உடுப்புப் போட விடக்கூடாது. அதோடை இரவோ பகலோ அவவைக் கட்டில் பக்கமே எடுக்கக்கூடாது. மூண்டு மாசத்துக்கு இப்பிடியெல்லாம் செய்துகொண்டு வந்தியளெண்டால் அவள் தானாய் வழிக்கு வருவாள்.

மனு 3:ஒரு பொம்பிளையைக் கலியாணம் கட்டி அவளுக்கு எட்டு வருசத்துக்குள்ளை பிள்ளை பிறக்கேல்லை எண்டா, அவளை விட்டுப்போட்டு நீ ஆரையும் கலியாணம் கட்டலாம். வயித்திலை பிள்ளை தங்கி தங்கி அடிக்கடி அழியிற சாபிள்ளைக்காறியை பத்து வருசத்துக்கு மேலை நீ பொறுத்துக்கொண்டிருக்க வேணுமெண்டில்லை. அவளை விட்டுப்போட்டு வேறொருத்தியைக் கலியாணம் கட்டலாம். உன்ரை மனுசிக்காறிக்கு தொடர்ந்து பொம்பிளைப் பிள்ளையே பிறந்துகொண்டிருக்குதெண்டு வைச்சுக்கொள்… பதினொரு வருசத்துக்கு மேலையும் அவளைச் சகிச்சு வீட்டுக்குள்ளை வைச்சுக்கொண்டிருக்க வேணுமெண்டில்லை. கலைச்சு விடு. சும்மா சும்மா பெண்டுகளோடை இருந்து புறணி கதைச்சுக்கொண்டிருக்கிறவளை உடனடியா அடிச்சுக் கலைச்சுப்போட்டு நீ வேறை கலியாணம் கட்டு ராசா. மேலை சொன்ன குறைகளோடை இருந்து உன்னாலை கலைக்கப்பட்டவளவைக்கு இந்த ஜீவனாம்சம் அது இதெண்டு நீ ஒண்டும் குடுக்கத் தேவையில்லை. விளங்கிச்சுதோ…!


உங்களுக்கு விளங்கிச்சுதோ… இதை வாசிச்சு முடிச்சாப்பிறகு எனக்கொரு சிரிப்பு வந்துது. அதைத்தான் கோபச் சிரிப்பெண்டு சொல்லுறது எண்டு நினைக்கிறன்.

2.13.2007

சென்னை என்றொரு வேடந்தாங்கல்


இரண்டு மூன்று நாட்களாக வெயிலின் உக்கிரம் தணிந்திருக்கிறது. கடல் தாண்டிப் பொருள் தேடப் போன கணவனைப் போல, மழை ‘வருகிறேன்… வருகிறேன்’என்று போக்குக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் இருக்கவிடாமல் சன்னதம் கொண்டெழுப்பி அலையவைப்பதில் வெயிலுக்கு நிகர் வெயிலே. ஆற அமர்ந்து யோசிக்கும்போது மனசை மலர்த்துவதும் உலர்த்துவதும்கூட காலநிலையின் வேலைகளில் ஒன்றெனப் புரிந்துகொள்ள முடிகிறது. தொலைகடலைக் காட்சிப்படுத்தும் ‘பல்கனி’யில் காற்று, காயப்போட்ட துணிகளுடன் செல்லங் கொண்டாடுகிறது. கன்னத்தை நிமிண்டுகிறது. மேசையிலிருக்கும் புத்தகங்களை இடையறாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்து கண்மூடிக் காலுந்தினால் சொர்க்கத்திற்குப் போய்விடலாம் போலிருக்கிறது.

மிகச் சரியாக ஓராண்டிற்கு முன் இதே இடத்தில் வெறுமை வழிய அமர்ந்திருந்தது நினைவிலிருக்கிறது. யாருமற்ற வெளியில் தனித்துவிடப்பட்டதான ஓருணர்வு. போர் குறித்து யாரிடத்தில் முறையிடுவது…? இருப்பற்று அலைதல் என் தேர்வென்றான பிறகு யாரைத்தான் நோவது…? ஒரு கவிதையில் எழுதியிருந்ததுபோல ‘சொந்த மண்ணுமில்லை… தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை’எனும் விரக்தியின் விழிகளால் இம்மாநகரை அப்போது நான் பார்த்திருக்க வேண்டும். அந்நாட்களில், பார்வை ஒரு பறவையைப்போல கட்டிடக் காட்டினிடையே மரங்களைத் தேடித் தேடி அலைந்து அமர்ந்தது. சூரியஒளி பட்டுப் பளீரிடும் தென்னங்கீற்றில், அணிற்பிள்ளையின் கீச்சிடலில், கீரை விற்றுப் போகும் பெண்ணின் நலிந்த குரலில் ஓரிரு கணங்கள் கிராமத்திற்கு மீண்டிருக்கிறேன். மற்றபடி மாநகரம் என்பது தனிமையை வளர்ப்பதுதான். ‘லிப்ற்’இல் அயலவரைச் சந்திக்க நேரும்போது புன்னகைப்பதா வேண்டாமா என்று முன்னிற்பவரின் முகத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் சங்கடமான தருணங்களைத் தரும் இம்மாநகர வாழ்வைக் கொண்டாட முடியவில்லை.

