1.30.2007

இன்றொருநாள் எனினும்…



கண்ணாடிக் குவளையிலிருக்கும் உவகை
செந்நிறத்தில் சொட்டுச் சொட்டாக
எனக்குள் பெருகி வழிய
இலையுதிர்த்த மரம்
புசுக்கெனத் துளிர்க்கிறது.
தரையே! என் மாயக்கம்பளமே!
இந்தப் பூமி போதும் எனக்கு.

கனிவு பொங்கும் கெட்டவார்த்தைகளின்
கதவு திறக்கிறது.
உலகம் முழுவதும்
நண்பர்களாலும் காதலர்களாலும் ஆன
இந்த உலகத்தைக் கொண்டாடுகிறேன் ஓஷோ!

மூர்க்கத்தின் தந்திகள்
உடலெங்கும் அதிர
ஒரே இசைப்பிரவாகம்…!
மிதக்கிறதா… மூழ்கிடுமா என்னறை?

அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் இந்தப் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே!
சிலீரென்றெழும் ஓசையில்
என் பால்யத்தை நினைவுகொள்ள.

10 comments:

Anonymous said...

//அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் இந்தப் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே!
சிலீரென்றெழும் ஓசையில்
என் பால்யத்தை நினைவுகொள்ள
//

நன்றாய் இருக்கிறது
----------------------------------

சின்னக்குட்டி said...

தமிழ்நதி ... இந்த புளக்கர் பதில் போட அநோமதயமாக மாத்துது...கொழுவி... புளக்கரை எச்சரித்தது சரி தான்

தமிழ்நதி said...

சின்னக்குட்டி அவர்களின் பின்னூட்டத்தை அப்படியே போட்டேன். நான் புது versionக்கு மாறியதில் ஏதோ திருகுதாளம் நடந்துவிட்டது என்று நினைக்கிறேன். அது அனானிமஸ் பெயரில் வருகிறது.

sooryakumar said...

ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. அவர் உங்களுடனேயே இருக்கிறார். அதுபோலவே..இந்தக்கவிதையும் பிறக்கவுமில்லை..இறக்கவும் இல்லை..உங்களுடனும் எங்களுடனும் இருக்கிறது. வாழ்வை அது கொண்டாடுகிறது.(நான் ஒரு ஓஷோ பிரியன்..என்பது கொசுறுச் செய்தி)

தமிழ்நதி said...

எல்லாம் நல்லபடியாகவே நடந்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். விடிந்து எழுந்து பார்க்கையில் எல்லாப் பதிவுகளையும் விழுங்கிவிடாதிருந்தால் எனக்குப் போதும்.

வாக்கீசர் said...

மரம் துளிர்க்கிறது.பூமி திறக்கிறது.உலகத்தைக் கொண்டாடுகிறேன். உடலெங்கும் இசைப்பிரவாகம்.பால்யத்தை நினைவுகொள்ள ஒரு தடவை மண்டியிட்டுக் கேட்கிறேன்.

சின்னக்குட்டி said...

நீங்கள் புதிய பதிப்பு மாறியதாக கூறிக்கொண்டாலும் நீங்கள் புதிய பதிப்பிலுள்ள வார்ப்புருவை மாத்தவில்லை என்று நினைக்கிறன். வார்ப்புருவை மாத்தாதவரையில் புதிய பதிப்பின் நன்மை தீமைகளை முழூமையாக அநுபவிக்க முடியாது

தமிழ்நதி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் சின்னக்குட்டி,சூரியகுமார்,வாக்கீசருக்கு நன்றி.

'வார்ப்புருவை மாற்றாதவரையில் புதிய பதிப்பின் நன்மை தீமைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது'

சின்னக்குட்டியர்! மாற்றப் பயமாக இருக்கிறது. இதுவே ஒரு மாதிரி சண்டித்தனம் காட்டுகிறது. நன்மையெனில் சந்தோசம்... தீமை வந்தால் என்ன செய்ய?

கார்திக்வேலு said...

//மிதக்கிறதா… மூழ்கிடுமா என்னறை?//

//அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் இந்தப் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே!
சிலீரென்றெழும் ஓசையில்
என் பால்யத்தை நினைவுகொள்ள//

கொண்டாட்டமாக ஆரம்பித்த வாழ்க்கை
பின்நாட்களில் கொண்டாட்டமாக நிறுவ வேண்டி நேர்ந்துவிடுகிறது.

நளாயினி said...

அழகாக பெண்ணுக்கே உரிய உடல் மொழியை பதிவுசெய்திருக்கிறீர்கள்.( பூக்கள் முகிழ்க்கும் ஓசையை உணரமுடிகிறது.)