போர் பசிகொண்ட விலங்காக சொந்த மண்ணை விழுங்கிக்கொண்டிருக்கிறது. செய்தி வழங்கும் இணையத்தளங்களை ‘பெரிதாக எதுவும் ஆகிவிட்டிருக்கக்கூடாதே…!’ என்ற பதைப்புடனும் குற்றவுணர்வுடனும் வாசிக்கிறோம். தொலைவிலிருந்தபடி செய்திகளாக மட்டும் தாய் மண்ணைப் பார்ப்பதென்பதே எமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

குளிரூட்டப்பட்ட வண்டிகளில்தான் ஏறுவேன் என்று ‘எலிசபெத் ராணி’வகையறாவாய் அடம்பிடித்த உடலை, ஆட்டோவின் சடசடப்புக்கும் தூக்கிவாரிப் போடலுக்கும் புகைக்கும் தூசுக்கும் பழக்கப்படுத்தியாயிற்று. மாயாஜால் திரையரங்கின் சொகுசிலிருந்து கீழிறங்கி, அருகிலேயே இருக்கும் ‘பிரார்த்தனா’வில், வில்லனின் அடியாட்களிலொருவனின் கழுத்தின் இடப்புறத்தில் செருகும் கத்தி வலப்புறமாக வெளிப்படும் ‘போக்கிரி’யை விசிலடிச்சான் குஞ்சுகளுடன் ரசிக்க முடிகிறது. இடையிடையே மின்சாரம் தடைப்பட்டால், விஜய்க்கு ஈடாக வசனம் பேசிக் கோபம் கொள்கிறவர்களை ‘அதான் வந்துடுமில்ல…விடுவியா…’எனப் பார்க்கும் ‘சகிப்புத்தன்மை’ வந்துவிட்டது. மேலும், தமிழக நண்பர்களுடன் பேசிப் பேசி ‘தமிழை’ஒரு வழிபண்ணியாயிற்று. ‘இன்னாம்மா கேரளாவா…?’என்ற கேள்வியை இப்போது எந்தக் கடைக்காரரும் கேட்பதில்லை. கத்தரிக்காய், பழம் இன்னபிறவற்றில் பேரம் பேச முடிகிறது(அது கைவரவில்லை என்பது வேறு விடயம்)

முன்பே சொன்னதுபோல கடல் இல்லாத சென்னையைக் கற்பனை செய்யமுடியவில்லை. எந்தப் புகையும் தூசியும் மாசுபடுத்திவிட முடியாத படிகமாகப் பரந்திருக்கும் கடல் மீதான காதல் சொல்லி மாளாதது. இருளில் காற்றுப்புகா நெருக்கத்தில் அமர்ந்திருக்கும், ஒருவர் மடியில் மற்றவர் படுத்திருக்கும் எத்தனை காதலர்களை இந்தக் கடல் பார்த்திருக்கும்! எத்தனை முத்தங்களுக்குக் கண்களை மூடிக்கொண்டிருக்கும்! எத்தனை கபடம் செறிந்த வாக்குறுதிகளை அது கேட்டிருக்கும்! தன் மடியில் உதிர்ந்த கண்ணீர்த்துளிகளையும் இரகசியங்களையும் கடல் எந்த ஆழத்தில் இட்டு வைத்திருக்கும். அன்றைக்குக் கடற்கரையோரமாக நடந்துபோகும்போது ஒன்று தோன்றியது… பொய்களைக் கேட்டுக் கேட்டுச் சகிக்க மாட்டாமல்தான் கடல் மனிதர்கள் மீது பாய்ந்ததோ என்று. பௌர்ணமி நெருங்கும் இரவுகளில் கடல் அழகிய கவிதையாகிவிடுகிறது. நிலவின் கீற்று கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அற்புதமாகப் படர்ந்திருக்க…. அலை திரண்டு குதித்துக் குதித்து ஓடிவந்து கரையில் பொங்கி உடைவதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எதுவோ பொங்கும். கரையும். உலகத்தின் அற்பத்தனங்களையெல்லாம் அந்தப் பேரனுபவம் சற்றைக்கு மறைத்துவிடுகிறது.

சென்னையொரு முரண்வெளியென்பதன் மீதான வியப்பு தீரவே தீராதிருக்கிறது. நாகரீக உடையணிந்த ஆண்களும் பெண்களும் பளபளக்கும் முகங்கள், இடுப்பில் அல்லது கழுத்தில் வேலை வழங்கிய அடையாள அட்டைகள் அசைய கைத்தொலைபேசிகளில் சர்வசதாகாலமும் பேசியபடி நடந்துகொண்டும் மோட்டார்சைக்கிள்களில் பின்னிருத்திய தத்தமது தேவதேவதைகளுடன் பறந்துகொண்டுமிருக்கிறார்கள். ‘ரைடல் பார்க்’(டைடல்?)போன்றவை ‘மின்னியல் நகரம்’எனப்படும் பெங்களுருக்கு ஈடாகச் சென்னையை அழைத்துப் போய்விடும் சாத்தியங்களைக் காணமுடிகிறது. ‘ரைடல் பார்க்’ அமைந்திருக்கும் வழிநெடுக ‘திடீர்’மரங்கள் தோன்றியிருக்கின்றன. இரவோடிரவாக நட்டு நீரூற்றி உயிர்கொடுத்திருக்கிறார்கள். நவீன ஓவியங்கள், நவீன அமைப்புடன் கூடிய பேரூந்து தரிப்பிடங்கள், செயற்கை நீரூற்று என்று கொஞ்சம்போல மயக்கம் தருகிறது.

மறுபுறம், அதற்கு சற்றே அருகில் கேலிச் சித்திரங்கள் போன்ற மனிதர்கள் கல்,மண் இன்னபிறவற்றைத் தலையில் சுமந்து வேலை செய்வதைப் பார்க்கும்போது, அவர்கள் உடலில் வயிறு என்ற ஒன்று மட்டுந்தான் இருப்பதாகத் தோன்றும் கற்பனையை எவ்வளவு முயன்றும் கலைக்க முடியவில்லை. இரவுக்குள் விற்றுமுடித்துவிடவேண்டுமே என்ற கவலை முகத்தில் அப்பியிருக்க அமர்ந்திருக்கும் பூக்காரி, ‘காலைலேர்ந்து சாப்பிடலைக்கா’எனக் கையேந்தும் சிறுமி,குடித்துவிட்டு நடைபாதையில் சண்டை போடும் கணவனை அவிழும் கொண்டையை முடிந்து முடிந்து இழுத்துத் தோற்றுக்கொண்டிருக்கும் கட்டிடத் தொழிலாளி,யார் அழைத்தாலும் வாலாட்டிப் பின்னால் ஓடிவந்துவிடக்கூடியதான பார்வையுடன் பசியோடு அலையும் தெரு நாய்கள்…. கொளுத்தும் வெயிலில் வீதியோரத்தில் சாவகாசமாகப் படுத்துறங்கிக் கொண்டிருக்கும் ஆண்கள்…என சென்னை இரு முகம் கொண்ட திருநகரம்தான்.

எங்கு பார்த்தாலும் சனங்கள் நெரிந்துகொண்டிருக்கும் தெருக்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. அண்ணாசாலையில் ஸ்பென்சர், பாண்டி பஜாரில் போத்தீஸ்,ராதாகிருஷ்ணன் சாலையில் அஞ்சப்பர் உணவகம், பனகல் பார்க்கில் நியூ புக் லாண்ட், கிரீம்ஸ் வீதியில் அப்பொலோ வைத்தியசாலை, பாலத்தின் கீழ் கூவம், அடையார் சிக்னல் அருகில் பழமுதிர்ச்சோலை… சற்று தள்ளிப் போனால் காந்தி நகரில் நெய் மிதக்கும் பால் கோவாவுடன் ‘கிரான்ட் ஸ்வீட்ஸ்’சுற்றிச் சுற்றி எமக்கான எல்லா மையப் புள்ளிகளையும் இனங்கண்டாயிற்று. ஓரளவுக்கு சென்னையை வாசிக்க முடிந்திருப்பதால் நாங்களும் சென்னைவாசிகளாகிவிட்டோம்.
ஈழத்தமிழர்கள் போருக்கஞ்சி புகலிடமாகக் கொண்டிருக்கும் சென்னையில் சில மாதங்களாக, வாடகைக்கு வீடு எடுப்பது, ஒரே முயற்சியில் கனடா விசா கிடைத்துவிடுவதற்கொப்பாயிருக்கிறது. அண்மைய சில அசம்பாவிதங்களுக்குப் பிறகு ‘சிலோன்காரங்களா…?’என்று கேட்டு ‘ஓம்’என்று தலையாட்டினால் வீட்டுச் சொந்தக்காரர்களும் இடம் வலதாகத் தலையாட்டி அனுப்பிவைத்துவிடுகிறார்கள். ஐம்பதினாயிரத்துக்கு அதிகமாக முற்பணம் கொடுத்தால் மேலும் கீழுமாகத் தலையாட்ட வாய்ப்பிருக்கிறது. ‘ஆமி’க்குப் பயந்து ஓடிவந்த ஆயிரமாயிரம் இளைஞர்களின் கதைகளைக் கடற்காற்று காவிவருகிறது. கனடாவின் டொலரும், சுவிஸ் பிராங்கும் இலண்டன் பவுண்ட்ஸ்சும் இந்திய ரூபாய்களாகி உணவகங்களிலும், திரையரங்குகளிலும் செலவழிகின்றன. வெளியில் பயமற்று உலவ முடிகிற இரவைப் போல் இளைஞர்களுக்கு உவப்பானது எது…? பல்லாண்டுகளுக்குப் பிறகு சுவாசிக்கும் ஆசுவாசத்தை அந்த முகங்களில் காணமுடிகிறது. பயண முகவர்களின் வாக்குறுதிகளை நம்பிப் போன சிலர் இடைநடுவில் பிடிபட்டு தொலைதூரங்களிலிருந்து புதிய கதைகளுடன் திரும்பி வருகிறார்கள். இதனிடையே படப்பிடிப்பு பார்க்க முண்டியடிப்பதும் நடிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பிறவிப் பெரும் பயனென அலைபவர்களும் இல்லாமலில்லை.

உண்ணச் சோறெடுத்து வாயிலிட சுற்றிவளைப்பென்று செய்தி வாராத பகல்கள், உறங்கப் போனால் காலையில் உயிரோடு எழுந்திருக்கலாம் என்னும் உத்தரவாதம், படிக்கப் புத்தகம், நடக்கச் சாலைகள், ருசிக்கப் பழங்கள், அரட்டை அடிக்க இணையத்தில் நண்பர்கள், அவ்வப்போது எழுத்து…. இருந்திருந்துவிட்டு தொலைபேசி வழியாகச் செவிமடுக்கும் இழப்புச் செய்திகள்… அதை மறக்கடிக்கச் சுழலும் காலம்…இதைவிட இப்போது வேறென்ன வேண்டும் ஊர் திரும்பக் காத்திருக்கும் எங்களுக்கு?

2.03.2007

இதுவும் ஒரு காதல் கதை



அவன்: நீ ஒரு ராட்சசி!

அவள்: உனது தேவதை எங்குதானிருக்கிறாள்?

அவன்: எனக்குள் இருக்கிறாள். அவள் எனது இனிய கனவு! பால்யத்தைப் பசுமை செய்தவள்…! கிராமத்தின் பின்புறமாய் பாசிப்பச்சை நிறத்தில் துவைத்துப் போடப்பட்ட சேலையைப் போல ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் கரையோரம் அவளை முதன்முதலில் சந்தித்தேன். தோழிமாரெல்லாம் வீதியை ஒட்டிய உயரமான பாலத்திலிருந்து குதிக்க, இவள் மட்டும் விழிகளில் ஆசையும் பயமும் கலந்திருக்க தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிருக்கும்.

அவள்:பதின்னான்கு

அவன்:சிறிய உருவம். பருவம் தன் கவிதையை இன்னும் எழுதியிருக்காத உடல். இடுப்பைத் தாண்டி இறங்கிக்கொண்டிருந்த கூந்தலில் எந்தக் கணத்திலும் விழுந்துவிடத் துடித்துக்கொண்டிருந்தது ஒரு அடுக்குமல்லி. பெரிய பூவொன்று சின்னப்பூவைச் சூடியிருந்ததை அன்று கண்டேன்.

அவள்:பேதையாய் இருக்கையில் எல்லாப் பெண்களும் அழகுதான்.

அவன்:தயவுசெய்து நீ பேசாதே…!என்னை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இடுப்பிலிருந்து இறங்கிவிடுவேன் எனப் பயமுறுத்திக்கொண்டிருந்த அரைக்காற்சட்டையை இறுகப் பற்றியபடி கடையிலிருக்கும் மிட்டாயை ஆசை பொங்கப் பார்க்கும் சிறுவனைப் போல அவளை நான் பார்த்தேன்.

அவள்:இப்போதும் பெண்களை அப்படித்தான் பார்க்கிறாய்.

அவன்:அன்றொரு ஞாயிற்றுக்கிழமை. அன்றிரவு விடிவெள்ளி எதுவும் தோன்றவில்லை. வீட்டின் முகட்டில் பல்லிகூட சப்தித்து நல்ல சகுனம் சொல்லவில்லை. ஆனால், நிலவு வேதனைப்படுத்தியது. வானொலியில் காதலில் கரைந்த குரல் பிடித்திருந்தது. மறுநாள் பார்த்தால்… ஐயோ…!அவள் எனது வகுப்பிலிருந்தாள்.

அவள்: ஒரு தமிழ்ச்சினிமா இப்படித்தான் தொடங்கும்.

அவன்:அதுவரை காராக்கிரகமாயிருந்த பள்ளிக்கூடம் சொர்க்கத்திற்கு மிக அருகில் போய்விட்டது. வகுப்பில் இரண்டாவது வரிசையில் சுவரோடு ஒட்டிய மூலைக் கதிரையில் அவள் இருந்தாள். நான் கடைசி வரிசை. ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் நான் கடவுளாலும் கைவிடப்பட்டவன்.

அவள்:எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் கைவிடப்படுகிறவர்கள்தான்.

அவன்:நான் காதலித்தேன். பள்ளிக்கூடத்தை… அந்த ஊரை… அவள் நடந்துபோன வீதியை…. அவள் இருந்த நாற்காலியை… அவள் தொட்டுத் தந்த நோட்டுப் புத்தகத்தை… அதிலிருந்த உருண்டையான எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சின்னச் சின்னப் பூக்களை நினைவுபடுத்தின. அவளைத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு சுகம் இருந்தது. அவள் நன்றாகப் படிப்பாள். அதனால் ஆசிரியர்களின் விருப்பத்திற்குரிய மாணவியாக இருந்தாள். நான்…


அவள்:சராசரியாக இருந்தாய்.

அவன்:சராசரியாகத்தான் இருந்தேன் அவள் வரும்வரை. அவளுடைய பெயருக்குப் பக்கத்தில் என்னுடையது இருக்கவேண்டுமென்று விரும்பியோ என்னவோ படிப்பில் அக்கறை செலுத்தினேன். அவள் மனதில் என்ன வடிவத்தில் நான் எழுதப்பட்டிருந்தேன் என்பதை எவ்வளவு முயன்றும் அறிந்துகொள்ள முடியவில்லை. எனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். தோழிகளோடு இருந்து பேசிக்கொண்டிருப்பாள்… என்னைக் கண்டதும் கூடைக்குள் ஒளிந்துகொள்ளும் முயற்குட்டியைப் போல காணாமற் போய்விடுவாள். நானோ கனவிலும் நனவிலும் அவளைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தேன்.

அவள்:பதின்னான்கு வயதில் வருவதெல்லாம் காதலோடு சேர்த்தியா?

அவன்: சில விடயங்களில் நான் கேள்வி கேட்கவோ ஆராயவோ விரும்புவதில்லை. எதையும் நிறுவ முயன்றதுமில்லை. நான் காதலித்தேன் அதுவொன்றைத் தவிர வேறெதுவும் அப்போது என் நினைவிலில்லை. அவளுடைய தந்தை ஒரு அரசாங்க உத்தியோகத்தர். வேலையின் நிமித்தம் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வந்திருந்தார். கிராமமே உறங்கி நாய்களும் அரையுறக்கத்தில் கிடக்கும் நடுநிசியில் அவளுடைய வீட்டின் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். அவள் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறாள்… அதற்கு சில அடிகள் தள்ளி நான் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது.

அவள்:பைத்தியம்!

அவன்:ஏறக்குறைய பைத்தியந்தான். பெரிய கண்கள் அவளுக்கு. அவை எப்போதும் பாடப்புத்தகங்களில் கவிழ்ந்திருக்கும். இருந்திருந்துவிட்டு நிமிர்ந்து விழிகளைச் சுழட்டும்போது அந்தச் சுழலில் சிக்கித் திணறிவிடுவேன். விரும்பியே சிக்கிய சுழி அது. இந்தப் பைத்தியத்திற்கு மாத்திரை போல ஒரு நாளைக்கு ஒரு பார்வையே போதுமானதாகவிருந்தது. இரவு வயலைச் சுற்றிவருகையில் கையிலிருக்கும் வானொலி பாடும். ‘அழகான ஒரு சோடிக் கண்கள்… அதன் அம்புகள் தைத்து என் உளமெல்லாம் புண்கள்…’

அவள்:பாடல் கேட்டுக் கரைவதை எல்லோருந்தான் செய்கிறார்கள்.

அவன்:பாடலில் மட்டும் கரையவில்லை. அவள் பார்வையில் கரைந்தேன். அவள் அண்மையில் கரைந்தேன். அவள் வீட்டிற்கு முன்னால் ஒரு இலவமரம் நிற்கும். அந்த மரத்தைக்கூட நான் நேசித்தேன் என்றால் அதை என்னவென்பது? ஊருக்கு மத்தியில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருந்தது. அதைக் கடந்து போகும்போதெல்லாம் கேட்டுக்கொள்வேன் ‘அவளை நான் கல்யாணம் செய்ய வேண்டும்’என்று. அவளைத் தொடுவதென்பதையெல்லாம் நான் அப்போது நினைத்துப் பார்க்கவே இல்லை. அவளோடு ஒரே வீட்டில் வாழவேண்டும்… அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. அந்த ஊரில் எப்போதாவது கோவில் திருவிழா வரும். இரவிரவாக நடக்கும். ஊரே கோயிலில் கூடியிருக்கும். அவள் கண்ணை மூடிக் கைகூப்பி நிற்கும்போதெல்லாம் நான் அவளைப் பார்த்தபடி கைகூப்பி நின்றிருப்பேன். அன்று கோயிலில் ஒலித்த பாடல் கூட எனக்கு நினைவிருக்கிறது… நீ கேட்டிருக்கிறாயா.. ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’என்ற பாட்டை… எத்தனை வயதானாலும் அந்தப் பாட்டைக் கேட்டால் காலிலிருந்து இரத்தம் பெருகி தலைக்குள் பாய்வது போல… விபரிக்க முடியாத உணர்வில் சிலிர்த்துப் போய்விடுவேன். அவள் என் தேவதையாக இருந்தாள்.

அவள்:பித்துப் பிடித்திருந்ததா என்ன…?

அவன்:பித்தனைப்போல் நண்பர்களிடம் பிதற்றித் திரிந்தேன். அவளை என்னிடமிருந்து யாரும் பிரித்துவிடக்கூடாதென்பதற்காக ஒரு தந்திரம் செய்தேன். அவளது பெயரையும் எனது பெயரையும் இணைத்து எங்கெல்லாம் எழுதிவைக்க முடியுமோ அங்கெல்லாம் எழுதிவைத்தேன். பாழடைந்த மண்டபங்களில், குளத்தையொட்டிய குறுகிய பாலத்தில், பாறைகளில்,பள்ளிக்கூடச் சுவர்களில் எழுதினேன். இலகுவில் யாரும் எட்டிவிடமுடியாத முகட்டின் தீராந்திகளில் தொங்கிக்கொண்டு எழுதினேன். அந்த இளவயதில் எனக்குக் கவிதையெனத் தோன்றியதையெல்லாம் வேப்பங்குச்சியெடுத்து அதன் பச்சை மையால் சுவர்களில் பொறித்துவைத்தேன்.

அவள்:அவளுக்கு உன்மீது காதல் இருக்கவில்லையா என்ன…?

அவன்: எனக்குத் தெரியாது. அதை நான் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அவளது நோட்டுப் புத்தகத்தை வாங்கி அதன் மேலுறைக்குள் ஒரு கடிதத்தை வைத்து திறக்கமாட்டாதவாறு ஒட்டினேன். அதைக் குறித்து ஒரு வார்த்தைதானும் பேசாமல் நோட்டுப்புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தேன்.

அவள்:சொல்லப்படாத காதல்…

அவன்:அவளையும் என்னையும் இணைத்து நண்பர்கள் கேலி பேசும்போது உள்ளுர மகிழ்ச்சி பொங்கி வழியும். அன்றைக்கெல்லாம் சைக்கிளில் கையைவிட்டு ஓடி மிதந்துகொண்டிருப்பேன். அவள் நடந்துபோன சுவடுகள்தான் எனது வீதிகளை எழுதின. பள்ளிக்கூடம் முடிந்து எல்லோரும் போனபிற்பாடு அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்துகொள்வேன். அதை என் விரல்களால் வருடிக்கொடுப்பேன். அந்த வகுப்பில் நானும் அவளும் மட்டுமே இருப்பதாக கற்பனை செய்துகொண்டு காற்றோடு பேசுவேன். எனது வால்தனங்களையெல்லாம் அவளது கூந்தல் காட்டினுள் மகிழ்வோடு தொலைத்தேன். அவளுடைய பெரிய கண்களும் அடர்ந்த கூந்தலும்தான் என்னை ஈர்த்தன என்று பின்னாளில் நினைத்துக்கொண்டதுண்டு.

அவள்:அழகு பார்த்து வந்த காதல்…

அவன்:அவள் பேரழகி அல்ல… ஆனால்,அவ்வயதில் அவள் அழகி. அமைதியாக நடக்கும் சிற்றோடை போலிருந்தாள். யாருடனும் அதிகம் பேசாமல் தலையைக் குனிந்தபடி வீதியில் எவ்வளவு ஓரமாக நடக்கமுடியுமோ அவ்வளவு ஓரமாக நடந்துபோவாள். அவளறியாமல் நான் பல நூறு தடவை அவள் பின்னால் போயிருக்கிறேன். அவள் நெஞ்சோடு அணைத்திருந்த புத்தகங்களாக நான் இருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன்.

அவள்:காலம் முழுதும் ஒருதலையாய்க் காதலா…?

அவன்:இல்லை… அதுவொரு அழகிய மழைநாள். சாரல் விசிறியடித்தது. நண்பனின் ஏற்பாட்டில் நானும் அவளும் ஒரு பழைய மண்டபத்தில் சந்தித்தோம். எனது விரல்களைப் பார்…! இப்படித்தான் அவை அன்றும் நடுங்கின. நாங்கள் சுவரையண்டி சீமெந்துத் தளத்தில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளி. அந்த இரண்டடியும் தூசி படர்ந்து கிடந்தது. நாங்கள் அந்தத் தூசியைக் கடைசிவரை கலைக்கவேயில்லை. வார்த்தைகள் என்னை அன்று கைவிட்டுவிட்டன. என்னால் பேசமுடியவில்லை. நெஞ்சுக்குழி கோடைகாலக் கிணறாய் வறண்டு கிடந்தது.

அவள்:நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லையா…?

அவன்:”நீ எனக்காகக் காத்திருப்பாயா” என்று நான் கேட்டேன். “எங்கே போகிறீர்கள்…?”என்று அவள் கேட்டாள். நான் கடல்கடந்து போகவிருப்பதைச் சொன்னேன். காலத்தின் கட்டாயத்தைச் சொன்னேன். அவள் அழுதாள். கடவுளே!அவள் எனக்காக அழுதாள். என்னைப் பிரிவதை எண்ணி அழுதாள். நாங்கள் திசைக்கொருவராகப் பிரிந்தோம். என்னை அலைக்கழித்த அந்தக் கண்களிலிருந்து என்னுயிரைப் பெயர்த்துக்கொண்டு அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினேன். அன்றைக்கு எனது சைக்கிள் வீதியில் சக்கரம் படராமல் பாய்ந்தது. நான் உரத்த குரலில் வீதி நெடுகப் பாடிக்கொண்டு போனேன்.

அவள்:நீ போனாய்!

அவன்: ஆம்! நான் போனேன். போகவேண்டியிருந்தது. இரவும் பகலும் பேய்களுக்கஞ்சி ஒளிந்து திரிவதைச் சகித்துக்கொள்ளவியலாமற் போனேன். பேய்கள் என்னை விரட்டின. நான் சிறையிருளில் வதைபட விரும்பவில்லை.

அவள்: வதைபடலை அவளுக்கு விதித்துப் படகேறிப் போனாய். அவளுடைய குடும்பமும் அந்த ஊரைவிட்டுப் போயிற்று. கடற்கரையோர கிராமமொன்றில் காலம் அவளை எறிந்தது. அலையெறியும் கடல் பார்த்த வீடு. இருளோடு காதலும் கவியும் மாலைப்பொழுதுகளில் கடற்கரையோரம் அமர்ந்திருப்பாள். அலைகள் வந்து வந்து போயின… நீ வரவேயில்லை! உனது தோழர்கள் திரும்பி வந்தார்கள். நீ வரவேயில்லை! அவளுக்கும் உனக்கும் இடையில் கடல் விரிந்து கிடந்தது. அப்போதுதான் அறிந்துகொண்டாள்… கடல் என்பது பார்க்கச் சலிக்காத நெடியதொரு ஓவியம் என்று. அதன் பேச்சு கேட்கச் சலிக்காத உரையாடல் என்று.

அவன்: காதலைக் கடமையால் மூடினேன். நகரத்திலிருந்து ஏழு மலை தாண்டிய அடர்வனத்தில் இருப்பு. நதியொரு பக்கம் மெதுநடை போட்டுக்கொண்டிருந்தது. கோப்பித்தோட்டத்திலிருந்து பச்சை வாசனை மிதந்துவரும். உடல் தழுவி விரையும் பனிப்புகார்கள் உன் பார்வையை நினைவுபடுத்தின. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிக்கும் ‘ராசாத்தி ஒன்னைக் காணாத நெஞ்சு’என்ற பாடல் இறுகிய இதயத்தை தன் மென்விரல்களால் வருடிப்போகும். உடலும் மனமும் இறுக நானொரு இளைஞனாகிக்கொண்டிருந்தேன்.

அவள்:மேற்படிப்பு என்னை நகரத்தை நோக்கி நகர்த்தியது. விரித்த புத்தகத்திலிருந்து சிரித்தாய். புழுதியடர்ந்த அந்த ஒழுங்கையில் நடந்து போகும்போதெல்லாம் நினைவாக நீயென்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தாய். பகலில் படிப்பும் தோழிகளுடன் ஒப்புக்குக் களிப்பும்… இரவைப் பிரிவின் துயரெழுதிய காலமது. அப்போதுதான் புத்தகங்களோடு பரிச்சயமானேன். உனது இன்மையை எதையெதையெல்லாம் இட்டு நிரப்ப முடியுமோ அதையெல்லாம் இட்டு நிரப்ப முயன்றேன்.

அவன்:அன்றொருநாள் திரும்பிவந்தேன்.

அவள்: நான் மழையோடு எவ்விதம் தொடர்புபட்டேன் என்பதை நான் அறியேன். என் வாழ்வு முழுவதும் மழை தனது ஈரக் குரலால் பேசிக்கொண்டேயிருக்கிறது. அன்றொரு மழை நாள். வன்னியில் தோழியொருத்தியின் வீட்டின் மண் திண்ணையில் சாய்ந்தபடி தனக்கென வழி செதுக்கி குறு நதியாய் பாய்ந்த வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வரவேற்பறையில் யாரோ வந்திருப்பதாகச் சொல்லித் தோழி அழைத்தாள். எழுந்து வந்து பார்த்தபோது சிறுவனாகப் போன நீ இளைஞனாக ஒரு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தாய். என்னைக் கண்டதும் உன் விழிகள் வியப்பில் மலர்ந்தன. எனக்குள் எழுந்த உணர்விற்கு என்ன பெயர் சூட்டுவதெனத் தெரியவில்லை. அதிர்ச்சி,கோபம்,துக்கம்,காதல்,ஆற்றாமை,மகிழ்ச்சி எல்லாம் கலந்த உணர்வொன்று என்னை அங்கிருந்து விரட்டியது.

அவன்:நீ அந்த இடத்திலிருந்து விருட்டென்று ஓடிப்போனாய். உன் விசும்பலை என் செவிகளில் தங்கவிட்டு விழிகளிலிருந்து மறைந்தாய். ஒரு சோக நாடகத்தின் உச்சக் காட்சியைப் பார்க்கும் பாவனையில் உனது தோழியும் அவளுடைய அன்னையும் அமர்ந்திருந்தனர். அத்தனை குழப்பத்திலும் கூட நீயொரு பெரிய பெண்ணாக வளர்ந்திருந்ததைக் கண்டு நான் வியப்படையத் தவறவில்லை. நிலத்தடியில் நீராக உள்மனதில் ஓடிக்கொண்டிருந்த காதல் என் இதயப்பரப்பெங்கும் பாய்ந்து நாடி நரம்பெங்கும் பரவியது.

அவள்:அரை மணி நேரம் மௌனத்தில் கழிந்தது. தோழி சிணுங்கும் மழைபோல அழைத்தபடியேயிருந்தாள். ஈற்றில் எழுந்து வந்து முகம் கவிழ்த்து அமர்ந்தேன். ஓரிரு நிமிடங்கள் உருண்டபின் நிமிர்ந்தேன். தோழியோ அவள் அன்னையோ அங்கில்லை. நீ மட்டும் என்னை உற்றுப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தாய். எனது கோபம் செம்மண் போல கரைந்து வழிந்தோடிக்கொண்டிருந்தது.

அவன்: பின்னிரவில் நல்ல நிலா. குளிரடர்ந்த இரவு. மாமரக் கிளைகளின் ஊடே வழிந்த நிலவு தன் மெல்லிய விரல்களால் எமக்கான கவிதையை எழுதிக்கொண்டிருக்க நாம் பேசினோம். இரண்டடி இடைவெளி என்பது எமக்கிடையில் எப்போதும் எழுதா விதி. உனக்கு நான் எழுதிய கடிதங்களை எவரும் உன்னிடம் சேர்ப்பிக்கவில்லை என்று அறிந்தேன்.

அவள்:விடிய விடியப் பேசியும் ஏதேதோ எஞ்சியிருப்பதாய் ஒரு எண்ணம். காதல் இத்தனை மகிழ்வா…? காதலில் இத்தனை துயரா…? காலை தூய்மையாகப் புலர்ந்துகொண்டிருக்க அந்த மெல்லிருளில் நீ விடைபெற்றுப் போனாய். பரந்த உன் முதுகுப்பரப்பை சென்று மறையும்வரை நான் பார்த்திருந்தேன்.

அவன்:காதல் என்பது சிலருக்கு மட்டுமே பூச்செண்டு. எம்மைப் போன்ற சிலருக்கோ அது சிலுவை. கடும் இருளில் கரடுமுரடான பாதையில் பேய்கள் முதுகில் சவுக்காலடிக்க நாங்கள் சுமந்துபோனோம்.

அவள்:அன்றொருநாள் பேசியது ஆயுளுக்கும் போதுமென்றா விட்டுச் சென்றாய்…! பேதையாய்க் காத்திருந்தேன். பின் பெதும்பையாய்க் காத்திருந்தேன். உன்னைப் பார்க்க முடியவில்லை. நீக்கமற எங்கும் பேய்கள் நிறைந்திருக்கும் நகரத்தின் மத்தியில் நான். காடுகளில் கரந்துறையும் வாழ்க்கை உனது. தேடி வந்தேன் ஓரிரு தடவை. என்னையும் பேய்கள் தேடுவதாய் அங்குள்ளோர் திருப்பியனுப்பினார்கள்.

அவன்: பாம்புகள் விழுதெனப் படர்ந்திருக்கும் கானகத்தில் வேம்பென உயிர்வெறுத்து என்னைத் தேடிவந்தாயென்றறிந்தேன். சிந்தித்தேன்… நாளையொரு போர்க்களத்தில் நான் மறைந்துபோகலாம். பேதையிவள் என்ன செய்வாள்… அதனால், காதலை மறைத்தேன். கடமையில் கவனத்தைக் குவித்தேன்.

அவள்:எங்கு குண்டு வெடித்தாலும் என் இதயத்தில் போர்க்களம். நீ கழுத்தில் கட்டியிருந்த நஞ்சு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது. செய்திகளில் உன் பெயரைத் தேடிப் பயந்திருந்த காலங்களை வெந்து சாம்பலாய்க் கரைந்தாற்தான் மறக்கலாம்.

அவன்: உள்ளே அழுததை உனக்காக உருகியதை காடுதான் அறியும். காடொன்றே அறியும். கடமையைக் காதலினால் களங்கம் செய்வேன் என்றஞ்சி உன் நினைவை எனக்குள்ளே புதைத்தேன். மண்பற்றால் காதல்மேல் மண்ணள்ளி எறிந்தேன்.

அவள்:ஊரறிந்தது. உறவறிந்தது. ‘வெள்ளைப் புடவை கட்ட விருப்பமா…?’என்றெனது தாயழுதாள். ‘பார்க்காதே…’என்றார்கள். ‘பழகாதே…’என்றார்கள். ‘மரணத்தின் மீது மாறாத காதல் கொண்டான். இவன் விட்டு வேறொருவன் இருப்பானே உனக்கு’என்றார். பால்யத்தில் நெஞ்சில் பதிந்தவனை விட்டு வேறொருவன் கொள்ள விருப்பில்லை’எனக்கென்றேன்.

அவன்:ஆண்டு பல ஓடியது.

அவள்:அவனை மறந்தேன் என்றது உறவு. ‘மறந்தேனெனில் இறந்தேன்’என மனதுக்குள் நினைத்தேன்.

அவன்:நேரத்திற்கு உணவில்லை. தலைசாய்த்து உறங்க என் தாய்மண்ணில் அமைதியில்லை. வயிற்றுப்புண் வந்து என்னை வதை செய்யத் தொடங்கியது. நெருப்பிறைத்தாற்போல நெருஞ்சியினை விதைத்தாற்போல் இடைவிடா வலியொன்று எனைக் கொன்று தின்றது. உருண்டு புரண்டும் வலியன்றி ஒரு வழியும் காணவில்லை. பாலும் சோறும் மட்டும் பலநாட்கள் உணவாகும். ‘இந்தப் புயல் தேசம் விட்டு அயல் தேசம் போ… வைத்தியம் பார்த்தால் வலி நீங்கும்’ என்றார்கள். கடலிலும் பேய்கள் காவலென்று இருக்க, எங்கே நான் போக…? எப்படித்தான் நோய் தீர்க்க…?

அவள்:அன்றொருநாள் தோழர் சிலர் என்னிடத்தில் வந்தார்கள். ‘சென்றிடுக இவனோடு… சிலநாட்தான்’என்றார்கள். அதிர்ச்சியில் உறைந்தேன்… பின் தெளிந்து ஆனந்தம் அடைந்தேன். அம்மா அழுதாள். என் அடம் கண்டு திகைத்தாள்.

அவன்:நாங்கள் போனோம்…! என் மண்ணே…! நாங்கள் போனோம்…! திரும்பி வருவோமென்ற தீர்மானத்தோடு தாய் மண்ணே! உன்னைத் தழுவி விடைபெற்றோம். காடு மறைகிறது. என் கண்ணிலிருந்து ஓடி மறைகின்றன எமதூர்கள். விதி வலியது…! விதியே வலியது!! திரும்ப வழியற்ற தேசத்தை விட்டு இந்தப் பறவைகள் எங்கோ திசைமாறி இறங்கின துருவத்தில்.

அவள்: மாலையின் இருளை அடர்த்தியாக்கி அழுகிறது வயலின். இரகசியத்திற்கு மிக அருகிலான குரலில் ஒருவன் பாடுகிறான்.

“ஸ்தெப்பி வெளியின் மஞ்சள் கண்கள் அழைக்கின்றன
நீலம் படர்ந்த மலைகள் என்னை அழைக்கின்றன
ஓ என் தாய்த்திருநாடே…!
உன்னைப் பிரிந்து வந்தேன்…!”

அவன்-ஊரைச் சுருட்டி ஒரு குரலில் அடக்கி அந்த இடமெங்கும் தெளிக்கிறான். இசையைப் பருகி இறத்தல் சாத்தியமா? நான் மெல்ல மெல்ல இறந்துகொண்டிருக்கிறேன்.

அவள்:குற்றவுணர்வு தகிக்கிறது. கொடிய போர் இன்னும் நடக்கிறது.

அவன்: பூவரசு தன் மஞ்சள் கண்களால் அழைக்கிறது
பௌர்ணமியில் மட்டுநகர் வாவியின்
மீன்கள் பாடியழைக்கின்றன
கோணமலையின் கடல்
தன் நீலவிழிகளால் அழைக்கிறது நெடுநாளாய்.
மொட்டைப் பனைமரங்கள் அழைக்கின்றன
கூதிர் பறவைகள் திரும்பிக்கொண்டிருக்கின்றன.
திரும்ப வழியற்று
திசைதொலைத்து திரிகிறோம் உலகெங்கும்
ஓ என் தாய்த்திருநாடே…!